மலேசிய அரசர் அல்லது யாங் டி பெர்துவான் அகோங் (ஆங்கிலம்: The Yang di-Pertuan Agong; மலாய்: Yang di-Pertuan Agong) என்பவர், மலேசியா நாட்டின் பேரரசர் ஆவார். 1957-ஆம் ஆண்டு, பிரித்தானியாவிடம் இருந்து மலாயா கூட்டரசு தன்னுரிமை பெற்ற போது, பேரரசர் பதவி உருவாக்கப்பட்டது.
அரச அமைப்புக்கு உட்பட்ட ஒரு முடியரசு நாடான மலேசியாவில், தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசர், நாட்டின் அரசத் தலைவர் ஆகிறார். உலக நாடுகளில் தேர்வு மூலமாக அரசராகிறவர்களில், யாங் டி பெர்துவான் அகோங் அவர்களும் ஒருவராவார். யாங் டி பெர்துவான் அகோங் அவர்களின் துணைவியார், மலேசிய அரசி, இராஜா பரமேசுவரி அகோங் என அழைக்கப் படுகிறார்.[2]
மாமன்னரின் அதிகாரங்கள்
மலேசியாவின், அரச அமைப்புக்கு உட்பட்ட முடியரசில், பேரரசருக்கு, அரசியலமைப்பில் மிகுந்த அதிகாரங்கள் உள்ளன. கூட்டரசின் நிருவாக அதிகாரம், பேரரசரிடம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதை அவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்படுத்த முடியும் என்றும் மலேசிய அரசியலமைப்பு குறிப்பிடுகிறது.[2]
அமைச்சரவைக்குத் தலைமை வகிக்கும் பிரதமரை, பேரரசர்தான் நியமனம் செய்வார். நாட்டின் பொதுத் தேர்தலில், தேர்வு பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிரதமர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
அதே சமயத்தில், யாரைப் பிரதமராகத் தேர்வு செய்வது எனும் விருப்புரிமை அதிகாரம், பேரரசர் அவர்களிடம் மட்டுமே உள்ளது. இருப்பினும், பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்திற்கு அவரிடம் அனுமதி வழங்கப்படவில்லை.[2]
அரசியலமைப்பு விதி 55
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கோரிக்கையை பேரரசர் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும். அதே சமயத்தில் நிராகரிப்பதற்கும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. (அரசியலமைப்பு விதி 55) நாடாளுமன்றத்தினால் புதிதாக நிறைவேற்றப்படும் மசோதக்களை ஏற்றுக் கொள்ளவும் நிராகரிக்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளது.
எனினும், அரசியலமைப்பு விதி 55-இன் படி, அந்த மசோதக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தால், 30 நாட்களுக்குப் பிறகு அவை தானாகவே சட்டங்களாக மாறிவிடும்.[3]
மலேசியாவின் 17-ஆவது பேரரசர்
தற்சமயம், மலேசியாவின் பேரரசர் பதவியில் இருப்பவர் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாரம் சுல்தான் இசுகந்தர். இவர் மலேசியாவின் 17-ஆவது பேரரசர் ஆகும். 2023 அக்டோபர் 26 இல் மலேசிய மாநிலங்களின் ஆட்சியாளர்களின் மாநாட்டில் இவர் தேர்வு செய்யப்பட்டார்.[4] இவருடைய ஆட்சிகாலம் 31 சனவரி 2024-இல் தொடங்கியது.