சிலாங்கூர் சுல்தான் இசாமுதீன்
சிலாங்கூர் சுல்தான் இசாமுதீன் அல்லது சுல்தான் சர் இசாமுதீன் ஆலாம் சா (தெங்கு ஆலாம் சா) KCMG (ஆங்கிலம்: Sultan Hisamuddin Alam Shah; மலாய்: Sultan Hisamuddin Alam Shah Al-Haj Ibni Almarhum Sultan Alaeddin Sulaiman Shah; (சாவி: سلطان حسام الدين عالم شاه الحاج ابن المرحوم سلطان علاء الدين سليمان شاه; சீனம்: 苏丹希萨姆丁·阿南沙) (13 மே 1898 – 1 செப்டம்பர் 1960) என்பவர் 1938 முதல் 1942 வரையில் சிலாங்கூர் சுல்தான் பதவி வகித்தவர்; மற்றும் 6-ஆவது சிலாங்கூர் சுல்தான் ஆவார். பின்னர் 1945-இல் இருந்து 1960 வரையிலும் சிலாங்கூர் சுல்தான் பதவி வகித்தவர்; மேலும் மலாயா கூட்டமைப்பின் இரண்டாவது மலேசிய பேரரசராக ஏப்ரல் 14 முதல் 1960 செப்டம்பர் 1 அன்று அவர் இறக்கும் வரை பதவி வகித்தார். தொடக்ககால வாழ்க்கைஇவர் சுல்தான் அலாவுதீன் சுலைமான் சா (1863–1938) அவர்களின் மூன்றாவது மகனாவார். இவர் அரசமரபு அல்லாத ஒரு சாதாரண பெண்ணான சிக் புவான் அசுனா பிந்தி பிலோங் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பிறக்கும்போது தெங்கு ஆலாம் சா (Tengku Alam Shah) என்று பெயரிடப்பட்டார். இவருக்கு ஒன்றுவிட்ட அண்ணன்கள் இருவர் இருந்ததால், சிலாங்கூர் சுல்தானாக இவர் அரியணை ஏறுவார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. இவர் கோலா கங்சார் மலாய் கல்லூரியில் கல்வி பயின்றார். 1929-ஆம் ஆண்டு அந்தக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தை நிறுவுவதில்முக்கிய பங்கு வகித்தார். 1931-ஆம் ஆண்டு, சிலாங்கூரின் தெங்கு லட்சுமணாவாக (Tengku Laksamana of Selangor) நியமிக்கப்பட்டார். முன்பு அவர் தெங்கு பாங்லிமா ராஜாவாக (Tengku Panglima Raja) பணியாற்றினார். அரியணை சர்ச்சைசிலாங்கூர் சுல்தான் சுலைமானுக்கு பிள்ளைகள் பலர் இருந்தனர். அவரின் முதல் மூன்று மகன்கள் தெங்கு மூசா எடின் (Tengku Musa Heddin), தெங்கு படார் சா மற்றும் இசாமுதீன் ஆலாம் சா (Tengku Alam Shah) ஆவார்கள். முதல் இரண்டு மகன்களும் சுல்தான் அலாவுதீன் சுலைமானின் அரசத் துணைவியாரான, கெடா அரச குடும்பத்தைச் சேர்ந்த தெங்கு அம்புவான் பாதுக்கா செரி மகாராம் (Tengku Ampuan Maharum) பிள்ளைகள் ஆவார்கள். 1903-ஆம் ஆண்டில், தெங்கு மூசா எடின், சிலாங்கூர் மாநிலத்தின் தெங்கு மகோத்தாவாக (Tengku Mahkota) நியமிக்கப்பட்டார்; மேலும் 1920-ஆம் ஆண்டில் ராஜா மூடா (Raja Muda) என பதவி உயர்வு பெற்றார்.[1] இருப்பினும், பிரித்தானிய பிரதிநிதி, தியோடர் சாமுவேல் ஆடம்ஸ் (Theodore Samuel Adams) (1885–1961; 1935–1937 பதவியில்) என்பவரின் தூண்டுதலின் பேரில், தெங்கு மூசா எடின் 1934-இல் "தவறான நடத்தை" எனும் குற்றச்சாட்டில் ராஜா மூடா பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.[2] தெங்கு மூசா எடின்தெங்கு மூசா எடின் சூதாட்டத்தில் நாட்டம் கொண்டவர்; ஒரு வீண்செலவாளி; மற்றும் ஊதாரி என்றும் பிரித்தானிய பிரதிநிதி ஆடம்ஸ் குற்றம் சாட்டினார். இருப்பினும், சிலாங்கூரில் உள்ள மலாய்க்காரர்கள் பலர், தெங்கு மூசா எடினின் பதவி நீக்கத்திற்கான உண்மையான காரணம், பிரித்தானிய பிரதிநிதி ஆடம்ஸின் உத்தரவுகளைப் பின்பற்ற தெங்கு மூசா எடின் மறுத்ததே என்று நம்பினர்.[2] தெங்கு மூசா எடின் பதவி நீக்கம் தொடர்பாக சுல்தான் சுலைமான் வருத்தம் அடைந்தார். ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்றவிய நாடுகளுக்கான வெளியுறவுத்துறைச் செயலாளரிடம் கூட சுல்தான் சுலைமான் கோரிக்கை வைத்தார். மேலும் இலண்டனில் அவருடன் நேரடியாக இந்த பிரச்சினையைப் பற்றியும் விவாதித்தார்.[3] இருப்பினும் தெங்கு ஆலாம் சா, சிலாங்கூர் மாநிலத்தின் ராஜா மூடாவாக அறிவிக்கப்பட்டார். இந்த நியமனம் சூலை 20, 1936 அன்று நடந்தது.[2] சிலாங்கூர் சுல்தானாக முதல் ஆட்சிசுல்தான் சுலைமான் இறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு, 1938 ஏப்ரல் 4-ஆம் தேதி, சுல்தான் இசாமுதீன் ஆலாம் சா, சிலாங்கூர் சுல்தானாக அறிவிக்கப்பட்டார். சனவரி 26, 1939 அன்று, கிள்ளான், இசுதானா மகோத்தா புரி எனும் கிள்ளான் அரச அரண்மனையில், தெங்கு ஆலாம் சாவிற்கு முடிசூட்டப்பட்டது. அப்போது தெங்கு கிளானா ஜெயா புத்ரா எனும் பதவியில் இருந்த தெங்கு மூசா எடின் முடிசூட்டு விழாவிற்குத் தலைமை தாங்கினார்.[2] சப்பானியர் ஆட்சிசனவரி 15, 1942 அன்று, சிலாங்கூரின் சப்பானிய இராணுவ ஆளுநரான கர்னல் புஜியாமா (Colonel Fujiyama), சுல்தான் இசாமுதீனை கோலாலம்பூரில் உள்ள அரச மாளிகைக்கு அழைத்தார். அங்கு மேஜர் ஜெனரல் மினாக்கி (Major-General Minaki) என்பவருடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. பிரித்தானிய போர் முயற்சிகளுக்கு ஆதரவாக உரைகளை நிகழ்த்தியதாகச் சுல்தான் இசாமுதீன் ஒப்புக்கொண்டார். சிலாங்கூரின் பிரித்தானிய பிரதிநிதி தன்னை அவ்வாறு செய்ய வற்புறுத்தியதாகச் சுல்தான் இசாமுதீன் கூறினார். அதன் பின்னர், சுல்தான் இசாமுதீனின் அண்ணன் தெங்கு மூசா எடினிடம் தன்னுடைய சிலாங்கூர் சுல்தான் பொறுப்பை ஒப்படைக்கச் சொல்லி வற்புறுத்தப்பட்டார். அடுத்தக் கட்டமாக சுல்தான் இசாமுதீன், சிலாங்கூரின் சுல்தான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நவம்பர் 1943-இல், தெங்கு மூசா எடின் (Musa Ghiatuddin Riayat Shah of Selangor) சிலாங்கூர் சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.[3] 1943 முதல் சுல்தான் இசாமுதீன், சப்பானியர்களுடன் பணிபுரிய மறுத்துவிட்டார். சப்பானியர்கள் அவருக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் வழங்கிய உதவித் தொகையையும் சுல்தான் இசாமுதீன் வாங்க மறுத்துவிட்டார்.[4] சிலாங்கூர் சுல்தானாக இரண்டாவது ஆட்சிசப்பானியர்களின் சரணடைவுக்குப் பிறகு பிரித்தானியர்கள் மலாயாவுக்குத் திரும்பினர். சுல்தான் இசாமுதீன் ஆலாம் சா மீண்டும் சிலாங்கூர் அரியணைக்குக் கொண்டு வரப்பட்டார். அதே நேரத்தில் சுல்தான் மூசா (தெங்கு மூசா எடின்) கோகோஸ் (கீலிங்) தீவுகளுக்கு நாடுகடத்தப்பட்டார்.[2] மற்ற அனைத்து மலாய் ஆட்சியாளர்களைப் போலவே சுல்தான் இசாமுதீன் ஆலாம் சாவும் மலாயா ஒன்றிய உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருந்தார். இருந்தாலும், சுல்தான் இசாமுதீன் ஆலாம் சா பின்னர் அந்த உடன்படிக்கையை நிராகரித்து, மலாய் தேசியவாத முயற்சிகளுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்கினார். மார்ச் 1, 1946 அன்று, கோலாலம்பூரில் உள்ள சுல்தான் சுலைமான் மன்றத்தில் முதல் மலாய் ஒற்றுமை கூட்டத்தை (First Malay Unity Congress) சுல்தான் இசாமுதீன் ஆலாம் சா நடத்தினார். ஒரு வகையில், இந்தக் கூட்டம் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பை உருவாக்கப் படுவவதில் முக்கிய பங்கு வகித்தது என அறியப்படுகிறது. இறப்புசுல்தான் இசாமுதீன் ஆலாம் சா, தனது 62-ஆம் வயதில், மலேசியாவின் பேரரசராக பதவியேற்கவிருந்த நாளான 1960-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி, கோலாலம்பூர் இசுதானா தெத்தாமுவில் அடையாளம் தெரியாத நோயால் காலமானார். அவர் செப்டம்பர் 3, 1960 அன்று சிலாங்கூர், கிள்ளான், சுல்தான் சுலைமான் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள அரச கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[2] சுல்தான் இசாமுதீன் ஆலாம் சாவுக்குப் பிறகு அவரின் மகன் தெங்கு அப்துல் அசீஸ் சா, சிலாங்கூர் சுல்தானாகப் (1960–2001) பொறுப்பேற்றார். அவர் சுல்தான் சலாவுதீன் அப்துல் அசீஸ் சா (தெங்கு அப்துல் அசீஸ் சா) என்ற அரியணைப் பட்டத்தைப் பெற்றார். விருதுகள்மலேசிய விருதுகள்
வெளிநாட்டு விருதுகள்
நினைவகங்கள்கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலங்களில் சுல்தான் இசாமுதீன் நினைவாக பல இடங்களுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia