சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மார்கும் சுல்தான் இசுகந்தர் (Sultan Ibrahim ibni Almarhum Sultan Iskandar, மலாய்: سلطان إبراهيم ابن المرحوم سلطان إسکندر; பிறப்பு: 22 நவம்பர் 1958) மலேசியாவின் 17-ஆவதும், தற்போதைய யாங் டி பெர்துவான் அகோங் (மன்னர்) ஆவார், இவர் ஜொகூரின் ஐந்தாவது சுல்தானும் ஆவார்.
இவர் 2024 சனவரி 30 அன்று மலேசியாவின் மன்னராக பதவியேற்றார்.[1] இவர் இந்த ஐந்தாண்டுப் பதவிக்காக 2023 அக்டோபர் 27 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
சுல்தான் இசுகந்தர் இசுமாயிலின் முதல் மனைவி ஜோசபின் ரூபி டிரெவோரோ. இங்கிலாந்து, தார்குவே மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்தானியப் பெண்மணி ஆகும். சுல்தான் இசுகந்தர் இசுமாயில் இங்கிலாந்தில் படிக்கும் போது ஜோசபின் ரூபி டிரெவோரோவைச் சந்தித்தார்.[3][4][5][6] 1956-ஆம் ஆண்டில், ஜோசபின் ரூபி டிரெவோரோ, சுல்தான் இசுகந்தரை மணந்ததைத் தொடர்ந்து, தற்காலிகமாக கல்சோம் பிந்தி அப்துல்லா என்ற பெயரைப் பெற்றார்.
9 ஜூன் 1962 இல், சுல்தான் இசுகந்தர், சுல்தானா சனாரியாவுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இசுகந்தர் இசுமாயிலை, ஜோசபின் ரூபி டிரெவோரோ விவாகரத்து செய்தார். பின்னர் ஜோசபின் இங்கிலாந்திற்கு திரும்பிச் சென்றார்.[7]
இப்ராகிம் இசுகந்தரின் முப்பாட்டனார் 1959 மே 8 அன்று இலண்டனில் காலமானார். இதனால், இப்ராகிம் இசுகந்தரின் தாத்தா ஜொகூர் சுல்தான் இசுமாயில் அல் கலிடி (Sultan Sir Ismail Al Khalidi) ஜொகூர் சுல்தான் ஆனார். அந்த வகையில், இப்ராகிம் இசுகந்தர் தன் தந்தைக்குப் பிறகு, அரியணை வாரிசு நிலையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். 1968 முதல் 1970 வரை, ஆஸ்திரேலியாசிட்னியில் உள்ள டிரினிட்டி கிராமர் பள்ளியில் இடைநிலைக் கல்வியைப் படிக்க இப்ராகிம் இசுகந்தர் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டார்.
இராணுவப் பயிற்சிகள்
இப்ராகிம் இசுகந்தர் தன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அடிப்படை இராணுவப் பயிற்சிக்காக கோத்தா திங்கியில் உள்ள புலாடா இராணுவப் பயிற்சி மையத்திற்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவர் ஐக்கிய அமெரிக்கா, ஜோர்ஜியாவில் உள்ள போர்ட் பென்னிங்; மற்றும் பின்னர் வட கரொலைனாவில் உள்ள போர்ட் பிராக் இராணுவக் கல்லூரிகளில் இராணுவப் பயிற்சிகளையும் பெற்றார்.[8]
இப்ராகிம் இசுகந்தர் 3 சூலை 1981 அன்று ஜொகூர் பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார்.[8] அன்றிலிருந்து இசுதானா பாசிர் பெலாங்கியில் வசித்து வருகிறார்.[9][10] அவர் 26 ஏப்ரல் 1984-இல் இருந்து 25 ஏப்ரல் 1989 வரையில் ஜொகூர் அரசப் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். அப்போது அவரின் தந்தை மலேசியாவின் பேரரசராக பணியாற்றினார்.[8][11]
ஜொகூர் சுல்தான் பதவி
22 சனவரி 2010 அன்று இப்ராகிம் இசுகந்தரின் தந்தை சுல்தான் இசுகந்தர் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, இப்ராகிம் இசுகந்தர் ஜொகூர் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.[12] சுல்தான் இசுகந்தர் அதே இரவில் இறந்தார். அடுத்த நாள் காலையில் இப்ராகிம் இசுகந்தர் ஜொகூர் சுல்தானாகப் பதவியேற்றார்.[13]
இப்ராகிம் இசுகந்தர் ஜொகூர் சுல்தானாகப் பொறுப்பெற்ற பின்னர், 30 ஜூன் 2011 அன்று, தஞ்சோங் பாகார் தொடருந்து நிலையத்தில் இருந்து கடைசி தொடருந்தை ஓட்டினார். 1923-ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கும்மலாயாவுக்கும் இடையிலான தொடருந்து பாதையைத் தன் தாத்தா சுல்தான் இசுமாயில் முதன்முதலாகத் திறந்துவிட்டதால், கடைசி தொடருந்தை தான் செலுத்த விரும்புவதாகவும்; அந்த வகையில் கடைசி தொடருந்தை தஞ்சோங் பாகார் தொடருந்து நிலையத்தில் இருந்து வெளியேற்றுவது சாலப் பொருத்தமானது என்றும் அவர் கூறினார்.
புதிய அரச நகரமாக மூவார்
சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் 5 பிப்ரவரி 2012 அன்று ஜொகூர் பாருவிற்குப் பதிலாக மூவார் நகரை ஜொகூர் மாநிலத்தின் புதிய அரச தலைநகராக அறிவித்தார்.[14] 22 நவம்பர் 2012 அன்று மூவார் நகரில், சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் தன் பிறந்தநாளைக் கொண்டாடியதன் மூலம், ஜொகூர் பாருவிற்கு வெளியே பிறந்தநாளைக் கொண்டாடிய ஜொகூரின் முதல் ஆட்சியாளர் எனும் சிறப்பையும் பெறுகிறார். மூவார் நகரம் "அமைதியானது, அழகானது மற்றும் முற்போக்கானது; வரலாறு மற்றும் பாரம்பரியம் நிறைந்தது" என்பதால் அவர் அந்த நகரத்தைத் தேர்ந்தெடுத்தாக அறியப்படுகிறது.
மூவார் நகரத்தில் உள்ள அனைத்து பழைய கட்டிடங்களையும் மாநிலப் பாரம்பரிய வளாகங்களாக மாநில அரசு தன் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் கருத்து தெரிவித்தார். பேருந்து மற்றும் வாடகைக்கார் வளாகங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதன் மூலம் சுங்கை மூவார் ஆற்றின் தூய்மையை உள்ளூர் அதிகாரிகள் பாதுகாக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
சுல்தான் இப்ராகிம் இசுகந்தர், 23 மார்ச் 2015 அன்று ஜொகூர் சுல்தானாக முடிசூட்டப்பட்டார்.[15] சுல்தான் இப்ராகிம் இசுகந்தர், மத மிதவாதத்தை ஆதரிப்பதில் குறிப்பிடத்தக்கவர்; மற்றும் மலேசிய முசுலீம் கலாசாரத்தில் அரபுமயமாக்கல் ஏற்படுவதை விமர்சித்துள்ளார்.[16] மலேசியாவில் பட்டப்படிப்பு இல்லாத ஒரே சுல்தானாக இருந்த போதிலும், அவர் ஜொகூர் மாநிலத்திற்கு தரமான கல்வியை வழங்குவதில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறார்.
↑Facts on File Yearbook, Published by Facts on File, inc., 1957, Phrase: "Married: Prince Tengku Mahmud, 24, grandson of the Sultan of Johore, & Josephine Ruby Trevorrow, 21, daughter of an English textile..."
↑Thanam Visvanathan, Ruler with deep concern for people–Sultan Iskandar revered as protective guardian and helpful to all his subjects, pg 1, 8 April 2001, New Sunday TimesSpecial (Sultan of Johor's Birthday)