தூய கன்னி மரியா ஓவியர்: ராபியேல் சான்சியோ
வானகம் ஆளும் அரசியே வாழ்க! அல்லது பழைய வழக்கில் பரலோகத்துக்கு இராக்கினியே வாழ்க! (இலத்தீன் : Ave Regina Caelorum ; ஆங்கிலம் : Hail, O Queen of Heaven. ) என்பது தூய கன்னி மரியாவைக் குறித்து கத்தோலிக்க திருச்சபையில் திருப்புகழ்மாலையின் இரவு மன்றாட்டின் முடிவில் பாடப்படும் நான்கு பாடல்களுள் ஒன்றாகும்.[ 1] [ 2] (மற்றவை மண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே! , விண்ணக அரசியே! மற்றும் கிருபை தயாபத்து செபம் ).
இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் விழா (பெப்ரவரி 2) அன்று துவங்கி புனித வாரத்தின் புதன் முடிய இது பாடப்படுகின்றது.[ 3] இதன் ஆக்குனர் யார் என்பது குறித்த தகவல் இல்லை, ஆயினும் 12ம் நூற்றாண்டு முதல் இது பழக்கத்தில் இருந்துள்ளதற்கு சான்றுகள் உள்ளன.[ 4]
இந்த மன்றாட்டினை செபிப்பவருக்கு திருச்சபை வழங்கும் பலன்கள் உண்டு.[ 5]
பாடல் வரிகள்
வானகம் ஆளும் அரசியே வாழ்க
வானவர் அனைவரின் தலைவியே வாழ்க
எஸ்ஸேயின் வேரே உலகில் பேரொளி
உதயம் ஆகிய வாயிலே வாழ்க.
மாட்சி மிகுந்த கன்னியே மகிழ்க.
ஆட்சி தகைமையின் தாயே மகிழ்க.
எழில்மிகு நாயகி இயேசுவை வேண்டி
பொழிந்திடும் அருளை விடைபெறும் எம்மேல். ஆமென்
பழைய வழக்கு
புதுவையில் உள்ள மிஷன் அச்சகத்தில் 1937ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட ஞான சமுத்திரம் என்னும் நூலில் இருந்து இப்பாடலில் உரை கீழே தரப்பட்டுள்ளது
பரலோகத்துக்கு இராக்கினியே வாழ்க! :சம்மனசுக்களுக்கு தலைவியே வாழ்க! உலகத்தைப்பிராகாசிக்கச் செய்யவந்த பரஞ்சோதியாகிய கர்த்தர் எழுந்தருளின திருவாசலே வாழ்க! தேவ கனியைத் தந்த தூய்மையான திவ்விய பூங்கொடியே வாழ்க! சகல கன்னியர்களிலும் மகிமை பொருந்திய அதிசவுந்தரிய ரூபலாவண்ய கன்னிகையே களிகூறும். ஆராதனைக்குப் பாத்திரமான உம்முடைய திருக்குமாரனிடத்தில் எங்கள் பாவப்பொறுத்தலுக்காக மன்றாடும்.
முதல் - அர்ச். கன்னிகையே, நான் உம்மை ஸ்துதிக்கக் கிருபை செய்தருளும்.
துணை - உம்முடைய சத்துருக்களை வெற்றி கொள்ள எனக்கு பாலத்தைத் தந்தருளும்.
மன்றாடுவோமாக: தயாபர சர்வேசுரா சுவாமீ! எங்கள் துர்ப்பலத்துக்கு உமது திருச்சரணக் காவலைக் கட்டளையிட்டருளும், தேவமாதாவை நினைத்துக் கொண்டாடுகிற நாங்கள் அந்தத் திவ்விய தாயருடைய வேண்டுதல் உதவியால் பாவமாகிய மரணத்திலிருந்து உயிர்க்கும்படிக்கு அநுக்கிரகம் செய்தருளும். இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுகிறிஸ்து நாதருடைய திரு முகத்தைப்பார்த்து எங்களுக்குத் தந்தருளும். - ஆமென்
மேற்கோள்கள்