சதா சகாய மாதா
சதா சகாய மாதா (சதா சகாயத் தாய் அல்லது இடைவிடா சகாய மாதா) (Our Lady of Perpetual Help) என்னும் பெயர் இயேசுவின் தாயாகிய மரியாவுக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகும். இலத்தீன் மொழியில் "Sancta Mater de Perpetuo Succursu" என வழங்கப்படும் இப்பெயரைத் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் மரியாவை அழைக்கப் பயன்படுத்தினார். இப்பெயர் கிபி 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிசான்சியக் கலையில் அமைந்த ஒரு மரியா திருவோவியத்தோடு தொடர்புடையதாகும். கிரேக்க நாட்டின் தீவுகளுள் ஒன்றாகிய கிரேத்து (Crete) பகுதியின் தனிப்பாணி இவ்வோவியத்தில் துலங்குகிறது. இத்திருவோவியம் கிபி 1499இலிருந்து உரோமை நகரில் இருந்துவந்துள்ளது. இப்போது உரோமையில் புனித அல்போன்சு லிகோரி (St. Alphonsus Liguori) கோவிலில் வணங்கப்பட்டு வருகிறது. இந்த மரியா திருவோவியம் மரபுவழிக் கீழைச் சபையில் "பாடுகளின் இறையன்னை" (Theotokos of the Passion) என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இயேசு, மரியா, யோசேப்பு ஆகியோரை உள்ளடக்கிய திருக்குடும்பம் நாசரேத்து ஊரில் வாழ்ந்த போது பயன்படுத்திய உணவுமேசையின் மீது நற்செய்தியாளராகிய புனித லூக்கா இயல்பு முறையில் வரைந்த திருவோவியத்தின் பிரதிதான் இந்த ஓவியம் என்றொரு வரலாறு உண்டு. மரபுவழிக் கீழைச் சபை இத்திருவோவியத்தை "(இயேசுவிடம் செல்ல) வழிகாட்டுபவர்" (Hodegetria) என்று வகைப்படுத்துகிறது.[1] இத்திருவோவியத்தின் தனித்தன்மைகளுள் ஒன்று, அதில் உள்ள அன்னை மரியா நம்மை நேரடியாகப் பார்ப்பதும், குழந்தை இயேசு தாம் அனுபவிக்கப் போகிற துன்பத்தை முன்னறிந்து அச்சம் கொள்வதும், அதனால் அவர்தம் காலிலிருந்து காலணி கழன்று விழுவதும் உயிரோட்டமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பது ஆகும்.[1] இத்திருவோவியம் உரோமன் கத்தோலிக்க திருச்சபையினரிடையே மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இதற்கு ஒரு காரணம் அத்திருவோவியத்தைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்ட உலக மீட்பர் சபையினர் (Redemptorists) உலகெங்கும் சதா சகாய மாதா பக்தியைப் பரப்பியது ஆகும். அப்பக்தி பரவிய இடங்களிலெல்லாம் இத்திருவோவியமும் கூடவே சென்றது. இத்திருவோவியத்தின் முன் முழந்தாளிட்டு பல்லாயிரக் கணக்கான கத்தோலிக்கரும் மரபுவழிக் கிறித்தவர்களும் இறைவேண்டல் செலுத்திவந்துள்ளனர். சதா சகாய மாதா திருவிழா சூன் மாதம் 27ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சகாய அன்னையின் நவநாள் பக்தி முயற்சி புதன் கிழமைகளில் நடைபெறுகிறது.[2] திருவோவியத்தின் விளக்கம்பார்வைக்கு இத்திருவோவியம் ஒரு பெண் தம் குழந்தையைக் கையில் வைத்திருக்கிறார் என்று காட்டுவதுபோல் தோன்றினாலும், அதன் ஒவ்வொரு அம்சத்தையும் அலசிப் பார்க்கும்போது அங்கே ஆழ்ந்த பொருள் அடங்கியிருப்பதைக் காணலாம். கிறித்தவ நம்பிக்கையுடையோர் இத்திருவோவியத்தில் தம் சமய நம்பிக்கையின் அடித்தளங்களைக் காண்பர். இவ்வோவியம் அவர்களுக்குத் தியானப்பொருளாகவும் இறைவேண்டல் பொருளாகவும், இறையறிவு பெறும் ஊற்றாகவும் உள்ளது. சதா சகாய மாதா திருவோவியம் எழுதப்பட்டுள்ள பலகையின் அளவு 17x21 அங்குலங்கள் ஆகும். ஓவியத்தின் பின்னணி தங்க நிறத்தில் உள்ளது.[3]
திருவோவியம் எழுதப்பட்ட இடம்இந்த ஓவியம் கிரேத்துத் தீவில் எழுதப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அது எழுதப்பட்டுள்ள பலகை வாதுமை மரப் பலகை. இந்த ஓவியம் எழுதப்பட்ட காலத்தில் கிரேத்துத் தீவு வெனிசு குடியரசின் கீழ் இருந்தது.[4] எனவே எண்ணிறந்த திருவோவியங்கள் அங்கிருந்து ஐரோப்பாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. அவற்றுள் ஒன்று சிறப்புமிக்க இவ்வோவியம் ஆகும். இவ்வோவியம் துப்புரவிடப்பட்டு, செப்பனிடப்பட்ட ஆண்டுகள் 1866, 1940, 1990 ஆகும். இத்திருவோவியத்தில் பிசான்சியக் கலையும் மேற்கத்திய கலையும் இணைகின்றன. ஆதாரங்கள்
மேல் ஆய்வுக்கு
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia