ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன்
ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன்(Albert Abraham Michelson, டிசம்பர் 19,1852 – மே 9, 1931): அமெரிக்க இயற்பியலாளர். போலந்து நாட்டில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். ஒளியின் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டவர். 'மைக்கேல்சன்-மார்லி ஆய்வு' என்ற ஒளி செல்லும் ஊடகம் குறித்த ஆய்விற்காகச் சிறப்பாக அறியப்பட்டவர். 1907 ஆம் ஆண்டு ஒளியியலில் இவருடைய ஆய்வுகளுக்காக இவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது.[1][2][3][4][5][6] இதன் மூலம் அறிவியலுக்கான நோபெல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார்.[7] இளமைஆல்பர்ட் மைக்கல்சன் 1852 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் நாள் போலந்து நாட்டில், பிரஷ்யாவில் உள்ள 'ஸ்டெரெல்னோ' என்ற ஊரில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார்.[8] இவரது தந்தை சாமுவேல் மைக்கல்சன் ஒரு வணிகர் ஆவார்.. தாயார் ரோசலியா. இவர் பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1855-ல் இவரது குடும்பம் போலந்தை விட்டு அமெரிக்காவில் குடியேறியது. முதலில் நியூயார்க், வர்ஜினியா, நெவடா மற்றும் சான் பிரான்சிஸ்கோ என்று பல நகரங்களில் வாழ்க்கையை நடத்த வேண்டியிருந்தது. இவர் யூதக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இறை இருப்பு பற்றி அறியவொணாமைவாதியாகவே (agnostic)இருந்தார்.[9] சான் பிரான்சிஸ்கோவில் இவருடைய அத்தை வீட்டில் தங்கியிருந்த போது தன்னுடைய பள்ளிப்படிப்பை அங்கு மேற்கொண்டார். பொதுப்பள்ளிகளில் சேர்ந்து தன்னுடைய கல்வியைப் பயின்றார். 1899-ல் 'எட்னா ஸ்டேன்டன்' என்ற மங்கையை மணந்து கொண்டார். இவ்விணையருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் பிறந்தனர். பணி1869-ல் அமெரிக்கக் கப்பற்படை அகாதமியில் சிறப்புப்பிரிவு பணியாளராக அப்போதைய அமெரிக்கத் தலைவர் 'யூலிசஸ் எஸ் கிராண்ட்' என்பவரால் நியமிக்கப்பட்டார்.[10] அங்கு 4 ஆண்டுகள் பணி புரிந்த போது, இவர் சரியாகப் பயிற்சிப் பெற்றாரோ இல்லையோ, இயற்பியல் பிரிவுகளான, ஒளியியல், வெப்பவியல், பருவகால இயல் முதலிய துறைகளையும் மற்றும் சித்திரம் வரைதலையும் கற்றுத் தேர்ந்தார். 1873-ல் பட்டப்படிப்பை முடித்துப் பட்டம் பெற்றார். அங்கேயே 1875 முதல் 1977 வரை இயற்பியல் மற்றும் வேதியல் போதிப்பவராகப் பணியாற்றினார்.[11] 1875-ல் 'கிளெவ்லாண்ட்' என்னும் இடத்தில் அமைந்திருந்த பயனுறு அறிவியலுக்கான கேஸ் பள்ளியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1880-82-இல் ஹெல்ம் ஹோல்ட்ஸ் என்ற அறிவியலறிஞரின் மேற்பார்வையில் பெர்லினிலும், பாரிசிலும் தன்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.[12][13] 1889-ல் கிளார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1892-ல் புதிதாக உருவாக்கப்பட்ட சிகாகோ பலகலைக்கழகத்தில் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். அப்பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட இயற்பியல் துறையின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பின் அதில் பணியாற்றினார்.[14] ஆய்வுகள்1877-ல் 'அன்னபோலிஸ்' என்ற இடத்தில் இருந்தபோது வகுப்பில் அறிவியல் ஆய்வு ஒன்றினைச் செய்துகொண்டிருந்தபோது அதன் ஒரு பகுதியாக ஒளியின் வேகத்தைக் கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொண்டார். 1867-ல் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த வானியலறிஞர் 'அர்மெண்ட் பிசியூ' விண்மீன்களின் அளவை அளவிடக் குறுக்கீட்டு மானி ஒன்றைப் பயன்படுத்த முயன்றார். ஆனால் மைக்கல்சனோ 1887-ல் தொடங்கி பல ஆய்வுகளில் ஈடுபட்டுப் பல ஆடிகளையும் ஒளி ஓரளவு ஊடுருவும் கண்ணாடிகளையும் பயன்படுத்தி ஒரே மூலத்திலிருந்து வெளிவரும் தனித்தனி ஒளிக்கதிர்களை ஒன்றாக இணைப்பதற்கு ஒரு முறையை உருவாக்கினார். குறுக்கிடும் பல ஒளிக்கதிர்களை ஒருங்கிணைக்க அவை கடந்துவரும் தூரம், திசை, இவைகளைப் பொருத்தவகையில் அமையுமாறு ஒரு குறுக்கீட்டு மானி ஒன்றை அமைத்தார். மைக்கல்சன்-மோர்லி பரிசோதனைஇந்த அண்டம் முழுவதும் திரவ வாயு நிலைக்கு இடைப்பட்ட ஈதர் என்ற கண்ணுக்குப் புலனாகாத ஊடகம் விரவியுள்ளதாக அறிவியலறிஞர்கள் கருதினர். இதன் வழியாகத்தான் ஒளி ஊடுருவிச் செல்வதாகவும் கூறினர். மைக்கல்சன், மார்லி என்பவரோடு இணைந்து L வடிவக் கருவி ஒன்றை இரண்டாகப் பிரித்து, ஒரே நீளமுள்ள வெவ்வேறு செங்குத்தான பாதைகளில் செலுத்தினார். பிறகு அவற்றை மீண்டும் ஒன்றாக இணைத்தார். ஈதர் என்ற ஊடகம் இருந்திருந்தால் அங்கங்கே அவற்றின் அடர்த்திகளுக்கேற்ப செங்குத்தான பாதைகளில் சென்று திரும்பிய ஒளிக்கதிர்கள் மீண்டும் இணையும்போது சிறிதளவு நேர மாறுபாடு இருந்திருக்கும்,. ஆனால் அவ்வாறு ஏற்படவில்லை என்பது இவர்களின் ஆய்விலிருந்து தெரியவந்தது. அவ்வாறு ஏற்படாததால் ஈதர் என்ற ஊடகம் எல்லா இடத்திலும் இல்லை என்று நிரூபித்தனர். இந்த ஆய்வு "மைக்கல்சன்-மார்லி ஆய்வு" என்று புகழ் பெற்றது.[15][16][17]. ஒளியின் திசை வேகம்மக்கல்சனுக்கு முன்னால் பல அறிவியலறிஞர்கள் ஒளியின் திசைவேகத்தைக் கண்டறிவதில் ஈடுபட்டிருந்ததனர். ஆனால் அவர்கள் கண்டறிந்த அளவுகள் துல்லியமாக அமையவில்லை. மிகக்குறைந்த செலவில் வெறும் ஆடிகளை வைத்தே தனது ஆய்வினை மேற்கொண்ட மைக்கல்சன் ஒளியின் திசைவேகத்தைத் துல்லியமாகக் கண்டறிவதில் 1878-ல் வெற்றிபெற்றார். தன்னுடைய ஆய்வுகளை மீண்டும் மீண்டும் பலமுறை செய்து பார்த்தார். 1920-ல் வில்சன், சான் ஆன்டோனியா என்ற 22 மைல்களுக்கிடையேயான இரு குன்றுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் முற்றிலும் புதியதாக வடைவமைக்கப்பட்ட ஆடி அமைப்புகளை அமைத்து ஒளியின் திசைவேகத்தை மிகவும் துல்லியமாகக் கண்டறிந்தார்.( 299,940 km/s, or 186,380 mi/s)[15] இவருடைய குறுக்கீட்டு மானியின் உதவியால் ஆல்பா ஆரியனிஸ் என்ற வின்மீண் விட்டத்தை அளந்துகாட்டினார்.[18] சிறப்புகள்![]()
இறுதிக்காலம்1929-ல் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகி பாசதேனா என்ற இடத்தில் அமைந்திருந்த மவுண்ட் வில்சன் வானியல் ஆய்வு மையத்தில் சேர்ந்து தன்னுடைய ஓய்வுகாலப் பணியை மேற்கொண்டார்.[18] 1931-ஆம் ஆண்டு மே 9-ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். துணைநூல்அறிவியல் ஒளி, டிசம்பர் 2010. பக் 31-33. குறிப்புகள்
வெளியிணைப்புகள்
இவற்றையும் பார்க்க |
Portal di Ensiklopedia Dunia