5 முறை வாகைப் பட்டத்தை வென்றுள்ள சென்னை அணி, இந்தியன் பிரீமியர் லீக் அணிகளில் அதிக வெற்றி விகிதத்தைப் பெற்றுள்ள அணியாகும். இந்த அணி 2010 மற்றும் 2014 ஆகிய இரு ஆண்டுகளில் தொடர்ந்து சாம்பின்ஸ் லீக் இருபது20 கோப்பையை வென்றுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் தொடர்ந்து அதிக கோப்பை வெற்றிகளை (7) பெற்ற அணி என்ற சாதனையையும் 2023ஆம் ஆண்டில் பெற்றது. மேலும் சாம்பியன்சு லீக் இருபது20 போட்டியின் கோப்பையை இருமுறை வென்றுள்ளது. இந்த அணியின் சார்பில் அதிக ஓட்டங்களை எடுத்தவர் சுரேஷ் ரைனாவும், அதிக ஆடுநர்களை வீழ்த்தியவர் டுவைன் பிராவோவும் உள்ளனர்.
2013, மே 24 அன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை அதிகாரியான குருநாத் மெய்யப்பன், சூதாட்டம் மற்றும் ஏமாற்றுதல் ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இந்த அணியை இரண்டு ஆண்டுகள் தடை செய்ய இந்தியாவின் உச்சநீதிமன்றம் அமைத்த முத்கல் குழு உத்தரவிட்டது.[2] அதனால் 2016ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கவில்லை. தடை காலம் அழிந்த பிறகு மீண்டும் 2018ஆம் ஆண்டில் பங்கேற்றது மற்றும் கோப்பையை வென்றது, அதற்கு முன்னாடியே இரண்டு கோப்பைகளை வென்றுள்ளது, அதற்கு பின்னாடி இரண்டு கோப்பைகளை வென்றுள்ளது.[3]
தொழில்முறை உரிமையின் வரலாறு
இந்தியன் பிரிமியர் லீக் தொடங்கியபோது வாங்கப்பட்ட 8 அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்றாகும். இதன் 10 ஆண்டுகளுக்கான தொழில்முறை உரிமையை இந்திய சிமேன்ட்ஸ் நிறுவனம் 91 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (7.690255300 பில்லியன் ₹) வாங்கியது. 2010 ஆம் ஆண்டு வரை இந்தத் தொழில்முறை உரிமையின் விளம்பர நட்சத்திர தூதுவராக இந்திய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இருந்தார். மற்றொரு முன்னாள் இந்திய வீரரான வி.பி.சந்திரசேகர் அணியின் தலைமை தேர்வாளர் ஆவார்.
மக்களிடம் துடுப்பாட்டப் போட்டியை கொண்டு சேர்க்க அணிக்கான விளம்பர நட்சத்திர தூதுவர்களாக திரைப்பட நடிகர்களான விஜய்யும், நயன்தாராவும் நியமிக்கப்பட்டனர்.[4][5]மு. அ. சிதம்பரம் அரங்கம் அணியின் இல்ல அரங்கமாக காணப்படும். அணிக்கான கருப்பொருள் பாடலை வைரமுத்து எழுதியிருப்பதோடு மணி சர்மா இசையமைத்துள்ளார் கருப்பொருள் நிகழ்படத்தை ராஜிவ் மேனன் இயக்கியுள்ளார். 2010 ஆம் ஆண்டு அரவிந்த்-சங்கர் இசையில் வெளியிடப்பட்ட 'விசில் போடு' என்னும் விளம்பர பாடல் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
பெயரின் விளக்கம்
சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயர் சங்க கால அரசர்களை குறிக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்னம் என்னவென்றால் காட்டின்அரசனானசிங்கம் ஆகும். இது தமிழகத்தை ஆண்ட பல்லவர்களின் சின்னமும் ஆகும். சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயர், இவ்வணியின் உரிமையாளர்களான இந்தியா சிமெண்ட்ஸ் நிருவனத்தின் கோரமாண்டல் கிங் என்ற சிமெண்ட் கம்பனியின் பெயரில் இருந்து தழுவியுள்ளது.
உள்ளக அரங்கம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உள்ளக அரங்கம் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் உள்ள மு. அ. சிதம்பரம் அரங்கமாகும். இந்திய துடுப்பாட்ட வாரியத்தின் முன்னாள் தலைவரான மு. அ. சிதம்பரத்தின் நினைவாக பெயரிடப்பட்டுள்ள இந்த அரங்கம், இந்தியாவில் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் மிகவும் பழைமையான அரங்கமாகும். தமிழ்நாடு துடுப்பாட்டக் கழகத்திற்கு சொந்தமான் இந்த அரங்கில் மே 2013 நிலவரப்படி 50,000 பார்வையாளர்கள் அமரும் வசதி உள்ளது. 2011 துடுப்பாட்ட உலக கிண்ணத்திற்காக புணரமைக்கப்பட்ட போது இதன் பார்வையாளர் கொள்ளளவு 36,000தில் இருந்து 50,000ஆக அதிகரிக்கப்பட்டது.
இங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 62.75 சதவிகித வெற்றியை பதிவு செய்துள்ளது. ரசிகர்களால் "சேப்பாக்கம் கோட்டை" எனவும் "சிங்கங்களின் குகை" எனவும் அழைக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கு விளையாடிய 8 போட்டிகளிலும் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டி உள்பட) வென்று, தன் உள்ளக அரங்கத்தில் அனைத்து போட்டிகளிலும் வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்தது.