காஞ்சிபுரம் கடகேசுவரர் கோயில் (கடகேசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். காமாட்சி அம்மையார் இறைவனை வழிபட்டு கடகம் தரித்துக்கொண்ட தலமாகும்.[ 1] மேலும், இவ்விறைவரை அம்பிகை வழிபட்டதாக அறியப்படும் இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளன.[ 2]
தல வரலாறு
கங்கணேசத்தில் பொன்னாலான காப்புநாணை (கங்கணம்) அணிந்து கொண்ட அம்பிகை , மற்றுமோர் சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்து வழிபட்டு, கடகம் அணிந்து கொண்டாள். அதுவே கடகேசம் எனப்பட்டதாக இத்தல வரலாறு உள்ளது.[ 3]
தல பதிகம்
நவமணிக் கடகம் பூணும் ஞாங்கருங் கடகே சானச்
சிவபரஞ் சுடரைப் பூசை செய்துதன் கரத்திற் பூண்டாள்
அவிர்மணி நகையாள் போற்றும் அக்குறி இரண்டுங் கண்டோர்
தவலரு மலநோய் மாற்றி முத்தியில் தவிர்ந்து வாழ்வார்.
நவமணிகள் பதித்த கடகத்தை அணிந்த அப்பொழுதும் கடகேசப்
பிரானாரைத் தாபித்துப் பூசை செய்து அதனைக் கரத்திற் றரித்தனர்.
விளங்கும் முத்தனைய முறுவலார் போற்றிய கங்கணேசர் கடகேசராகிய
சிவிலிங்கப் பிரானாரைக் கண்டு வணங்கினோர் கெடலரிய ஆணவமல
நோயைக் கெடுத்து முத்தியில் நிலைபெற்று வாழ்வார்.
அன்னணம் அருச்சித் தேத்தி ஆளுடை எம்பி ராட்டி
உன்னுவோர் பிறவி மாய்க்கும் உள்நகர் வரைப்பின் முற்ற
மன்னிய வளங்க ளெல்லாம் மனங்களி பயப்ப நோக்கிப்
பன்னரும் பெருமை சான்ற பரவெளிப் பிலத்தை யுற்றாள்.
அவ்வகை அருச்சித்துப் போற்றி எம்மை அடிமையாக உடைய
பிராட்டியார் நினைப்பவர்தம் பிறவியைப் போக்கும் நகரில் நிலை பெற்ற
செல்வங்கள் யாவற்றையும் மனமகிழும்படி முற்றவும் கண்டு விவரித்
துரைத்தற்கும் அடங்காத பெருமை அமைந்த பரவெளியாகிய பிலத்தை
அண்மினர்.[ 4]
அமைவிடம்
இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின் சின்னகம்மாளத் தெருவில் கங்கணேசம் அருகில் கடகேசம் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி இறவாத்தானத்திற்கு செல்லும் சாலையில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[ 5]
போக்குவரத்து
வான்வழி: வானூர்தி சேவை இல்லை; உலங்கு வானூர்தி மூலம் காஞ்சிபுரம் வந்தடைய, காஞ்சியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஏனாத்தூர் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அகத்திலுள்ள உலங்கூர்தி இறங்குதளத்தில் இறங்கி சீருந்து மூலம் இக்கோயிலை அடையலாம்.
இரும்புத் தடம்: தொடருந்து மூலாமாக; தலைநகர் சென்னையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாகவும், திருப்பதியிலிருந்து அரக்கோணம் மார்க்கமாகவும், காஞ்சி தொடருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இக்கோயிலை, சீருந்து மூலமாகவும், தானியுந்து மூலமாகவும் சென்றடையலாம்.
சாலை வழி: பேருந்திலோ , அல்லது சீருந்துலோ , காஞ்சி வந்தடைய நான்கு திசையிலும் சாலை வழியுள்ளன; வடகிழக்கில், சென்னையிலிருந்து (75 கிலோமீட்டர்) திருப்பெரும்புதூர் வழியாகவும் ; தென்கிழக்கில், செங்கல்பட்டிலிருந்து (40 கிலோமீட்டர்) வாலாசாபாத் வழியாகவும் ; வடமேற்கில், விழுப்புரத்திலிருந்து (80 கிலோமீட்டர்) வந்தவாசி வழியாகவும் ; தென்மேற்கில், பெங்களுரிலிருந்து (275 கிலோமீட்டர்) வேலூர் வழியாகவும் இக்கோயில் நகரை வந்தடையலாம்.[ 6]
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
வகை படுத்தப்பட்டவை பாடல்பெற்றவை பிற