மதன் கார்க்கி
![]() மதன் கார்க்கி வைரமுத்து, இந்தியாவைச் சேர்ந்த ஒரு பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், ஆராய்ச்சி நிபுணர், மென்பொருள் பொறியாளர் மற்றும் தொழில்முனைவர். குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் கார்க்கி, கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் துணைப் பேராசிரியராக தன்னுடைய தொழில்முறைப் பணிவாழ்க்கையைத் தொடங்கினார், விரைவில் அவர் தமிழ்த் திரையுலகுக்குள் நுழைந்தார், அங்கு பாடலாசிரியராக, வசனகர்த்தாவாகப் பணியாற்றத் தொடங்கினார். 2013ன் தொடக்கத்தில் அவர் தன்னுடைய ஆசிரியப் பணியைத் துறந்தார், திரைத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றத் தொடங்கினார், அதேநேரத்தில் அவர் கார்க்கி ஆராய்ச்சி அறக்கட்டளை (KaReFo) என்ற மொழிக் கணிமை மற்றும் மொழிக் கல்வியறிவு ஆகியவற்றில் முதன்மையாகக் கவனம் செலுத்தும் ஒரு கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தையும் தொடங்கினார். அவர் மெல்லினம் கல்வி நிறுவனத்தை தோற்றுவித்தார், இந்த நிறுவனம் குழந்தைகள் மத்தியில் கற்றலைப் பரவச்செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட கல்வி விளையாட்டுகள் மற்றும் கதைப் புத்தகங்களை உருவாக்குகிறது. அவர் உருவாக்கிய இன்னொரு நிறுவனம், டூபாடூ (DooPaaDoo) இந்த இணையம் சார்ந்த இசைத்தளமானது திரைப்பட இசை அல்லாத தனியிசையை முன்னிறுத்துகிறது, திரைப்பட இசைத் தொகுப்புகளை விநியோகிக்கும் ஓர் அமைப்பாகவும் செயல்படுகிறது.[1][2][3] ஆரம்பகால வாழ்க்கைஏழு முறை தேசிய விருது வென்ற பாடலாசிரியராகிய வைரமுத்து மற்றும் தமிழ் அறிஞர், மீனாட்சி பெண்கள் கல்லூரியின் மூத்த பேராசிரியரான பொன்மணி ஆகியோரின் மூத்த மகன் கார்க்கி. அவருடைய இளைய சகோதரர் கபிலன், நாவல்களை எழுதி வருகிறார், தமிழ்த் திரைப்படங்களில் பாடலாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றுகிறார். கல்விகார்க்கி சென்னையில் வளர்ந்தவர், கோடம்பாக்கத்தில் உள்ள லயோலா மெட்ரிகுலேஷன் பள்ளியில் கல்வி கற்றவர். பள்ளியில் தான் ஒரு நல்ல மாணவராக இருக்கவில்லை என்று தானே ஒப்புக்கொள்ளும் கார்க்கி, முதன்மையாகத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்மட்டும்தான் சிறந்து விளங்கினாராம். உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அவருக்குக் கணிணி அறிவியலில் ஓர் ஆர்வம் ஏற்பட்டது, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் (CEG) அவருக்கு இடம் கிடைத்தது. 1997ம் ஆண்டில் கணிணிப் பொறியியல் துறையில் அவர் தன்னுடைய இளநிலைக் கல்வியைத் தொடங்கினார். CEGல் படித்துக்கொண்டிருந்தபோது, தன்னுடைய இறுதி ஆண்டுப் பணித்திட்டத்தின் ஒரு பகுதியாகத் தமிழ் ஒலி எந்திரம் என்ற நிரலியை உருவாக்கினார் கார்க்கி, இது பேராசிரியர் T.V. கீதா அவர்களுடைய நேர்பார்வையின்கீழ் நிறைவுசெய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கம், தமிழ் மொழிக்கான "உரையிலிருந்து பேச்சை உருவாக்கும்” ஓர் இயந்திரத்தை உருவாக்குவதாகும். இந்தத் திட்டம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையானது மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அவர் பணியாற்றிய பிற திட்டங்கள்: பெயர் உருவாக்கி, இது படைப்புணர்வு, புதுமைச் சிந்தனை, புதிய பொருள்களை உருவாக்குவதுபற்றிய அவருடைய பாடத்தின் ஒரு பகுதியாகச் செய்யப்பட்டது, இதன் நோக்கம் இந்திய ஒலிப்பியலின்படி ஒலிக்கக்கூடிய பெயர்களை வரிசைமுறையற்று உருவாக்குவதாகும், ஒரு தொகுப்பு வடிவமைப்பு, இதற்காக ஓர் உயர் நிலை நிரல் எழுதுதல் மொழியைச் சிந்தித்தார் கார்க்கி, இதன் நோக்கம், மொழி சார்ந்த விதிமுறைகள், இலக்கண விதிமுறைகளை முறையாக்க குறிப்பிடுதல் மற்றும் புரிந்துகொள்ளுதல். சென்னைக் கவிகள்க்காக, தமிழ்ச் சொல் செயலிக்கான எழுத்துப்பிழையைச் சரிபார்க்கும் ஒரு நிரலியையும் அவர் உருவாக்கினார். இந்தத் திட்டத்தில் நிறைய இயற்கை மொழிச் செயல்படுத்துதல் அம்சங்கள் நிறைந்திருந்தன, இவை தமிழ் மொழிக்கான உருவவியல் பகுப்பாய்வு ஒன்றின் பகுதியாக உருவாக்கப்பட்ட ஓர் வேர் அகரமுதலியின் அடிப்படையில் அமைந்தன. இந்தத் திட்டத்தின் நோக்கம், ஒரு சொல் சரியானதா, இல்லையா என்பதைக் கண்டறிதலாகும். 2001ல் தன்னுடைய இளநிலைப் பட்டப்படிப்பை நிறைவுசெய்த கார்க்கி, 2003ம் ஆண்டில் குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முதுநிலைப் பட்டப்படிப்பைத் தொடங்கினார். அங்கு அவர் கணக்கிடுதல் கோட்பாடு மற்றும் வலுவான கணிதத்தில் அடிப்படையில் அமைந்த ஒரு திட்டத்தை உருவாக்கினார் (இது டாக்டர் ஜார்ஜ் ஹாவாஸ் அவர்களுடைய மேற்பார்வையின்கீழ் நிகழ்த்தப்பட்டது) இந்தத் திட்டமானது எந்த ஓர் அணி வடிவமைப்பையும் ‘ஹெர்மைட் இயல்பு வடிவம்’ என்கிற பொதுவான ஒரு வடிவத்துக்குக் (இது ஓர் அலகு மேல் முக்கோண அணி ஆகும்) குறைப்பதற்கான ஏற்கனவே உள்ள ஒரு செயல்முறையை ஆராய்வதில் கவனம் செலுத்தியது. இந்தக் கல்வியின்போது அவருடைய வேறு சில திட்டங்கள்: ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட மென்பொருள் செயல்முறைத் திட்டம் (இதன் நோக்கம், தனிப்பட்ட மென்பொருள் செயல்முறை என்கிற தனிநபர்களுக்கான மென்பொருள் உருவாக்கச் செயல்முறையை அறிமுகப்படுத்திப் பின்பற்றுதலாகும்), இணையக் கலைப்பொருள் கடை இணையத்தளம் (இதற்காக இணையத்தின்வழியே ஓவியங்களை வர்த்தகம் செய்கிற ஓர் இணையத்தளம் உருவாக்கப்பட்டது) மற்றும் எழுத்து அடிப்படையிலான ஒலி அரட்டை (இதற்காக முதன்மையான கணக்கிடல் அம்சங்களை உள்ளடக்கிய ஒரு பதிலி ஒலி அரட்டை அமைப்பு அமைக்கப்பட்டு விஷுவல் பேஸிக்கில் உருவாக்கப்பட்டது.) தன்னுடைய கற்றல் பணிகளுடன் கார்க்கி பல்கலைக்கழகத்தில் ஓர் கல்வியியல் ஆசிரியராகவும் பணியாற்றினார். தொடர்புடைய தரவுத்தள அமைப்புகள் மற்றும் நிரலெழுதும் மொழிகள் போன்ற பாடங்களில் அவர் வகுப்பறைப் பயிற்சிகள் மற்றும் ஆய்வக நிகழ்வுகளை நடத்தினார். தகவல் தொழில்நுட்பத்தில் தன்னுடைய PhD திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் ஜாவா அடிப்படையிலான ஓர் உருவகப்படுத்தும் தளத்தை உருவாக்கினார், SENSE (வலைப்பின்னலாக்கப்பட்ட உணர்விப் பரிசோதனைகளின் உருவகப்படுத்தப்பட்ட சூழல்) என்று பெயரிடப்பட்ட இந்தத் தளம் பலவிதமான பட்டறிவுகளைப் பரிசோதிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டமானது டாக்டர் மரியா ஒர்லோஸ்கா மற்றும் டாக்டர் ஷாஜியா சாதிக் ஆகியோருடைய வழிகாட்டுதலின்கீழ் நிறைவுசெய்யப்பட்டது. அவருடைய ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு, “கம்பியில்லாத உணர்வி வலைப்பின்னல்களில் கேள்விப் பரவலுக்கான வடிவமைப்புக் கருத்தாய்வுகள்”. ஆசிரியப் பணிதன்னுடைய முதுநிலைப் படிப்பை நிறைவுசெய்துவிட்டு இந்தியா திரும்பிய கார்க்கி, டிசம்பர் 2007ல் CEG அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் திரும்பினார். அடுத்த ஆறு மாதங்களுக்கு அவர் மூத்த ஆராய்ச்சி நிபுணராகப் பணியாற்றினார், ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை அளவிலான மாணவர் திட்டங்கள் பலவற்றைக் கையண்டார். இவற்றுடன், அவர் முதுநிலைப் படிப்பு மாணவர்களுக்குப் பாடங்களையும் ஆய்வகங்களையும் கையாண்டார். ஜூலை 2008முதல் ஜூலை 2009வரை அவர் ஒரு திட்ட அறிவியலாளராகவும் பணியாற்றினார், ஆராய்ச்சிக் குழுக்கள், ME & MBA மாணவர்களுடைய திட்டங்களைக் கையாண்டார். ஆகஸ்ட் 2009லிருந்து அவர் அங்கு துணைப் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அவர் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்காக அங்கு சேர்ந்திருந்த கணிணி அறிவியல் மாணவர்களுக்கு விரிவுரைகளை நிகழ்த்தினார், பல்கலைக்கழகத்தின் தமிழ்க் கணிமை ஆய்வகத்தையும் ஒருங்கிணைத்தார். அவர் NRI மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஓர் ஆலோசகராகவும் பணியாற்றினார், கணிணி அறிவியல் பொறியியல் கழகத்தின் ஊழியர் காசளராகவும் பணியாற்றினார். அவர் பயிற்றுவித்த சில பாடங்கள்: மேம்பட்ட தரவுத்தளங்கள், பொறியாளர்களுக்கான நெறிமுறைகள், நிரலெழுதுதல் மொழிகளின் கொள்கைகள், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தமிழ்க் கணிமை (PhD மாணவர்களுக்கு). குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைஜூன் 22, 2008ல் கார்க்கி, நந்தினி ஈஸ்வரமூர்த்தியை மணந்தார், இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் அவருடன் படித்தவர் ஆவார். நந்தினி கார்க்கி இப்போது தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களுக்கான துணைத் தலைப்புகளை உருவாக்குபவராகப் பணியாற்றுகிறார். 2009ல் இவர்களுக்கு ஹைக்கூ கார்க்கி என்ற மகன் பிறந்தார். திரைத்துறை அனுபவம்அறிமுகம்கார்க்கி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் அவர் [[தமிழகத் திரைப்படத்துறை |தமிழ்த் திரைத்துறையிலும்]] தன்னுடைய பணியைத் தொடங்கினார், அவருடைய அறிமுகம், இயக்குநர் ஷங்கருடைய மாபெரும் படைப்பாகிய எந்திரன் (2010) என்ற அறிவியல் புனைகதைத் திரைப்படத்தில் தொடங்கியது. கார்க்கி தான் எழுதிய சில பாடல்களுடன் இந்த இயக்குநரை 2008ல் அணுகியிருந்தார், இந்தத் திரைப்படத்தின் வசனங்களில் உதவுவதற்காக அவர் அழைக்கப்பட்டார், குறிப்பாக, தொழில்நுட்பச் சொற்கள் சார்ந்த குறிப்புகளை அவர் வழங்கினார். அநேகமாக இந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் மூன்றுவகையான வசனங்கள் எழுதப்பட்டதாக குறிப்பிட்டார் அவர்; இவற்றில் ஒரு வசனம் ஷங்கரால் எழுதப்பட்டது, இன்னொரு வசனம் கார்க்கியால் எழுதப்பட்டது, மூன்றாவது வசனம் மறைந்த சுஜாதா ரங்கராஜனால் எழுதப்பட்டது, இந்த இயக்குநருடன் அடிக்கடி இணைந்து பணியாற்றியுள்ள சுஜாதா, இந்தத் திரைப்படத்தின் முன்தயாரிப்பின் ஆரம்ப காலகட்டத்தில் இறந்துவிட்டார். ஷங்கர் மூன்று வரைவுகளையும் வாசித்தார், அவற்றில் எது நன்றாகப் பொருந்தியதோ, அதை பயன்படுத்திக்கொண்டார். இந்தத் திரைப்படத்தின் உச்சக்காட்சியில்மட்டும்தான் பல வசனகர்த்தாக்கள் சேர்ந்து பணிபுரியவில்லை, அக்காட்சிக்கான வசனங்களை கார்க்கிமட்டுமே எழுதினார். வசனங்களை எழுதியதுடன் இந்தத் திரைப்படத்தில் கார்க்கி இரண்டு பாடல்களையும் எழுதினார் : “இரும்பிலே ஒரு இருதயம்” (அவருடைய திரைப்படப் பணி வாழ்க்கையின் முதல் பாடல், இதனை A.R. ரஹ்மான் பகுதியளவு பாடியிருந்தார்) மற்றும் “பூம் பூம் ரோபோ டா”. அதேசமயம், கண்டேன் காதலை (2009) என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய ”ஓடோடிப் போறேன்” என்ற பாடல்தான் அவருடைய முதல் வெளியீடானது. எந்திரன் திரைப்படத்தில் கார்க்கி ஆற்றிய பணிக்காக, 2011 விஜய் விருதுகளில் ”இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு” என்கிற கெளரவத்தைப் பெற்றார் கார்க்கி. பாடலாசிரியர்எந்திரன் திரைப்படத்தில் அவருடைய பணியைத் தொடர்ந்து, தமிழ்த் திரைத்துறையில் மிகவும் நாடப்படுகின்ற பாடலாசிரியர்களில் ஒருவரானார் கார்க்கி, அவர் பல இசையமைப்பாளர்களுடன் திரும்பத் திரும்ப பணியாற்றினார்: A.R ரஹ்மான், ஹாரிஸ் ஜயராஜ், D.இமான், M.M. கீரவாணி, யுவன் ஷங்கர் ராஜா, S. தமன், சஞ்சய் லீலா பன்சாலி, அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சாம் CS. தன்னுடைய தாய்மொழியான தமிழுடன், வேறு பல மொழிகளிலும் பாடல் எழுதிப் புகழ் பெற்றுள்ளார் கார்க்கி; அவற்றில் சில: நண்பன் திரைப்படத்திலிருந்து ”அஸ்க்கு லஸ்க்கா” (இதில் 16 வெவ்வேறு மொழிகள் இடம் பெற்றிருந்தன), ஏழாம் அறிவு திரைப்படத்தில் வரும் "தி ரைஸ் ஆஃப் டாமோ” (மாண்டரின் மொழியில் எழுதப்பட்டது). நூற்றெண்பது திரைப்படத்திலிருந்து “கன்டினியூவா” (போர்ச்சுகீசு மொழியில்). அவருடைய பணியின் இன்னொரு முக்கியமான அம்சம், அன்றாடப் பேச்சில் இயல்பாக இடம்பெறாத அபூர்வமான தமிழ்ச் சொற்களைத் தன்னுடைய பாடல் வரிகளில் நுழைப்பது, எடுத்துக்காட்டாக கோ திரைப்படத்தில் “குவியமில்லாக் காட்சிப் பேழை” மற்றும் ஐ திரைப்படத்தில் “பனிக்கூழ்”. தமிழ்த் திரைப்பட உலகின் முதல் மாலை மாற்றுப் பாடலையும் அவர் எழுதினார், இது விநோதன் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது. 2018ம் ஆண்டின் நிறைவில் அவர் 600க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். கார்க்கியின் மிகப்பிரபலமான பாடல்களில் சில: “இரும்பிலே ஒரு இருதயம்” (எந்திரன்), “என்னமோ ஏதோ” (கோ), ”நீ கூறினால்” (நூற்றெண்பது), “அஸ்க்கு லஸ்க்கா” (நண்பன்), ”கூகுள் கூகுள்” (துப்பாக்கி), ”எலே கீச்சான்” (கடல்), “ஒசாக்கா” (வணக்கம் சென்னை), “செல்ஃபி புள்ள” (கத்தி), ”பூக்களே சற்று ஓய்வெடுங்கள்” (ஐ), “மெய் நிகரா” (24), “அழகியே” (காற்று வெளியிடை), “எந்திர லோகத்துச் சுந்தரியே” (2.0) மற்றும் “குறும்பா” (டிக் டிக் டிக்). வசனகர்த்தாஎந்திரன் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கருடைய நண்பன் திரைப்படத்திலும் கார்க்கி அவருடன் வசனகர்த்தாவாக இணைந்து பணியாற்றினார். ஹிந்தியில் பெரும் வெற்றியடைந்த 3 இடியட்ஸ் திரைப்படத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் அவர் கல்லூரி வாழ்க்கையைச் சற்று வித்தியாசமாகம் காட்டுவதற்காக வசனங்களில் ஒரு புதுமையை நுழைத்தார். 2.0 (எந்திரன் திரைப்படத்தின் அடுத்த பகுதி) படத்திலும் அவர் ஷங்கருடன் தொழில்நுட்ப ஆலோசகராக இணைந்து பணியாற்றினார், இது இந்தியத் திரைப்படங்களிலேயே மிகவும் அதிகப் பொருட்செலவில் தயாரானதாகும். தெலுங்கு இயக்குநர் S.S. ராஜமெளலியுடைய இரு பகுதிப் பிரமாண்டத் திரைப்படமாகிய பாகுபலியிலும் கார்க்கி அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார், அதற்காக அவர் மிகுந்த பாராட்டைப் பெற்றார், இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பகுதி, தென்னிந்தியாவிலேயே மிக அதிக லாபம் சம்பாதித்த ஒரு திரைப்படமாகும், அடுத்து வரவிருக்கும் RRR திரைப்படத்திலும் அவர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள். வசன எழுத்தாளராக அவருடைய பிற குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்: கோகுலின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வெங்கட் பிரபுவின் மாசு என்கிற மாசிலாமணி மற்றும் நாக் அஷ்வினின் நடிகையர் திலகம் (புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை சாவித்திரியின் வாழ்க்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம்). மொழி நிபுணர்பாகுபலி வரிசைக்காகக் கார்க்கி “கிளிக்கி” என்ற மொழியை உருவாக்கினார், திரைப்படத்தில் காலகேயா பழங்குடியினர் இந்த மொழியைப் பேசுகிறார்கள். கார்க்கி ஆஸ்திரேலியாவில் இருந்தபோது இந்த மொழி அவருக்குள் உருவானது, அங்கு அவர் பகுதி நேரமாகக் குழந்தைகளைக் கவனித்துக்கொள்பவராகவும் பணியாற்றினார், குழந்தைகளோடு ஒரு புதிய மொழியை உருவாக்கும் நோக்கத்துக்காக “க்ளிக்” என்ற மொழியை உருவாக்கினார். அச்சத்தை உண்டாக்குகிற ஒரு மொழியை உருவாக்கவேண்டும் என்பதற்காக இயக்குநர் ராஜமெளலி இவரை அணுகியபோது, தானே ஒரு மொழியை உருவாக்கினார் கார்க்கி. ”க்ளிக்” மொழியை ஓர் அடிப்படையாகக் கொண்டு, சுமார் 750 சொற்கள் மற்றும் 40 இலக்கண முறைகளைச் சேர்த்து உருவாக்கிய இந்தப் புதிய மொழிக்கு “கிளிக்கி” என்று பெயர் சூட்டினார் கார்க்கி. இந்த மொழியில் ‘இச்’ மற்றும் ‘இஸ்க்’ போன்ற சொல்ரீதியிலான க்ளிக்குகள் காலம் மற்றும் பன்மையைக் காட்டும் குறியீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்ச் சொற்களுக்கு ஒலியியல் திருப்புதல்களும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன (’மின்’ என்பது ”நான்” என்பதற்கு எதிர்ச் சொல்லானது, ‘நிம்’ என்பது “நீ” என்பதற்கு எதிர்ச் சொல்லானது). இந்த மொழியில் வருத்தத்தைக் குறிப்பதற்கு எந்தச் சொற்களும் இல்லை, ஏனெனில், திரைப்படத்தில் இந்த மொழியைப் பேசும் பாத்திரங்கள் வருத்தம் என்கிற பண்பை வெளிப்படுத்துவதில்லை. பெரு வெற்றியடைந்த திரைப்படங்கள்பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகத் தன்னுடைய முதல் பத்தாண்டில் நவீன இந்தியத் திரைப்படத்துறையின் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படங்கள் சிலவற்றில் பணியாற்றியிருக்கிறார் கார்க்கி, எடுத்துக்காட்டாக: எந்திரன் (2010), கோ (2011), நான் ஈ (2012), துப்பாக்கி (2012), கத்தி (2014), ஐ (2015), பாஜிராவ் மஸ்தானி (2015), பாகுபலி வரிசை (2015; 2017), நடிகையர் திலகம் (திரைப்படம்)|நடிகையர் திலகம்]] (2018), பத்மாவத் (2018) மற்றும் 2.0 (2018). பிற முயற்சிகள்கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்2013 ஜனவரியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கார்க்கி தன்னுடைய ஆசிரியப் பணியைத் துறந்த பின்னர், தன்னுடைய மனைவி நந்தினி கார்க்கியுடன் இணைந்து கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் (KaReFo), என்கிற அறக்கட்டளையைத் தோற்றுவித்தார். லாப நோக்கில்லாத கல்வி ஆராய்ச்சி நிறுவனமான இது, மொழிக் கணிமை மற்றும் மொழிக் கல்வியில் கவனம் செலுத்துகிறது. அவர் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவராகப் பணியாற்றுகிறார். KaReFo உருவாக்கியுள்ள சில திட்டங்கள்: “சொல்” (இணையத்தில் ஒரு தமிழ்-ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி), “பிரிபொறி” (தமிழுக்கான ஓர் உருவவியல் பகுப்பாய்வு மற்றும் கூட்டுச்சொல் பிரிப்பான்) “ஒலிங்கோ” (ஓர் ஒலிபெயர்ப்புக் கருவி), ”பேரி” (தமிழ் ஒலிப்பியலின் அடிப்படையில் சுமார் 9 கோடி ஆண்/பெண் பெயர்களை உருவாக்கும் ஒரு பெயர் உருவாக்கி), “எமோனி” (எதுகை,மோனை போன்றவற்றைக் கண்டறியும் கருவி), “குறள்” (திருக்குறளுக்கான ஓர் இணையத்தளம்), “எண்” (எண்களை எழுத்துகளாக மாற்றும் ஒரு கருவி), “பாடல்” (பாடல் வரிகளை ஆராய்வதற்கும் வாசிப்பதற்கும் தமிழ்ப் பாடல் வரிகளைத் தொகுத்துத் தரும் ஓர் இணையத்தளம்) மற்றும் ”ஆடுகளம்” (சொல் விளையாட்டுகளுக்கான ஓர் இணையத்தளம்). மெல்லினம் கல்வி நிறுவனம்2008 நவம்பரில் கார்க்கி மெல்லினம் கல்வி நிறுவனத்தைத் தோற்றுவித்தார், அதன் இயக்குநராகப் பணியாற்றுகிறார். இந்த நிறுவனம் குழந்தைகளுக்கான கல்விக் கருவிகளான புத்தகங்கள், விளையாட்டுகள், போன்றவற்றின் உள்ளடக்கங்களை உருவாக்குவதில் சிறப்புக் கவனம் செலுத்துகிறது, இந்தக் கல்விக் கருவிகள் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியை அறிமுகப்படுத்துவதையும், குழந்தைகள் தமிழ் இலக்கியத்தில் அறிவியல் மற்றும் புதுமைச்சிந்தனைகளை ஆராய்வதற்கான ஆர்வத்தை உண்டாக்குவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் “ஐபாட்டி” என்ற வணிகப்பெயரில் தயாராகின்றன, பாடல் புத்தகங்கள், கதைகள், சொல் விளையாட்டுகள் மற்றும் குழந்தைகளுக்கான சொற்றொடர் விளையாட்டுகள் போன்றவை இந்த வரிசையில் வெளியாகின்றன. இந்நிறுவனம் இப்போது பொம்மைகள் மற்றும் எலக்ட்ரானிக் விளையாட்டுகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இண்டீ இசைக்கான பங்களிப்பு. டூபாடூஏப்ரல் 2016ல் கார்க்கி தன்னுடைய நண்பரான கௌந்தேயாவுடன் இணைந்து டூபாடூ என்ற இணைய இசைத்தளத்தைத் தொடங்கினார், சுதந்தரமான, மற்றும் திரைப்படம் சாராத இசையை முன்னிறுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இணையத்தளம் இது. அவருடைய நோக்கம், திரைப்படங்களுக்காக உருவாக்கப்படாத இசைத்தொகுப்புகளைக் கொண்ட ஒரு பாடல் வங்கியை உருவாக்குவது, இந்த வங்கியைத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு வழங்குவது, அவர்கள் இதிலிருந்து தங்களுடைய திட்டங்களுக்குப் பொருந்துகிற பாடல்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். சுதந்தர இசையை வெளியிடும் ஓர் இசை நிறுவனமாகப் பணியாற்றுகிற டூபாடூ, தமிழ்த் திரைப்படங்களுக்கான பாடல்களை விநியோகிக்கும் ஓர் அமைப்பாகவும் செயல்படுகிறது. இந்தத் தளத்தில் வெளியிடப்பட்ட முதல் பாடலுக்கு இசையமைத்தவர், M.S விஸ்வநாதன் அவர்கள். இந்தத் தளத்துக்கான உள்ளடக்கங்களை வழங்குவதற்காக, தமிழ்த் திரைத்துறையைச் சேர்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இதில் இணைக்கப்பட்டார்கள், இந்தத் தளம் நாள்தோறும் ஒரு பாடலை வெளியிடும் நோக்கத்துடன் செயல்படத்தொடங்கியது. பிக் FM 92.7 வானொலி நிலையத்தில் பிக் டூபாடூ என்ற நிகழ்ச்சிக்கான வானொலித் தொகுப்பாளராகவும் கார்க்கி பணியாற்றினார். இந்த நிகழ்ச்சி சனிக்கிழமைகளில் மாலை 6மணிமுதல் 9மணிவரை ஒலிபரப்பானது. டூபாடூவின் இயக்குநராகப் பணியாற்றுகிற அதே நேரத்தில், இந்தத் தளத்துக்காகத் தனிப்பட்ட முறையில் பல பாடல்களை எழுதியுள்ளார் கார்க்கி, இசைத்துறையின் முன்னணி மற்றும் சுதந்திரமான பல ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார், எடுத்துக்காட்டாக ஸ்ரீநிவாஸ், கார்த்திக், அனில் ஸ்ரீனிவாசன், ரிஸ்வான், கார்த்திகேய மூர்த்தி, விஜய் பிரகாஷ், ஆன்டிரியா ஜெர்மியா, அஜ் அலிமிர்ஜக், மற்றும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் (இவர் கார்க்கி எழுதிய பாடல்களுக்கான மூன்று இசை ஒளிப்படங்களையும் இயக்கினார், இவற்றில் டொவினொ தாமஸ், திவ்யதர்ஷினி, ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் அதர்வா ஆகிய நடிகர்கள் பங்கேற்றார்கள்). கார்க்கி எழுதிய சில முக்கியமான இண்டீ பாடல்கள்: “உலவிரவு”, “கூவா”, “போதை கோதை”, ”யாவும் இனிதே”, ”ஏதோ ஓர் அறையில்”, ”காதல் தோழி மற்றும் “பெரியார் குத்து”. அனில் மற்றும் கார்க்கியுடன் ஞாயிற்றுக்கிழமைகள்பியானோ இசைக் கலைஞர் அனில் ஸ்ரீநிவாசனுடன் இணைந்து அனில் மற்றும் கார்க்கியுடன் ஞாயிற்றுக்கிழமைகள் என்கிற இசை சார்ந்த மெய்ம்மை உரையாடல் நிகழ்ச்சியையும் கார்க்கி தொகுத்து வழங்கினார், இது டிசம்பர் 2017ல் தொடங்கி ஏப்ரல் 2018வரை ஜீ தமிழ் HDயில் 13 பகுதிகளாக ஒலிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் இசை, மற்ற பொழுதுபோக்குத் துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற விருந்தினர்கள் பங்கேற்றார்கள், இசையமைத்தல் மற்றும் நிகழ்த்துதல் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சில முக்கிய விருந்தினர்கள்: இசையமைப்பாளர்கள் சீன் ரால்டன், G.V பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீநிவாஸ்; இயக்குநர்கள் வெங்கட் பிரபு, வசந்த், கெளதம் மேனன் மற்றும் ராஜீவ் மேனன்; நடிகர்கள் சித்தார்த், RJ பாலாஜி மற்றும் குஷ்பூ; மற்றும் பாடகர்கள் கார்த்திக், ஆன்டிரியா ஜெர்மியா, கானா பாலா மற்றும் சைந்தவி. ஆர்வங்கள்சிறுவயதிலிருந்தே கார்க்கிக்குப் புகைப்படக் கலையின்மீது பேரார்வம் உண்டு, சிறுவயதிலிருந்து தான் எடுத்த புகைப்படங்களைப் பெரிய தொகுப்பாகச் சேர்த்துவைத்திருக்கிறார். இந்தக் கலையின் நுட்பங்களை அவர் யூடியூப் வழியாகக் கற்றுக்கொண்டார். குறிப்பாக, வழக்கத்துக்கு மாறுபட்ட உணர்வுகளின் ஒளிவுமறைவற்ற கணங்களைக் காட்சிப்படுத்துதலில் அவர் சிறப்புக் கவனம் செலுத்துகிறார், குழந்தைகளைப் புகைப்படமெடுப்பதுதான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார். பயணம் செய்வதையும் தன்னுடைய ஒரு மிகப்பெரிய பேரார்வமாக அவர் குறிப்பிடுகிறார், இந்தியாவுக்கு வெளியே, இந்தியாவுக்குள் தமிழ்நாட்டுக்குள் இதற்குமுன் செல்லாத இடங்களுக்குச் செல்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் மூன்று பொழுதுபோக்குப் பயணங்களை மேற்கொள்கிறார். அவர் ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்துள்ளார், 2018ல் அன்டார்க்டிகாவுக்கும் சென்று வந்துள்ளார். அவருடைய பிற பொழுதுபோக்குச் செயல்பாடுகள், சமைத்தல், ஜாவாவில் நிரல் எழுதுதல் மற்றும் இறகு பந்து விளையாடுதல். அவர் பல ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார், இந்த ஆராய்ச்சிகள் பாடல் வரிகள் சார்ந்தவையாகமட்டும் அமையாமல் தமிழ் தொடர்பான மற்ற தலைப்புகளிலும் அமைந்துள்ளன, ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறார். இயற்றிய பாடல்கள்
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
ஆராய்ச்சி வெளியீடுகள்
வெளி இணைப்புகள்உசாத்துணைகள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia