முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும். இது இலங்கைத் தமிழராலும், உலகத் தமிழராலும் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள் நினைவு கூறப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே இலங்கையின் வட-கிழக்குக் கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் முடிவுற்றது.
பின்னணி
2010 நினைவேந்தல் நாள் நியூசிலாந்து, வெலிங்டனில் நினைவுகூரப்பட்ட போது தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்சு சாவெல் விளக்கேற்றுகிறார்.2013 நினைவு நாளின் போது யாழ்ப்பாணம்உதயன் பத்திரிகை ஊழியர்கள் குருதிக்கொடை அளிக்கிறார்கள்.
இலங்கையின் வடகிழக்குப் பகுதியைத் தமிழீழம் என்ற பெயரில் தனிநாடு அமைக்கக் கோரி 1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ இயக்கங்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டன. 2007 வரை ஈழப்போரில் குறைந்தது 70,000 பேர் உயிரிழந்தனர்.[2] 2008 இன் இறுதிப் பகுதியிலும், 2009 ஆரம்பத்திலும், ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைப் படைத்துத்துறையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது.[3][4] இரு தரப்புக்குமிடையே ஏறத்தாழ 300,000 பொதுமக்கள் அகப்பட்டனர்.[5] 2009 மே 18 விடுதலைப் புலிகளின் தலைவரைத் தாம் கொன்று விட்டதாக இலங்கை அரசு அறிவித்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.[6] போரின் இறுதிக் கட்டத்தில் ஏறத்தாழ 40,000 பொதுமக்கள் வரை இறந்தனர் என ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவித்தது. இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாடற்ற ஏவுகணைத் தாக்குதல்களில் அகப்பட்டு இறந்தனர் என அவ்வறிக்கை தெரிவித்தது.[7][8][9] இரு தரப்பினரும் போர்க்குற்றங்கள் இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.[10][11][12]ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசு இழைத்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை தற்போது விசாரணைக்குட்படுத்தியுள்ளது.[13][14]
நினைவு நாள் நிகழ்வுகளுக்குத் தடை
இலங்கை அரசு மே 18 ஆம் நாளை வெற்றி நாளாக அறிவித்து இராணுவ அணிவகுப்புகளுடன் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.[15] போரில் இறந்த இலங்கைப் படைத்துறையினர் வெற்றி வீரர்களாக அறிவிக்கப்பட்டு இந்நாளில் இலங்கையின் ஏனைய பகுதிகளில் நினைவுகூரப்பட்டு வருகின்றனர்.[16] ஆனாலும், இலங்கை அரசு அமைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போரில் இறந்த அனைவரும் பெப்ரவரி 4 இல் நினைவுகூரப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தும், அரசு அக்கோரிக்கையை நிறைவேற்றவில்லை.[17][18] பதிலாக, இலங்கைத் தமிழர் இறந்த தமது உறவுகளை நினைவு கூர இலங்கை அரசு தடை விதித்தது.[19][20] மே 18 ஐ ஒட்டிய நாட்களில், வட, கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு, பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மூடப்படுகின்றன.[21][22][23]
தமிழர்கள் நிகழ்த்தும் எந்த நினைவுகூரலையும் இராணுவமும் இலங்கை அரசும் மக்கள் விடுதலைப் புலிகளை நினைவுகூருவதாகவே கருதுகிறது.[24] பொதுமக்கள் தமது வீடுகளில் இறந்த விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தலாம் என இராணுவம் கூறியிருந்தாலும், வீடுகளில் புகுந்து இராணுவத்தினர் இந்நிகழ்வுகளைத் தடுத்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.[25][26]
நினைவு நாள்
பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் மத்தியிலும் மே 18 ஆம் நாளிலும் அதற்கண்மைய நாட்களிலும் இலங்கைத் தமிழர் சிறிய அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளைத் இறந்த உறவுகளை நினைத்து நினைவு கூர்ந்து வருகின்றனர்.[27][28][29] ஆனாலும், பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்வுகள் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.[30][31] தமிழ் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.[32][33]
வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்[38].
2016 நினைவுகூரல்
மே 18, 2016 - உலகெங்கும் வாழும் தமிழர்கள் நினைவுகூர்ந்தனர்.[39]
கிழக்குப் பாடசாலையிலுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் என்னும் நினைவிடத்தில், வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.[40]
2017 நினைவுகூரல்
மே 18, 2017 - நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு வடக்கு முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன், எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் ஆகியோர் வந்திருந்து உரையாற்றினர்[41]
2018 நினைவுகூரல்
மே 18, 2018 - இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களும், வெளிநாட்டில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழர்களும் நினைவுகூர்ந்தனர்.[42]