இந்திய-ஆரியப் புலப்பெயர்வுஇந்திய-ஆரியப் புலப்பெயர்வு[note 1] என்பது இந்தியத் துணைக் கண்டத்துக்குள் இந்திய-ஆரிய மொழிகளைப் பேசிய ஓர் இனமொழிக் குழுவான இந்திய-ஆரியர் இடம் பெயர்ந்ததைக் குறிப்பதாகும். இம்மொழிகளே தற்போதைய வங்காளதேசம், மாலைத்தீவுகள், நேபாளம், வட இந்தியா, கிழக்கு பாக்கித்தான் மற்றும் இலங்கையின் முதன்மையான மொழிகளாக உள்ளன. நடு ஆசியாவிலிருந்து இப்பகுதிக்குள் இந்திய-ஆரிய இடம் பெயர்வானது பொ. ஊ. மு. 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கியதாகக் கருதப்படுகிறது. பிந்தைய அரப்பா காலகட்டத்தின்போது ஒரு மெதுவான பரவலாக இது நடைபெற்றது. வட இந்தியத் துணைக்கண்டத்தில் ஒரு மொழி நகர்வுக்கு இது இட்டுச் சென்றது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானியப் பீடபூமிக்குள் ஈரானியர்களால் ஈரானிய மொழிகள் கொண்டு வரப்பட்டன. ஈரானியர்கள் இந்திய-ஆரியருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் ஆவர். ஆதி-இந்திய-ஈரானியப் பண்பாடானது இந்திய-ஆரியர் மற்றும் ஈரானியர்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது. இது காசுப்பியன் கடலுக்கு வடக்கே நடு ஆசியப் புல்வெளிகளில் தற்போதைய உருசியா மற்றும் கசக்கத்தானில் சிந்தசுதா பண்பாடாக (அண். 2200-1900 பொ. ஊ. மு.)[2] வளர்ச்சியடைந்தது. பிறகு மேலும் அன்ட்ரோனோவோ பண்பாடாக (2000–1450 பொ. ஊ. மு.) வளர்ச்சியடைந்தது.[3][4] இந்திய-ஆரியர்கள் பொ. ஊ. மு. 2000 மற்றும் பொ. ஊ. மு. 1600ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஏதோ ஒரு நேரத்தில் இந்திய-ஈரானியர்களிடம் இருந்து பிரிந்தனர்.[5] தெற்கே பாக்திரியா-மார்கியானா தொல்லியல் வளாகத்தை நோக்கி இடம் பெயர்ந்தனர். இங்கிருந்து தான் இவர்கள் தங்களது சில தனித்துவமான சமய நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களைப் பெற்றனர்.[6] இந்த வளாகத்தில் இருந்து இந்திய-ஆரியர்கள் வடக்கு சிரியாவிற்கு மற்றும் அநேகமாக பல்வேறு அலைகளாகப் பஞ்சாப் பகுதிக்குள் (வடக்கு பாக்கித்தான் மற்றும் இந்தியா) இடம் பெயர்ந்தனர். அதே நேரத்தில் ஈரானியர்கள் மேற்கு ஈரானை பொ. ஊ. மு. 1300ஆம் ஆண்டுக்கு முன்னர் அடைந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[7] இந்த இரு குழுக்களுமே தங்களுடன் இந்திய-ஈரானிய மொழிகளைக் கொண்டு வந்தன. மேற்குலக மற்றும் இந்திய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகள் குறிப்பிடப்பட்ட போது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓர் இந்திய-ஐரோப்பிய மொழி பேசிய மக்களின் இடம் பெயர்வானது நடைபெற்றது என்பது முதன் முதலில் ஒரு கோட்பாடாக வைக்கப்பட்டது. இத்தகைய ஒற்றுமைகளைக் கொண்டு இம்மக்களின் தாயகத்தின் ஓர் ஒற்றைத் தோற்றமானது முன் வைக்கப்பட்டது. பூர்வீகத் தாயகத்திலிருந்து வந்த இடம் பெயர்ந்தவர்களால் இம்மொழிகள் மெதுவாகப் பரவியது என்று குறிப்பிடப்பட்டது. இந்தக் கோட்பாட்டின் இந்த மொழியியல் வாதமானது தொல்லியல், மானுடவியல், மரபணுவியல், இலக்கியம் மற்றும் சுற்றுச்சூழலியல் ஆய்வுகளால் ஆதரவளிக்கப்படுகிறது. இந்திய மக்கள் தொகையின் பல்வேறு அங்கங்களின் தோற்றம் மற்றும் பரவலின் ஒரு சிக்கலான மரபணுப் புதிரின் ஒரு பகுதியாக இந்த புலப்பெயர்வுகள் உள்ளன என்பதை மரபணு ஆய்வானது வெளிக்காட்டுகிறது. வேறுபட்ட, புவியியல் ரீதியாக தனித்துவமான, இந்திய-ஆரிய வரலாற்றுப் பண்பாடுகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை இலக்கிய ஆய்வானது வெளிக்காட்டுகிறது. ஐரோவாசியப் புல்வெளி மற்றும் இந்தியத் துணைக்கண்டம்[web 1] ஆகிய இரு பகுதிகளிலும் ஏற்பட்ட குடிநீர்த் தட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழலியல் மாற்றங்களுக்கு வழி வகுத்த பரவலான வறட்சியானது பொ. ஊ. மு. 2வது ஆயிரமாண்டுகளில் ஏற்பட்டது என்பதை சுற்றுச்சூழலியல் ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன. தெற்கு நடு ஆசியா, ஆப்கானித்தான், ஈரான் மற்றும் இந்தியாவில் நிலையான இடத்தில் வாழ்ந்த நகர்ப்புறப் பண்பாடுகளின் வீழ்ச்சிக்கு இது காரணமானது. பெருமளவிலான புலப்பெயர்வுகளைத் தூண்டியது. நகர்ப்புறப் பண்பாட்டு காலத்துக்குப் பிந்தைய கால மக்களுடன் இடம் பெயர்ந்து வந்த மக்கள் இணைவதில் இது முடிவடைந்தது.[web 1] இந்திய-ஆரிய புலப்பெயர்வுகள் தோராயமாக 2000 முதல் பொ. ஊ. மு. 1600க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஏதோ ஒரு நேரத்தில் போரில் பயன்படுத்தப்படும் இரதங்கள் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு தொடங்கியது.[5] இந்திய-ஆரிய மொழிகளை லெவண்ட் மற்றும் அநேகமாக உள் ஆசியாவிற்குள்ளும் இது கொண்டு வந்தது. பான்டிக்-காசுப்பியன் புல்வெளியில் இருந்த ஆதி-இந்திய-ஐரோப்பியத் தாயகத்திடமிருந்து இந்திய-ஐரோப்பிய மொழிகள் மெதுவாகப் பரவியது மற்றும் ஐரோவாசியப் புல்வெளிகளிலிருந்து இந்திய-ஐரோப்பிய புலப்பெயர்வுகள் நடைபெற்றது ஆகியவற்றின் ஒரு பகுதி இதுவாகும். பான்டிக்-காசுப்பியன் புல்வெளி என்பது தொலைதூரக் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த புல்வெளிகளின் ஒரு பெரிய பகுதியாகும். இந்திய-ஐரோப்பிய மொழிகள் பொ. ஊ. மு. 5வது முதல் பொ. ஊ. மு. 4வது ஆயிரம் ஆண்டுகளுக்கு இடையில் வெளியே பரவத் தொடங்கின. இந்திய-ஐரோப்பிய புலப்பெயர்வுகளானவை தோராயமாக பொ. ஊ. மு. 2000ஆம் ஆண்டில் தொடங்கின.[1][8] இந்த இந்திய-ஆரிய மொழி பேசிய மக்கள் ஒரே பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் மற்றும் மொழியால் ஒன்றுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் ஆர்யா (பொருள்: "உயர் குடி") என்று குறிப்பிடப்பட்டனர். புரவலர்-பெறுநர் அமைப்புகளால் இந்தப் பண்பாடு மற்றும் மொழியின் மெதுவான பரவலானது நடைபெற்றது. இந்தப் பண்பாட்டுக்குள் பிற குழுக்கள் உள்ளிழுக்கப்படுவதற்கும், இணைவதற்கும் இது அனுமதியளித்தது. இப்பண்பாடு தொடர்பு கொண்டிருந்த பிற பண்பாடுகள் மீது இது கொண்டிருந்த வலிமையான தாக்கத்திற்கு இது விளக்கமாக அமைகிறது. அடிப்படைக் கோட்பாடுகள்![]() – நடு: புல்வெளிப் பண்பாடுகள் 1 ( ): அனத்தோலிய மொழிகள் (தொல் ஆதி இந்திய-ஐரோப்பிய மொழி) 2 ( ): அபனசியேவோ பண்பாடு (தொடக்க ஆதி இந்திய-ஐரோப்பிய மொழி) 3 ( ) யம்னயா பண்பாட்டின் விரிவாக்கம் (பான்டிக்-காசுப்பியன் புல்வெளி, தன்யூப் பள்ளத்தாக்கு) (பிந்தைய ஆதி இந்திய-ஐரோப்பிய மொழி) 4ஏ ( ): மேற்கு திண் கயிறு மட்பாண்டப் பண்பாடு 4பி-சி ( மற்றும் ): மணி பருகுக் கோப்பை; இந்திய-ஐரோப்பிய மொழியைப் பேசியவர்களால் பின்பற்றப்பட்டது 5ஏ-பி ( ): கிழக்கு திண் கயிறு மட்பாண்டப் பண்பாடு 5C ( ): சிந்தசுதா (ஆதி-இந்திய-ஈரானிய மொழி) 6 ( ): அன்ட்ரோனோவோ 7ஏ ( ): இந்திய-ஆரியர் (மித்தனி) 7பி ( ): இந்திய-ஆரியர் (இந்தியா) [எண் அற்றது] ( ): ஆதி-பால்டோ-இசுலாவிய மொழி 8 ( ): கிரேக்கம் 9 ( ): ஈரானியர் – [வரையப்படவில்லை]: ஆர்மீனியம், மேற்குப் புல்வெளியிலிருந்து விரிவடைகிறது இந்திய-ஆரிய புலப்பெயர்வுக் கோட்பாடானது ஒரு பெரிய கோட்பாட்டுக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். இந்தக் கட்டமைப்பானது ஒரு பரவலான சமகால மற்றும் பண்டைய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை விளக்குகிறது. இது மொழியியல், தொல்லியல் மற்றும் மானுடவியல் ஆய்வுகளை ஒன்றிணைக்கிறது.[9][10] இந்திய-ஐரோப்பிய மொழிகளின் வளர்ச்சி மற்றும், புலப்பெயர்வு மற்றும் இணைவு மூலம் இந்த இந்திய-ஐரோப்பிய மொழிகள் பரவியது ஆகியவற்றின் மேலோட்டமான பார்வையைக் காட்டுகிறது.[10] மொழியியல்: மொழிகளுக்கிடையிலான உறவு முறைகள்பல்வேறு இந்திய-ஐரோப்பிய மொழிகளுக்கு இடையிலான தொடர்புகளை மொழியியல் பகுதியானது ஆராய்கிறது. ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழியை மீண்டும் உருவாக்கம் செய்கிறது. மொழிகளை மாற்றம் அடையச் செய்யும் நிகழ்வுகளானவை தோராயமாக நடைபெறாமல், கண்டிப்பான ஒழுங்குமுறைகளைப் பின்பற்றியே நடைபெறுகின்றன என்பதால் இது சாத்தியமாகிறது. இலக்கணம் (குறிப்பாக சொல் வடிவங்கள்) மற்றும் முழு சொல் தொகுதிகள் ஆகியவை முக்கியமானவையாக இருந்தாலும், சத்த மாற்றங்கள், உயிரெழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை குறிப்பாக முக்கியமானவையாகும். முதல் பார்வையில் மிகவும் வேறுபட்டதாகத் தோன்றும் தொடர்புடைய மொழிகளுக்கு இடையிலான பெரும் ஒற்றுமைகளை அறிவதற்கு வரலாற்று-ஒப்பீட்டு மொழியியலானது இவ்வாறாக சாத்தியமாக்கியுள்ளது.[10][11] இந்த மொழிகள் இந்தியாவில் தோன்றியவை என்பதற்கு எதிராக இந்திய-ஐரோப்பிய மொழிகளின் பல்வேறு அம்சங்கள் வாதிடுகின்றன. ஒரு புல்வெளிப் பூர்வீகத்தை நோக்கியே இவை கை காட்டுகின்றன.[11] தொல்லியல்: உரேய்மத் புல்வெளியிலிருந்து புலப்பெயர்வுகள்தொல்லியல் பிரிவானது பான்டிக் புல்வெளிகளில் இருந்த உரேய்மத் எனப்படும் ஓர் ஆதி-இந்திய-ஐரோப்பியத் தாயகத்தை அடிப்படையாகக் குறிப்பிடுகிறது. பொ. ஊ. மு. 5,200ஆம் ஆண்டு வாக்கில் புல்வெளிகளில் கால்நடைகளை அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு இத்தாயகம் உருவாகியது.[10] இந்த அறிமுகப்படுத்தலானது வேட்டையாடி மற்றும் கிழங்குகளை உண்ட பண்பாட்டிலிருந்து மேய்ச்சல் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டுக்கு மாறியதைக் குறித்தது. மேலும், பழங்குடியினத் தலைவர்களைக் கொண்ட ஒரு படி நிலை சமூக அமைப்பு, புரவலர்-பெறுநர் அமைப்புகள், மற்றும் பொருட்கள் மற்றும் அன்பளிப்புகள் பரிமாறப்படுதல் ஆகிய பழக்க வழக்கங்களும் வளர்ச்சி பெற்றன.[10] இந்தப் பண்பாடுகளின் தொடக்க மையக் கருவாக சமரா பண்பாடானது இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப்பண்பாடு வோல்கா ஆறு திரும்பும் ஓர் இடத்தில் அமைந்திருந்தது. இது பொ. ஊ. மு. பிந்தைய 6ஆம் ஆயிராமாண்டு அல்லது தொடக்க 5ஆம் ஆயிரமாவது ஆண்டுக்குக் காலமிடப்படுகிறது. "குர்கன் பண்பாடு" என்று மரிஜா ஜிம்புடாஸால் 1950களில் அழைக்கப்பட்ட, ஒரு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தியலானது வளர்ச்சி பெற்றது. இந்த குர்கன் பண்பாட்டில் பல்வேறு பண்பாடுகளை இவர் உள்ளடக்கினார். இதில் சமரா பண்பாடு மற்றும் யம்னா பண்பாடு ஆகியவையும் அடங்கும். "குழி சமாதி பண்பாடு" என்றும் அழைக்கப்படும் யம்னா பண்பாடானது (36 முதல் பொ. ஊ. மு. 23ஆம் நூற்றாண்டுகள்) மிகவும் பொருத்தமான முறையில் ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழியின் "மையக்கரு" என்று அழைக்கப்படலாம்.[10] ஏற்கனவே பல்வேறு துணைப் பண்பாடுகளை உள்ளடக்கியிருந்த இப்பகுதியிலிருந்து இந்திய-ஐரோப்பிய மொழிகளானவை மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி பொ. ஊ. மு. 4,000ஆம் ஆண்டின்போது பரவத் தொடங்கின.[12] இந்த மொழிகளானவை ஆண்களின் சிறு குழுக்களால் கொண்டு சென்றிருக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இவர்களது பண்பாட்டு அமைப்பிற்குள் பிற குழுக்களை இணைவதற்கு புரவலர்-பெறுநர் அமைப்பானது அனுமதியளித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.[10] கிழக்கு நோக்கி சிந்தசுதா பண்பாடானது (2200 – பொ. ஊ. மு. 1900) வளர்ச்சியடைந்தது. இங்கு பொதுவான இந்திய-ஈரானிய மொழியானது பேசப்பட்டது.[13] சிந்தசுதா பண்பாட்டிலிருந்து அன்ட்ரோனோவோ பண்பாடானது (2000 – பொ. ஊ. மு. 1450) வளர்ச்சியடைந்தது. இப்பண்பாடு பாக்திரியா-மார்கியானா பண்பாட்டுடன் (2250 – பொ. ஊ. மு. 1700) தொடர்பு கொண்டிருந்தது. இந்தத் தொடர்பானது இந்திய-ஈரானியர்களை மேலும் வடிவமைத்தது. இந்திய-ஈரானியர்கள் 2,000 மற்றும் பொ. ஊ. மு. 1,600க்கு இடையில் ஏதோ ஒரு நேரத்தில் இந்திய-ஆரியர் மற்றும் ஈரானியராகப் பிரிந்தனர்.[5] இந்திய-ஆரியர் லெவண்ட் மற்றும் தெற்காசியாவிற்கு இடம் பெயர்ந்தனர்.[14] வட இந்தியாவுக்குள்ளான இடம் பெயர்வானது ஒரு பெருமளவிலான இடம் பெயர்வாக இல்லை. ஆனால், இது சிறு குழுக்களை உள்ளடக்கியதாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[15][note 2] இணைவு மற்றும் பிற குழுக்களை உள்ளிழுக்கும் தங்களது புரவலர்-பெறுநர் அமைப்பின் அதே வழிமுறைகளால் இவர்களது பண்பாடு மற்றும் மொழியானது பரவியது.[10] மானிடவியல்: மேனிலை மக்கள் சேர்ப்பும், மொழி நகர்வும்இந்திய-ஐரோப்பிய மொழிகள் அநேகமாக மொழி நகர்வுகள் மூலமாகப் பரவின.[17][18][19] சிறு குழுக்களால் ஒரு பெரும் பண்பாட்டுப் பகுதியை மாற்ற முடியும்.[20][10] சிறு குழுக்களின் மேனிலை ஆண் ஆதிக்கமானது வட இந்தியாவில் ஒரு மொழி நகர்வுக்கு இட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[21][22][23] தாவீது அந்தோணி தன்னுடைய "திருத்தியமைக்கப்பட்ட ஸ்டெப்பி கோட்பாட்டில்"[24] இந்திய-ஐரோப்பிய மொழிகளின் பரவலானது "சங்கிலித் தொடர் போன்ற மக்கள் புலப் பெயர்வுகளால்" அநேகமாக நிகழவில்லை என்று குறிப்பிடுகிறார். மாறாக, சமய மற்றும் அரசியல் சார்ந்த மேனிலை மக்களிடம் இம்மொழிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் நிகழ்ந்தது என்கிறார். மக்களின் பெரிய குழுக்களால் இது பின்பற்றப்பட்டது.[25][note 3] இச்செயல் முறையை இவர் "மேனிலை மக்கள் சேர்ப்பு" என்கிறார்.[26] பர்போலாவின் கூற்றுப்படி, உள்ளூர் மேனிலை மக்கள் இந்திய-ஐரோப்பிய மொழி பேசிய புலம்பெயர்ந்த "சிறிய, ஆனால் சக்தி வாய்ந்த குழுக்களுடன்" இணைந்தனர்.[17] இந்தப் புலம் பெயர்ந்தவர்கள் ஈர்க்கக் கூடிய சமூக அமைப்பு மற்றும் நல்ல ஆயுதங்களையும், தங்களது நிலை மற்றும் சக்தியைக் குறித்த பகட்டான பொருட்களையும் கொண்டிருந்தனர். இந்தக் குழுக்களில் சேர்வது என்பது உள்ளூர்த் தலைவர்களை ஈர்க்கக் கூடியதாக இருந்தது. ஏனெனில், இது அவர்களின் நிலையை வலுப்படுத்தியது. அவர்களுக்கு மேற்கொண்ட அனுகூலங்களைக் கொடுத்தது.[27] இந்தப் புதிய உறுப்பினர்கள் திருமண பந்தங்கள் மூலம் மேலும் ஒன்றிணைக்கப்பட்டனர்.[28][18] யோசப்பு சாலமோன்சு என்பவரின் கூற்றுப்படி, மேனிலை மக்களால் கட்டுப்படுத்தப்பட்ட மொழிச் சமுதாயக் குழுக்கள் "இடம் மாற்றப்படுவதன்" மூலம் மொழி நகர்வானது எளிதாக்கப்பட்டது.[29] சாலமோன்சுவின் கூற்றுப்படி, இந்த மாற்றமானது "சமுதாயக் குழுக்களின் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு ரீதியான மாற்றங்களால்" எளிதாக்கப்பட்டது. இதில் ஓர் உள்ளூர் சமுதாயக் குழுவானது ஒரு பெரிய சமூக அமைப்புடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.[29][note 4] மரபியல்: பண்டைய மூதாதையர் மரபும், பல கூறு மரபணு சீரோட்டமும்இந்திய மக்கள் தொகையின் பல்வேறு வகையான அங்கங்களின் தோற்றம் மற்றும் பரவலின் ஒரு சிக்கலான மரபணுப் புதிரின் ஒரு பகுதியாக இந்திய-ஆரியப் புலப்பெயர்வுகள் உள்ளன. அலைகள் போன்ற பல்வேறு கலப்புகள் மற்றும் மொழி நகர்வும் இதில் அடங்கும். வட மற்றும் தென்னிந்தியர் ஒரு பொதுவான தாய் வழி மூதாதையர் மரபைப் பகிர்ந்து கொண்டுள்ளனர் என்பதை ஆய்வுகள் வெளிக் காட்டுகின்றன.[34][35][36][37] இந்தியத் துணைக் கண்டமானது இரண்டு முதன்மையான மூதாதையர் மரபு அங்கங்களைக் கொண்டுள்ளதாக ஒரு தொடர்ச்சியான ஆய்வுகள் காட்டுகின்றன.[32][31][33] இவர்கள் மூதாதையர் மரபு வட இந்தியர் மற்றும் மூதாதையர் மரபு தென்னிந்தியர் என்று பெயரிடப்பட்டுள்ளனர். மூதாதையர் மரபு வட இந்தியர் "மத்திய கிழக்கர், நடு ஆசியர் மற்றும் ஐரோப்பியர்களுடன் மரபணு ரீதியாக நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளனர்". மூதாதையர் மரபு தென்னிந்தியர் மூதாதையர் மரபு வட இந்தியரிடமிருந்து தெளிவாக வேறுபட்டுக் காணப்படுகின்றனர்.[32][note 5] 4,200 மற்றும் 1,900 (பொ. ஊ. மு. 2,200 - பொ. ஊ. 100) ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இந்த இரண்டு குழுக்களும் கலந்தன. இதற்குப் பிறகு அகமணத்தை நோக்கிய ஒரு நகர்வானது நடைபெற்றுள்ளது.[33] குப்தப் பேரரசின் காலத்தின் போது "சமூக ஒழுக்கக் கோட்பாடுகள் மற்றும் வழக்கங்களை" அமல்படுத்தியதன் விளைவாக அநேகமாக இது நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[39][எப்போது?] மூர்சானி மற்றும் குழுவினர் (2013) இரு குழுக்களும் ஒன்றாகக் கொண்டு வரப்பட்டது குறித்து மூன்று நிகழ்முறைகளை விளக்குகின்றனர்: 8,000 முதல் 9,000 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயம் உருவாவதற்கு முந்தைய புலப் பெயர்வுகள்; 4,600 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்தின் பரவலுடன் சேர்ந்து புலம் பெயர்ந்த மேற்கு ஆசிய[note 6] மக்கள்; 3,000 முதல் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஐரோவாசியர்களின் புலப் பெயர்வுகள்.[40] ![]() வட மற்றும் தென்னிந்தியரின் கலப்பின் தொடக்கமும், இந்திய-ஐரோப்பிய மொழியின் வருகையும் ஒரே நேரத்தில் நடந்ததாக ரெயிச் என்பவர் குறிப்பிடும் அதே நேரத்தில்,[web 2] மூர்சானி மற்றும் குழுவினரின் (2013) கூற்றுப்படி இந்திய-ஆரியப் புலப்பெயர்வுகளுக்கு முன்னர் இந்தியாவில் இக்குழுக்கள் "கலக்காமலேயே" இருந்தன.[33] கல்லேகோ ரோமேரோ மற்றும் குழுவினர் (2011) மூதாதையர் மரபு வட இந்தியரின் ஆக்கக் கூறுகளானவை ஈரான் மற்றும் மத்திய கிழக்கிலிருந்து[42] 10,000 ஆண்டுகளுக்குள் வந்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.[web 3][note 7] அதே நேரத்தில், லசாரிதிசு மற்றும் குழுவினரின் (2016) கூற்றுப்படி, மூதாதையர் மரபு வட இந்தியர் என்போர் "மேற்கு ஈரானின் தொடக்க கால விவசாயிகள்" மற்றும் "வெண்கலக் கால ஐரோவாசிய ஸ்டெப்பி புல்வெளி மக்களின்" ஒரு கலப்பு ஆவர்.[43] பல்வேறு ஆய்வுகள் தாய் வழி மரபணு செயற்பொருளின் பிந்தைய திரளான வரவின் தடயங்களையும் கூடக் காட்டுகின்றன.[34][web 4] மேலும், மூதாதையர் மரபு வட இந்தியர் மற்றும் அநேகமாக இந்திய-ஐரோப்பியருடன் தொடர்புடைய தந்தை வழி மரபு செயற்பொருட்களைக் காட்டுகின்றன.[32][44][45] பாற்சக்கரை தாளாமையின் மரபு வழிப் பரவலை பிறர் ஆய்வு செய்துள்ளனர். குறிப்பாக, பாற்சக்கரை செரிமானத்திற்குக் காரணமான 13910டி என்ற மரபணுவின் இருப்பு குறித்து ஆய்வு செய்துள்ளனர். இந்த மரபணுவானது ஐரோப்பா, நடு ஆசியா மற்றும் தெற்காசியா முழுவதும் உள்ள மக்களிடம் காணப்படுகிறது.[46][47][41] இலக்கிய ஆய்வு: ஒற்றுமைகள், புவியியல், மற்றும் புலப்பெயர்வு குறிப்புகள்அறியப்பட்டதிலேயே பழமையான, பொறிக்கப்பட்ட இந்திய-ஈரானியச் சொற்களானவை பொ. ஊ. மு. 2வது ஆயிரமாண்டின் நடுப் பகுதிக்குக் காலமிடப்படுகின்றன. குறிப்பாக, இந்திய-ஆரிய தெய்வங்களை குறிப்பிட்டவையாக இச்சொற்கள் உள்ளன. தற்போதைய வடக்கு சிரியாவில் அமைந்திருந்த மித்தானி இராச்சியத்தின் கூரியத் ஒப்பந்தங்களில் கடன் வாங்கப்பட்ட சொற்களாக இவை உள்ளன.[48][49] இருக்கு வேதம் மற்றும் அவெத்தாவில் குறிப்பிடப்பட்டுள்ள சமயப் பழக்க வழக்கங்கள் ஒற்றுமைகளை வெளிக் காட்டுகின்றன. சரதுசத்தின் மைய சமய நூலாக அவெத்தா உள்ளது.[49] இருக்கு வேதத்தில் சரசுவதி ஆறு குறித்த சில குறிப்புகள் காகர் ஆற்றைக் குறிப்பிடுகின்றன.[50] அதே நேரத்தில், தொடக்க கால இருக்கு வேத ஆற்றின் அமைவிடமாக சில நேரங்களில் ஆப்கானிய ஆறான அரக்சுவைதி/கரௌவதி எல்மாந்து ஆறு குறிப்பிடப்படுகிறது.[51] இருக்கு வேதமானது வெளிப்படையாக ஒரு வெளிப்புறத் தாயகத்தையோ[52] அல்லது புலப்பெயர்வு[53] குறித்தோ குறிப்பிடவில்லை. ஆனால், பிந்தைய வேத மற்றும் புராண நூல்கள் கங்கைச் சமவெளிக்கு நகர்வைக் காட்டுகின்றன.[54][55][56][57] சுற்றுச் சூழலியல் ஆய்வுகள்: பரவலான வறட்சி, நகர வாழ்வு வீழ்ச்சி, மற்றும் மேய்ச்சல் வாழ்வு புலப்பெயர்வுகள்இந்திய-ஐரோப்பிய மொழி பேசியவர்கள் தொடக்கத்தில் சிதறுண்டது மற்றும் ஸ்டெப்பி புல்வெளியிலிருந்து இந்திய-ஐரோப்பியர்கள் புலம்பெயர்ந்து தெற்கு நடு ஆசியா மற்றும் இந்தியாவுக்கு வந்தது ஆகிய இரு நிகழ்வுகளுமே காலநிலை மாற்றம் மற்றும் வறட்சியால் தூண்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[58][59] பொ. ஊ. மு. 4200 - பொ. ஊ. மு. 4100 காலகட்டத்தை ஒட்டி ஒரு காலநிலை மாற்றமானது ஏற்பட்டது. ஐரோப்பாவில் அதிக குளிர் உடைய குளிர் காலங்கள் ஏற்பட்டன.[60] தொல் வழக்கான ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழி பேசிய ஸ்டெப்பி புல்வெளி மேய்ப்பாளர்கள் தன்யூபு ஆற்றின் கீழ் சமவெளிக்கு சுமார் பொ. ஊ. மு. 4200 முதல் பொ. ஊ. மு. 4000 வரையிலான காலத்தின் போது பரவினர். பழைய ஐரோப்பாவின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தோ அல்லது அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியோ இவர்கள் பரவினர்.[61] பொ. ஊ. மு. 3500 மற்றும் பொ. ஊ. மு. 3000 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட ஒரு காலநிலை மாற்றத்திற்கான தகவமைப்பாக யம்னா பண்பாட்டு விரிவு எல்லை திகழ்ந்தது. இக்காலகட்டத்தில் ஸ்டெப்பி புல்வெளிகள் வறண்டு குளிர்ந்தன. மேய்ச்சல் விலங்குகளுக்குப் போதிய உணவளிக்க அவற்றை அடிக்கடி வேறு இடத்திற்கு நகர்த்திச் செல்ல வேண்டிய தேவை இருந்தது. வண்டிகளின் பயன்பாடு மற்றும் குதிரைச் சவாரி ஆகியவை இதை சாத்தியமாக்கின. "ஒரு புதிய, மிகுந்த நகரும் தன்மையுடைய மேய்ச்சல் வாழ்க்கை முறைக்கு" இது இட்டுச் சென்றது.[62] பொ. ஊ. மு. 3வது ஆயிரமாண்டில் பரவலான வறண்ட கால நிலையானது ஐரோவாசிய ஸ்டெப்பி புல்வெளி மற்றும் இந்தியத் துணைக்கண்டம் ஆகிய இரு இடங்களிலுமே நீர்ப் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு இட்டுச் சென்றது.[web 1][59] ஸ்டெப்பி புல்வெளியில் ஈரப்பதமானது தாவர வளர்ச்சியில் மாற்றத்திற்கு வழி வகுத்தது. "நாடோடி கால்நடை வளர்ப்பில் அதிகபட்ச நகரும் தன்மை மற்றும் மாற்றம்" ஏற்படுவதை இது தூண்டியது.[59][note 8][62][note 9] நீர்ப் பற்றாக்குறையானது இந்தியத் துணைக்கண்டத்திலும் ஒரு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. "தெற்கு நடு ஆசியா, ஆப்கானித்தான், ஈரான் மற்றும் இந்தியாவில் நிலையான இடத்தில் வாழ்ந்த நகரப் பண்பாடுகளின் வீழ்ச்சிக்குக் காரணமானது, பெருமளவிலான புலப்பெயர்வுகளைத் தூண்டியது."[web 1] கோட்பாட்டின் வளர்ச்சிசமசுகிருதம், பாரசீக மொழி, கிரேக்க மொழிகளுக்கிடையிலான ஒற்றுமைகள்16ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை புரிந்த ஐரோப்பியர்கள் இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை அறிய ஆரம்பித்தனர்.[63] 1653ஆம் ஆண்டிலேயே டச்சு மொழியிலாளரான வான் பாக்சுகார்ன் செருமானிய, உரோமானிய, கிரேக்க, பால்த்திய, சிலாவிய, செல்திக்கு, ஈரானிய மற்றும் (தவறுதலாக) துருக்கிய மொழிகளுக்கு ஒரு முந்து மொழி ("சிதிய மொழி") இருந்தது என்ற ஒரு பரிந்துரையை பதிப்பித்தார்.[64] தன் வாழ்நாள் முழுவதையும் இந்தியாவில் கழித்த ஒரு பிரெஞ்சு கிறித்தவ மதபோதகரான கசுதன் லௌரந்து கோர்தோக்சு 1767இல் பிரெஞ்சு அறிவியல் கல்விக் கழகத்துக்குத் தான் அனுப்பிய நினைவுக் குறிப்பில் சமசுகிருதம் மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு இடையிலான ஏற்கனவே இருந்த ஒப்புமைத் தன்மைகளைக் குறிப்பாக விளக்கினார்.[65][note 10] 1786இல் கொல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் உச்சநீதிமன்றத்தின் ஒரு நீதிபதியாக இருந்த மொழியியலாளர் மற்றும் பாரம்பரிய அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் சமசுகிருதத்தை ஆய்வு செய்த போது தன் ஆசியச் சமூகத்துக்கான மூன்றாம் ஆண்டு கருத்தாடலில் சமசுகிருதம், பாரசீக மொழி, கிரேக்க மொழி, இலத்தீன், கோதிக் மொழி மற்றும் செல்திக்கு மொழிகளை ஒன்றிணைக்கும் ஒரு ஆதி-மொழி இருந்ததெனப் பரிந்துரைத்தார். எனினும், இவருக்கு முந்தையவர்களின் முடிவை விட பல வழிகளில் இவரது முடிவானது துல்லியம் குறைவானதாக இருந்தது. ஏனெனில், இவர் தவறுதலாக இந்திய-ஐரோப்பிய மொழிகளில் எகிப்திய மொழி, சப்பானிய மொழி மற்றும் சீன மொழிகளை சேர்த்திருந்தார், அதே நேரத்தில் இந்துசுத்தானி மொழி[64] மற்றும் சிலாவிய மொழிகளை சேர்க்காது விட்டிருந்தார்:[66][67]
இந்த அனைத்து மொழிகளும் ஒரே ஆதி மொழியிலிருந்து தோன்றின என ஜோன்ஸ் இறுதியாக முடிவு செய்தார்.[68] பூர்வீக நிலம்நடு ஆசியா அல்லது மேற்காசியாவில் ஒரு பூர்வீக நிலம் அமைந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர். இத்தகைய ஒரு சூழ்நிலையில் சமசுகிருதமானது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிய ஒரு மொழி நகர்வின் மூலம் இந்தியாவை அடைந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[69][70] 19ஆம் நூற்றாண்டு இந்திய-ஐரோப்பிய ஆய்வுகளில் அறிஞர்களால் அறியப்பட்ட மிகத் தொன்மையான இந்திய-ஐரோப்பிய மொழியாக இருக்கு வேதத்தின் மொழி திகழ்ந்தது. ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் வெண்கலக் காலத்திற்குக் காலமிடப்பட்ட இந்திய-ஐரோப்பிய மொழியின் ஒரே பதிவுகளாக இவை இருந்தன. சமசுகிருதத்தின் இந்த முதன்மை நிலையானது பிரதரிச் சிலேகல் போன்ற அறிஞர்கள் ஆதி-இந்திய-ஐரோப்பியப் பூர்வீக நிலமானது இந்தியாவில் தான் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுவதற்கு வழி வகுத்தது. வரலாற்று ரீதியான புலப்பெயர்வு காரணமாக மேற்கு நோக்கிப் பிற மொழிகள் பரவின என்று இவர் கருதினார்.[69][70] அனத்தோலியம் மற்றும் மைசினேய கிரேக்க மொழி போன்ற இந்திய-ஐரோப்பிய மொழிகளின் வெண்கலக் கால ஆதாரங்கள் 20ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகு அறியப்பட்டத்திலேயே மிகவும் தொல் வழக்கான இந்திய-ஐரோப்பிய மொழி என்ற தன் சிறப்பு நிலையை வேத மொழி இழந்தது.[69][70] ஆரிய "இனம்"![]() 1850களில் மாக்ஸ் முல்லர் மேற்கு ஆரிய இனம் மற்றும் கிழக்கு ஆரிய இனம் என்ற இரு ஆரிய இனங்கள் என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார். இவர்கள் காக்கேசியவிலிருந்து முறையே ஐரோப்பா மற்றும் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தனர் என்றார். தான் பிரித்த இரு குழுக்களில் மேற்குப் பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் மற்றும் மதிப்பை முல்லர் ஏற்றிக் கூறினார். இருந்த போதிலும், இந்த "ஆரிய இனத்தின் கிழக்குப் பிரிவினர் அதே இடத்தில் வாழ்ந்து வந்த, எளிதில் வெல்லப்படக் கூடியவர்களாக இருந்த கிழக்குப் பூர்வ குடிகளை விட அதிக சக்தி வாய்ந்தவர்களாக இருந்தனர்" என்று முல்லர் குறிப்பிட்டார்.[71] முல்லரின் ஈரின இந்திய-ஐரோப்பிய மொழி பேசிய ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டை எர்பர்ட் கோப் ரிசிலி விரிவாக்கினார். பூர்வ குடி திராவிடர்கள் மீதான இந்திய-ஆரிய ஆதிக்கத்தின் ஓர் எச்சக் கூறு சாதி அமைப்பு என்று முடித்தார். மரபு வழி இன-அடிப்படை சாதிகளுக்கிடையிலான உருவத் தோற்ற வகையிலான காணத் தக்க வேறுபாடுகளைக் குறிப்பிட்டார்.[72][73] "முன் வகுப்பு சாதியினரிலிருந்து தாழ்த்தப்பட்ட சாதியினர் வரையிலான ஒரு சரிமானத்தை ஒத்து ஆரிய இரத்தம் மற்றும் மூக்கின் விகித அளவுக்கு இடையில் ஒரு நேரடித் தொடர்பு உள்ளதை" ரிசிலி கண்டறிந்தார் எனவும், "இனத்துடன் சாதியைச் சேர்த்த இந்த சேர்ப்பு கருத்து மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்ததென நிரூபணமானது" எனவும் தாமசு டிரவுட்மன் குறிப்பிட்டுள்ளார்.[74] முல்லரின் பணியானது ஆரியப் பண்பாடு குறித்து ஆர்வம் வளர்வதற்குப் பங்களித்தது. செமித்திய சமயங்களுக்கு எதிராக இந்திய-ஐரோப்பியப் ('ஆரிய') பாரம்பரியங்களை நிறுத்தியதாக ஆரியப் பண்பாடு கருதப்பட்டது. "இனவாதத்தின் அடிப்படையில் இத்தகைய பகுப்புகள் பின்னர் வெளிப்படுத்தப்பட்டன என்ற உண்மையால்" முல்லர் மிகவும் கவலையடைந்தார். ஏனெனில், இது இவரது எண்ணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.[75][note 11] இந்தியர் மற்றும் ஐரோப்பியர் ஆகியோரின் ஒரு பொதுவான மூதாதையர் மரபைக் கண்டறிந்தது என்பது இன வாதத்துக்கு எதிரான ஒரு சக்தி வாய்ந்த வாதமாக முல்லருக்கு இருந்தது. "ஆரிய இனம், ஆரிய இரத்தம், ஆரியக் கண்கள் மற்றும் முடி என ஓர் இனவியலாளர் பேசுவது என்பது ஒரு நீள் தலை அகராதி அல்லது ஒரு அகன்ற தலை இலக்கணம் ஆகியவை குறித்து ஒரு மொழியியலாளர் பேசுவதைப் போன்ற ஒரு மிகப் பெரிய பாவம்" என்று வாதிட்டார். "வெள்ளை நிற இசுகாண்டினேவியர்களை விட ஆரிய பேச்சு மற்றும் எண்ணத்தின் தொடக்க கால நிலையை கருப்பு நிறமுடைய இந்துக்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர்" என்று வாதிட்டார்.[76] தனது பிந்தைய வேலைப்பாட்டில் "ஆரியர்" என்ற சொல்லின் பயன்பாட்டை மொழியியல் ரீதியாக மட்டுமே கண்டிப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பதில் மாக்ஸ் முல்லர் பெருமளவு சிரத்தை எடுத்துக் கொண்டார்.[77] "ஆரியப் படையெடுப்பு"1920இல் சிந்துவெளி நாகரிகத்தின் அரப்பா, மொகெஞ்சதாரோ மற்றும் லோத்தல் தளங்களில் நடந்த அகழ்வாய்வானது[78] இந்திய-ஆரியர் இப்பகுதிக்குப் புலம் பெயர்ந்த போது வட இந்தியாவானது ஏற்கனவே ஒரு முன்னேறியிருந்த பண்பாட்டைக் கொண்டிருந்தது எனக் காட்டியது. ஒரு நாகரிக முதிர்ச்சியற்ற முதற்குடி மக்களின் பகுதியை நோக்கி முன்னேறிய பண்பாடுடைய ஆரியர் புலம் பெயர்ந்தனர் என்பதிலிருந்து, முன்னேறிய நகர நாகரிகத்துக்குள் நாடோடி ஆரிய மக்கள் புலம்பெயர்ந்தனர் என கோட்பாடானது மாறியது. மேற்கு உரோமைப் பேரரசின் இறங்கு முகத்தின் போது செருமானிய புலம் பெயர்வு அல்லது பாபிலோனியா மீதான காசிட்டு மக்களின் படையெடுப்பு ஆகியவற்றை ஒத்ததாக இது குறிப்பிடப்பட்டது.[79] இந்த சாத்தியமானது ஒரு குறுகிய காலத்திற்கு வட இந்தியா மீதான எதிரி படையெடுப்பாகப் பார்க்கப்பட்டது. சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சியானது துல்லியமாக வரலாற்றின் இந்தக் காலத்தில் இந்திய-ஆரியப் புலப் பெயர்வுகள் அநேகமாக நடைபெற்ற நேரத்தில் நடந்தது. இத்தகைய ஒரு படையெடுப்புக்கு சுதந்திரமான ஆதரவைக் கொடுப்பதாக இது தோன்றியது. இத்தகைய வாதமானது 20ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் தொல்லியலாளர் மோர்டிமர் வீலரால் பரிந்துரைக்கப்பட்டது. மொகஞ்ச-தாரோவின் உயர் நிலைகளில் காணப்பட்ட பல புதைக்கப்படாத பிணங்களின் இருப்பை படையெடுப்புப் போர்களினால் பலியானவர்கள் என வீலர் குறிப்பிட்டார். பிரபலமான ஒரு சொற்றொடராக சிந்துவெளி நாகரிகத்தின் அழிவுக்குக் காரணம் என "குற்றம் சாட்டப்பட்டவராக கடவுள் இந்திரனை" இவர் குறிப்பிட்டார்.[79] இத்தகைய கருத்தானது போருக்கான எந்த ஓர் ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்படாததால் தவிர்க்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளானவை அவசரமாகப் புதைக்கப்பட்டவை என்றும், படு கொலை செய்யப்பட்ட ஆட்களினுடையது அல்ல என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.[79] தனது பிந்தைய பதிப்புகளில் போர் நடந்தது என்ற இந்த விளக்கத்தை வீலரே கூட தவித்தார். "போர் நடந்தது என்பதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது, ஆனால் இதை நிரூபிக்க இயலவில்லை, இது சரியானதாக இல்லாமல் இருக்கலாம்" என்றார்.[80] மொகஞ்ச-தாரோவை மனிதர்கள் ஆக்கிரமித்திருந்த கடைசி கால கட்டத்தின் ஒரு நிகழ்வை புதைக்கப்படாத பிணங்கள் குறிக்கலாம் என்று வீலர் மேலும் குறிப்பிட்டார். இதற்குப் பிறகு இந்த இடத்தில் மனிதர்கள் வாழவில்லை என்றார். உப்பாதல் போன்ற அமைப்பு ரீதியான காரணங்களே மொகஞ்ச-தாரோவின் சிதைவுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டார்.[81] இருந்த போதிலும், 'படையெடுப்பு' என்பது தவிர்க்கப்பட்டாலும் இந்திய-ஆரிய புலப்பெயர்வுக் கோட்பாட்டை விமர்சிப்பவர்கள் தொடர்ந்து இக்கோட்பாட்டை "ஆரியப் படையெடுப்புக் கோட்பாடாக" முன் வைக்கின்றனர்.[1][82][note 12] இதை ஓர் இன வாத மற்றும் காலனித்துவ வாத உரையாடலாக முன் வைக்கின்றனர்:
ஆரியப் புலப்பெயர்வு![]() 20ஆம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியில் புதிய தகவல்களின் வரவினால் ஆரியர் குறித்த கருத்துக்கள் செம்மைப்படுத்தபட்டன. பொ. ஊ. மு. 1500 வாக்கில் வடமேற்கு இந்தியாவுக்குள் இந்திய-ஆரியர் மற்றும் அவர்களது மொழி மற்றும் பண்பாடானது பரவிய வழிகளாக புலப்பெயர்வுள் மற்றும் உள்நாட்டு மக்கள் ஆரியப் பண்பாட்டில் சேர்க்கப்பட்டது ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. "படையெடுப்பு" என்ற சொல்லானது தற்போது இந்திய-ஆரியப் புலப்பெயர்வுக் கோட்பாட்டை மறுப்பவர்களால்[யார்?] மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.[1][82] மைக்கேல் வித்சல்:
மொழி நகர்வு குறித்து பொதுவாக உருவான புதிய எண்ண ஓட்டத்தை ஒத்தவாறு ஒரு மாறுபட்ட அணுகு முறையானது உருவானது. கிரேக்கத்துக்குள் கிரேக்கரின் புலப்பெயர்வு (2100 மற்றும் பொ. ஊ. மு. 1600க்கு இடையில்), ஏற்கனவே இருந்த நேர் கோடு ஏ என்ற எழுத்து முறையில் இருந்து நேர் கோடு பி எனப்படும் ஓர் அசை எழுத்து முறையை மைசினேய கிரேக்க மொழியை எழுதும் நோக்கத்திற்காக அவர்கள் பின்பற்றியது, அல்லது மேற்கு ஐரோப்பா இந்திய-ஐரோப்பிய மயமாக்கப்பட்டது (படி நிலைகளாக 2200 மற்றும் பொ. ஊ. மு. 1300க்கு இடையில்) போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். எதிர் காலப் போக்கு
இந்திய-ஐரோப்பியப் புலப்பெயர்வுகள் மற்றும் அவர்களின் ஊகிக்கப்பட்ட பூர்வீக நிலம் குறித்த அறிவின் வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் நுட்பம் ஆகியவற்றுடன் புதிய கேள்விகள் எழுகின்றன என மல்லோரி என்பவர் குறிப்பிடுகிறார். "இதில் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்கிறார்.[83] இத்தகைய கேள்விகளில் ஒன்றாக பகிரப்பட்ட விவசாயச் சொற்களின் தொடக்கம் எது என்ற கேள்வி எழுகிறது. இந்திய-ஐரோப்பியர்களால் குடியமரப்பட்ட பகுதிகளில் விவசாயம் தொடங்கப்பட்ட தொடக்க கால நாட்கள் எது என கேள்வி எழுகிறது. இத்தகைய காலங்கள் பகிரப்பட்ட சொற்களை ஆய்வு செய்ய மிகுந்த காலம் கடந்தவையாக உள்ளன. இச்சொற்களின் தொடக்கம் எது என்ற கேள்வியும் எழுகிறது.[84] மொழியியல்: மொழிகளுக்கிடையிலான உறவு முறைகள்மொழியியல் ஆய்வானது பல்வேறு இந்திய-ஐரோப்பிய மொழிகளுக்கு இடையிலான தொடர்புகளை ஆராய்கிறது. ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழிகளை மறு உருவாக்கம் செய்கிறது. பெறப்பட்ட மொழியியல் ஆதாரங்களானவை இந்திய-ஆரிய மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்துக்குள் பொ. ஊ. மு. 2ஆம் ஆயிரமாண்டில் ஏதோ ஒரு நேரத்தில் நுழைந்தன எனக் குறிப்பிடுகின்றன.[85][86][87][88] வேத மொழியின் தொடக்க கால படிநிலையான இருக்கு வேதத்தின் மொழியானது பொ. ஊ. மு. சுமார் 1500 - பொ. ஊ. மு. 1200 வரையிலான காலத்திற்கு காலமிடப்படுகிறது.[48] ஒப்பியல் முறைமொழிகளுக்கு இடையிலான தொடர்புகளை தடயங்களைப் பின்பற்றிக் கண்டுபிடிக்க முடியும். ஏனெனில், மொழிகளை மாற்றம் அடையச் செய்யும் நிகழ்வுகளானவை தோராயமாக நடைபெறாமல், கண்டிப்பான ஒழுங்குமுறைகளைப் பின்பற்றியே நடைபெறுகின்றன என்பதால் இது சாத்தியமாகிறது. இலக்கணம் (குறிப்பாக சொல் வடிவங்கள்) மற்றும் முழு சொல் தொகுதிகள் ஆகியவை முக்கியமானவையாக இருந்தாலும், சத்த மாற்றங்கள், உயிரெழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை குறிப்பாக முக்கியமானவையாகும். முதல் பார்வையில் மிகவும் வேறுபட்டதாகத் தோன்றும் தொடர்புடைய மொழிகளுக்கு இடையிலான பெரும் ஒற்றுமைகளை அறிவதற்கு வரலாற்று-ஒப்பீட்டு மொழியியலானது இவ்வாறாக சாத்தியமாக்கியுள்ளது.[10] மொழியியலானது ஒரு பகிரப்பட்ட ஆதி மொழியிலிருந்து பொதுவான வழித் தோன்றல்களாகிய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளின் ஒவ்வொரு சிறப்பம்சமாக ஒப்பிடுவதன் மூலம் மொழிகளின் வளர்ச்சியை ஒப்பியல் முறையில் ஆய்வு செய்கிறது. இதற்கு மாறானதாக உள் மீட்டுருவாக்க முறை உள்ளது. இம்முறை காலப் போக்கில் ஓர் ஒற்றை மொழி அடைந்த உள் மாற்றங்களை ஆய்வு செய்கிறது.[89] மொழிகளின் வரலாற்றுக்கு முந்தைய படி நிலைகளை மீட்டுருவாக்கம் செய்ய, ஒரு மொழியின் வரலாற்றுப் பதிவில் உள்ள இடைவெளிகளை நிரப்ப, சத்த ரீதியிலான, வடிவியல் ரீதியிலான மற்றும் பிற மொழியியல் ஆய்வுகளின் வளர்ச்சியைக் கண்டறிய மற்றும் மொழிகளுக்கு இடையிலான உறவு முறைகளைக் கோட்பாட்டு ரீதியாக உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ பொதுவாக இந்த இரு முறைகளும் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.[சான்று தேவை] ஓர் ஒற்றை ஆதி மொழியிலிருந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரலாற்று ரீதியாக உண்மைத் தன்மைக்கு உறுதியளிக்கப்பட்ட மொழிகள் தோன்றின என்பதை ஒரே பொருளைக் குறிக்கும் வெவ்வேறு மொழிச் சொற்களை பட்டியலாக ஒப்பிடுவதன் மூலம் ஒப்பியல் முறையானது நிரூபிக்க முயல்கிறது. இவற்றிலிருந்து மொழிகளுக்கு இடையிலான வழக்கமான சத்தங்கள் நிறுவப்படுகின்றன. வழக்கமான ஒலி மாற்றங்களின் ஒரு தொடர்பானது பிறகு பரிந்துரைக்கப்படலாம். இது ஆதி மொழி மீட்டுருவாக்கம் செய்யப்பட அனுமதியளிக்கிறது. பொதுவான மூதாதையர் மொழியின் குறைந்த பட்சம் ஒரு பகுதியளவு மீட்டுருவாக்கமானது சாத்தியமானால் மட்டுமே மற்றும் ஊகிக்கப்பட்ட ஒற்றுமைகளைத் தவிர்த்து, வழக்கமான சத்த ஒற்றுமைகள் நிறுவப்பட்டால் மட்டுமே உறவு முறையை உறுதிப்படுத்த முடியும்.[சான்று தேவை] ஒப்பியல் முறையானது 19ஆம் நூற்றாண்டின் போக்கில் உருவாக்கப்பட்டது. டென்மார்க்கு அறிஞர்களான ராசுமுசு ராஸ்க் மற்றும் கார்ல் வெர்னர் மற்றும் செருமானிய அறிஞரான ஜேக்கப் கிரிம் ஆகியோரால் முக்கியமான பங்களிப்புகள் இம்முறைக்குச் செய்யப்பட்டன. முந்து மொழியிலிருந்து மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட வடிவங்களை கொடுத்த முதல் மொழியியலாளர் ஆகஸ்ட் சிலெய்ச்சர் ஆவார். உண்மையில் 1861ஆம் ஆண்டு பதிக்கப்பட்ட தனது நூலில் இவர் இதை வெளியிட்டார்.[90] ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழிஇந்திய-ஐரோப்பிய மொழிகளின் ஒரு பொதுவான மூதாதையர் மொழியை மொழியியல் ரீதியாக மீட்டுருவாக்கம் செய்து உருவாக்கப்பட்டதே ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழி ஆகும். ஆகஸ்ட் சிலெய்ச்சரின் 1861ஆம் ஆண்டு ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழியின் மீட்டுருவாக்கமே முதன் முதலில் பரிந்துரைக்கப்பட்ட முந்து மொழியை நவீன மொழியியலாளர்கள் ஏற்றுக்கொண்ட நிகழ்வாகும்.[91] இம்மொழியை மீட்டுருவாக்கம் செய்ய வேறு எந்த ஆதி மொழியையும் விட அதிக பணிகள் செய்யப்பட்டுள்ளன. அதன் காலத்தில் நன்றாக புரிந்து கொள்ளப்பட்ட அனைத்து ஆதி மொழிகளிலும் மிகவும் நன்றாக புரிந்து கொள்ளப்பட்ட மொழியாக இது உள்ளது. 19ஆம் நூற்றாண்டின் போது பெரும்பாலான மொழியியல் ஆய்வானது ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழியை மீட்டுருவாக்கம் செய்யவோ அல்லது அதன் வழித்தோன்றல் ஆதி மொழிகளான ஆதி-செருமானியம் போன்றவற்றை மீட்டுருவாக்கம் செய்ய பணிகள் செய்யப்பட்டன. இதிலிருந்தே வரலாற்று மொழியியலில் மொழியியல் மீட்டுருவாக்கத்தின் தற்போதைய தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை இதன் விளைவாக உருவாக்கப்பட்டன. எடுத்துக்காட்டுகளாக, ஒப்பியல் முறை மற்றும் உள் மீட்டுருவாக்க முறை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.[92] ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழியானது ஒற்றை மொழியாகவோ அல்லது பிரிவு தொடங்குவதற்கு முன்னர் தொடர்புடைய கிளை மொழிகளின் ஒரு குழுவாகவோ பேசப்பட்டிருக்க வேண்டும். இதன் கால மதிப்பீடுகளானவை பலரால் மிகவும் வேறுபட்டு குறிப்பிடப்படுகின்றன. இம்மொழியின் காலமானது பொ. ஊ. மு. 7வது ஆயிரமாண்டிலிருந்து 2வது ஆயிரமாண்டு வரை காலமிடப்படுகிறது.[93] மொழியின் பூர்வீகம் மற்றும் பரவலுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோட்பாடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் மொழியியலாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கோட்பாடு குர்கன் கோட்பாடு ஆகும். பொ. ஊ. மு. 5வது அல்லது 4வது ஆயிரமாவது ஆண்டில் கிழக்கு ஐரோப்பாவின் பான்டிக்-காசுப்பியன் புல்வெளி வழியே இம்மொழி உருவானது என்று இக்கோட்பாட்டில் பரிந்துரைக்கப்படுகிறது.[94] ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழியைப் பேசியவர்களின் பண்பாட்டின் சிறப்பம்சங்கள் தொடக்க காலத்தில் கிடைக்கப் பெற்ற இந்திய-ஐரோப்பிய மொழிகளின் பகிர்ந்து கொள்ளப்பட்ட சொல் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு மீட்டுருவாக்கம் கூட செய்யப்பட்டுள்ளன. இம்மொழியைப் பேசியவர்கள் ஆதி இந்திய-ஐரோப்பிய மக்கள் என்று அறியப்படுகின்றனர்.[94] மேலே குறிப்பிட்டவாறு, ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழியின் இருப்பானது முதன் முதலில் 18ஆம் நூற்றாண்டில் சர் வில்லியம் ஜோன்ஸால் பரிந்துரைக்கப்பட்டது. சமசுகிருதம், பண்டைக் கிரேக்க மொழி, மற்றும் இலத்தீன் ஆகிய மொழிகளுக்கு இடைப்பட்ட ஒற்றுமைகளைக் கண்ட இவர் இவ்வாறு பரிந்துரைத்தார். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வாக்க்கில் ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழி குறித்த நன்றாகக் கட்டமைக்கப்பட்ட விளக்கங்களானவை உருவாயின. இவை இன்றும் கூட ஏற்றுக் கொள்ளப்படுகின்றன (சில மாற்றங்களுடன்).[91] 20ஆம் நூற்றாண்டின் பெரிய முன்னேற்றங்களாக அனத்தோலியா மற்றும் தொச்சாரிய மொழிகளின் கண்டுபிடிப்பு மற்றும் லரிஞ்சியல் கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆகியவை திகழ்ந்தன. பலவாறான பகிர்ந்து கொள்ளப்பட்ட இந்திய-ஐரோப்பிய மொழி சிறப்பம்சங்களின் வளர்ச்சி குறித்து கோட்பாடுகளின் ஒரு முக்கியமான மறு மதிப்பீடானதும் கூட அனத்தோலியா மொழிகளால் தூண்டப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பம்சங்கள் ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழியிலும் கூட இருந்தன என்ற அளவுக்கு இது இருந்தது.[சான்று தேவை] யூரலிய மொழிகள் உள்ளிட்ட பிற மொழிக் குடும்பங்களுடனான உறவு முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை தொடர்ந்து சர்ச்சைக்குரியவையாக உள்ளன.[சான்று தேவை] சொல் திரிபு பின்னொட்டுகள், மேலும் உயிரெழுத்து மாற்றங்கள் (ஆங்கிலத்தில் பாடு என்பதற்கான சிங், சாங், சங் போல) உள்ளிட்ட ஒரு நுட்பமான உருபனியல் அமைப்பை ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழி கொண்டிருந்தது என கருதப்படுகிறது.[யாரால்?] பெயர்ச் சொற்கள் மற்றும் வினைச் சொற்கள் ஆகியவை முறையே சிக்கலான வேற்றுமைத் திரிபு மற்றும் வினைச் சொல் திரிபு அமைப்புகளைக் கொண்டிருந்தன.[சான்று தேவை] ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழியின் இந்தியப் பூர்வீகத்துக்கு எதிரான வாதங்கள்பல்வகைமைமொழியியல் புவியீர்ப்பு மையக் கோட்பாட்டின் படி ஒரு மொழிக் குடும்பத்தின் மிகுந்த சாத்தியமான உருவாக்கப் புள்ளி என்பது அம்மொழிக் குடும்பம் எப்பகுதியில் அதன் மிகப்பெரும் பல்வகைமையைப் பெற்றுள்ளதோ அந்த இடமே ஆகும்.[95][note 14] இந்த விதியின் படி, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் ஒரே ஒரு ஒற்றைப் பிரிவை (அதாவது இந்திய-ஆரிய மொழி) தாயகமாகக் கொண்ட வட இந்தியாவானது இந்திய-ஐரோப்பியத் தாயகம் என்பதற்கான பெருமளவுக்கு சாத்தியமற்ற இடமாக உள்ளது. மாறாக, நடு-கிழக்கு ஐரோப்பாவானது, எடுத்துக்காட்டாக இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் இத்தாலிய, வெனதிய, இல்லிரிய, அல்பானிய, செருமானிய, பால்திய, சிலாவிய, திரேசிய மற்றும் கிரேக்கக் கிளை மொழிகளைக் கொண்டுள்ளது.[96] இரு நடை முறையிலான உரேய்மத் தீர்வுகளும் ஆதி-இந்திய-ஐரோப்பியத் தாயகத்தை கருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே குறிப்பிட்டுக் காண்கின்றன.[97] கிளை மொழி வேறுபாடு
மொழியியலாலர்கள் யோகன்னசு சுமித் மற்றும் கியூகோ சுச்சர்து ஆகியோரில் தொடங்கி 19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுடியிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட ஒன்றானது, ஓர் இரும மர வடிவ மாதிரியால் அனைத்து மொழியியல் வரிசைப்படுத்தல் குறித்தும் அகப்படுத்த இயலாது; மொழிகளுக்கிடையே தொடர்பு ஏற்படுவதால் உருவாகும் சில சிறப்பம்சங்கள் மொழிக் குழுக்களுக்கு ஊடாக காணப்படுகின்றன மற்றும் ஒரு குட்டையில் அலைகளின் அசைவியக்கம் செல்வது போல் மொழியியல் மாற்றத்தை விளக்கும் ஒரு மாதிரியால் நன்றாக விளக்கப்படலாம். இது இந்திய-ஐரோப்பிய மொழிகளுக்கும் பொருந்தும். புவியியல் ரீதியாக மாறுபட்ட கிளை மொழிகளின் ஒரு வேறுபாடாக ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழி இருந்த போதே பல்வேறு சிறப்பம்சங்கள் உருவாகிப் பரவின.[98] இத்தகைய சிறப்பம்சங்கள் சில நேரங்களில் துணை மொழிக் குடும்பங்களின் ஊடாகவும் காணப்படுகின்றன.[99] இந்திய-ஐரோப்பிய மொழிகளின் வட்டாரமொழி வழக்குகளின் உறவு முறைகளுக்கு இடையிலான வலிமையான தொடர்பு மற்றும் அவற்றின் தொடக்க கால அறியப்பட்ட வடிவங்களில் அவற்றின் உண்மையான புவியியல் ஒழுங்கமைவானது, இந்தியாவிலிருந்து வெளியேறியது என்ற கோட்பாட்டின் படி, அவற்றின் இந்தியப் பூர்வீகமானது நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று காட்டுகின்றன.[100] கீழடுக்குத் தாக்கம்1870களிலேயே செருமனியின் லெயிப்சிக் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய செருமானிய மொழியியலாளர்களின் குழுவானது, சமசுகிருதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கிரேக்க/இலத்தீன் சொற்களின் சத்தங்களை விளக்க இயலாது என்பதை அறிந்தனர். எனவே, கிரேக்கம்/இலத்தீன் ஆகியவற்றின் சொற்கள் மெய் மூலங்களாக இருக்க வேண்டும் என அறிந்தனர்.[சான்று தேவை] இந்திய-ஈரானிய மற்றும் யூரலிய மொழிகள் ஒன்று மற்றொன்று மீது தாக்கம் கொண்டுள்ளன. எனினும், பின்னோ-உக்ரிய மொழிகள் இந்திய-ஐரோப்பியக் கடன் சொற்களைக் கொண்டுள்ளன. இதற்கு ஓர் உதாரணம் பின்லாந்து மொழிச் சொல்லான வசரா ஆகும். இதன் பொருள் "சுத்தியல்" என்பதாகும். இது இந்திரனின் ஆயுதமான வஜ்ராவுடன் தொடர்புடையதாகும். வடக்கு ஐரோப்பாவின் வடக்கு காட்டுப் பகுதியில் பின்னோ-உக்ரியத் தாயகமானது அமைந்திருந்ததால் இந்தத் தொடர்பானது நடந்திருக்க வேண்டும். கருங்கடல் மற்றும் காசுப்பியன் கடலுக்கு இடையில் பான்டிக்-காசுப்பியப் புல்வெளிகளில் ஆதி-இந்திய-ஐரோப்பியத் தாயகமானது அமைந்திருந்தது என்று குறிப்பிடப்பட்டதுடன் இது ஒத்துப் போகிறது.[web 1] திராவிட மற்றும் பிற தெற்காசிய மொழிகள் இந்திய-ஆரிய மொழியுடன் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சொற்றொடரியல் மற்று உருபனியல் சிறப்பம்சங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இவை பிற இந்திய-ஐரோப்பிய மொழிகளில் காணப்படாதவையாகும். இந்திய-ஆரிய மொழியின் மிக நெருங்கிய உறவினரான பழைய ஈரானிய மொழியில் கூட இவை காணப்படுவதில்லை.[note 15] இவை கீழடுக்குத் தாக்கத்தின் சான்றாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. திராவிட மொழிகளானவை இந்திய-ஆரிய மொழிகள் மீது நகர்வு மூலமாகத் தாக்கத்தை ஏற்படுத்தின என்று வாதிடப்படுகிறது.[யாரால்?][சான்று தேவை] தொல் குடி திராவிட மொழி பேசியவர்கள் இந்திய-ஆரிய மொழிகளைக் கற்று, பின்பற்றினர் என்று குறிப்பிடப்படுகிறது. பழைய இந்திய-ஆரிய மொழியில் திராவிட மொழிகளின் அமைப்புச் சிறப்பம்சங்களின் இருப்பானது இவ்வாறாக விளக்கப்படுகிறது. பெரும்பாலான தொடக்க கால பழைய இந்திய-ஆரிய மொழியைப் பேசியவர்கள் ஒரு கட்டத்தில் திராவிடத் தாய் மொழியைக் கொண்டிருந்தனர். அதைப் படிப்படியாகக் கைவிட்டனர்.[101] இந்திய-ஆரிய மொழியிலுள்ள புதுமையான பண்புகள் பல, உள்மொழி விளக்கங்களால் விளக்கப்பட்டாலும் கூட இந்த அனைத்து புதுமைகளுக்கும் ஒரே ஒரு விளக்கமாக, தொடக்க கால திராவிட மொழியின் தாக்கத்தைக் குறிப்பிடலாம் - இது ஒரு வகையில் விளக்கங்களைக் கொடுப்பதில் ஏற்படும் வறட்சி குறித்த கேள்வியை எழுப்புகிறது; மேலும், இந்திய-ஆரிய மொழியிலுள்ள எந்த ஒரு பரிந்துரைக்கப்பட்ட உள் மொழி விளக்கத்தையும் விட அதிலுள்ள புதுமையான பல சிறப்பம்சங்களுக்கு தொடக்க கால திராவிட மொழி தாக்கமே காரணமாக உள்ளது.[102] இந்தியாவை ஒரு சாத்தியமான வகையிலான இந்திய-ஐரோப்பியத் தாயகமாக கருதாமல் விலக்குவதற்கு ஒரு நல்ல காரணமாக இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள ஒரு முந்தைய இந்திய-ஐரோப்பிய மொழியியல் கீழடுக்கு நிலையைக் குறிப்பிடலாம்.[103] எனினும், பிற அடிப்படைகளில், ஆரிய மொழிகளின் வெளியிடத் தோற்றத்தை ஏற்றுக் கொள்ளும் அனைத்து பிற மொழியிலாளர்களும்[யார்?] இந்தச் சான்றை கீழடுக்குத் தாக்கங்களின் விளைவாகக் கருதாமல்[104] அல்லது மேலடுக்கு விளைவுகளாகக் கருதாமல் உள் மொழி முன்னேற்றங்களாக இன்னும் கருதுவதற்குத் தயாராக உள்ளனர்.[105] தொல்லியல்: உரேய்மத் புல்வெளியிலிருந்து புலப்பெயர்வுகள்சிந்தசுதா, அன்ட்ரோனோவோ, பாக்திரியா-மார்கியானா மற்றும் யாஸ் பண்பாடு ஆகியவை நடு ஆசியாவில் இந்திய-ஈரானியப் புலப்பெயர்வுகளுடன் தொடர்புடையவை ஆகும்.[106] காந்தார கல்லறை பண்பாடு, கல்லறை எச் கலாச்சாரம், காவி நிற மட்பாண்டப் பண்பாடு மற்றும் சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு ஆகியவை தெற்காசியாவுக்குள் இதைத் தொடர்ந்து வந்த பண்பாடுகளாகக் குறிப்பிடப்படுகின்றன. இவை இந்திய-ஆரிய நகர்வுகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சியானது இந்திய-ஆரியப் புலப்பெயர்வுகளுக்கு முன்னரே நடந்துள்ளது. ஆனால், தொல்லியல் தரவுகளானவை தொல்லியல் பதிவுகளில் ஒரு பண்பாட்டுத் தொடர்பைக் காட்டுகின்றன. இருக்கு வேதத்தில் திராவிடக் கடன் சொற்களின் இருப்புடன், அரப்பாவுக்கு பிந்தைய பண்பாடு மற்றும் இந்திய-ஆரியப் பண்பாடுளுக்கு இடையிலான ஒரு தொடர்புக்கு ஆதரவாக இது[தெளிவுபடுத்துக] வாதிடுகிறது.[107] புலப்பெயர்வுகளின் படி நிலைகள்6,000 ஆண்டுகளுக்கு முன்னர் நடு ஐரோவாசியாவின் பகுதியில் இருந்த தெற்கு உரால் மலைகள், வடக்கு காக்கேசியா மற்றும் கருங்கடலுக்கு இடைப்பட்ட தங்களது ஆதி-இந்திய-ஐரோப்பியத் தாயகத்திலிருந்து இந்திய-ஐரோப்பியர்கள் வெளியில் பரவத் தொடங்கினர்.[12] சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோவாசியப் புல்வெளிகளிலிருந்து இந்திய-ஐரோப்பிய மொழி பேசிய மக்கள் புலம் பெயரத் தொடங்கினர்.[108][note 16] "உரேய்மத்தில்" இருந்து பரவுதல்குர்கன் கோட்பாட்டில் விளக்கப்பட்டுள்ள படி, சமரா பண்பாடு (பொ. ஊ. மு. பிந்தைய 6ஆம் ஆயிரமாண்டு மற்றும் பொ. ஊ. மு. தொடக்க 5ஆம் ஆயிரமாண்டு) மற்றும் யம்னா பண்பாடு ஆகியவற்றின் அமைவிடமான நடு வோல்கா பகுதியை இந்திய-ஐரோப்பியர்களின் உரேய்மத் என அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த உரேய்மத் என்ற இடத்திலிருந்து இந்திய-ஐரோப்பிய மொழிகள் அண். பொ. ஊ. மு. 4,500 மற்றும் பொ. ஊ. மு. 2,500க்கு இடையில் ஐரோவாசியப் புல்வெளிகள் முழுவதும் பரவி யம்னா பண்பாட்டை உருவாக்கின. புலப்பெயர்வுகளின் தொடர் வரிசைதாவீது அந்தோணி புலப் பெயர்வுகளின் தொடர் வரிசை குறித்து ஒரு நுட்பமான மேற்பார்வையைக் கொடுக்கிறார். எழுத்து வடிவில் கிடைக்கப் பெறும் மிகப் பழமையான இந்திய-ஐரோப்பிய மொழி இட்டைட்டு ஆகும். மிகப் பழமையான எழுதப்பட்ட இந்திய-ஐரோப்பிய மொழிகளின் பிரிவான அனத்தோலியப் பிரிவைச் சேர்ந்தது இதுவாகும்.[109] இட்டைட்டு மொழியானது பொ. ஊ. மு. 2வது ஆயிரமாண்டிற்குக் காலமிடப்பட்டாலும்[110] அனத்தோலியப் பிரிவானது ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழியை விடப் பழைமையானதாகத் தோன்றுகிறது. ஆதி-இந்திய-ஐரோப்பிய மூதாதையர் மொழியை விட மூத்த பழைய ஒரு மொழியிலிருந்து இது உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[111] இது ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழியிலிருந்து பிரிந்தது என்று எடுத்துக் கொள்ளுவேமாயானால் இப்பிரிவானது பொ. ஊ. மு. 4,500 மற்றும் 3,500க்கு இடையில் நடைபெற்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[112] கீழ் தன்யூபு சமவெளிக்குள் தொல் வழக்காகிப் போன ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழியைப் பேசிய ஸ்டெப்பி புல்வெளி மந்தை மேய்ப்பாளர்களின் புலப்பெயர்வானது பொ. ஊ. மு. 4200 முதல் 4000க்கு இடையில் நடைபெற்றது. இவர்கள் பழைய ஐரோப்பாவின் வீழ்ச்சிக்குக் காரணமாகவோ அல்லது அந்த வீழ்ச்சியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டோ புலம் பெயர்ந்தனர்.[61] மல்லோரி மற்றும் ஆடம்சு ஆகியோரின் கூற்றுப் படி, தெற்கு நோக்கிய புலப்பெயர்வுகளானவை மய்கோப் பண்பாட்டை (அண். 3500-2500 பொ. ஊ. மு.) நிறுவின.[113] கிழக்கு நோக்கிய புலப்பெயர்வுகளானவை அபனசேவோ பண்பாட்டை (அண். 3500-2500 பொ. ஊ. மு.) நிறுவின.[114] அபனசேவோ பண்பாட்டு மக்களே தொச்சாரியர்களாக (அண். 3700-3300 பொ. ஊ. மு.) உருவாயினர்.[115] அந்தோணியின் கூற்றுப் படி, 3100 மற்றும் 2800/2600க்கு இடையில் மேற்கு நோக்கி தன்யூபு சமவெளிக்குள் யம்னா பண்பாட்டைச் சேர்ந்த ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழி பேசியவர்களின் ஒரு உண்மையான மக்கள் வகுப்பினரின் புலப் பெயர்வானது நடந்தது.[116] ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழியிலிருந்து இந்தப் புலப்பெயர்வுகள் அநேகமாக முன்-இத்தாலியம், முன்-செல்தியம் மற்றும் முன்-செருமானியம் ஆகிய மொழிகளைப் பிரித்தது என்று கருதப்படுகிறது.[117] அந்தோணியின் கூற்றுப் படி, இதைத் தொடர்ந்து வடக்கு நோக்கிய ஒரு நகர்வும் ஏற்பட்டது. இந்நகர்வு பால்திய-சிலாவிய மொழிகளாக அண். பொ. ஊ. மு. 2800இல் பிரிந்தது.[118] இதே நேரத்தில், முன்-ஆர்மீனிய மொழியும் பிரிந்தது.[119] பர்போலாவின் கூற்றுப் படி, இந்த புலப் பெயர்வானது ஐரோப்பாவிலிருந்து அனத்தோலியாவில் இந்திய-ஐரோப்பிய மொழி பேசியவர்களின் தோற்றத்துடன் தொடர்புடையதாகும், மேலும் இட்டைட்டு மொழியின் தோற்றத்துடனும் தொடர்புடையதாகும்.[120] நடு ஐரோப்பாவின் திண் கயிறு மட்பாண்டப் பண்பாடானது (2900–2450/2350 பொ. ஊ. மு.)[121] இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த சில மொழிகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆக் மற்றும் குழுவினரின் (2015) கூற்றுப் படி, ஐரோவாசியப் புல்வெளிகளிலிருந்து நடு ஐரோப்பாவுக்கு ஒரு பெருமளவிலான புலப்பெயர்வானது நடைபெற்றது. ![]() இந்தப் புலப்பெயர்வானது திண் கயிறு மட்பாண்டப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.[122][web 6][web 7] இந்திய-ஈரானிய மொழி மற்றும் பண்பாடானது சிந்தசுதா பண்பாட்டில் (அண். 2050–1900 பொ. ஊ. மு.) தோன்றியது.[123] இந்த சிந்தசுதா பண்பாட்டில் தான் இரதம் முதன் முதலில் உருவாக்கப்பட்டது.[10] அல்லன்தோப்து மற்றும் குழுவினரின் (2015) கூற்றூப் படி, திண் கயிறு மட்பாண்டப் பண்பாடு மற்றும் சிந்தசுதா பண்பாட்டின் மக்களுக்கிடையே நெருக்கமான தன்நிறப்புரி மரபணு உறவு முறையைக் கண்டறிந்தனர். இக்கண்டுபிடிப்பானது "இரு பண்பாட்டு மக்களும் ஒரே மரபணு மூலத்தைக் கொண்டிருந்தனர் என்பதைப் பரிந்துரைக்கிறது", மற்றும் "திண் கயிறு மட்பாண்டப் பண்பாட்டு மக்களின் கிழக்கு நோக்கிய புலப்பெயர்விலிருந்து நேரடியாக உருவானவர்களாக சிந்தசுதா பண்பாட்டு மக்கள்" அநேகமாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.[124] இந்திய-ஈரானிய மொழி மற்றும் பண்பாடானது அன்ட்ரோனோவோ பண்பாட்டில் (அண். 2000 – பொ. ஊ. மு. 1450) மேலும் வளர்ச்சியடைந்தது. பாக்திரியா-மார்கியானா தொல்லியல் வளாகத்தால் (அண். 2250 – பொ. ஊ. மு. 1700) தாக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டது. ஈரானியர்களிடமிருந்து இந்திய-ஆரியர்கள் 2000 - பொ. ஊ. மு. 1600க்கு இடைப்பட்ட காலத்தில் ஏதோ ஒரு நேரத்தில் பிரிந்தனர்.[5] இதற்குப் பிறகு, இந்திய-ஆரியக் குழுக்களானவை லெவண்ட் (மித்தானி இராச்சியம்), வடக்கு இந்தியத் துணைக்கண்டம் (வேத கால மக்கள், அண். பொ. ஊ. மு. 1500) மற்றும் சீனாவுக்கு (உசுன்) புலம் பெயர்ந்தனர் என்று கருதப்படுகிறது.[14] பிறகு ஈரானியர்கள் ஈரானுக்குள் புலம் பெயர்ந்தனர்.[14] நடு ஆசியா: இந்திய-ஈரானியர்களின் உருவாக்கம்இந்திய-ஈரானிய மக்கள் என்பவர்கள் இந்திய-ஆரியர், ஈரானியர் மற்றும் நூரிஸ்தானி மக்கள் ஆகியோரை உள்ளடக்கிய இனக் குழுக்களின் ஒரு குழு ஆவர்; அதாவது இந்திய-ஈரானிய மொழிகளைப் பேசுபவர்கள். ஆதி-இந்திய-ஈரானியர்கள் பொதுவாக அன்ட்ரோனோவோ பண்பாட்டுடன் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.[106] இப்பண்பாடு மேற்கே உரால் ஆறு, கிழக்கே தியான் சான் மலைகளை எல்லைகளாகக் கொண்டிருந்த யுரேசியப் புல்வெளிப் பகுதியில் அண். 2000 - பொ. ஊ. மு. 1450 வரை செழித்திருந்தது. இதை விடப் பழமையான சிந்தசுதா பண்பாடானது (2200–1900) முன்னர் அன்ட்ரோனோவோ பண்பாட்டுக்குள் உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது தனி பண்பாடாக இது கருதப்படுகிறது. ஆனால், அன்ட்ரோனோவோ பண்பாட்டுக்கு மூதாதையர் பண்பாடாகக் கருதப்படுகிறது. பரந்த அன்ட்ரோனோவோ பண்பாட்டு எல்லையின் பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அன்ட்ரோனோவோ பண்பாட்டிலிருந்து அனத்தோலியா, ஈரான் மற்றும் தெற்கு ஆசியாவுக்குள் நடைபெற்ற இந்திய-ஈரானிய புலப் பெயர்வுகளின் ஒரு பகுதி இந்திய-ஆரியப் புலப்பெயர்வு ஆகும்.[6] சிந்தசுதா-பெதுரோவுகா பண்பாடு![]() ![]() : தொடக்கப் புள்ளியான சிந்தசுதா-பெதுரோவுகா பண்பாடு : ஆரைச் சக்கரங்களையுடைய இரதம் கண்டுபிடிக்கப்பட்ட தொடக்க கால இடம் : அண்டை மற்றும் தொடர்புடைய பண்பாடுகள் (அபனசேவோ, சுருபுனா மற்றும் பாக்திரியா-மார்கியானா பண்பாடுகள்) சிந்தசுதா பண்பாடானது சிந்தசுதா-பெதுரோவுகா பண்பாடு[125] அல்லது சிந்தசுதா-அர்கைம் பண்பாடு[126] என்றும் அறியப்படுகிறது. இது ஒரு வெண்கலக் காலத் தொல்பொருள் பண்பாடு ஆகும். கிழக்கு ஐரோப்பா மற்றும் நடு ஆசியாவின் எல்லைகளில் வடக்கு யுரேசியப் புல்வெளியில் இது அமைந்திருந்தது. இது 2200 - பொ. ஊ. மு. 1900 வரையிலான ஆண்டுகளுக்கு காலமிடப்படுகிறது.[123] அநேகமாக இந்திய-ஈரானிய மொழிக் குழுவின் தொல்லியல் தோற்றமாக சிந்தசுதா பண்பாடு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[127] இரு மூதாதையர் பண்பாடுகள் தொடர்பு கொண்டதிலிருந்து சிந்தசுதா பண்பாடு இருந்து உருவானது. இதன் உடனடி மூதாதையர் பண்பாடாக உரால்-தோபோல் புல்வெளியில் போல்தோவுகா பண்பாடு இருந்தது. பொ. ஊ. மு. 2800 மற்றும் 2600க்கு இடையில் கிழக்கே இப்பகுதிக்குள் நகர்ந்த, கால்நடைகளை மேய்த்த யம்னயா பண்பாட்டு எல்லையின் ஒரு கிளை அமைப்பு இதுவாகும்.[128] ஏராளமான சிந்தசுதா பட்டணங்கள் பழைய போல்தோவுகா குடியிருப்புகள் அல்லது போல்தோவுகா இடுகாடுகளுக்கு அருகில் கட்டமைக்கப்பட்டன. போல்தோவுகா உருவங்கள் அல்லது வடிவங்கள் சிந்தசுதா மட்பாண்டங்களில் பொதுவானவையாக இருந்தன. மேலும் சிந்தசுதா பொருள்சார் பண்பாடானது பிந்தைய அபசேவோ பண்பாட்டின் தாக்கத்தையும் காட்டுகிறது. சிந்தசுதா பகுதிக்கு வடக்கே இருந்த வன புல்வெளி மண்டலத்தில் திண் கயிறு மட்பாண்டப் பண்பாட்டுக் குடியிருப்புகளின் ஒரு குழு அபசேவோ பண்பாடு ஆகும். இவர்கள் பெரும்பான்மையாக மேய்ச்சல் வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர். அல்லன்தோப்து மற்றும் குழுவினர் (2015) திண் கயிறு மட்பாண்டப் பண்பாடு மற்றும் சிந்தசுதா பண்பாட்டு மக்களுக்கு இடையே நெருக்கமான தன்நிறப்புரி மரபணு உறவு முறைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.[124] தொடக்க காலத்தில் அறியப்பட்ட இரதங்கள் சிந்தசுதா சமாதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழில்நுட்பம் உருவான இடத்திற்குப் போட்டியிடும் ஒரு வலிமையான பண்பாடாக இந்தப் பண்பாடு கருதப்படுகிறது. இத்தொழில்நுட்பம் பழைய உலகம் முழுவதும் பரவியது. பண்டைய கால போர் முறையில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றியது.[129] இங்கு நடத்தப்பட்ட செப்பு தோண்டியெடுப்பு மற்றும் வெண்கல உலோகவியல் ஆகியவற்றின் வலிமையான செயல்பாடுகளுக்காக சிந்தசுதா குடியிருப்புகள் தனித்துவமானவையாக உள்ளன. ஏனெனில், இத்தகைய செயற்பாடுகள் ஒரு புல்வெளிப் பண்பாட்டிற்கு வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும்.[130] பிந்தைய குடியிருப்புகளுக்குக் கீழ் சிந்தசுதா தளங்களின் எஞ்சிய பகுதிகளைக் கண்டுபிடிப்பதிலிருந்த கடினம் காரணமாக இந்தப் பண்பாடானது சமீபத்தில் தான் அன்ட்ரோனோவோ பண்பாட்டிலிருந்து வேறுபடுத்தப்பட்டது.[126][125] அன்ட்ரோனோவோ பண்பாடு![]() மேற்கு சைபீரியா மற்றும் நடு யுரேசியப் புல்வெளியில் அண். 2000 - பொ. ஊ. மு. 1450க்கு இடையில் செழித்து வளர்ந்த ஒத்த உள்ளூர் வெண்கலக் கால இந்திய-ஈரானியப் பண்பாடுகளின் ஒரு தொகுப்பு ஆகும்.[3][131] இதைத் தொல்லியல் வளாகம் அல்லது தொல்லியல் பண்பாட்டு எல்லை என்று குறிப்பிடுவதே அநேகமாக சிறந்த சொல்லாக இருக்கும். இந்தப் பண்பாடு இதன் பெயரை அன்ட்ரோனோவோ (55°53′N 55°42′E / 55.883°N 55.700°E) கிராமத்திலிருந்து பெறுகிறது. இக்கிராமத்தில் 1914இல் பல்வேறு சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தரைக்கு அண்மையில் வருமாறு உடலையும், கால்களையும் வளைத்த நிலைகளில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சிறந்த முறையில் அலங்கரிக்கப்பட்ட மட்பாண்டங்களுடன் இந்த எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருந்தன. தற்போது இரண்டு துணைப் பண்பாடுகள் மட்டுமே அன்ட்ரோனோவோ பண்பாட்டின் பகுதியாகக் கருதப்படுகின்றன:
பின்வரும் துணைப் பண்பாடுகளும் கூட அன்ட்ரோனோவோவின் ஒரு பகுதியாகப் பிற நூலாசிரியர்களால் முன்னர் அடையாளப்படுத்தப்பட்டன:
இப்பண்பாட்டின் புவியியல் விரிவானது பரந்த அளவிலும், வரையறுப்பதற்குக் கடினமானதாகவும் உள்ளது. இதன் மேற்கு விளிம்புகளில் தோராயமான, சம காலத்தைச் சேர்ந்த, ஆனால் தனித்துவமானதுமான சுருபுனா பண்பாட்டுடன் இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. சுருபுனா பண்பாடானது வோல்கா மற்றும் உரால் ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பில் அமைந்திருந்தது. கிழக்கே மினுசின்சுகு தாழ் நிலப்பகுதிக்குள் இப்பண்பாடு நீண்டிருந்தது. மேற்கே தெற்கு உரால் மலைகள் வரை சில களங்கள் காணப்படுகின்றன.[136] இது முந்தைய அபனசேவோ பண்பாட்டின் பகுதியுடன் இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது.[137] மேற்கொண்ட களங்களானவை தெற்கே கோபேத் தக் (துருக்மெனிஸ்தான்), பாமிர் மலைகள் (தஜிகிஸ்தான்) மற்றும் தியான் சான் (கிர்கிசுத்தான்) ஆகிய பகுதிகள் வரை சிதறுண்டு காணப்படுகின்றன. வடக்கு எல்லையானது தெளிவற்ற முறையில் தைகா நிலப்பரப்பின் தொடக்கத்துடன் ஒத்துப் போகிறது.[136] வோல்கா வடி நிலத்தில் சுருபுனா பண்பாட்டுடனான தொடர்பானது மிகவும் அழுத்தமானதாகவும், நீண்ட காலத்துக்கு நீடித்திருந்ததாகவும் இருந்தது. பெதோரோவோ பாணியிலான மட்பாண்டங்களானவை மேற்கே வோல்கோகிராட் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2வது ஆயிரமாண்டின் நடுப் பகுதி காலத்தில் அன்ட்ரோனோவோ பண்பாடுகள் கிழக்கு நோக்கி அழுத்தமாகப் பரவத் தொடங்கின. அல்த்தாய் மலைத்தொடர்களிலிருந்து செப்புத் தாதுக்களை இவர்கள் சுரங்கப் பணிகள் மூலம் தோண்டியெடுத்தனர். நீள, அகலங்களில் 30 மீட்டர் மற்றும் 60 மீட்டர் அளவுகளைக் கொண்டிருந்த மூழ்கிப் போன சிறு மரப்பலகை வீடுகளில் இவர்கள் வாழ்ந்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் இதே போன்ற 10 வீடுகள் வரை இருந்தன. சமாதிகளானவை கல்பதுக்கைகள் அல்லது கல் சுற்றுச் சுவர்களைக் கொண்டிருந்தன. சமாதிகளுக்குள் புதைக்கப்பட்ட மரத்தாலான சிறு அறைகள் இருந்தன. மற்ற வகைகளில் இவர்களின் பொருளாதாரமானது மேய்ச்சல் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு மாடு, குதிரைகள், செம்மறியாடு மற்றும் ஆடுகளைக் கொண்டிருந்தது.[136] இவர்கள் விவசாயத்தையும் பயன்படுத்தினர் என்ற கருத்து முன் வைக்கப்பட்ட போதிலும்,[யாரால்?] இதற்கான தெளிவான சான்றானது முன் வைக்கப்படவில்லை. ஆய்வுகளானவை அன்ட்ரோனோவோ பண்பாட்டு எல்லையை தொடக்க கால இந்திய-ஈரானிய மொழிகளுடன் தொடர்புபடுத்துகின்றன. இதன் வடக்கு விளிம்பில் இது தொடக்க கால உராலிய மொழி பேசிய பகுதியுடன் இடத்தைப் பகிர்ந்து கொண்டும், வடகிழக்கு விளிம்பில் துருக்கிய மொழி பேசிய பகுதிகளை உள்ளடக்கியும் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[138][139][140] இரதமானது இந்திய-ஆரியர்களால் மித்தானி மற்றும் வேத கால இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது, அண்மைக் கிழக்கு மற்றும் அரப்பா இந்தியாவில் இரதம் முன்னர் காணப்படாதது மற்றும் சிந்தசுதாவின் அன்ட்ரோனோவோ களத்தில் பொ. ஊ. மு. 19-20ஆம் நூற்றாண்டில் இது உறுதிப்படுத்தப்பட்டது ஆகியவை காரணமாக குசமினா (1994) என்ற வரலாற்றாளர் அன்ட்ரோனோவோ பண்பாடானது இந்திய-ஈரானியப் பண்பாடாக அடையாளப்படுத்தப்படுவதற்கு இரதமானது சிறந்த சான்றாக அமைகிறது என்கிறார்.[141][note 17] அந்தோணி மற்றும் வினோகிரதேவ் (1995) ஆகியோர் கிரிவோயே ஏரியில் ஒர் இரத சமாதியை பொ. ஊ. மு. 2000 ஆண்டுக்குக் காலமிடுகின்றனர். ஒரு பாக்திரியா-மார்கியானா சமாதியானது குதிரைக் குட்டியைக் கொண்டிருந்தது என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்டெப்பி புல்வெளிகளுடன் மேற்கொண்ட தொடர்புகளை இவை காட்டுகின்றன.[145] அன்ட்ரோனோவோவிலிருந்து வட இந்தியாவுக்குள் விரிவுகள் ஏற்பட்டன என்பதை உறுதிப்படுத்த பிரச்சினைகள் உள்ளதை மல்லோரி ஒப்புக் கொள்கிறார். பெசுகெந்து மற்றும் வக்சு பண்பாடுகளின் களங்களுக்கு இந்திய-ஆரியர்களைத் தொடர்பு படுத்த முயற்சிக்கலாம் என்றும், ஆனால் அவை "இந்திய-ஈரானியரை நடு ஆசியா வரையில் மட்டுமே கொண்டு செல்கிறது, மீடியாப் பேரரசு, பாரசீகர்கள் அல்லது இந்திய-ஆரியர்களின் இடங்கள் வரை கொண்டு செல்லவில்லை" என்று மல்லோரி குறிப்பிடுகிறார். "குல்துர்குகேல்" என்ற கோட்பாட்டு மாதிரியை இவர் உருவாக்கினார். இக்கோட்பாட்டின் படி, இந்திய-ஈரானியர்கள் பாக்திரியா-மார்கியானா பண்பாட்டு அம்சங்களைப் பெற்றனர். ஆனால், தங்களது மொழி மற்றும் சமயத்தைத் தக்க வைத்துக் கொண்டனர்.[முரண்பாடு] ஈரான் மற்றும் இந்தியாவுக்குள் நுழைந்தனர்.[146][144] ஈரானுக்குள் பாக்திரியா-மார்கியானா தொல்லியல் வளாகத்தின் விரிவை பிரெட் கியேபெர்ட் ஒப்புக் கொள்கிறார். "இந்திய-ஈரானிய மொழி பேசியவர்கள் ஈரான் மற்றும் தெற்காசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கான ஒரு தொல்லியல் சான்றாக" சிந்துவெளி சிறந்த முறையில் அமைந்தது என்கிறார்.[144] நரசிம்மன் மற்றும் குழுவினரின் (2018) கூற்றுப் படி, அன்ட்ரோனோவோ பண்பாடானது பாக்திரியா-மார்கியானா தொல்லியல் வளாகத்தை நோக்கி விரிவடைந்த நிகழ்வானது உள் ஆசிய மலை இடை வழி வழியாக நடந்தது.[147] பாக்திரியா-மார்கியானா பண்பாடு![]() "பாக்திரியா-மார்கியானா தொல்லியல் வளாகம்" (பா. மா. தொ. வ.) என்றும் அழைக்கப்படும் பாக்திரியா-மார்கியானா பண்பாடானது ஓர் இந்திய-ஐரோப்பியர் சாராத பண்பாடு ஆகும்.[6] இது இந்திய-ஈரானியர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய வட மேற்கு ஆப்கானித்தான் மற்றும் தெற்கு துருக்மெனித்தானில் இது அமைந்திருந்தது.[6] ஆதி இந்திய-ஈரானியர் இதன் தாக்கம் காரணமாக வளர்ச்சியடைந்தனர்.[6] இந்திய-ஈரானியர்கள் தங்களது தனித்துவமான சமய நம்பிக்கைகள்[முரண்பாடு] மற்றும் பழக்கவழக்கங்களை இந்தப் பண்பாட்டில் இருந்து பெற்றும் கொண்டனர்.[6] அந்தோணி என்ற வரலாற்றாளரின் கூற்றுப்படி பழைய இந்திய சமயமானது அநேகமாக இந்திய-ஐரோப்பியக் குடியேறிகள் மத்தியில் செரவ்சான் ஆறு (தற்கால உசுப்பெக்கிசுத்தான்) மற்றும் (தற்கால) ஈரானுக்கு இடைப்பட்ட தொடர்புப் பகுதியில் தோன்றியது.[148] இப்பண்பாடானது "பழைய நடு ஆசியா மற்றும் புதிய இந்திய-ஐரோப்பியக் காரணிகளின்" ஒரு கலவையாகும்.[148] இது "தனித்துவமான சமய நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை" பாக்திரியா-மார்கியானா பண்பாட்டிடமிருந்து பெற்றது.[6][6] குறைந்தது 383 இந்திய-ஐரோப்பியர் சாராத சொற்களானவை இந்தப் பண்பாட்டில் இருந்து கடனாகப் பெறப்பட்டுள்ளன. இப்பெயர்களில் கடவுள் இந்திரன் மற்றும் சடங்கு பானமான சோமபானம் உள்ளிட்டவையும் அடங்கும்.[149] மெகர்கர் மற்றும் பலுச்சிசுத்தானத்தின் சமாதிகளில் கண்டெடுக்கப்பட்ட பாக்திரியா-மார்கியானா (தெற்கு துருக்மெனிஸ்தான்/வடக்கு ஆப்கானித்தான்) பண்புகளைக் கொண்ட பொருட்களானவை நடு ஆசியாவில் இருந்து தெற்குப் பகுதிக்கு மக்களின் ஒரு நகர்வால் விளக்கப்படுகின்றன.[150] இந்திய-ஆரியப் பழங்குடியினங்களானவை குறைந்தது பொ. ஊ. மு. 1700ஆம் ஆண்டிலிருந்து பா. மா. தொ. வ. பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இதை ஒத்ததாக பாக்திரியா-மார்கியானா பண்பாட்டின் வீழ்ச்சியும் இதே காலகட்டத்தில் ஏற்ப்பட்டது. பா. மா. தொ. வ.இலிருந்து இந்திய-ஆரியர்கள் இந்தியத் துணைக்கண்டத்திற்குள் வந்தனர். பிரையன்ட் என்ற வரலாற்றாளர் மெகர்கர் மற்றும் பலுச்சிசுத்தானத்தின் சமாதிகளில் பாக்திரியா-மார்கியானா பொருட்களானது இந்திய-ஆரியர்களின் வருகை குறித்துப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காலகட்டத்துக்குள் நடு ஆசியாவிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்துக்குள் ஒரு தொல்லியல் ரீதியான தலையீடு இருந்ததற்கான ஆதாரம் என்கிறார்.[151][note 18] வட இந்தியாவுக்குள் பல அலைகளாகப் புலப்பெயர்வு![]() பர்போலாவின் கூற்றுப்படி இந்திய-ஆரிய இனங்கள் தெற்காசியாவுக்குள் தொடர்ச்சியாக வந்த அலைகளாகப் புலம் பெயர்ந்தன.[107] இருக்கு வேதத்தில் காணப்படும் வேறுபட்ட பார்வைகளை இது விளக்குகிறது. பிந்தைய வேத காலத்தில் பல்வேறு இந்திய-ஆரியப் பண்பாட்டு வளாகங்கள் அமைந்திருந்ததையும் கூட இது விளக்கலாம். இந்த வளாகங்களாக மேற்கு கங்கைச் சமவெளியில் ஆரிய வர்த்தத்தின் இதயப் பகுதியில் குரு தேசத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்த வேதகாலப் பண்பாடு மற்றும், சைனம் மற்றும் பௌத்த சமயங்களின் வளர்ச்சிக்கு இருப்பிடமாக இருந்த கிழக்கு கங்கைச் சமவெளியில் அமைந்திருந்த பெரிய மகதப் பண்பாட்டு வளாகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.[107][152][153] 1998இல் எழுதிய போது பர்போலா முதல் அலைப் புலப் பெயர்வானது பொ. ஊ. மு. 1900ஆம் ஆண்டிலேயே கூட நடைபெற்றிருக்கலாம் என்று பரிந்துரைத்தார். இது கல்லறை எச் கலாச்சாரம் மற்றும் செப்புக் குவியல் பண்பாடு, காவி நிற மட்பாண்டப் பண்பாடு மற்றும் பஞ்சாபுக்குள் ஒரு புலப் பெயர்வு (1,700-1,400 பொ. ஊ. மு.) ஆகியவற்றை ஒத்ததாக அமைந்திருந்தது.[154][note 19] 2020இல் அதற்கு முன்னரே கூட பொ. ஊ. மு. 1,900 ஆண்டில் இந்தியாவுக்குள் சிந்தசுதா பண்பாட்டைச்[155] சேர்ந்த ஆதி இந்திய-ஈரானிய மொழியைப் பேசிய மக்கள் ஓர் அலையாக வந்திருக்கலாம் என்று பரிந்துரைத்தார். இவர்கள் செப்புக் குவியல் பண்பாட்டுடன் தொடர்புடையவராவர். இவர்களுக்குப் பிறகு இருக்கு வேத காலத்திற்கு முந்தைய ஓர் இந்திய-ஆரியப் புலப் பெயர்வு அலையானது பின் வந்தது:[156]
இருக்கு வேத காலத்துக்கு முந்தைய தொடக்க கால இந்திய-ஆரியர்களின் புலப்பெயர்வு அலையானது "காந்தாரக் கல்லறைப் பண்பாட்டின் தொடக்க காலகட்டம் (கலேகய் IV–V)" மற்றும் அதர்வண வேதப் பாரம்பரியம் ஆகியவற்றுடன் பார்போலாவால் தொடர்புபடுத்தப்பட்டது. இது பெத்ரோவ்கா பண்பாட்டுடன் தொடர்புடையதாகும்.[158] இருக்கு வேத கால அலையானது பல நூற்றாண்டுகள் கழித்துப் பின்னர் வந்தது. அநேகமாக "பொ. ஊ. மு. 14ஆம் நூற்றாண்டில்" இது வந்திருக்கலாம். இது அன்ட்ரோனோவா பண்பாட்டுடன் பார்போலவால் தொடர்புபடுத்தப்படுகிறது.[159] கோச்சரின் கூற்றுப்படி முதிர்ந்த அரப்பா கால கட்டத்திற்குப் பிறகு நடந்த இந்திய-ஆரியப் புலப் பெயர்வானது மூன்று அலைகளாக நடை பெற்றது:[160]
காந்தாரக் கல்லறைப் பண்பாடும், காவி நிற மட்பாண்டப் பண்பாடும்இந்தியாவுக்குள் இந்திய-ஐரோப்பிய மொழிகளின் நுழைவுக்கான ஒரு தரப்படுத்தப்பட்ட மாதிரியாகக்[யாரால்?] குறீப்பிடப்படுவது இந்திய-ஆரிய குடியேறிகள் இந்து குஃசு மலையைத் தாண்டி காந்தாரக் கல்லறைப் பண்பாடு அல்லது சுவாத் பண்பாட்டை தற்போதைய சுவாத் பள்ளத்தாக்கில் உருவாக்கி சிந்து அல்லது கங்கையின் (அல்லது அநேகமாக இரு ஆறுகளின்) தலைவாய் நீருக்கு அருகில் சென்றனர் என்பதாகும். காந்தாரத்தில் அண். பொ. ஊ. மு. 1,600இல் தோன்றி அண். பொ. ஊ. மு. 1,500 முதல் பொ. ஊ. மு. 500 வரை நவீன கால பாக்கித்தான் மற்றும் ஆப்கானித்தானில் செழித்திருந்த காந்தாரக் கல்லறைப் பண்பாடானது இருக்கு வேதப் பண்பாட்டை தொடக்க காலத்தில் எடுத்து வந்தவர்களின் மிக சாத்தியமான இடமாக இவ்வாறு திகழ்கிறது. சுமார் பொ. ஊ. மு. 1,800 வாக்கில் காந்தாரக் கல்லறைப் பண்பாட்டின் வளர்ச்சியுடன் சுவாத் பள்ளத்தாக்கில் ஒரு முக்கியமான பண்பாட்டு மாற்றம் நிகழ்ந்து. புதிய சுடுமண் பாண்டங்கள், புதிய சமாதி சம்பிரதாயங்கள், மற்றும் குதிரை ஆகியவற்றின் அறிமுகத்துடன் காந்தாரக் கல்லறைப் பண்பாடானது தொடக்க கால இந்திய-ஆரியர்களின் இருப்புக்கு ஒரு முதன்மையான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. தொடக்க கால வேத இலக்கியத்தின் படி ஒரு குழியில் இறந்தவரை வளைத்து சமாதி செய்தல் மற்றும் ஒருவரை எரித்து அஸ்திக் கலசத்தில் அவரது சாம்பலை வைத்தல் ஆகிய இரு புதிய சமாதி சம்பிரதாயங்களுமே தொடக்க கால இந்திய-ஆரிய சமூகத்தில் பின்பற்றப்பட்டது. குதிரைகளுடன் பிற பொருட்கள் இருப்பதென்பது காந்தாரக் கல்லறைப் பண்பாட்டின் பொருளாதாரத்திற்குக் குதிரையின் முக்கியத்துவத்தை வெளிக் காட்டுவதாக அமைகிறது. பிற முறைகளிலும் குதிரையின் முக்கியத்துவத்தை வெளிக் காட்டுவதாக இரு குதிரை சமாதிகள் உள்ளன. ஸ்டெப்பி புல்வெளியின் தனித்துவமான மரச்சட்ட சமாதிகளுக்குள்ளான காலத்துடன் ஒத்துப் போகாவிட்டாலும் காந்தாரக் கல்லறைப் பண்பாடானது அன்ட்ரோனோவா பண்பாட்டுடன் பொதுவாக கொண்டுள்ள ஒரு பழக்கமாகக் குதிரைச் சமாதி அமைகிறது.[161] பர்போலா (2020) குறிப்பிட்டதாவது:
இரு அலைகளாக இந்திய-ஈரானியப் புலப்பெயர்வுஇந்திய-ஈரானியப் புலப் பெயர்வுகளானவை இரு அலைகளாக நிகழ்ந்தன.[163][164] இந்திய-ஐரோப்பியப் புலப் பெயர்வுகள் குறித்த பெக்வித் என்ற வரலாற்றாளரின் விளக்கத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலைகளைச் சேர்ந்தவையாக இவை உள்ளன.[165] லெவன்ட் பகுதிக்குள் இந்திய-ஆரியப் புலப்பெயர்வு மற்றும் இந்து குஃசு மலைகளைத் தாண்டி வட இந்தியாவுக்குள் வேதகால மக்கள் தென் கிழக்கு திசையை நோக்கி புலம் பெயர்ந்தது ஆகியவற்றை முதல் அலையானது உள்ளடக்கியிருந்தது. லெவன்ட் பகுதிக்குச் சென்றவர்கள் வடக்கு சிரியாவில்[166] (அண். பொ. ஊ. மு. 1,600-பொ. ஊ. மு. 1,350)[167] மித்தானி இராச்சியத்தை நிறுவியதாகத் தோன்றுகிறது.[168] கிறித்தோபர் ஐ. பெக்வித் என்ற வரலாற்றாளர் பண்டைக் காலத்தில் உள் ஆசியாவைச் சேர்ந்த இந்திய-ஐரோப்பிய காக்கேசிய இன மக்களான உசுன் என்ற மக்களைப் பரிந்துரைக்கிறார். இவர்களும் கூட இந்திய-ஆரியப் பூர்வீகத்தைக் கொண்டிருந்தனர்.[169] இரண்டாவது அலையானது ஈரானிய அலை என்று விளக்கப்படுகிறது.[170] முதல் அலை - இந்திய-ஆரியப் புலப்பெயர்வுகள்மித்தானி![]() மிதன்னி (இட்டைட்டு சித்திர எழுத்துக்கள்: குர்உருமி-ட-அன்-னி), மேலும் மித்தனி அல்லது ஹனிபல்கத் (அசிரிய ஹனிகல்பத், கனிகல்பத் சித்திர எழுத்துக்கள் (அக்காடிய மொழி) ஹ-னி-கல்-பத்) அல்லது பண்டைய எகிப்திய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நகரின் என்பது அண். பொ. ஊ. மு. 1,600 மற்றும் பொ. ஊ. மு. 1,350 வரை வடக்கு சிரியா மற்றும் தென்-கிழக்கு அனத்தோலியாவில் அமைந்திருந்த ஒரு குரிய மொழி பேசிய அரசு ஆகும்.[167] ஒரு கோட்பாட்டின் படி முதன்மையாகக் குரிய மக்களை ஆண்ட ஓர் இந்திய-ஆரிய ஆளும் வர்க்கத்தினரால் இந்த இராச்சியம் நிறுவப்பட்டது. அமோரிய[171] பாபிலோனை இட்டைட்டுகள் அழித்தது மற்றும் ஒரு தொடர்ச்சியான ஆற்றலற்ற அசிரிய மன்னர்கள் மெசப்பத்தோமியாவில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது ஆகியவற்றுக்குப் பிறகு மித்தானி ஒரு பிராந்திய சக்தியாக உருவானது. இதன் வரலாற்றின் தொடக்கத்தில் மித்தானியின் முதன்மையான எதிரியாக துத்மோசியர் தலைமையிலான எகிப்து திகழ்ந்தது. எனினும், இட்டைட்டு பேரரசின் வளர்ச்சியால் இட்டைட்டு ஆதிக்கத்தின் அச்சுறுத்தலில் இருந்து தங்களது பரஸ்பரத் தேவைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மித்தானி மற்றும் எகிப்து ஒரு கூட்டணியை ஏற்படுத்தின.[சான்று தேவை] இதன் சக்தியின் உச்சத்தின் போது பொ. ஊ. மு. 14ஆம் நூற்றாண்டில் இதன் தலைநகரம் வசுகன்னியை மையமாகக் கொண்ட வெளிப்புறக் காவல் அமைப்புகளை மித்தானி கொண்டிருந்தது. வசுகன்னியின் அமைவிடமானது காபூர் ஆற்றின் தலைவாய் நீரில் அமைந்துள்ளதாகத் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குரிய இடப் பெயர்கள், தனி நபர் பெயர்கள் மற்றும் ஒரு தனித்துவமான மட்பாண்ட வகை ஆகியவை சிரியா மற்றும் லெவன்ட் முழுவதும் பரவியுள்ளது ஆகியவற்றால் இவர்களது செல்வாக்கின் தாக்கமானது வெளிக் காட்டப்படுகிறது. இறுதியாக மித்தானி தொடக்கத்தில் இட்டைட்டு மற்றும் பிறகு அசிரியத் தாக்குதல்களுக்கு இரையானது. மத்திய கால அசிரியப் பேரரசின் ஒரு மாகாணம் என்ற நிலைக்குத் தாழ்ந்தது.[சான்று தேவை] ஓர் இந்திய-ஆரிய மொழியின் தொடக்க காலத்தில் எழுதப்பட்ட ஆதாரமானது வடமேற்கு இந்தியா மற்றும் பாக்கித்தானில் கிடைக்கப் பெறுவதில்லை. மாறாக அவை மித்தானி இராச்சியத்தின் அமைவிடமான வடக்கு சிரியாவில் கிடைக்கப் பெறுகின்றன.[106] மித்தானி மன்னர்கள் பழைய இந்திய அரியணைப் பெயர்கள், மற்றும் குதிரை-சவாரி மற்றும் இரதம்-ஓட்டுதல் ஆகியவற்றுக்குப் பழைய இந்தியத் தொழில்நுட்பச் சொற்களைப் பயன்படுத்தினர்.[106] இருக்கு வேதத்தின் மையக் கருவான பழைய இந்தியச் சொல்லான ர்'டா (ருதம், பொருள்: "பிரபஞ்ச ஒழுங்கு மற்றும் உண்மை")-வும் கூட மித்தானி இராச்சியத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது.[106] இந்திரன் உள்ளிட்ட பழைய இந்தியக் கடவுள்களும் கூட மித்தானி இராச்சியத்தில் அறியப்பட்டிருந்தனர்.[172][173][174] வட இந்தியா - வேதப் பண்பாடு
வேத-பிராமணப் பண்பாட்டின் பரவல்![]() தொடக்க வேத காலத்தின் போது (அண். பொ. ஊ. மு. 1,500-பொ. ஊ. மு. 800[web 9]) இந்திய-ஆரியப் பண்பாடானது வடக்கு பஞ்சாப் அல்லது சப்த சிந்துவை மையமாகக் கொண்டிருந்தது.[web 9] பிந்தைய வேத காலத்தின் போது (அண். பொ. ஊ. மு. 800-பொ. ஊ. மு. 500[web 10]) இந்திய-ஆரியப் பண்பாடானது மேற்கு கங்கைச் சமவெளிக்கு விரிவடையத் தொடங்கியது.[web 10] அந்நேரத்தில் வேத கால குரு மற்றும் பாஞ்சாலப் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது.[153] பொ. ஊ. மு. 500க்குப் பிறகு நடு கங்கைச் சமவெளியில் ஓரளவுக்குச் செல்வாக்கைக்[175] கொண்டிருந்தது.[web 11] கங்கைச் சமவெளியில் வளர்ச்சியடைந்த 16 மகாஜனபாதங்களில் மேற்கு கங்கைச் சமவெளியில் அமைந்திருந்த குரு மற்றும் பாஞ்சால இராச்சியங்கள் வேதப் பண்பாட்டின் மிகக் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்த மையங்களாகத் திகழ்ந்தன.[web 10][153] மகதம் முக்கியத்துவத்தைப் பெற்ற இடமும், மௌரியப் பேரரசின் அடித் தளத்தைக் கொண்டிருந்த இடமுமான நடு கங்கைச் சமவெளியானது ஒரு தனித்துவமான பண்பாட்டுப் பகுதியாகத் திகழ்ந்தது.[176] "இரண்டாம் நகரமயமாக்கல்"[177][note 20] என்று அழைக்கப்படும் காலத்தின் போது பொ. ஊ. மு. 500க்குப் பிறகு புதிய அரசுகள் வளர்ச்சியடைந்தன.[web 11] இவை வேதப் பண்பாட்டின் தாக்கத்தைக் கொண்டிருந்தன. [175]ஆனால் குரு-பாஞ்சாலப் பகுதியிலிருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு வேறுபட்டிருந்தன.[176] "இந்தியத் துணைக் கண்டத்தில் தொடக்க காலத்தில் அறியப்பட்ட நெல் அறுவடைப் பகுதியாகவும், பொ. ஊ. மு. 1,800 வாக்கில் சிரந்த் மற்றும் செச்சர் தளங்களுடன் தொடர்புடைய ஒரு முன்னேறிய புதிய கற்கால மக்கள் தொகையின் அமைவிடமாகவும்" இது திகழ்ந்தது.[178] இப்பகுதியில் சிரமண இயக்கங்கள் செழித்திருந்தன. சைனமும், பௌத்தமும் இங்கு தான் தோன்றின.[153] சிந்துவெளி நாகரிகம்சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சீக்கிரமே வடக்கு பஞ்சாபுக்குள் இந்திய-ஆரியப் புலப்பெயர்வானது தொடங்கியது. "ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டின்" படி இந்த வீழ்ச்சியானது சிந்துவெளி நாகரிகத்தை வென்ற காட்டுமிராண்டிகள் மற்றும் வன்முறையாளர்களான ஆரியர்களின் படையெடுப்பால் நிகழ்ந்தது. சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிஜிம் ஜி. சாபர் மற்றும் லீக்டென்ஸ்டைன் ஆகியோர் பொ. ஊ. மு. இரண்டாம் ஆயிரமாண்டில் குறிப்பிடத்தக்க அளவுக்கு "உள்ளூர்மயமாக்கச் செயல்பாடுகள்" நடந்தன என்று குறிப்பிடுகின்றனர். கிழக்கு பஞ்சாப்பில் 79.9% மற்றும் குசராத்தில் 96% தளங்கள் தங்களது குடியிருப்பு நிலையிலிருந்து மாறின. சாபர் மற்றும் லீக்டென்ஸ்டைனின் கூற்றுப் படி,
மேலும் காண்ககுறிப்புகள்
மேற்கோள்கள்
இணைய-ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia