உலு திராங்கானு மாவட்டம்
உலு திராங்கானு மாவட்டம் (ஆங்கிலம்: Hulu Terengganu District; மலாய்: Daerah Hulu Terengganu; சீனம்: 乌鲁登嘉楼县; ஜாவி: هولو ترڠڬانو) என்பது மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் எட்டு மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் இந்த மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் உட்புறத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோலா பேராங் (Kuala Berang). மாநிலத் தலைநகரான கோலா திராங்கானுவில் (Kuala Terengganu) இருந்து சுமார் 40 கி.மீ. (25 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. பொதுநிலப்பரப்பின் அடிப்படையில் உலு திராங்கானு மிகப்பெரிய மாவட்டம். இது திராங்கானு மாநிலத்தில் கடலை ஒட்டி இல்லாத ஒரே மாவட்டமாகும். மலேசிய உள்ளாட்சி சட்டம் 1976 (சட்டம் 171) (திருத்தம் 1978)-இன் 3-ஆவது பிரிவின் கீழ் (3rd Section of Local Government Act 1976 (Act 171) (Amendment 1978); 1 சனவரி 1981-இல் உலு திராங்கானு மாவட்ட மன்றம் (Hulu Terengganu District Council) நிறுவப்பட்டது. இதற்கு முன் பண்டாரான் உலு திராங்கானு (Bandaran Ulu Terengganu) என்று அழைக்கப்பட்டது. 1982 ஆகத்து மாதம் 30-ஆம் தேதி, முன்னாள் திராங்கானு மந்திரி பெசார் வான் மொக்தார் அகமத் (Wan Mokhtar Ahmad) அவர்களால், புதிய மாவட்ட மன்றம் முறையாகத் தொடங்கப்பட்டது. உலு திராங்கானு மாவட்டத்தில் தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த பழங்குடியினருக்கு (Orang Asli) ஒரு கிராமம் உள்ளது. அதன் பெயர் கம்போங் சுங்கை பேருவா (Kampung Sungai Berua).[3] நிர்வாகப் பிரிவுகள்உலு திராங்கானு மாவட்டம் 10 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
திராங்கானு கல்வெட்டுஇந்த மாவட்டத்தில்தான் புகழ்பெற்ற திராங்கானு கல்வெட்டு (Terengganu Inscription Stone) கண்டுபிடிக்கப்பட்டது. 1899-ஆம் ஆண்டு கோலா பேராங்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு, தெர்சாட் ஆற்றின் அருகே, சையித் உசின் பின் குலாம் அல்-போகாரி (Sayid Husin bin Ghulam al-Bokhari) என்ற அரபு வணிகரால் திராங்கானு கல்வெட்டு தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.[4] இந்த திராங்கானு கல்வெட்டு மலாக்கா சுல்தானகத்தின் காலத்தைவிட முந்தையது. இது இப்போது திராங்கானு மாநில அருங்காட்சியகத்தில் (Terengganu State Museum) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [5] கென்யிர் ஏரிஉலு திராங்கானு மாவட்டம் காடுகள் நிறைந்த மாவட்டமாகும். மாவட்டத்தின் பெரும் பகுதியை காடுகள் ஆக்கிரமித்து உள்ளன. இந்த மாவட்டம் கென்யிர் ஏரிக்கு பிரபலமானது. 340 சின்ன தீவுகளைக் கொண்ட கென்யிர் ஏரி, தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய ஏரியாகக் கருதப் படுகிறது.[6] இந்த ஏரி மிகவும் ஆழமானது. சில இடங்களில் 800 மீட்டர் ஆழம் வரை இருக்கும். 1985-ஆம் ஆண்டில் கென்யிர் ஆற்றில், கென்யிர் அணை (Kenyir Dam) உருவாக்கப்பட்டது. சுல்தான் மகமூத் மின் நிலையத்தில் (Sultan Mahmud Power Station) மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அந்த அணை கட்டப்பட்டது. கென்யிர் அணை கட்டப் பட்டதால் ஒரு நீர்த்தேக்கம் உருவாகி அதுவே ஓர் ஏரியானது. இதன் பரப்பளவு 260,000 ஹெக்டேர்; அல்லது 260 ச.கி.மீ.[7] சுற்றுச்சூழல் சுற்றுலாஇந்த ஏரி தென்கிழக்கு ஆசியாவிலேயே மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரி ஒரு நீர்த் தேக்கமாக இருப்பதால் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நீர்மட்டம் அதிகமாக இருக்கும். செயற்கை ஏரியாக இருந்தாலும், இப்பகுதி சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அதன் கரையை சுற்றி பல ஓய்வு விடுதிகள் உள்ளன. மீன்பிடித்தல் பொதுவான பொழுதுபோக்கு. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, ஆகத்து மாதத்தில் நீர் மட்டம் குறைவாக இருப்பதால் மீன் பிடிக்க சிறந்த பருவமாகக் கருதப் படுகிறது. கென்யிர் ஏரி காட்சியகம்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia