கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன் (C. V. Wigneswaran, சி. வி. விக்னேஸ்வரன், பிறப்பு: அக்டோபர் 23, 1939) இலங்கைத் தமிழ் உச்சநீதிமன்ற இளைப்பாறிய நீதிபதியும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக 2013 முதல் 2018 வரை பதவியில் இருந்தார். இவர் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகவும், நீதித் துறை நடுவராகவும் பணியாற்றியவர்.
இவர் 2011 செப்டம்பரில் நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு 1,32,255 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று முதலாவது மாகாண சபையின்முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். 2018 அக்டோபர் 24 இல் முதலாவது வட மாகாணசபையின் காலம் முடியும் வரை இவர் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.[2] தனது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், விக்னேசுவரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை 2018 அக்டோபர் 24 இல் ஆரம்பித்தார்.[3] இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கொழும்புபுதுக்கடையில் பிறந்தவர் விக்னேஸ்வரன். இவரது பெற்றோர் கனகசபாபதி விசுவலிங்கம், ஆதிநாயகி யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்தவர்கள். தந்தை ஒரு அரச ஊழியர், இலங்கையின் பல மாவட்டங்களிலும் பணியாற்றியவர். விக்னேசுவரனுக்கு இரு சகோதரிகள். தனது ஆரம்பக் கல்வியை குருநாகல் கிறைஸ்ட்ச்சேர்ச் கல்லூரியிலும், பின்னர் அனுராதபுரம் திருக்குடும்ப மடப் பள்ளியிலும் பயின்றார்.[4] தனது 11வது அகவையில் விக்னேஸ்வரன் கொழும்பு றோயல் கல்லூரியில் இணைந்து உயர் கல்வி பெற்றார்.[5][6] லண்டன் பல்கலைக்கழக இளங்கலைப் பட்டம் பெற்று, கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.[4] இவரது மகன் இலங்கை அமைச்சரும் அரசியல்வாதியுமான வாசுதேவ நாணயக்காரவின் மகளைத் திருமணம் செய்தவர்.[7][8]
1979 மே 7 இல் இவர் நீதித்துறையில் இணைந்தார்.[6][11] ஆரம்பத்தில் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களில் நீதித்துறை நடுவராகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார்.[6][11] சனவரி 1987ல் கொழும்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்றார்.[6][11] 1988 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்று, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மற்றும் மேல் மாகாணங்களில் பணியாற்றினார்.[6] 1995 ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசரானார்.[6] உயர்நீதிமன்ற நீதியரசராக தமிழ்மொழியில் பதவிப்பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்ட விக்னேசுவரன், அந்த விழாவில் தமிழர்கள் இலங்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ஆற்றிய உரை முக்கியமானதாகும்.
2001 மார்ச்சு மாதத்தில் உச்சநீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.[12] 2004 அக்டோபரில் இளைப்பாறினார்.[13]
அரசியல் வாழ்க்கை
2015 நவம்பரில் விக்னேசுவரன் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதர் சமந்தா பவரைச் சந்தித்தார்.
2015 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோருடன் கொள்கையளவில் முரண்பட்டார்.[20][21] 2015 நாடாளுமன்றத் தேர்தல்களில் உண்மையான தமிழ் தேசியவாதிகளுக்கு வாக்களிக்குமாறு தமிழ் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.[22] வட மாகாணசபையில் விக்னேசுவரனின் நிருவாகத் திறமைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கேள்விக்குள்ளாக்கினர்.[23] 2015 திசம்பரில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி அதன் இணைத்தலைவரானார்.[24][25] தமிழ் சமூகக் குழுக்கள், சமயத் தலைவர்கள், கல்விமான்கள், சில சிறிய அரசியல் கட்சிகள் அடங்கிய இவ்வமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்த விதத்திலும் போட்டியாக இராது என உறுதியளிக்கப்பட்டது.[26][27] ஆனாலும், 2018 அக்டோபர் 24 இல் 1-வது வட மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்த அடுத்த நாள்,[2] விக்னேசுவரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார்.[3][28][29][30]