ஆப்கானித்தான் இராச்சியம்
ஆப்கானித்தான் இராச்சியம் (Kingdom of Afghanistan) 1926ஆம் ஆண்டில் தெற்கு, நடு ஆசியாவில் நிறுவப்பட்ட அரசியல்சட்ட முடியாட்சி ஆகும். இது முன்னதாக இருந்து வந்த ஆப்கானித்தான் அமீரகத்திற்கு மாற்றாக நிறுவப்பட்டது. ஏழு ஆண்டுகள் அமீராக இருந்த அமனுல்லாகான் இந்த இராச்சியத்தை நிறுவி இதன் முதல் அரசராக பதவி ஏற்றுக் கொண்டார். அமனுல்லாகானின் சீர்திருத்தங்களை எதிர்த்த பழமைவாதிகள் பலமுறை சமூகக் கலவரங்களில் ஈடுபட்டனர். 1927ஆம் ஆண்டு அமனுல்லா ஐரோப்பா சென்றிருந்தபோது புரட்சி வெடித்தது. தனது தமையன் இனயதுல்லாகான் சார்பாக பதவித் துறந்தார். ஆனால் மூன்றே நாட்களில் புரட்சித் தலைவர் அபிபுல்லா கலாக்கானி இவரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி மீண்டும் அமீரகத்தை நிலைநாட்டினார். 10 மாதங்களுக்குப் பிறகு, அமனுல்லாவின் படைத்துறை அமைச்சர் மொகமது நாதிர் ஷா தாம் பதுங்கியிருந்த இந்தியாவிலிருந்து பிரித்தானியப் படைகளின் துணையுடன் காபூலைக் கைப்பற்றினார். இதனால் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த அபிபுல்லா கலாக்கானியை கைது செய்து அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றினர். மொகமது நாதிர் மீண்டும் இராச்சியத்தை மீட்டு தம்மை இராச்சியத்தின் அரசராக அக்டோபர் 1929இல் அறிவித்தார். ஆனால் அமனுல்லாவின் சீர்திருத்தக் கொள்கைகளை ஏற்கவில்லை. இவருக்குப் பின்னர் 1933இல் இவரது மகன் மொகமது சாகிர் ஷா அரியணை ஏறினார். இவர் 39 ஆண்டுகள் ஆப்கானித்தானின் கடைசி அரசராக இருந்தார். 1973இல் இவரது ஒன்றுவிட்ட சகோதரர் மொகமது தாவுது கான் முடியாட்சியை முடிவுக்குக் கொணர்ந்தார்; ஆப்கானித்தான் குடியரசை நிறுவினார். சாகிர் ஷா தலைமையில் அமைந்த ஆப்கானிய அரசு வெளியுலகுடன், குறிப்பாக சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் உறவு கொள்ள விரும்பியது.[1] செப்டம்பர் 27, 1934இல் சாகிர் ஷாவின் அரசாட்சியில் உலக நாடுகள் சங்கத்தில் இணைந்தது. இரண்டாம் உலகப் போரின் போது, ஆப்கானித்தான் நடுநிலைமை வகித்தது. அப்போதைய பிரதமர் மொகமது தாவூது கான் தொழில்மயமாக்கவும், கல்வியை நவீனப்படுத்தவும் பெருமுயற்சிகள் மேற்கொண்டார்.[2] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia