இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012
இலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளில் கிழக்கு, சபரகமுவா, மற்றும் வடமத்திய ஆகிய மூன்று மாகாணசபைகளுக்கு 2012 செப்டம்பர் 8 ஆம் நாள் நடைபெற்றன. இலங்கை மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் படிநிலையில் நடைபெற்று வருகின்றன. இவ்வகையில் மூன்று மாகாண சபைகள் 2012 சூன் 27 இல் கலைக்கப்பட்டன[1]. இவற்றுக்கான வேட்பு மனுக்கள் 2012 சூலை 12 முதல் சூலை 19 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. இத்தேர்தலில் முக்கிய கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு, மக்கள் விடுதலை முன்னணி உட்படப் பல சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன. மூன்று மாகாணங்களிலும் 108 பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்காக நடத்தப்பட்ட இத்தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் சார்பில் மொத்தம் 3073 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் பிரச்சாரங்கள் 2012 ஆகத்து 5 உடன் நிறைவடைந்தன. மூன்று மாகாணங்களில் சபரகமுவா, மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. கிழக்கு மாகாணத்தில் மொத்தமுள்ள 37 உறுப்பினர்களில் இம்முன்னணி 14 உறுப்பினர்களுடன் முதலாவதாக வந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 உறுப்பினர்களுடன் இரண்டாவதாக வந்தது. கிழக்கு மாகாணத்தில் 7 இடங்களைக் கைப்பற்றிய முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆட்சியமைத்தது.[2] பின்புலம்ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29 இல் கையெசுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும்.[3] இதன் படி 1987 நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.[4][5] 1988 பெப்ரவரி 3 ஆம் நாள் ஒன்பது மாகாணசபைகள் உருவாகக்ப்பட்டன[6]. மாகாணசபைகளுக்கான முதலாவது தேர்தல்கள் 1988 ஏப்ரல் 28 ஆம் நாள் வடமத்திய, வடமேல், சபரகமுவா, மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு இடம்பெற்றன.[7] 1988 சூன் 2 இல் மத்திய, தெற்கு, மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அன்று இலங்கையின் ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) ஏழு மாகாணசபைகளினதும் ஆட்சியைக் கைப்பற்றியது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 திசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனாலும், இந்த பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்க இலங்கை அரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.[3] 1988 செப்டம்பர் 2 இல் அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா இரு மாகாணங்களையும் இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரு மாகாணசபையாக நிருவகிக்க உத்தரவு பிறப்பித்தார்.[6] இந்த இணைந்த மாகாணசபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை. 1990, மார்ச்சு 1 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தினார்.[8] இதனை அடுத்து அரசுத்தலைவர் பிரேமதாசா மாகானசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார். 1993 ஆம் ஆண்டில் வட-கிழக்குத் தவிர்ந்த ஏழு மாகாணங்களுக்கு 2வது தேர்தல்கள் இடம்பெற்றன. ஆறு மாகாணங்களில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. மேற்கு மாகாணசபையை முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான மக்கள் கூட்டணி கைப்பற்றியது. தெற்கு மாகாணத்தில் ஐதேகவின் சில உறுப்பினர்கள் கட்சி மாறியதை அடுத்து அங்கு 1994 ஆம் ஆண்டில் சிறப்புத் தேர்தல் நடத்தப்பட்டது. மக்கள் கூட்டணி வெற்றி பெற்றது. 3வது மாகாணசபைத் தேர்தல்கள் 1999 இல் வடகிழக்குத் தவிர்ந்த 7 மாகாணங்களுக்கு நடத்தப்பட்டன. ஆளும் மக்கள் கூட்டணி வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணசபைகளைக் கைப்பற்றியது. ஏனைய மாகாணங்களில் சிறிய கட்சிகளின் துணையுடன் ஆட்சியமைத்தது. 2002 ஆம் ஆண்டில் மத்திய மாகாண சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்கள் கூட்டணிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து ஐதேக அங்கு ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.[9]. 4வது மாகாணசபைத் தேர்தல்கள் ஏழு மாகாணங்களுக்கு 2004 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டன. இலங்கையின் ஆளும் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அனைத்து சபைகளையும் கைப்பற்றியது. வடக்கு மாகாணம் தவிர்ந்த எட்டு மாகாணங்களுக்கு 5வது மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அனைத்து சபைகளையும் கைப்பற்றியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தல்களில் பங்கேற்கவில்லை. கிழக்கு மாகாண சபைத் தேர்தல்![]() கிழக்கு மாகாணசபைக்கு முதலாவது தேர்தல் வடகிழக்கு இணைந்த மாகாணசபைக்காக 1988 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. பின்னர் வடகிழக்கு மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாண சபைக்குத் தனியாக முதலாவது தேர்தல் 2008 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) 2008 தேர்தலில் போட்டியிடவில்லை. 2012 தேர்தலில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு, மக்கள் விடுதலை முன்னணி உட்பட 13 அரசியல் கட்சிகளும் 21 சுயேட்சைக் குழுக்களும், அம்பாறை மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும் 18 சுயேட்சைக் குழுக்களும், திருகோணமல மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும் 16 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன. கிழக்கு மாகாண சபையின் மொத்த வேட்பாளர்கள் 1470. தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 37 (கூடுதல் இரண்டு உறுப்பினர்களுடன்) ஆகும். முடிவுகள்கிழக்கு மாகாணசபைக்கான 2012 செப்டம்பர் 8 ஆம் நாள் இடம்பெற்ற தேர்தலின் முடிவுகள்:[10]
வட மத்திய மாகாண சபைத் தேர்தல்![]() வடமத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட 9 அரசியல் கட்சிகளும் 5 சுயாதீனக் குழுக்களும் அனுராதபுரம் மாவட்டத்திலும், 9 அரசியல் கட்சிகளும் 5 சுயாதீனக் குழுக்களும் பொலன்னறுவை மாவட்டத்திலும் போட்டியிட்டன. வட மத்திய மாகாண சபையின் மொத்த வேட்பாளர்கள் 544. தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 31. முடிவுகள்வடமத்திய மாகாணசபைக்கான 2012 செப்டம்பர் 8 ஆம் நாள் இடம்பெற்ற தேர்தலின் முடிவுகள்:[11]
சபரகமுவா மாகாண சபைத் தேர்தல்![]() சபரகமுவா மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட 13 அரசியல் கட்சிகளும் 6 சுயாதீனக் குழுக்களும் இரத்தினபுரி மாவட்டத்திலும், 13அரசியல் கட்சிகளும் 13 சுயாதீனக் குழுக்களும் கேகாலை மாவட்டத்திலும் போட்டியிட்டன. சபரகமுவா மாகாண சபையின் மொத்த வேட்பாளர்கள் 1059. தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 42. முடிவுகள்சபரகமுவா மாகாணசபைக்கான 2012 செப்டம்பர் 8 ஆம் நாள் இடம்பெற்ற தேர்தலின் முடிவுகள்:[12]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia