ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)
அருளாளர் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (இலத்தீன்: Pius IX; 13 மே 1792 – 7 பெப்ரவரி 1878), இயற்பெயர் ஜியோவானி மரிய மாஸ்தாய்-ஃபெரெத்தி, என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 16 ஜூன் 1846 முதல் 1878இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். 32 ஆண்டுகள் திருத்தந்தையாக இருந்த இவரே அதிக காலம் இப்பதவியினை வகித்தவர் ஆவார். இவர் கூட்டிய முதல் வத்திக்கான் பொதுச்சங்கம் (1869-1870) திருத்தந்தையின் தவறா வரம் ஒரு விசுவாசக் கோட்பாடு என அறிக்கையிட்டது. தூய கன்னி மரியாவின் அமலோற்பவத்தை இவர் ஆதரித்தார். மரியாவுக்கு இடைவிடா சகாய மாதா என்னும் பட்டத்தையும் அளித்தார். இப்பட்டத்துக்கு காரணமான கிரீட் தீவு பைசாந்திய ஓவியத்தை உலக இரட்சகர் சபை குருக்களின் பாதுகாவலில் ஒப்படைத்தார். திருத்தந்தை நாடுகளின் அரசராக இருந்த இறுதி திருத்தந்தை இவர் ஆவார். 1870இல் அது இத்தாலிய தேசியவாத படையினரால் கைப்பற்றப்பட்டு இத்தாலிய பேரரசுடன் இணைக்கப்பட்டது. 1878இல் இவரின் இறப்புக்குப்பின்பு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 6 ஜூலை 1985 அன்று இவரை வணக்கத்திற்குரியவர் என அறிவித்தார். திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானோடு இவருக்கும் 3 செப்டம்பர் 2000இல் அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரின் விழா நாள் பெப்ரவரி 7 ஆகும்.[1] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia