களத்தூர் கண்ணம்மா
களத்தூர் கண்ணம்மா (Kalathur Kannamma) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி, டி. எஸ். பாலையா போன்ற நடிகர்களும் குழந்தை நட்சத்திரமாகக் கமல்ஹாசனும் நடித்திருந்தனர். தகாத சூழ்நிலைகளினால் பிரிந்து போகும் இளவயதுத் தம்பதிகளையும், அவர்களுக்குப் பிறக்கும் அப்பாவி மகனையும் அவன் அநாதை இல்லத்தில் வளர்வதைப் பற்றியும் இப்படம் தத்ரூபமாக எடுத்தியம்புகின்றது. இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டதோடு, வர்த்தக ரீதியாகவும் வெற்றி கண்டது. அத்துடன் மட்டுமன்றி 1960 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது 3 ஆம் பரிசு பெற்றார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஜனாதிபதியின் தங்கப்பதக்க விருது பெற்றார். இப்படம் தெலுங்கு, ஹிந்தி, சிங்கள ஆகிய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டது. நடிப்பு
தயாரிப்புகளத்தூர் கண்ணம்மா ஏவிஎம் நிறுவனம் சார்பில் ஏ. வி. மெய்யப்பன் தயாரித்தார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ஜாவர் சீதாராமன் எழுதினார்.[1] இப்படத்தை முதலில் இயக்கியவர் பிரகாஷ் ராவ், ஆனால் படத்தை முடித்தது பீம்சிங். திருப்தியாக வராத காட்சியை ஏ.வி.எம் செட்டியார் திரும்பவும் எடுக்கச் சொன்னபோது பிரகாஷ் ராவ், 'படமாக்கி முடித்த காட்சியை மீண்டும் படமாக்குவதற்கு எனக்கு மனம் ஒப்பவில்லை, பாதி படத்திலேயே இப்படி சொன்னால், மீதமுள்ள காட்சிகளில் என்ன சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, அதனால் இந்தப் படத்திலிருந்து நான் விலகிக்கொள்கிறேன், நீங்கள் வேறு யாரை வேண்டுமானாலும் வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்' என்று தன் எண்ணத்தை செட்டியாரிடம் தெரிவித்தார். செட்டியாரும் 'இனி அவர் எப்படி எடுத்தாலும் அது நமக்கு விருப்பமில்லாத மாதிரியே தெரியும், அவர் விருப்பப்படியே விட்டுவிடலாம்' என்று அவர் வேண்டு கோளை ஏற்றுக்கொண்டார். இருவரும் உட்கார்ந்து பேசி சுமூகமாக தீர்த்துக்கொண்டனர்.[2] இப்படத்தில் ஒளிப்பதிவு டி.முத்துசாமி, படத்தொகுப்பு எஸ்.சூர்யா, கலை எச்.சாந்தாராம், நடனம் கே.என்.தண்டாயுதபாணிபிள்ளை ஆகியோர் பணியாற்றினர்.[3] எஸ். பி. முத்துராமன் இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.[1] ஏ.வி.எம் குடும்ப மருத்துவர் சாரா இராமச்சந்திரன் மூலம் 4 வயது கமல்ஹாசன் ஏ.வி.மெய்யப்பனிடம் அவரது வீட்டில் அறிமுகமானார். கமல் பலவிதமாக வசனம் பேசி ஆடிப் பாடி நடித்துக் காட்டினார். அந்தப் பையனின் நடிப்பு பிடித்துப்போக, ஏற்கனவே சிறுவன் பாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்ட டெய்சி ராணி என்ற குழந்தைக்கு பதில் கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] பாடல்கள்இத்திரைப்படத்திற்கு ஆர். சுதர்சனம் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன், கொத்தமங்கலம் சுப்பு, கு. மா. பாலசுப்பிரமணியம், எம். கே. ஆத்மநாதன், டி. கே. சுந்தர வாத்தியார் ஆகியோர் எழுதியிருந்தனர்.[5]
வெளியீடுகளத்தூர் கண்ணம்மா ஆகஸ்ட் 12, 1960இல் வெளியாகி 100 நாட்கள் மேல் ஓடியது.[3] 1960 செப்டெம்பர் 11 அன்று ஆனந்த விகடன் இதழ் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் களத்தூர் கண்ணம்மா படத்தை வெகுவாக பாராட்டியுள்ளது.[6] மவூரி அம்மாயி எனும் பெயரில் தெலுங்கு மொழியில் இத்திரைப்படம் மொழி பெயர்க்கப்பட்டு 1960 அக்டோபர் 20 அன்று ஆந்திர மாநிலத்தில் வெளியானது.[7] மீண்டும் தெலுங்கில் மோக நோமு எனும் பெயரில் படமாக்கப்பட்டது.[8] இத்திரைப்படம் சுனில் தத், மீனாகுமாரி போன்றோரின் நடிப்பில் இயக்குநர் ஏ. பீம்சிங் இயக்க மைன் சுப் ரஹுங்கி (Main Chup Rahungi) எனும் பெயரில் இந்தி மொழியில் எடுக்கப்பட்டது.[9] இந்தி மொழியில் மீண்டும் இதே கதை யுடரடா மெனிகி (Udarata Menike) எனும் பெயரில் படமாக்கப்பட்டது.[10] சிங்கள மொழியிலும் கூட இது மங்கலிக்கா (Mangalika) எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது.[11] கமல்ஹாசன் முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஜனாதிபதி விருது (தேசிய விருது) அப்போதைய ஜனாதிபதியான இராதாகிருஷ்ணன் அவர்களிடமிருந்து பெற்றார். இப்படம் 1960 ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது 3 ஆம் பரிசு பெற்றது.[12] மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia