கிரிமியா தன்னாட்சிக் குடியரசு
கிரிமியா (Crimea, உக்ரைனிய மொழி: Крим, கிரிமியத் துருக்கி: Qırım) என்பது கருங்கடலில் அமைந்துள்ள, உக்ரைனை சேர்ந்த மூவலந்தீவு ஆகும். இதன் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் சிம்ஃபெரொபோல். கிரிமியா தன்னாட்சிக் குடியரசு என்கிற அரசியல் பிரிவாக உக்ரைன் இப்பகுதியை நிர்வாகிக்கிறது.[2][3][4] கிரிமியா பிராந்தியம் வரலாற்றில் அவ்வப்போது பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆளப்பட்டது. ஆரம்பக் காலத்தில் சிமேரியன்கள், கிரேக்கர்கள், ஸ்கைத்தியர்கள், கோத்துகள், பல்காரிகள், கசாருகள், பைசாந்திய கிரேக்கர்கள், கிப்ச்சாக்குகள், உதுமானியத் துருக்கியர், மங்கோலியர் ஆகியோர் கிரிமியாவை ஆரம்பக் காலத்தில் ஆண்டார்கள். 13வது நூற்றாண்டில், இது வெனிசியர்களாலும், ஜெனோவியர்களும், பின்னர் 15 முதல் 18ம் நூற்றான்டு வரை கிரிமிய கனாத்துகளும், உதுமானியப் பேரரசும், பின்னர் 18 முதல் 20ம் நூற்றாண்டு வரை உருசியப் பேரரசாலும், இரண்டாம் உலகப் போரின் போது செருமனியாலும், 20ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் சோவியத் ஒன்றியத்தினுள் உருசியாவாலும், பின்னர் உக்ரைனாலும் ஆளப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் பொழுது இப்பகுதியில் கிரிமியப் போர்த்தொடர் நிகழ்ந்தது. தற்போது இது உக்ரைன் நாட்டுக்குள் தன்னாட்சி அமைப்புடன் நாடாளுமன்றக் குடியரசாக,[2] உக்ரைனிய சட்டங்களுக்கமைய கிரிமிய அரசியலமைப்பு சட்டத்தால் ஆளப்படுகிறது. சிம்பெரோப்போல் இதன் தலைநகரமும், அரச நிருவாக மையமும் ஆகும். இது கிரிமியத் தீபகற்பத்தின் நடுவே அமைந்துள்ளது. கிரிமியாவின் பரப்பளவு 26,200 சதுரகிமீ. மக்கள்தொகை (2007 இல்) 1,973,185 ஆகும். கிரிமியத் தத்தார் மக்கள் மொத்த மக்கள்தொகையில் 12.1% (2001) ஆக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் இசுலாமியர்கள் ஆவர்.[5] இவர்கள் நடுக்காலப் பகுதியின் இறுதியில் இங்கு குடியேறினர். ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் இவர்கள் நடு ஆசியாவுக்குக் கட்டாயமாக நாடுகடத்தப்பட்டனர். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், இவர்கள் மீண்டும் இங்கு வந்து குடியேறினர்.[6] 2001 உக்ரைனிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி, 58% உருசியர்களும், 24% உக்ரைனியர்களும் இங்கு வாழ்கின்றனர்.[5] உக்ரைனிலேயே மிக அதிகமாக முசுலிம்கள் வாழும் பகுதி கிரிமியா ஆகும்.[7] 2014 மார்ச் 11 இல், கிரிமிய நாடாளுமன்றம் உக்ரைனில் இருந்து பிரிந்து செல்ல ஏகமனதாகத் தீர்மானித்தது.[8] 2014 மார்ச் 16 இல் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 97% மக்கள் உக்ரைனில் இருந்து விலகி உருசியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தனர்.[9] வரலாறுஆரம்ப வரலாறு![]() தொல்பழங்காலத்தில் கிரிமியாவின் பெயர் தாவ்ரிக்கா என்பதாகும். இப்பகுதியில் பல்வேறு இனத்தவர்கள் காலத்துக்குக் காலம் குடியேறினர். இம்மூவலந்தீவின் உட்பகுதியில் ஸ்கைத்தியர்களும், தெற்குக் கரை மலைப்பகுதியில் தாவ்ரசுகள், மற்றும் சிமேரியர்களும் குடியேறினர். கரையோரப் பகுதிகளில் கிரேக்கர்கள் இங்கு பல குடியிருப்புப் பகுதிகளை அமைத்துக் கொண்டனர். தாவ்ரிக்காவின் கிழக்குப் பகுதி கிமு 1ம் நூற்றாண்டு வாக்கில் உரோமைப் பேரரசுடன் சேர்க்கப்பட்டது. கிபி 1ம், 2ம், 3ம் நூற்றாண்டுகளில் தாவ்ரிக்கா உரோமானியப் படையினரால் ஆளப்பட்டது.[10] தாவ்ரிக்கா கிரிமியத் தத்தார் மொழி பேசும் கிரிமியத் தத்தார்களினால் கிரிமியா எனப் பெயர் மாற்றப்பட்டது. கிரிமியத் தத்தார் சொல் கிரீம் (குன்று) என்ற சொல்லில் இருந்து இப்பெயர் பெறப்பட்டது. பிற்காலத்தில் கிரிமியா ஸ்கைத்தியர், சார்மாத்தியர், கோத்துகள் (கிபி 250), ஹன்கள் (376), பல்காருகள் (4ம்–8ம் நூற்றாண்டு), கசாருகள் (8ம் நூற்றாண்டு), கீவிய ரூஸ் (10ம்—11ம் நூற்றாண்டு), பைசாந்தியப் பேரரசு (1016), கிப்ச்சாக்குகள் (கூமான்கள்) (1050), மங்கோலியர் (1237) ஆகியோரால் அவ்வப்போது ஆக்கிரம்க்கப்பட்டு ஆளப்பட்டு வந்துள்ளது. கிபி 13ம் நூற்றாண்டில், ஜெனோவா குடியரசு கிரிமியாவைக் கைப்பற்றியது. இவர்களின் போட்டியாளரான வெனிசுக் குடியரசு கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றி கிரிமியப் பொருளாதாரத்தையும், கருங் கடல் வணிகத்தையும் இரண்டு நூற்றாண்டுகளாகத் தம் வசம் வைத்திருந்தது. 14ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்குள் நுழைந்த கறுப்புச் சாவு கொள்ளை நோய் ஜெனோவா வணிகக் கப்பல்கள் ஊடாக கிரிமியாவில் இருந்து ஐரோப்பாவுக்குள் பரவியிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.[11] கிரிமியத் தத்தார்கள் என இன்று அழைக்கப்படும் பல தூர்க்கிய மக்கள் நடுக்காலப் பகுதியின் ஆரம்பத்தில் இம்மூவலந்தீவில் குடியேறத் தொடங்கினர். இக்காலப் பகுதியில் இவர்களின் எண்ணிக்கை இங்கு பெரும்பான்மையாகக் காணப்பட்டது. பின்னர் 1750-1944 காலப்பகுதியில் குறைவடைந்து, 1944-1991 காலப்பகுதியில் முற்றாக மறைந்தனர். 1991 ஆம் ஆண்டில் பனிப்போர் முடிவடைந்த பின்னர் இவர்கள் மீண்டும் இங்கு குடியேறத் தொடங்கினர். கிரிமியத் தத்தார்கள் 1441 ஆம் ஆண்டில் கிரிமியக் கான் என்ற அரசை செங்கிசுக் கானின் வம்சாவழியான ஹாக்கி கிரே என்பவனின் தலைமையில் உருவாக்கினார்கள். இவர்கள் நாட்டின் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், ஜெனோவாக்களின் கட்டுப்பாட்டில் இருந்த வணிகப் பகுதிகளை அவர்களால் மீட்க முடியாமல் இருந்தது. உதுமானியர் ஜெனோவாக்களின் பகுதிகளைக் கைப்பற்றிய பின்னர் கிரிமிய அரசனாக இருந்த மென்லி கிரேயை 1745 இல் கைது செய்து,[12] பின்னர் விடுவித்தார்கள். பதிலுக்கு, கிரிமியக் கானரசின் இறையாண்மை உதுமானியர்களிடம் கொடுக்கப்பட்டது. மென்லி கிரே தொடர்ந்து அரசனாக இருக்க அனுமதிக்கப்பட்டான்.[13][14] 1783 இல் கிரிமியக் கானரசு முழுவதும் உருசியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.[14] அடிமை வணிகம்18-ஆம் நூற்றாண்டு வரை, கிரிமியத் தத்தார்கள் உதுமானியப் பேரரசுடனும், மத்திய கிழக்கு நாடுகளுடனும் பெரும் அடிமை வணிகத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.[15] 1500-1700 காலப்பகுதியில் உருசியாவில் இருந்தும் உக்ரைனில் இருந்தும் சுமார் 2 மில்லியன் அடிமைகள் இவ்வாறு விற்கப்பட்டனர்.[16] தத்தார்கள் அடிக்கடி சிலாவிக் மக்கள் மீது தாக்குதல் தொடுத்து வந்தனர். 1769 இல் இடம்பெற்ற உருசிய-துருக்கியப் போரின் போது சிலாவிக்குகள் மீது தத்தார்கள் தாக்குதல் நடத்தில் 20,000 அடிமைகளைக் கைப்பற்றியிருந்தனர்.[17] அரசியல் மாற்றம்உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரிமியா தன்னாட்சி பகுதி 18ம் நூற்றாண்டு முதல் உருசியாவினதும், பின்னர் சோவியத் ஒன்றியத்தினதும் ஒரு பகுதியாகவே இருந்தது. 1954 பெப்ரவரி 19 ஆம் நாள் சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் இப்பகுதியை உக்ரைனுக்குப் பரிசாக கொடுத்தார்.[18] உக்ரைன் உருசியப் பேரரசில் இணைந்து 300 ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக இது வழங்கப்பட்டது.[19][20] 2014 இல் அரசியல் மாற்றம்தற்பொழுது கிரிமியா, உக்ரைன் நாட்டிலிருந்து விலகி உருசிய நாட்டுடன் இணைய அந்நாட்டு சட்டமன்றம் தீர்மானம் இயற்றியுள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும் ரஷ்யா நாட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் முளைத்துள்ளது.[21][22] தற்போது ரஷ்யாவின் துணையால் கிரிமியாவில் நிலவி வந்த ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது.[23] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia