நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி என்பது தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில்ல் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1957ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகம் இணைவு பெற்றுள்ளது.[1] இந்த கல்லூரி கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
வரலாறு
பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை வட்டங்களில் உயர்நிலைக் கல்வி முடித்து வருபவர்களுக்கு அடுத்தகட்ட கல்வித் தேவைகளை அளிக்க வேண்டும் எனும் நோக்கத்திற்காக, 1957ஆம் ஆண்டில் பொள்ளாச்சியில் எஸ். பி. நல்லமுத்துக் கவுண்டர் அவர்களைத் தலைவராகவும், அருட்செல்வர். நா. மகாலிங்கம் அவர்களைச் செயலராகவும் கொண்டு பொள்ளாச்சிக் கல்விக் கழகம் என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப் பெற்றது. இந்த அமைப்பின் மூலம் சூலை 12, 1957-ல் இக்கல்லூரி எஸ். பி. நல்லமுத்துக் கவுண்டர் அவர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் 160 மாணவர்களைக் கொண்டு 26 ஏக்கர் நிலப்பரப்பில் பல்கலைக்கழகப் புகுமுக (PUC) வகுப்புக்களுடன் செயல்படத் தொடங்கியது.