இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010
2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இலங்கையின் 14வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2010, ஏப்ரல் 8 இல் இடம்பெற்றது[1]. 2010 பெப்ரவரி 10ம் நாள் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச 13வது நாடாளுமன்றத்தைக் கலைத்தார். வேட்பு மனுக்கள் பெப்ரவரி 19 இலிருந்து பெப்ரவரி 26 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன[1]. 14,088,500 இலங்கையர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 30 ஆண்டுகள் நீடித்த ஈழப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தல் இதுவாகும். இத்தேர்தலில் முக்கிய கட்சிகள் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, முக்கிய எதிர்க்கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கை தமிழரசுக் கட்சி, மற்றும் சனநாயகத் தேசியக் கூட்டணி ஆகியவையாகும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி இத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று வெற்றியீட்டியது. நாடாளுமன்றத்துக்கான மொத்தம் 225 இடங்களில் அக்கட்சிக்கு 144 இடங்கள் கிடைத்தன. இது 2004 தேர்தலிலும் பார்க்க 39 இடங்கள் கூடுதல் ஆகும். முக்கிய எதிர்க் கட்சிக் கூட்டணி ஐக்கிய தேசிய முன்னணி 60 இடங்களைக் (22 இடங்கள் குறைவு) கைப்பற்றியது. தமிழர் கட்சி இலங்கை தமிழரசுக் கட்சி 14 இடங்களை எடுத்தது. இது சென்ற தேர்தலில் 22 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. முதற் தடவையாகப் போட்டியிட்ட சனநாயகத் தேசியக் கூட்டணி (டிஎன்ஏ) 7 இடங்களைக் கைப்பற்றியது[2][3]. 1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை பெற்ற பின்னர் நடந்த தேதல்களில் இம்முறையே மிகக்குறைந்தளவு பேர் பாவ்வளித்துள்ளார்கள்[4]. கும்புறுப்பிட்டி, மற்றும் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதிகளில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளை அடுத்து அத்தொகுதிகளில் ஏப்ரல் 20 இல் மீள் வாக்கெடுப்பு இடம்பெற்று இறுதி முடிவுகள் ஏப்ரல் 21 இலேயே அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன. பின்னணிகடைசியாக இலங்கை நாடாளுமன்றத்துக்காக 2004 ஏப்ரல் 2 இடம்பெற்றது. மொத்தம் 225 தொகுதிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (UPFA) 105 இடங்களைக் கைப்பற்றி அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சியானது. ஆட்சியமைப்பதற்குப் பெரும்பான்மையில்லாத நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரேயொரு உறுப்பினருடன் இணைந்து சிறுபான்மை அரசை நிறுவியது[5]. 2004, ஏப்ரல் 6 ஆம் நாள் அரசுத் தலைவர் சந்திரிக்கா குமாரதுங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தலைவர் மகிந்த ராஜபக்சவை நாட்டின் பிரதமராக அறிவித்தார்[6]. அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்கள் ஏப்ரல் 10 இல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்[7][8]. 2004 ஏப்ரல் 22 இல் புதிய நாடாளுமன்றம் கூடியது[9]. அன்றிலிருந்து எதிரணியில் இருந்து கட்சி தாவி ஆளும் கூட்டணியில் இணைந்து கொண்டோருடன் சேர்த்து ஆளும் கூட்டணியின் பலம் 129 இற்கு அதிகரித்தது. இவர்களில் பலருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது:[10].
போட்டியாளர்கள்14வது நாடாளுமன்றத்திற்கான வேட்பு மனுக்கள் 2010 பெப்ரவரி 19 முதல் 26 ஆம் நாள் வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருபத்து நான்கு அரசியல் கட்சிகளிலும் 312 சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் போட்டியிடுகின்றனர். 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூடாக 3,859 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3,691 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். முறையாகப் பூர்த்திசெய்யப்படாததால், கட்சிகள் தாக்கல் செய்த 46 வேட்பு மனுக்களும் 35 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. பொதுத் தேர்தலொன்றில் கூடுதலான வேட்பாளர்கள் களமிறங்குவது இதுவே முதற் தடவையாகும். இதில் கொழும்பு மாவட்டத்திலேயே அரசியல் கட்சிகள் மூலம் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 19 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ள இந்த மாவட்டத்தில் 22 அரசியல் கட்சிகளில் 484 பேரும் 16 சுயேச்சைக் குழுக்களில் 352 பேருமாக 836 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான சுயேச்சைக் குழுக்கள் களமிறங்கியுள்ளன. 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ள இந்த மாவட்டத்தில் 49 சுயேச்சைக் குழுக்களில் 490 பேரும் 17 அரசியல் கட்சிகளில் 170 பேருமாக 660 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அடுத்ததாக திருகோணமலை, மட்டக்களப்பு, மொனராகலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கூடுதலான அரசியல் கட்சிகள் களமிறங்குகின்றன. இந்த மாவட்டங்களில் தலா 17 கட்சிகள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கண்டி மாவட்டத்தில் 12 பேரைத் தெரிவுசெய்வதற்காக 14 அரசியல் கட்சிகளில் 210 பேரும் 17 சுயேச்சைக் குழுக்களில் 225 பேருமாக 435 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நுவரெலியா மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளில் 140 பேரும் 16 சுயேச்சைக் குழுக்களில் 160 பேருமாக 300 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9 பேர் தெரிவு செய்யப்படவுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளில் 168 பேரும் 8 சுயேச்சைக் குழுக்களில் 96 பேருமாக 264 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்[21]. முடிவுகள்மாவட்ட ரீதியாக
இறுதி முடிவுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia