சென்னைப் பல்கலைக்கழகம் (University of Madras) என்பது தமிழ்நாட்டுப்பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இஃது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857-இல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இப்பல்கலைக்கழகம், நடுவண் அரசின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது. மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இப்பொழுது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விட்டன.
தன்னாட்சிக் கல்லூரிகளை முதல் முறையாகத் தொடங்கியது சென்னை பல்கலைக்கழகம்.
வரலாறு
இந்தியாவில் 16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய மூன்று முக்கிய துறைமுகங்கள் கண்டறியப்பட்டன. இம்மூன்று நகரங்களிலும் நிர்வாகம், வர்த்தகம் ஆகியவற்றுக்காக நவீன அமைப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
11-11-1839 தேதியிட்ட 70000 பேர் சேர்ந்து எழுதி லார்ட் ஜான் எல்பின்ஸ்டன் (Lord John Elphinston) அவர்களிடம் அளித்த பொதுமனுக்குழு சென்னைப் பல்கலைக்கழகம் அமைக்கக் காரணமாக அமைந்தது. கல்வி பற்றிய விவாதங்களும் எழுந்தன. ஜனவரி 1840-இல் ஜார்ஜ் நார்டன் தலைமையில் பல்கலைக்கழக வாரியம் அமைக்கப்பட்டது. இதுவே பிரெசிடென்சி கல்லூரி உருவாகக் காரணமாக அமைந்து அது முதலில் உருவானது. 1857-இல் மெட்ராஸ் பல்கலைக்கழக மருத்துவப் பயிற்சி அளிக்க அங்கிகாரம் பெற்றது.
அதன் பிறகு 14 வருடம் கழித்து 1854-இல் சார்லஸ் உட் எழுதிய கல்விக்குறிப்பின் பயனாக ஒரு சீரான கல்விக் கொள்கை ஒன்றை அமைத்து 1857-இல் சட்டம் இயற்றிச் சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. 1923-இல் சென்னைப் பல்கலைக்கழக எல்லைகள் வடக்கே ஒரிஸ்ஸா, ஆந்திரா, ஹைதராபாத், மேற்கே மங்களூர், மைசூர், கேரளா, திருவனந்தபுரம் எனப் பரந்து விரிந்திருந்தது.[2]
சென்னைப் பல்கலைக்கழகம் மும்பை மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 1857-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2000-ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு NAAC மூலம் முதல் முறையாக அங்கீகாரம் மற்றும் "5 நட்சத்திர அந்தஸ்து" வழங்கப்பட்டது. தனது 150-ஆவது வருடத்தைக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் 2008-ஆம் ஆண்டு கொண்டாடியது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் உருவான மற்ற பல்கலைக்கழகங்கள்
2011-இல் பல்கலைக்கழக மானிய குழு சிறந்த திறன் கொண்ட ஒரு பல்கலைக்கழகமாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்தது. அதன் விளைவாக 25 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றது.[3]
பல்கலைக்கழக அமைப்பின் கட்டமைப்பு
பலகலைக்கழகத்தின் வேந்தராக தமிழக ஆளுநர் இருப்பார்.
செனட் (Senate)
தி சிண்டிகேட் (The Syndicate)
தி அகாடெமிக் கவுன்சில் (The Academic Council)
தி பாகல்ட்டீஸ் (The Faculties)
தி பினான்ஸ் கமிட்டி (The Finance Comittee)
தி போர்டு ஆப் சடடிஸ் (The board of Studies)
துறைகள்
வரலாற்றுத்துறை
சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையானது இந்திய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறை என்ற பெயரில் 1914-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. துறையின் தலைவராக எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின்னர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, வி. ஆர். ராமச்சந்திர தீட்சிதர், கே. கே. பிள்ளை என அடுத்தடுத்து துறைத் தலைவர்களாக பணியாற்றினர். ஆரம்பத்தில் பி.எச்டி., எம்.லிட். ஆகிய படிப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுவந்தன. 1976-ம் ஆண்டிலிருந்துதான் எம்.ஏ., எம்.பில். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2013 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட துணைவேந்தர் ரா. தாண்டவன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஜி. விஸ்வநாதன், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி. ஜானகி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி. ஜெகதீசன் ஆகியோர் வரலாற்றுத் துறையின் முன்னாள் மாணவர்கள்.[4]
சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலச்சினை விளக்கம்
1857-இல் உருவாக்கப்பட்ட இந்த இலச்சினை இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இரண்டு யானைகள்
இரு இதழ்கள் கொண்ட ஒரு தாமரை மலர்
புலி
குறிக்கோளுரை : கற்றைனைத்தூறும் அறிவும் ஆற்றலும்
ஆங்கில மொழியாக்கம்: Learning promotes (one's) natural (innate) talent [2]
நூலகம்
முதன் முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூலகம் கன்னிமாரா நூலகத்தில் 1907-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போதுள்ள நூலகம் 1936-ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இஃது இந்திய-பிரிட்ஷ் வகையில் அமைக்கப்பட்டது.
சுவாரசியமான மற்றும் முக்கிய குறிப்புகள்
தேசிக விநாயகம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார்.[5]
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது சென்னைப் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டிருந்தது.[6]
1915இல் இருந்து 1921 வரை, பிரித்தானிய பொருளாதார நிபுணர் கில்பர்ட் ஸ்லாட்டர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் திராவிட கொள்கைகளில் மிகுந்த அக்கறை கொண்டவராயிருந்திருக்கிறார்.[7][8]
இந்தப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் காதம்பி மீனாட்சி இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் க. அ. நீலகண்ட சாத்திரியிடம் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார்.[9]
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான மரு.முத்துலட்சுமி ரெட்டி இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் பயின்றவரே.[10]
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் ஆய்வுத் துறையில் டாக்டர் பட்டங்களுக்காக அனுப்பப்படும் ஆய்வுரைகளை ஏற்றுக் கொண்ட பிறகு அவற்றை வெளியிட முன்வராது சென்னைப் பல்கலைக் கழகம். பல்கலைக்கழகம் காவல் கழகமாக மாறி சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுரைகளை வெளிஉலகத்திற்கு வெளியிடாமல் பூட்டி வைத்துவிடும்.[11]
வளாகங்கள்
தொல்காப்பியர் (சேப்பாக்கம்) வளாகம்
பரிதிமாற் கலைஞர் (மெரினா) வளாகம்
மறைமலை (கிண்டி) வளாகம்
சேக்கிழார் (தரமணி) வளாகம்
மதுரவாயல் வளாகம்
பல்கலைக்கழகத்தின் கட்டடம்
சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் செனட் கட்டிடம்
சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் செனட் கட்டிடம் மிகவும் புகழ் வாய்ந்தாகும்.