காஷ்மீரி பண்டிதர்கள் (Kashmiri Pandits) எனும் காஷ்மீர பிராமணர்கள்,[2]இந்தியாவின்ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் சமவெளியில் வாழ்ந்த இந்துக்கள் ஆவர்.[3][4][5] காஷ்மீர் பிரிவினைவாதிகளால் தங்களின் உயிருக்கும் உடைமைகளுக்கு அச்சம் ஏற்பட்ட காரணத்தினால், காஷ்மீர் சமவெளியை விட்டு, ஜம்மு, தில்லி போன்ற நகரங்களில் 1985-ஆம் ஆண்டு முதல் அகதிகளாக வாழ்கின்றனர்.
வரலாறு
முகலாயர் ஆட்சியில் அக்பர்பொ.ஊ. 1587-இல் காஷ்மீர் சமவெளியை கைப்பற்றிய பொழுது, காஷ்மீர் பார்ப்பனர்களுக்குப் பண்டிதர் எனும் பட்டத்தை வழங்கியதுடன், வேளாண்மை நிலங்களையும்; அரச பதவிகளையும் வழங்கி கௌரவம் செய்தார்.[6]தில்லி சுல்தானகத்திற்குப் பின் வந்த முகலாயர் ஆட்சியில் பெரும்பான்மையான காஷ்மீர பண்டிதர் இசுலாமிய சமயத்திற்கு மாறினர். எஞ்சியவர்கள் காஷ்மீர சைவ சமயத்தை பின்பற்றி வருகிறார்கள்.[7]
இந்தியப் பிரிவினையின் போது உண்டான மதக் கலவரத்தின் போதும், 1950-இல் நிறைவேறிய நிலச்சீர்திருத்த சட்டத்திற்கு பிறகும், பெரும்பான்மையான வேளாண் நில உடமையாளர்களான காஷ்மீர பண்டிதர்களில் 80 விழுக்காட்டினர் தங்கள் உடமைகளை இழந்து காஷ்மீரை விட்டு குடும்பத்துடன் வெளியேறினர்.[8][9] 19 சனவரி 1990 அன்று இரவில் இசுலாமிய அடிப்படைவாதிகளின் வெறியாட்டத்தால்,[10] ஆயிரக்கணக்கான காஷ்மீர பண்டிதர்கள் தங்கள் குடும்பங்களுடன் காஷ்மீர் சமவெளியை விட்டு, ஜம்மு[11]சண்டிகர் மற்றும் தில்லியில் உள்ள முகாம்களில், சொந்த நாட்டில் அகதிகளாக குடிபெயர்ந்தனர்.[12] 1990-ஆம் ஆண்டில் மட்டும் காஷ்மீரிலிருந்து 1,40,000 காஷ்மீர பண்டிதர்களில் சுமார் 1,00,000 பேர் காஷ்மீரை விட்டு அகதிகளாக வெளியேறினார்கள்.[13] வேறு சில குறிப்புகளிலிருந்து 1,50,000 முதல் 3,50,000 பேர் வரை காஷ்மீரை விட்டு வெளியேறியதாக புள்ளி விவரங்கள் உள்ளது.[14][15][16]
பாதுகாப்பு சட்டங்கள் (PRC - JKMIP Acts)
காஷ்மீர பண்டிதர்கள் நிலையாக வாழ்வதற்கு சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்பட்டது.[17][18][19][20]
1997-இல் இயற்றப்பட்ட ஜம்மு காஷ்மீர் புலம்பெயர்ந்தோரின் அசையாச் சொத்துகள் பாதுகாப்புச் சட்டத்தின் படி, காஷ்மீரப் பண்டிதர்கள், காஷ்மீர் சமவெளியில் விட்டுச் சென்ற அசையாச் சொத்துகளை பிறர் விற்கவோ அல்லது உரிமை கொண்டாடவோ முடியாது. மேலும் இச்சட்டத்தை மீறி காஷ்மீர பண்டிதர்களின் நிலங்களை பயன்படுத்துவர்கள் அதற்கான ஈட்டுத்தொகையை, நில உரிமையாளர்களான காஷ்மீரப் பண்டிதர்களுக்கு செலுத்த வேண்டும்.[21]
சமூக - அரசியல் அமைப்புகள்
காஷ்மீரிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட காஷ்மீர பண்டிதர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தங்களுக்கென தனி தன்னாட்சி பகுதியை நிறுவித்தர பனூன் காஷ்மீர் இயக்கத்தை நடத்தி வருகிறார்கள்.[22] தங்களை காஷ்மீரில் மறு குடியமர்த்தவும், காஷ்மீரை விட்டு தங்களை விரட்டியடிக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான காஷ்மீரப் பண்டிதர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரிக்கக் கோரி போராட்டங்கள் மூலம் இந்திய அரசிடம் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.[23][24][25]