செமாங் அல்லது செமாங் மக்கள்; மானி மக்கள் (ஆங்கிலம்: Semang people; மலாய்: Orang Semang) என்பவர்கள் மலாய் தீபகற்பத்தின்நெகிரிட்டோ இனக்குழுவைச் சார்ந்த பழங்குடி மக்கள் ஆவார்கள். பொதுவாக இவர்கள் செமாங் என்றே மலேசியாவில் அழைக்கப் படுகிறார்கள்.
இவர்களில் பெரும்பாலோர் தீபகற்ப மலேசியாவின் வட எல்லைப் பகுதி மாநிலங்களான பேராக், பகாங், கிளாந்தான் மற்றும் கெடா மாநிலங்களில் வாழ்கின்றனர்.[5] செமாங் மக்கள் குழுவில் 6 துணை மக்கள் குழுக்கள் உள்ளன.
தென்கிழக்கு ஆசியாவின் வெவ்வேறு இனக்குழுக்களில் செமாங் மக்களும் ஒரு பிரிவினர் ஆகும். இவர்கள் கருமையான தோல் மற்றும் தடித்த உடல் அமைப்பைக் கொண்டவர்கள். அவற்றின் அடிப்படையில், இவர்களைச் சில வேளைகளில் நெகிரிட்டோ என்றும் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறார்கள்.
அந்தப் பிரிவுகளில் செமாங் மக்கள் என்பவர்கள் ஒரு பிரிவினராகும். இவர்கள் நெகிரிட்டோ இனக்குழுவின் கீழ் வருகிறார்கள். செமாங் மக்கள் 3-ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே மலாய் தீபகற்பத்தில் குடிபெயர்ந்ததாகப் பதிவுகள் உள்ளன.[8] இவர்கள் இனவியல் ரீதியாக நாடோடி வேட்டைக்காரர்கள் என்றும் அறியப்படுகிறார்கள்.[9]
செமாங் மக்களின் தனிமை வாழ்க்கை
பழங்குடி குழுக்களில் பல குழுக்கள் வேட்டையாடுதலையும்; காடுகளில் உணவு சேகரிப்பதையுமே அவர்களின் அன்றாட வழக்கமாகக் கொண்டுள்ளனர். உடல்சார் மானிடவியல் அடிப்படையில் அந்தக் குழுக்களுடன் செமாங் மக்களும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளனர். ஆனால், செமாங் மக்கள் சற்றே மாறுபட்டவர்கள். வரலாற்று ரீதியாக செமாங் மக்கள் உள்ளூர் மக்களுடன் வணிகம் அல்லது பண்டமாற்று வணிகம் செய்வதையே விரும்புகின்றனர்.
செமாங் மக்களில் சிலர் மட்டும், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, அடர்ந்த காடுகளில் தனிமை வாழ்க்கையில் வாழ்ந்துள்ளனர். மற்ற செமாங் மக்களில் பலர், அடிமைத்தனத்தின் கொடுமைகளுக்குள் உட்படுத்தப்பட்டனர்; அல்லது தென்கிழக்கு ஆசியாவின் குறுநில ஆட்சியாளர்களுக்குப் பாதுகாப்பு பணம் வழங்க வேண்டிய வன்முறைக்குள் தள்ளப்பட்டனர்.[10]
சக்காய் இழிவுச் சொல்
மலேசியாவில், வேட்டையாடுபவர்களைக் குறிக்க செமாங் (Orang Semang) எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் நெகிரிட்டோ எனும் சொல்லும் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த காலத்தில், தீபகற்ப மலேசியாவின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த செமாங் மக்கள் பங்கான் (Pangan) என்று அழைக்கப்பட்டனர். தாய்லாந்தில் சக்காய் என்று குறிப்பிடப்படுகிறது. இருப்பினும் இந்தச் சொல் மலேசியாவில் இழிவானதாகக் கருதப்படுகிறது.[11]
தீபகற்ப மலேசியாவில் காடுகளில் வேட்டையாடும் பழங்குடி மக்கள் ஓராங் அஸ்லி(Orang Asli) என்று கருதப்படுகிறார்கள். ஓராங் அஸ்லி மக்களில் மூன்று குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்களில் செமாங் மக்கள் குழுவும் (Semang / Negrito) ஒன்றாகும். மற்ற இரண்டு குழுக்கள் செனோய் மக்கள் (Senoi / Sakai); மற்றும் மலாய மூதாதையர்(Proto-Malay / Aboriginal Malay).
மலேசிய அரசாங்கம், ஒராங் அஸ்லி பழங்குடி மக்களைப் பரந்த மலேசியச் சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும் பொறுப்பில் தீவிரமாகக் கவனம் செலுத்துகிறது. அதற்கென ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை எனும் ஓர் அமைப்பை (ஆங்கிலம்: Department of Orang Asli Development (மலாய்: Jabatan Kemajuan Orang Asli,JAKOA) உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.
↑"Association of British Malaya". British Malaya, Volume 1. Newton. 1927. p. 259. கணினி நூலகம்499453712.
↑"Suku Kaum". Laman Web Rasmi Jabatan Kemajuan Orang Asli. Retrieved 2022-07-23.
↑Alan G. Fix (2015). Kirk Endicott (ed.). 'Do They Represent a "Relict Population" Surviving from the Initial Dispersal of Modern Humans from Africa?' from Malaysia's "Original People". NUS Press. pp. 101–122. ISBN978-99-716-9861-4.
↑Nik Hassan Shuhaimi Nik Abdul Rahman (1998). The Encyclopedia of Malaysia: Early History, Volume 4. Archipelago Press. ISBN981-3018-42-9.