புக்கித்தான் மக்கள்
புக்கித்தான் அல்லது புக்கித்தான் மக்கள் (மலாய்: Kaum Bukitan; ஆங்கிலம்: Bukitan People அல்லது Baketan People) என்பவர்கள் இந்தோனேசியாவின் கப்புவாசு உலு மாநிலத்தில் (Kapuas Hulu Regency) நங்கா பாலின் (Nanga Palin) எனும் உடபகுதியை பூர்வீகமாகக் கொண்ட பழங்குடிகள் மக்களாகும்.[3] இருப்பினும் தற்போது புக்கித்தான் மக்களை மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள பிந்துலு மாவட்டத்திலும் காணலாம்.[4] வரலாறுபுக்கித்தான் மக்களின் தோற்றம் மேற்கு கலிமந்தானில் உள்ள கப்புவாசு உலுமாநிலத்தில் உள்ள நங்கா பாலின் எனும் இடத்தில் இருந்து தொடங்குகிறது. அண்டைய பழங்குடி மக்களான இபான் மக்களுடன் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக, புக்கித்தான் மக்களில் சிலர் தங்களின் பூர்வீக இடத்தை விட்டு வெளியேற வேண்டிய ஓர் இக்கட்டான நிலை உண்டானது. இருப்பினும், புக்கித்தான் மக்களில் கணிசமான பெரும்பான்மை மக்கள், அவர்களின் மேற்கு கலிமந்தான் நங்கா பாலின் மூதாதையர் பிரதேசத்தில் இன்னும் காணப் படுகின்றனர். புலம்பெயர்வு நடந்த போது சிலர் அங்கேயே தங்கி விட்டனர். அவர்களின் வாரிசுகள் தான் மக்கள் தொகையில் இப்போது விரிவு கண்டு வருகின்றனர்.[5][6] புலம்பெயர்வுஇபான் மக்களுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக சிலர் சரவாக் மாநிலத்தில் உள்ள சரிபாசுக்கு (Saribas) ஓடிவிட்டனர். அந்த சரிபாசு இப்போது பெத்தோங் பிரிவில் உள்ளது. அங்கேயே குடியேறி தங்களின் புதிய சமூகத்தை உருவாக்கிக் கொண்டார்கள். பெத்தோங் பிரிவில் குடியேறிய சில ஆண்டுகளில், இபான் தலைவரான டின்டின் (Tindin) என்பவரின் மகனுக்கு புக்கித்தான் தலைவரான என்டிங்கி (Entinggi) என்பவரின் மகளைத் திருமணம் செய்து வைத்தார்கள்.[7] சரவாக்கிற்குள் குடியேற்றம்அதன் மூலம் ஒரு சமாதானம் செய்து கொள்ளப்பட்டது. அதன் பிறகு, இபான்களுடன் இணைந்து வாழ்ந்தனர். அவர்களில் சிலர் 19-ஆம் நூற்றாண்டில், லுபோக் அந்து (Lubok Antu) வழியாக சரவாக்கிற்குள் சென்று குடியேறினர்.[8] பல ஆண்டுகளுக்குப் பிறகு, சில தவறான புரிந்துணர்வுகளால், புக்கித்தான் மக்களுக்கும் இபான் மக்களுக்கும் சண்டை ஏற்பட்டது. அதில் புக்கித்தான் மக்கள் தோற்றனர். அதன் பிறகு அவர்கள் பல்வேறு இடங்களுக்குத் தப்பிச் சென்று வாழ்ந்தனர்.[9] இறுதியாக பிந்துலு பிரிவில் உள்ள பாத்தாங் தாதாவ் ஆற்றின் (Batang Tatau) கிளை நதியான மெரிட் ஆற்றுப் பகுதியில் (Merit River) குடியேறினர். இன்று வரை அந்த ஆற்றுப் பகுதியின் அருகாமையில் வாழ்ந்து வருகின்றனர்.[10] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia