சிலாங்கூர் சுல்தான் மூசா கியாதுதீன்
சிலாங்கூர் சுல்தான் மூசா கியாதுதீன் அல்லது சுல்தான் மூசா கியாதுதீன் (தெங்கு மூசா எடின்) (ஆங்கிலம்: Sultan Musa Ghiatuddin Riayat Shah of Selangor; மலாய்: Sultan Muossyar Ghiatuddin Riayat Shah II ibni Almarhum Sultan Alauddin Sulaiman Shah II; (சாவி: موسى غياث الدين رعايت شاه: சீனம்: 苏丹穆萨吉亚图丁里亚特沙) (9 திசம்பர் 1893 – 8 நவம்பர் 1955) என்பவர் 1942 முதல் 1945 வரையில் சிலாங்கூர் சுல்தான் பதவி வகித்தவர்; மற்றும் 7-ஆவது சிலாங்கூர் சுல்தான் ஆவார். மலேசிய வரலாற்றில் பிரித்தானிய குடியேற்றவியத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த தலைவர்களில் ஒருவராக சுல்தான் மூசா கியாதுதீன் நன்கு அறியப்படுகிறார். அதன் காரணமாக தன்னுடைய அரச பதவியை இழந்தார். பிரித்தானிய இராணுவ நிருவாகத்தால், கொக்கோசு (கீலிங்) தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டு; பத்தாண்டுகள் தனிமை வாழ்க்கை வாழ்ந்தார். சப்பானியர்கள் சிலாங்கூரை ஆக்கிரமிப்பு செய்த காலத்தில் (1942–1945) சிலாங்கூர் சுல்தானாக பதவியில் அமர்த்தப்பட்டார். அப்போது சப்பானியப் பேரரசர் இறோகித்தோவிடம் இருந்து ஆர்டர் ஆப் தி ரைசிங் சன் (Order of the Rising Sun) எனும் சப்பானிய பேரரசின் விருதையும் பெற்றார். தொடக்ககால வாழ்க்கைதெங்கு மூசா எடின், கோலா லங்காட் ஜுக்ராவில் பிறந்தார். சிலாங்கூர் சுல்தான் சுலைமான் (1863–1938) அவர்களுக்கும்; அவரின் அரச மனைவி தெங்கு அம்புவான் பாதுக்கா செரி மகாராம் அவர்களுக்கும் பிறந்த மூத்த மகனாவார். அவர் தனிப்பட்ட முறையில் கல்வி பயின்றார். 1903-ஆம் ஆண்டு தெங்கு மக்கோத்தாவாக நியமிக்கப்பட்டார்.[1] 1903-ஆம் ஆண்டில், தெங்கு மூசா எடின், சிலாங்கூர் மாநிலத்தின் தெங்கு மகோத்தாவாக (Tengku Mahkota) நியமிக்கப்பட்டார்; 1920-ஆம் ஆண்டு தன் தந்தையின் பெரியப்பா ராஜா லாவுட் பின் சுல்தான் முகமதுவுக்குப் (Raja Laut bin Sultan Muhammad) பிறகு சிலாங்கூரின் ராஜா மூடா (Raja Muda; முடி இளவரசர்) பதவியேற்றார்.[1] ஓர் அறிவார்ந்த இளைஞராக இருந்த அவர், பிரித்தானிய குடியேற்றவிய காலத்தில் நிறுவப்பட்ட மாநில மன்றத்தில் தன் தந்தைக்குப் பதிலாகவும் பொறுப்பு வகித்தார்.[2] அரியணை சர்ச்சைகள்சிலாங்கூர் மாநிலத்தின் அப்போதைய பிரித்தானிய பிரதிநிதி, தியோடர் சாமுவேல் ஆடம்ஸ் (Theodore Samuel Adams) (1885–1961; 1935–1937 பதவியில்) என்பவரின் தூண்டுதலின் பேரில், தெங்கு மூசா எடின் 1934-இல், "தவறான நடத்தை" எனும் குற்றச்சாட்டில் ராஜா மூடா பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.[3] தெங்கு மூசா எடின் சூதாட்டத்தில் நாட்டம் கொண்டவர்; ஒரு வீண்செலவாளி; மற்றும் ஊதாரி என்றும் பிரித்தானிய பிரதிநிதி ஆடம்ஸ் குற்றம் சாட்டினார். இருப்பினும், சிலாங்கூரில் உள்ள மலாய்க்காரர்கள் பலர், தெங்கு மூசா எடினின் பதவி நீக்கத்திற்கான உண்மையான காரணம், பிரித்தானிய பிரதிநிதி ஆடம்ஸின் உத்தரவுகளைப் பின்பற்ற தெங்கு மூசா எடின் மறுத்ததே என்று நம்பினர்.[3] உண்மையும் அதுவாக அறியப்படுகிறது. பட்டத்து இளவரசரான மூசா பிரித்தானிய கட்டளைகளை பின்பற்ற மறுத்து வந்தார். மேலும் அவர் தனக்கு என தனி ஒரு நிர்வாகப் பாணியையும் கொண்டு இருந்தார். தெங்கு மூசா எடின் பதவி நீக்கம்தெங்கு மூசா எடின் பதவி நீக்கம் தொடர்பாக சுல்தான் சுலைமான் வருத்தம் அடைந்தார். ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்றவிய நாடுகளுக்கான வெளியுறவுத்துறைச் செயலாளரிடம் கூட சுல்தான் சுலைமான் கோரிக்கை வைத்தார். மேலும் இலண்டனில் அவருடன் நேரடியாக இந்த பிரச்சினையைப் பற்றியும் விவாதித்தார்.[4] இருப்பினும் தெங்கு ஆலாம் சா, சிலாங்கூர் மாநிலத்தின் ராஜா மூடாவாக அறிவிக்கப்பட்டார். இந்த நியமனம் சூலை 20, 1936 அன்று நடைமுறைக்கு வந்தது.[3] சுல்தான் சுலைமான் இறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு, 1938 ஏப்ரல் 4-ஆம் தேதி, சுல்தான் இசாமுதீன் ஆலாம் சா, சிலாங்கூர் சுல்தானாக அறிவிக்கப்பட்டார். சனவரி 26, 1939 அன்று, கிள்ளான், இசுதானா மகோத்தா புரி எனும் கிள்ளான் அரச அரண்மனையில், தெங்கு ஆலாம் சாவிற்கு முடிசூட்டப்பட்டது. அப்போது தெங்கு கிளானா ஜெயா புத்ரா எனும் பதவியில் இருந்த தெங்கு மூசா எடின் முடிசூட்டு விழாவிற்குத் தலைமை தாங்கினார்.[3] சப்பானியர் ஆட்சிசனவரி 15, 1942 அன்று, சிலாங்கூரின் சப்பானிய இராணுவ ஆளுநரான கர்னல் புஜியாமா (Colonel Fujiyama), சுல்தான் இசாமுதீனை கோலாலம்பூரில் உள்ள அரச மாளிகைக்கு அழைத்தார். அங்கு மேஜர் ஜெனரல் மினாக்கி (Major-General Minaki) என்பவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிரித்தானியர்களுக்கு ஆதரவாக உரைகளை நிகழ்த்தியதாகச் சுல்தான் இசாமுதீன் ஒப்புக்கொண்டார். சிலாங்கூரின் பிரித்தானிய பிரதிநிதி தன்னை அவ்வாறு செய்ய வற்புறுத்தியதாகச் சுல்தான் இசாமுதீன் கூறினார். அதன் பின்னர், சுல்தான் இசாமுதீனின் அண்ணன் தெங்கு மூசா எடினிடம் தன்னுடைய சிலாங்கூர் சுல்தான் பொறுப்பை ஒப்படைக்கச் சொல்லி வற்புறுத்தப்பட்டார். அடுத்தக் கட்டமாக சுல்தான் இசாமுதீன், சிலாங்கூரின் சுல்தான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நவம்பர் 1943-இல், தெங்கு மூசா எடின் (Musa Ghiatuddin Riayat Shah of Selangor) சிலாங்கூர் சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.[4][5] பிரித்தானிய இராணுவ நிருவாகம்இதற்கிடையில், சுல்தான் இசாமுதீன்1943-ஆம் ஆண்டு முதல் சப்பானியர்களுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். அத்துடன் சப்பானியர்கள் சுல்தான் இசாமுதீனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் வழங்கிய உதவித் தொகையையும் சுல்தான் இசாமுதீன் வாங்க மறுத்துவிட்டார்.[6] இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 1945-ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் மலாயாவுக்குத் திரும்பினர். அந்தக் கட்டத்தில் மவுண்ட்பேட்டன் பிரபு அவர்களின் கீழ் இயங்கிய பிரித்தானிய இராணுவ நிருவாகத்தால் சுல்தான் மூசா கியாதுதீன் அரியணையில் இருந்து அகற்றப்பட்டார். சிலாங்கூர் சுல்தான் இசாமுதீன் சிலாங்கூர் சுல்தானாக மீண்டும் பதவியேற்றார்.[7] இறப்புபிரித்தானிய இராணுவ நிருவாகத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்ட சுல்தான் மூசா கியாதுதீன் கொக்கோசு (கீலிங்) தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அவர் பத்தாண்டுகள் இருந்தார். பின்னர், அவர் நோய்வாய்ப்பட்டு சிலாங்கூருக்குக் கொண்டுவரப்பட்டார். சில மாதங்களுக்கு பின்பு அவர் நவம்பர் 8, 1955 அன்று கோலாலம்பூரில் காலமானார்.[8] சுல்தான் மூசா அவருடைய தந்தையின் கல்லறைக்கு அருகில் கிள்ளான் அரச கல்லறையில் (Sultan Sulaiman Mosque) அடக்கம் செய்யப்பட்டார். அவரின் மனைவி, துங்கு சரிபா மஸ்துரா பிந்தி சையத் அகமது சகாபுதீன்; சுல்தான் மூசாவின் குறுகிய ஆட்சிக் காலத்தில் தெங்கு பரமேசுவரி (Tengku Permaisuri) அல்லது சிலாங்கூர் அரசியாகப் பொறுப்பு வகித்தார். துங்கு சரிபா மஸ்துரா 1958-இல் காலமானார். இந்தத் தம்பதியருக்கு பிள்ளைகள் இல்லை.[9] மலேசிய வரலாற்றில் பிரித்தானிய குடியேற்றவியத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த அரச மரபு ஆளுநர்களில் சிலாங்கூர் சுல்தான் மூசா கியாதுதீன் தனித்துவம் பெற்றவராக அறியப்படுகிறார்.[10] மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia