மலாயாவில் சப்பானிய படையெடுப்பு
![]() மலாயாவில் சப்பானிய படையெடுப்பு அல்லது மலாயா நடவடிக்கை(ஆங்கிலம்: Japanese Colonization in Malaya அல்லது Malayan Campaign; மலாய்: Penjajahan Jepun di Tanah Melayu; சீனம்: 馬来作戦; சப்பானியம்: マレー作戦) என்பது 8 டிசம்பர் 1941 முதல் 15 பிப்ரவரி 1942 வரை, இரண்டாம் உலகப் போரின் போது நேச நாட்டுப் படைகளுக்கும்; மற்றும் அச்சு நாட்டுப் படைகளுக்கும் இடையே மலாயாவில் நடந்த இராணுவ நடவடிக்கை; மற்றும் பிரித்தானிய பொதுநலவாய இராணுவப் பிரிவுகளுக்கும்; சப்பானிய இராணுவத்திற்கும் இடையிலான நிலப் போர்களைக் குறிப்பதாகும். தொடக்கத்தில் பிரித்தானிய பொதுநலவாய இராணுவப் படைகளுக்கும் அரச தாய்லாந்து இராணுவப் படைகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. மலாயாவில் நடந்த இந்த சப்பானிய படையெடுப்பில், தொடக்கத்தில் இருந்தே சப்பானியர்கள் வான் மற்றும் கடற்படை மேலாதிக்கத்தைக் கொண்டிருந்தனர். காலனிய மலாயாவின் தற்காப்பில் இறங்கிய பிரித்தானிய, இந்திய, ஆஸ்திரேலிய மற்றும் மலாயா படைகளுக்கு, மலாயா நடவடிக்கை என்பது இறுதியில் ஒரு முழுப் பேரழிவாக முடிந்தது. பொதுமலாயா நடவடிக்கையில் சப்பானியரகள் மிதிவண்டி தரைப்படையைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கச் செயல்பாடு. மிதிவண்டி தரைப்படையினர் அதிக உபகரணங்களை எடுத்துச் செல்ல முடிந்தது. மேலும் அவர்கள் அடர்ந்த காட்டு நிலப்பகுதிகளின் வழியாக வேகமாகவும் செல்ல முடிந்தது. சப்பானியப் படைகளிடம் இருந்து பின்வாங்கும் போது, பிரித்தானிய அரசப் பொறியாளர்கள், மலாயாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பாலங்களைத் தகர்த்தார்கள். இருப்பினும் அந்த நடவடிக்கை, சப்பானியர்களின் படையெடுப்பைச் சிறிதும் தாமதப்படுத்தவில்லை.[2] சப்பானியர்கள் சிங்கப்பூரைக் கைப்பற்றிய நேரத்தில், அவர்களின் தரப்பில் 14,768 பேர் உயிரிழந்தனர். ஆனால் நேச நாட்டுப் படைகளின் தரப்பில் சுமார் 7,500 - 8,000 பேர் கொல்லப்பட்டனர்; 11,000+ பேர் காயமடைந்தனர்; மற்றும் 120,000+ பேர் காணாமல் போனார்கள் அல்லது கைது செய்யப் பட்டார்கள். நேச நாட்டு கூட்டணியின் இழப்பு அல்லது உயிர்ப்பலிகள் மொத்தம் 130,246.[3] பின்னணி1940-ஆம் ஆண்டுகளில், சீனாவை அடிபணிய வைக்கும் முயற்சியில் ஜப்பானியர்கள் ஈடுபட்டிருந்தனர். தங்களின் இராணுவப் படைகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை, குறிப்பாக அமெரிக்காவில் இருந்து எண்ணெயைப் பெரிதும் நம்பி இருந்தனர்..[4] 1940-ஆம் ஆண்டு; 1941-ஆம் ஆண்டில், பிரான்சு நாட்டின் காலனிய குடியேற்றப் பகுதிகளை சப்பான் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் சப்பானுக்கு எண்ணெய் மற்றும் போர் தளவாடப் பொருட்களை வழங்குவதற்குத் தடை விதித்தன.[4] தடைகளின் முக்கிய நோக்கம்: சீனாவிற்கு உதவுவது; மற்றும் சீனாவில் சப்பானியர்களின் இராணுவ நடவடிக்கையை நிறுத்தச் செய்வதும் ஆகும். சீனாவிலிருந்து சப்பானியர்களை வெளியேற்ச் செய்வது என்பது அவர்களை அவமானப் படுத்துவது போலாகும் என்று கருதிய சப்பானியர்கள், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க, பிரித்தானிய டச்சு காலனியப் பகுதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்தனர்.[4] மலாயாவின் மீது படையெடுப்பு1941-இல், சப்பானியப் படைகள் ஆய்னான் தீவிலும் பிரெஞ்சு இந்தோசீனாவிலும் ஒன்று சேர்க்கப்பட்டன. இந்த துருப்புக் குவிப்பு நேச நாடுகளின் கவனித்தை ஈர்த்தது. ஏன் என்று நேச நாடுகள் கேட்டபோது, சீனாவில் அதன் செயல்பாடுகளுடன் தொடர்புடையது என சப்பானியர்கள் தட்டிக் கழித்தனர். எனினும், மறு ஆண்டே மலாயாவின் மீது சப்பானியர்கள் படையெடுத்தனர். அந்தக் கட்டத்தில், சப்பானியர்களிடம் 200 டாங்கிகள் இருந்தன. அவற்றுக்கு ஆதரவாக ஏறக்குறைய 800 போர் விமானங்களும் பக்கபலமாக இருந்தன. பிரித்தானிய நேச நாடுகளிடம் அப்போது 250 போர் விமானங்கள் மட்டுமே இருந்தன. அந்தப் போர் விமானங்களில், பாதிக்கும் மேற்பட்டவை போர் நடந்த சில நாட்களிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டன. மலாயா இராணுவத் தளபதியின் வியூகம்சப்பானியர்கள் மலாயாவை ஆக்கிரமித்தபோது, அந்த நடவடிக்கை, பசிபிக் மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதுமான சப்பானியத் தாக்குதலின் ஒரு பகுதியாக மட்டும் இருந்தது. அதன் பின்னர் சப்பானியர்களின் தாக்குதல்கள், பேர்ள் துறைமுகத் தாக்குதல் மற்றும் பசிபிக், பிலிப்பீன்சு, ஆங்காங், பர்மா, சிங்கப்பூர், போர்னியோ மற்றும் தாய்லாந்தில் உள்ள தீவுகள் வரை பரவியது.[5][6] பிரித்தானிய அரசு அதன் தூர கிழக்கு காலனிய நாடுகளின் இராணுவக் கண்காணிப்பில் அதிகமாக கவனம் செலுத்தவில்லை. நிதி பற்றாக்குறை ஒரு காரணமாக இருந்தாலும், அந்த நாடுகளை குறைவாக மதிப்பீடு செய்ததே முக்கியக் காரணமாகும். 1937-இல், பிரித்தானிய மலாயாவின் இராணுவத் தளபதியாக இருந்தவர் மேஜர்-ஜெனரல் வில்லியம் டோபி (1935-39). இவர் மலாயாவின் பாதுகாப்பு பற்றி ஏற்கனவே சுட்டிக்காட்டி இருக்கிறார். பிரித்தானிய அரசாங்கத்தின் புறக்கணிப்புஅக்டோபர் முதல் மார்ச் வரையிலான மழைக்காலத்தில், மலாயாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் எதிரிகள் தரையிறங்க வாய்ப்புகள் உள்ளன என்றும்; சயாமில் (தாய்லாந்து) தளங்கள் அமைக்கப்படலாம் என்றும் அவர் கருத்துகள் தெரிவித்தார். சயாமில் சொங்கலா; பட்டாணி நகரம்; மலாயாவில் கோத்தா பாரு நகரங்களில் எதிரிகள் தரையிறங்கலாம் என்று அவர் கணித்தார். பெரிய அளவிலான இராணுவப் படைகளை உடனடியாக அங்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். அவருடைய கணிப்புகள் மிகச் சரியாக அமைந்தன. ஆனாலும், அவரின் பரிந்துரைகள் பிரித்தானிய அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டன. சிங்கப்பூர் கடற்படைத் தளத்தில் ஒரு வலுவான கடற்படையை நிறுத்த வேண்டும் என்பதே பிரித்தானிய அரசாங்கத்தின் முதன்மையான திட்டங்கள் ஆகும். அந்தக் காலக்க்கட்டத்தில், பிரித்தானியப் பேரரசு சிங்கப்பூரை முழுமையாக நம்பியிருந்தது. பிரித்தானிய அரசாங்கத்தின் தூர கிழக்கு உடைமைகளைப் பாதுகாப்பதும்; மற்றும் ஆஸ்திரேலியாவிற்குச் செல்லும் கடல் பாதையைப் பாதுகாப்பதும்; அதன் முதன்மை நோக்கமாக இருந்தது. சிங்கப்பூரில். ஒரு வலுவான கடற்படை இருந்தால், அதுவே எதிரிகளுக்கு ஒரு தடுப்பாக அமையும் என்றும் கருதப்பட்டது.[7] மலாயா தீபகற்பத்திற்கு முழுமையான பாதுகாப்பு1940-இல், மலாயாவின் அப்போதைய பிரித்தானிய இராணுவத் தளபதி லியோனல் பாண்ட் சப்பானிய (எதிரி) படையெடுப்பைப் பற்றி தம் கருத்தையும் வெளியிட்டார். சிங்கப்பூருக்கு தரமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றால் மலாயா தீபகற்பத்திற்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றார். அப்படியே சப்பானியர்கள் படையெடுத்தால் அதைத் தடுக்க சிங்கப்பூர் கடற்படைத் தளம் மட்டும் போதுமானதாக இருக்காது என்றார்.[8] மலாயாவில் போர் விமானப் படையின் பலம் 300-500 விமானங்களாக இருக்க வேன்டும் என்று பிரித்தானிய இராணுவத் தளபதிகள் முடிவு செய்தனர். ஆனால், அப்போது மத்திய கிழக்கில் நடந்து வந்த போருக்கு, பிரித்தானியப் பேரரசு அதிகப்படியான முன்னுரிமைகளை வழங்கியதால் மலாயா நாட்டுப் பிரச்சினை என்பது ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதப்படவில்லை.[9] சப்பானிய ஆக்கிரமிப்பு1941 டிசம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு மலாயா, கிளாந்தான், பாத்தாங் பாக் அமாட் கடற்கரையில் (Pantai Padang Pak Amat) சப்பானியர்கள் கரை இறங்கினர். பிரித்தானிய இந்திய இராணுவத்துக்கும் (British Indian Army), சப்பானிய இராணுவத்துக்கும் இடையே பெரும் போர் மூண்டது.[10] பேர்ள் துறைமுகத் தாக்குதலுக்கு (Attack on Pearl Harbor) முன்னர் ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் இந்த கோத்தா பாரு மோதல் நடந்தது. இந்த கோத்தா பாரு மோதல் தான், பசிபிக் போரின் தொடக்கத்தையும்; மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பின் தொடக்கத்தையும் குறிக்கின்றது.[11] 1942 சனவரி 18-ஆம் தேதி, ஒட்டுமொத்தமாக பிரித்தானிய பொதுநலவாயப் படைகளுக்கு பெரும் இழப்புகள். ஜப்பானியப் படைக்கும் பெருத்த சேதங்கள். பிரித்தானியா பொதுநலவாயப் படைகள் மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் வழியாக சிங்கப்பூருக்குள் தஞ்சம் அடைந்தன. 1942 சனவரி 31-ஆம் தேதி, முழு மலாயாவும் ஜப்பானியர்களின் கைகளில் விழுந்தது.[12] மேலும் காண்க
மேற்கோள்கள்
நூல் பட்டியல்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia