பழவந்தாங்கல்
பழவந்தாங்கல் (ஆங்கிலம்: Palhavanthangal) இந்தியாவின் சென்னையின் தென் சுற்றுப்பகுதிகளில் ஒன்றாகும். சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு மிக அண்மையில் உள்ள சுற்றுப் பகுதிகளில் இதுவும் ஒன்று. இங்கு கடற்கரை-தாம்பரம் புறநகர் இருப்பு வழியில் உள்ள பழவந்தாங்கல் தொடர்வண்டி நிலையம் உள்ளது. இந்தத் தொடர்வண்டி நிலையம், நிலையத்தை அடுத்துள்ள பழவந்தாங்கல் குடியிருப்புக்களுக்கு மட்டுமல்லாது நங்கநல்லூர் பகுதிக்கும் சேவை அளிக்கிறது. 1970களில் புதியதாக கட்டப்பட்ட இந்த தொடர்வண்டி நிலையம் புனித தோமையார் மலை தொடர்வண்டி நிலையத்திற்கும் மீனம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்திற்கும் இடையில் உள்ளது. பழவந்தாங்கல் சுரங்கப்பாதை முதன்மை தெற்கத்திய பெருஞ்சாலையையும் நங்கநல்லூரையும் இணைக்கிறது. நங்கநல்லூரின் பல்வேறு கோவில்களுக்குச் செல்ல பழவந்தாங்கல் தொடர்வண்டி நிலையமும் பழவந்தாங்கல் சுரங்கப்பாதையும் அணுக்கம் தருகின்றன. இது பல்லவன் தாங்கல் என்பதாக இருந்து தற்போது ஆங்கிலத் தாக்கத்தால் பலவந்தாங்கல் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியையும் சுற்று வட்டாரங்களையும் பல்லவர்களே ஆண்டு வந்துள்ளனர்; பல்லவ மன்னர்களால் இங்கு ஓர் குளம் வெட்டப்பட்டது. குளத்தை அடுத்தப் பகுதியே தாங்கல் எனப்பட்டது. பல்லவர்கள் கட்டிய குளத்தை அடுத்துள்ள பகுதியே பல்லவன் தாங்கல் எனப்பட்டது. இங்கு ஏர் இந்தியா நிறுவன குடியிருப்புகள், கேந்திரிய வித்தியாலயா பள்ளி, ஐந்து நட்சத்திர டிரைடென்ட் தங்குவிடுதி ஆகியன அமைந்துள்ளன. |
Portal di Ensiklopedia Dunia