இராட்டிரகூடர்
இராட்டிரகூடர் (கன்னடம்: ರಾಷ್ಟ್ರಕೂಟ) பொ.ஊ. 6 முதல் 10ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட அரச மரபினர் ஆவர். 7ஆம் நூற்றாண்டில் கிடைத்த நிலக் கொடை குறித்த செப்பேடுதான் அவர்களின் ஆட்சியில் நமக்கு கிடைத்த முதல் ஆவணமாகும். இது மத்தியப்பிரதேசத்தின் மால்வா பகுதியில் உள்ள மான்பூர் என்னும் இடத்தில் கிடைத்தது. அச்சல்பூர் (தற்கால மராட்டியத்தின் எலிச்சப்பூர்) கனோஞ் அரசர் பற்றியும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இராஷ்டிரகூடர்கள் எங்கிருந்து வந்தார்கள் அவர்கள் மொழி என்ன என்று பல சர்ச்சைகள் உள்ளது. எலிச்சப்பூர் அரசு பாதமியை தலைநகராகக் கொண்டு ஆண்ட சாளுக்கியர்களின் பாதுகாப்பில் இருந்த ஒன்றாகும். அப்போது எலிச்சிப்பூரை ஆண்டது தந்திதுர்கா ஆவார். அவர் சாளுக்கியன் இரண்டாம் கீர்த்திவர்மனை முறியடித்து தற்கால கர்நாடகவிலுள்ள குல்பர்கா பகுதியில் பேரரசை நிறுவினார். அவரின் மரபில் வந்தவர்கள் மன்யக்கேடா இராஷ்டிரகூடர்கள் எனப்பட்டனர். தென் இந்தியாவில் சக்திமிக்க அரசாக பொ.ஊ. 753இல் உருவாகினர். அதே சமயத்தில் வங்காளத்தின் பாலப் பேரரசும் மால்வாவின் கூர்ஜர-பிரதிகாரப் பேரரசும் கிழக்கு வடமேற்கில் பெரும் சக்தி படைத்தவர்களாக உருவாயினர். அரேபியர்கள் 851 காலத்தில் இராஷ்டிரகூடர்கள் உலகின் நான்கு முதன்மையான பேரரசுகளில ஒன்று என்று சில்சிலாடுட்டவரிக் (Silsilatuttavarikh) என்ற நூலில் குறித்துள்ளனர்.[1] பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை கங்கை சமவெளியை கைப்பற்ற இராஷ்டிரகூடர்கள், வங்காளத்தின் பாலர்கள், பிரதிதாரரர்கள் இடையே போர் நடைபெற்றது. ஒவ்வொரு பேரரசும் கங்கை சமவெளியிலுள்ள கனோஞ்ஞை சில காலம் ஆண்டார்கள். இராஷ்டிரகூடர்கள் பெரும் ஆற்றலுடன் விளங்கிய காலத்தில் வடக்கில் யமுனை ஆற்றுக்கும் கங்கை ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியும் தெற்கில் கன்னியாகுமரியும் அவர்கள் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. அக்காலப்பகுதியில் கட்டகலை சிறப்பான இடத்தை பிடித்ததுடன் சிறந்த இலக்கியங்களும் படைக்கப்பட்டன. இம்மரபு அரசர்கள் தொடக்கத்தில் இந்து சமயத்தை பின்பற்றினார்கள். பின்னால் வந்த அரசர்கள் ஜைன மதத்தின் மீது பற்றுகொண்டிருந்தார்கள். இவர்களின் ஆட்சியில் ஜைன மத கணித நிபுணர்களும் வல்லுனர்களும் கன்னட மொழிக்கும் சமசுகிருத மொழிக்கும் பெரும் பங்கு ஆற்றினார்கள். இப்பேரரசின் புகழ்பெற்ற மன்னன் முதலாம் அமோகவர்சா இயற்றிய கவிராஜமார்கம் கன்னட இலக்கியத்தின் சிறப்பான படைப்பாகும். இவர்கள் ஆட்சியில் திராவிட கட்டகலை பாணியில் சிறந்த கட்டடங்கள் கட்டப்பட்டன. எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில், மகாராட்டிரத்திலுள்ள எலிபண்டா குகைகள், கருநாடகத்தின் பட்டடக்கலில் உள்ள காசிவிசுவநாதன் கோவில், ஜைன நாராயணன் கோவில் ஆகியவை இவர்களின் கட்டகலைக்கு காட்டாக உள்ளன. இவை அனைத்தும் உலகப் பாரம்பரியக் களத்தின் பாதுகாப்பில் உள்ள இடங்களாகும். வரலாறு![]() ![]() ![]() இராஷ்டிரகூடர்களின் தோற்றம் குறித்து பெரும் சர்ச்சை நிலவுகிறது. இராஷ்டிரகூடர்களின் மூதாதையர்கள் பொ.ஊ.மு. இரண்டாம் நூற்றாண்டு சமயத்தில் பேரரசர் அசோகர் ஆண்ட காலப்பகுதியில்[2] வட இந்தியாவிலும் நடு இந்தியாவிலும் பல இராஷ்டிரகூடர் மரபுகள் சிறிய அரசுக்ளை ஆண்டார்கள். தக்காணத்திலும் 6ஆம் நூற்றாண்டு காலம் தொட்டு 8ஆம் நூற்றாண்டு வரை சிறிய அரசுகளை ஆண்டார்கள். இவர்களுக்கு இடையேயான தொடர்புகள் குறித்தும் 8-10 நூற்றாண்டுகளில் மன்யக்கேடாவை தலைநகராகக் கொண்டு ஆண்ட புகழ்பெற்ற இராஷ்டிரகூடர்கள் இவர்களிடத்தில் கொண்ட தொடர்புகள் குறித்தும் வரலாற்று அறிஞர்களால் விவாதிக்கப்படுகிறது.[3][4][5] இவர்களைப்பற்றி இடைக்கால இந்தியாவில் பாளி மொழியில் எழுதப்பட்ட பழமையான இலக்கியங்கள் கிடைத்துள்ளன.[6] கன்னட சமசுகிருத இலக்கியத்திலும் இராஷ்டிரகூடர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அரேபிய வணிகர்களின் குறிப்புகளிலும் இவர்களைப்பற்றிய செய்தி காணக்கிடைக்கிறது.[7] இவர்கள் மரபு சந்திர குடியைச் சார்ந்ததா என்றும் சூரியக் குடியைச் சார்ந்ததா என்றும் அறியும் கோட்பாடு பற்றி இராஷ்டிரகூடர்களின் முத்திரைகள், நாணயங்கள், இராஷ்டிர என்ற குடி பெயர் போன்ற பலவற்றின் மூலம் கண்டறிய முயல்கிறார்கள்.[5][8] சந்திர மரபு என்றால் சந்திர குடி என்றும் சூரிய மரபு என்றால் சூரிய குடி என்றும் கொள்ளலாம். மூத்த குடி இராஷ்டிரகூடர்கள் எந்த இனக்குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அறிஞர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இவர்கள் வடமேற்கு இந்திய இனக்குழுக்களாகவோ [9] கன்னடியர்களாகவோ, ,[10][11] ரெட்டி ,[12] மராத்தியர்களாகவோ [13][14] அல்லது பஞ்சாப் பகுதியின் பழங்குடியினராகவோ [15] இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த இராஷ்டிரகூடர்கள் கன்னடத்தையும் சமசுகிருதத்தையும் பெரிதும் போற்றினார்கள் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இராஷ்டிரகூடர்களின் கல்வெட்டுகளும் செப்பு பட்டையங்களும் இவ்விரு மொழியில் பொறிக்கப்பட்டன. எனினும் வரலாற்று ஆய்வாளர்கள் செல்டன் போலக்கும் சான் கூபனும் பெரும்பாலனவை கன்னடத்திலேயே இருக்கின்றன என்கின்றனர்.[16][17][18][19][20] இராஷ்டிரகூடர்கள் இவ்விரு மொழிகளிலும் இலக்கியங்களை ஆதரித்தனர். கன்னடத்தின் பழமையான இலக்கியங்கள் இவ்வரசர்களின் அரசவை புலவர்களாலும் அரசமரபை சேர்ந்தவர்களாலும் எழுதப்பட்டன.[21][22][23][24] இதனால் இந்த இராஷ்டிரகூடர்கள் கன்னடர்கள் என்று அறியப்படுகிறது.[5][25][26][27][28] அவர்கள் தக்காணத்தின் வடக்கு பகுதி மொழிகளிலும் பேசும் திறமை பெற்றிருந்தனர்.[29] இராஷ்டிரகூட பேரரசின் பகுதிகள் தற்கால கருநாடகம் மகாராட்டிரம் ஆகியவற்றின் பெரும் பகுதிகளையும் ஆந்திரத்தின் சில பகுதிகளையும் கொண்டிருந்தது, இவற்றை இராஷ்டிரகூடர்கள் இரு நூற்றாண்டுகளுக்கு மேல் ஆண்டனர். 753இல் கிடைத்த சமன்கத்து செப்பு பட்டையம் எலிச்சப்பூரை (பேரார் மாகாணம்) ஆண்ட சிற்றரசன் தந்திதுர்க்கா என்பவன் இரண்டாம் கீர்த்திவர்மனின் பாதமி (வாதாபி) சாளுக்கிய படையை தோற்கடித்து சாளுக்கியர்களின் வடபகுதியை கைப்பற்றினான் என்கிறது.[30][31][32] பின்பு அவன் தன் மாமனாரான பல்லவ அரசன் நந்திவர்மனுக்கு சாளுக்கியர்களிடம் இருந்து காஞ்சியை மீட்க உதவினான். இவன் மால்வாவின் குர்சாரசுகளை தோற்கடித்ததோடு அல்லாமல் கலிங்கர்கள், கோசலர்கள், சிறீசைலம் பகுதி அரசர்களையும் வெற்றிகண்டான் [33][34] தந்திதுர்கா பின் ஆட்சிக்கு வந்த அவரின் மாமா முதலாம் கிருஷ்ணன் தற்போதைய கருநாடகத்தின் பெரும் பகுதியையும் கொங்கண் பகுதியையும் இராஷ்டிரகூடர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.[35][36] 780இல் ஆட்சிக்கு வந்த துருவ தரவர்சாவின் ஆட்சிகாலத்தில் இப்பேரரசு காவிரியிலிருந்து நடு இந்தியா வரை பரவியிருந்தது.[35][37][38][39] இவர் கங்கை சமவெளியின் அதிகார மையமான கனோஞ்சை நோக்கி படையெடுத்து வங்கத்தின் பாலர்களையும் பிரதிதாரா பேரரசையும் தோற்கடித்து பெரும் புகழையும் செல்வத்தையும் அடைந்தார். ஆனால் அங்கு பெரும் நிலப்பரப்பை அடையமுடியவில்லை. இவர் கீழைச் சாளுக்கியர்களையும் மேலை கங்கர்களையும் தன் ஆளுமைக்கு கீழ் கொண்டுவந்தார்.[35][40] துருவ தரவர்சாவின் மூன்றாவது மகன் மூன்றாம் கோவிந்தனின் ஆட்சிக்காலத்தில் இப்பேரரசு பெரும் வெற்றிகளைக் குவித்தது.[41] அக்கால இராஷ்டிரகூடர்களின் தலைநகரம் எது என்ற குழப்பம் உள்ளது.[42][43][44] இவரின் ஆட்சியில் கங்கை சமவெளியை கைப்பற்ற வங்கத்தின் பாலர்களுக்கும் பிரதிதாரர்ருகளுக்கும் இராஷ்டிரகூடர்களுக்கும் பெரும் சண்டை நடைபெற்றது. இதில் மூன்றாம் கோவிந்தன் பிரதிதாரர்களின் அரசன் இரண்டாம் நாகபட்டானையும் வங்க பாலர் அரசன் தர்மபாலாவையும் வெற்றதை [35] சஞ்சன் கல்வெட்டுகள் மூன்றாம் கோவிந்தன் குதிரைகள் இமயத்தின் குளிர்ந்த நீரோடைகளை நீர் அருந்தியதாகவும் இவனின் போர் யானைகள் புனித கங்கையின் நீரை சுவைத்தன என்றும் குறிப்பிடுகின்றன .[45][46] கனோஞ்சை கைப்பற்றியதும் இவன் தெற்கு நோக்கி வந்து குசராத், கோசலம், கங்கவாடி ஆகியவற்றில் தன் ஆளுமையை அதிகமாக்கினான். காஞ்சி பல்லவர்கள் இவனிடம் பணிந்தார்கள். வேங்கியில் தன் விருப்ப அரசனை பதவியேற்க வைத்தான். இலங்கையின் மன்னர் இவனின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டார். சேரர்களும் பாண்டியர்களும் சோழர்களும் இவனுக்கு மரியாதை செலுத்தினர் [47][48][49] இவன் காலத்தில் இராஷ்டிரகூடர்களின் ஆட்சியின் எல்லை கன்னியாகுமரியிலிருந்து கனோஞ் வரைக்கும் குசராத்தின் பரோச்சிலிருந்து கங்கை சமவெளியிலுள்ள வாரணாசி வரைக்கும் பரவி இருந்தது.[50][51] மூன்றாம் கோவித்தனுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த முதலாம் அமோகவர்சா பேரரசின் தலைநகரத்தை மன்யக்கேடாவுக்கு மாற்றினான். பேரரசு குலையும் வரை மன்யக்கேடாவே இராஷ்டிரகூடர்களின் தலைநகரமாக இருந்தது.[52][53][54] இவன் 814இல் ஆட்சிக்கு வந்த போதும் பல சிற்றரசுகளும் அமைச்சர்களும் ஆட்சிக்கு எதிராக இருந்தனர். 821இலிலேயே இவன் அவர்கள் எல்லோரையும் அடக்கினான். முதலாம் அமோகவர்சா தனது இரு பெண்களை மேலைக் கங்கர்களுக்கு திருமணம் செய்வித்து அவர்களோடு நட்புறவு கொண்டான். படையெடுத்து வந்த கீழைச் சாளுக்கியர்களை விங்கவள்ளி என்னுமிடத்தில் முறியடித்து வீரநாயணா என்னும் பட்டத்தை பெற்றான்.[55][56] இவன் மூன்றாம் கோவிந்தனைப்போல் படையெடுப்புகளில் நாட்டம் கொள்ளாமல் மேலைக் கங்கர், கீழைச் சாளுக்கியர், பல்லவர்களுடன் நட்புறவு கொள்ளவே விரும்பினான். பல்லவர்களுடனும் திருமண தொடர்பு ஏற்படுத்திக்கொண்டான். இவன் ஆட்சி காலத்தில் கலைகளும் இலக்கியங்களும் சமயங்களும் ஆதரிக்கப்பட்டு நன்றாக வளர்ந்தன. இராஷ்டிரகூடர் பேரரசர்களில் முதலாம் அமோகவர்சனே பெரும் புகழ் பெற்றவன். இவன் கன்னடத்திலும் சமசுகிருதத்திலும் பெரும் அறிஞராக திகழ்ந்தான்.[57][58] இவன் கன்னடத்தில் எழுதிய கவிராஜமார்கம் குறிப்பிடத்த கன்னட செயுள் வடிவமாகும். பிரசுநோட்ர ரத்தனமாலி்க்கா என்பது சமசுகிருதத்தில் எழுதப்பட்ட நூலாகும். இது திபேத்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.[59] இவரின் கலை, இலக்கிய ஈடுபாடும் அமைதி விரும்பும் பண்பாலும் இவர் பேரரசர் அசோகரின் குணத்துடன் ஒப்பிடப்பட்டு இவர் தென்னாட்டின் அசோகர் எனப்படுகிறார் .[60] இரண்டாம் கிருஷ்ணன் ஆட்சி காலத்தில் கீழைச் சாளுக்கியர்கள் ஆட்சிக்கெதிராக கலகம் புரிந்தார்கள். மேற்கு தக்காணம் குசராத் போன்றவற்றின் பெரும் பகுதிகள் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து விலகியதால் பேரரசின் ஆட்சி பரப்பு குறைந்தது.[61] இரண்டாம் கிருஷ்ணன் குசராத் சிற்றரசுக்கு வழங்கியிருந்த சுதந்திரத்தை நீக்கி அதை பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். நான்காம் இந்திரன் நடு இந்தியாவில் இருந்த பரமரா ஆட்சியை முறியடித்து பெரும் செல்வத்தை கொண்டுவந்தான். யமுனை ஆற்றுக்கும் கங்கை ஆற்றுக்கும் இடைப்பட்ட கங்கை சமவெளியை வங்கத்தின் பாலர்களையும் பிரதிதாரர்ருகளையும் தோற்கடித்து கைப்பற்றினான். கீழைச் சாளுக்கியர்களின் வெங்கியின் மீது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினான்.[61][62][63] நான்காம் கோவிந்தன் காலத்து (பொ.ஊ. 930) செப்பு பட்டையம் மூன்றாம் இந்திரன் கனோஞ்சில் பெற்ற வெற்றி பல ஆண்டுகளுக்கு நீடித்தது என்கிறது.[64][65] அடுத்து பட்டத்துக்கு வந்த பலவீனமான அரசர்களால் இப்பேரரசு வடக்கிலும் கிழக்கிலும் பெரும் பகுதிகளை இழந்தது. இப்பேரரசின் கடைசி பெரும் வீரர் மூன்றாம் கிருஷ்ணன் ஆட்சிக்காலத்தில் கலகக்காரர்களை ஒடுக்கியதால் பேரரசு நருமதா ஆற்றிலிருந்து காவிரி ஆறு வரை பரவியிருந்தது, வடதமிழகமும் (தொண்டை மண்டலம்) இவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. இலங்கை மன்னனும் இவர்களுக்கு கப்பம் கட்டினான்[66][67][68][69][70] கோத்திக அமோகவர்சா காலத்தில் பரமார அரசன் சியகா அர்சா இப்பேரரசை தாக்கி மன்யக்கேடாவை சூறையாடினான் இந்நிகழ்வு இராஷ்டிரகூடர்களின் வீழ்ச்சிக்கு காரணமாகியது.[71] தற்கால பீசப்பூர் மாவட்டத்தின் பகுதியை ஆண்ட இவர்களின் சிற்றரசன் இரண்டாம் தைலப்பா தன்னை சுதந்திர அரசாக அறிவித்ததும் இப்பேரரசு முடிவுக்கு வந்தது.[72][73] இப்பேரரசின் கடைசி மன்னன் நான்காம் இந்திரன் சரவணபெலகுளாவில் ஜைன வழக்கப்படி உண்ணா நோம்பு இருந்து உயிரை விட முடிவு செய்தான். இராஷ்டிரகூடர்களின் வீழ்ச்சியை அடுத்து அப்பேரரசின் பல சிற்றரசர்களும் சுதந்திரம் பெற்றதாக அறிவித்தனர். மேலைச் சாளுக்கியர்கள் மன்யக்கேடாவை தங்கள் அரசில் இணைத்துக்கொண்டதுடன் பொ.ஊ. 1015 வரை அதை தங்கள் தலைநகராக கொண்டிருந்தனர். கோதாவரி ஆற்றுக்கும் கிருஷ்ணா ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் சாளுக்கியர்களின் கவனம் சென்றது. அப்பகுதியில் இராஷ்டிரகூடர்களுக்கு சிற்றசர்களாக விளங்கியவர்கள் சாளுக்கியர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். சோழர்களின் ஆதிக்கத்தை அங்கு தடுத்ததால் தஞ்சை சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியர்களுக்கும் பகை முற்றியது.[74] மன்யக்கேடா இராஷ்டிரகூடர்கள் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் வட இந்தியாவிலும் இவர்கள் தாக்கம் இருந்தது. சுலைமான் (பொ.ஊ. 851), அல் மசுடி (பொ.ஊ. 944), இபன் குர்தாபா (பொ.ஊ. 912) ஆகியோர் அக்காலத்திய இந்தியாவில் இப்பேரரசே மிகப்பெரியது என்று குறிப்பிட்டுள்ளனர். அக்காலத்தில் உலகில் இருந்த நான்கு பேரரசுகளில் இதுவும் ஒன்று என்று சுலைமான் கூறுகிறார்.[75][76][77] அரபுப்பயணிகள் அல் மசுடி, இபன் குர்தாபா ஆகியோர் பெரும்பாலான அரசர்கள் இராஷ்டிரகூடர்களின் கீழ் சிற்றரசர்களாக இருக்க விரும்பியதாகவும் இராஷ்டிரகூட மன்னனின் தூதுவர்களை மன்னனுக்கு இணையாக நடத்தியதாகவும், இராஷ்டிரகூட பேரரசன் பெரும்படையை வைத்திருந்ததாகவும் அவனுடைய ஆதிக்கம் கொங்கணிலிருந்து சிந்து வரை இருந்ததாகவும் குறிப்புப்பட்டுள்ளனர்.[78] சில வரலாற்றறிஞர்கள் இராஷ்டிரகூடர்கள் கனோஞ்சை கைப்பற்றி அங்குள்ள அரசர் இவர்களுக்கு கப்பம் கட்டும் படியும் செய்துள்ளதோடு வட இந்தியாவில் தாங்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்று காட்டியுள்ளதால் இக்காலத்தை கனோஞ் பேரரசுக்காலம் என்கின்றர். இது கன்னட பேரரசுக்காலம் எனவும் அழைக்கப்படுகிறது [77] எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை வட இந்தியாவிலும் நடு இந்தியாவிலும் ஆட்சியை விரிவுபடுத்திய போது இராஷ்டிரகூடர்களோ அவர்கள் மரபு உறவுக்காரர்களோ பல அரசுகளை உருவாக்கினார்கள். இவ்வரசுகள் இராஷ்டிரகூடர்களால் நேரடியாகவோ அல்லது இராஷ்டிரகூடர்களின் வீழ்ச்சிக்குப்பின் பல நூற்றாண்டுகள் ஆளப்பட்டன. நன்கு அறியப்பட்ட இராஷ்டிரகூட மரபு சிற்றரசுகள் குசராத் இராஷ்டிரகூடர்கள் (757-888) [79] தற்போதைய கருநாடகத்தின் பெல்காம் மாவட்டத்திலுள்ள சௌந்தையின் ரத்தாக்கள் (845-1230) [80] கனோஞ்சின் காகதவாலா (1068–1223),[81] அத்குண்டி என்னுமிடத்திலுருந்து ஆளும் இராச்சசுத்தானின் இராஷ்டிரகூடர்கள் (இராசபுதனா என்று அறியப்படுபவர்கள்) (893–996),[82] தால் (ஜபல்பூர் அருகில்) [83] மான்தோர் (ஜோத்பூர் அருகில்), தானோபின் ரத்தோர் [84] ஆட்சி முறைஇராஷ்டிரகூடர் பட்டத்து இளவரசர் தகுதியின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார் என கிடைத்துள்ள கல்வெட்டுகள் மூலமும் இதர இலக்கியங்கள் மூலமும் தெரிகிறது. மற்ற இந்து அரசு மரபுகளை போல் அல்லாமல் அரசனுக்கு ஒன்றுக்குமேற்பட்ட மகன்கள் இருந்தால் வயது அடிப்படையில் அல்லாமல் தகுதியின் அடிப்படையிலேயே பட்டம் கிடைக்கும். துருவ தர்வர்சனின் மூன்றாவது மகன் மூன்றாம் கோவிந்தன் பட்டத்துக்கு வந்தது இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அரசனுக்கு அடுத்த அதிகாரமும் மதிப்பும் மிக்க பதவி மகாசந்திவிகரகி எனப்பட்ட முதலமைச்சர் பதவியாகும். இவருக்கு கொடி, சங்கு, வெண்குடை, சாமரம், பெரும் மத்தளமுடன் பஞ்சமகாசப்தாசு எனப்படும் ஐந்து இசைக் கருவிகள் என தனியே ஐந்து வகை சின்னங்கள் இருந்தன. முதலமைச்சருக்கு கீழே தானநாயகா எனப்படும் தளபதி, மகாசப்தளகிரிட்டா எனப்படும் வெளியுறவு அமைச்சரும், மகாமத்திய எனப்படும் தலைமை அமைச்சரும் இருந்தனர். பொதுவாக இவர்கள் அனைவரும் பேரரசருக்கு உட்பட்ட சிற்றரசர்களாக இருப்பர். இவர்களுக்கு பேரரசின் அரசாங்கத்தில் ஆவணங்கள் பொறிக்கும் அதிகாரமுள்ள அமைச்சருக்கு ஈடான தகுதி இருக்கும் [85] மகாசமான்தா என்படுவர் சிற்றரசனாகவோ உயர் பதவியில் உள்ள அதிகாரியாகவோ இருப்பார். அமைச்சர்கள் அனைவரும் ராசநீதி எனப்படும் அரசியல் அறிவு நிரம்பப்பெற்றவர்களாகவும் சண்டைகளில் தேர்ச்சிமிக்கராகவும் இருப்பர். சில சமயம் பெண்கள் குறிப்பிட்ட பகுதியை நிருவகிப்பார்கள். முதலாம் அமோகவர்சாவின் மகள் ரேவாகாணிமட்டி எடதொரே விசயா பகுதியை நிருவகித்தார். பேரரசு மண்டலம் அல்லது இராஷ்டிர (மாகாணங்கள்) எனப் பிரிக்கப்பட்டிருந்தது. இராஷ்டிர என்பது இராஷ்டிரபதியாலும் சில முறை பேரரசராலும் ஆட்சி செய்யப்பட்டது. முதலாம் அமோகவர்சாவின் பேரரசு 16 மண்டலங்களை கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலமும் விசயாக்களகாக (மாவட்டம்) பிரிக்கப்பட்டு விசயாபதிகளால் நிருவகிக்கப்பட்டது. நம்மிக்கைக்குரிய அமைச்சர்கள் சிலமுறை ஒன்றுக்கு மேற்பட்ட மண்டலங்களை ஆண்டனர். முதலாம் அமோகவர்சாவின் தளபதி பாகேசா பனவாசி-1200, புலிகரே-300, குன்டுரு-500, குன்டர்கே-70 பகுதிகளை ஆண்டார். எண்கள் அவ்வாட்சி பகுதியில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கையை குறிக்கும், எடுத்துக்காட்டு - பனவாசி ஆட்சி பகுதியில் 1200 கிராமங்கள் இருந்தன. விசயாக்கள் நாடுகளாக பிரிக்கப்பட்டிருந்தன. நாடுகளை நாடுகௌடா அல்லது நாடுகவுண்டா என்போர் நிருவகித்தனர். சிலமுறை இரண்டு அதிகாரிகள் இருப்பதுண்டு ஒருவர் தகுதி அடிப்படையிலும் ஒருவர் மேலுள்ள நிருவாகத்தாலும் நியமிக்கடுபவர்கள். ஆட்சியடுக்கில் கீழ் இருக்கும் பிரிவு கிராமமாகும். இதை கிராமபதி அல்லது பிரபு கவுண்டா நிருவகிப்பார்கள்.[86] இராஷ்டிரகூடர்கள் பெரும் காலாட் படையையும், குதிரைப் படையையும், யானைப் படையையும் கொண்டிருந்தார்கள். எப்போதும் போருக்கு தயாரான நிலையில் பேரரசின் தலைநகரான மன்யக்கேடாவிலுள்ள இசுதிரபுட்ட கட்டா எனப்படும் பாசறையில் படைகள் தங்கியிருந்தன. பெரும் படைகளை சிற்றரசர்களும் நிருவகித்துவந்தனர். போரின் போது பேரரசுக்கு பாதுகாப்பாக அப்படைகள் இருந்தன.[87] இராஷ்டிரகூடர்கள் சுவர்ணா, திரம்மா எனப்படும் தங்க வெள்ளி நாணயங்களை வெளியிட்டனர். இவை 65 தானியம் எடையுடையவை. களஞ்சு 48 தானியம் எடையுடையது, காசு 15 தானியம் எடையுடையது, மஞ்சடி 2.5 தானியம் எடையுடையது, அக்கம் 1.25 தானியம் எடையுடையது .[88] பொருளாதாரம்வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia