இந்திய வரலாறு

அதன் உச்ச கட்டத்தின் போது (2600–பொ. ஊ. மு. 1900) சிந்துவெளி நாகரிகம்

உடல் அமைப்பில் நவீன மனிதர்களானவர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்கு 73,000 மற்றும் 55,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் வருகை புரிந்தனர்.[1] தெற்காசியாவில் தொடக்க காலத்தில் அறியப்பட்ட மனித எச்சங்களானவை 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் காலமிடப்படுகின்றன. தெற்காசியாவில் நிலையான வாழ்க்கையை வாழும் முறையானது பொ. ஊ. மு. 7,000-ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கியது. பொ. ஊ. மு. 4,000-ஆம் ஆண்டு வாக்கில் நிலையான வாழ்க்கை வாழும் முறையானது பரவத் தொடங்கியது.[2] இது படிப்படியாக சிந்துவெளி நாகரிகமாகப் பரிணாமம் அடைந்தது. பழைய உலகத்தில் மூன்று தொடக்கால நாகரிகத் தொட்டில்களில் இதுவும் ஒன்றாகும்.[3][4] இது பொ. ஊ. மு. 2,500 மற்றும் பொ. ஊ. மு. 1,900-க்கு இடையில் தற்கால பாக்கித்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவில் செழித்திருந்தது. பொ. ஊ. மு. இரண்டாம் ஆயிரமாண்டின் தொடக்கத்தில் தொடர்ச்சியான வறட்சியானது சிந்துவெளி மக்கள் பெரிய நகர மையங்களிலிருந்து சிறிய கிராமங்களாகச் சிதறுவதற்குக் காரணமானது. அலை போன்ற பல்வேறு புலப்பெயர்வுகளில் நடு ஆசியாவிலிருந்து பஞ்சாப் பகுதிக்குள் இந்திய-ஆரியப் பழங்குடியினங்களானவை நகர்ந்தன. அவர்களது விரிவான சமயப் பாடல்களின் தொகுப்புகளைத் தொகுத்ததன் (வேதம்) மூலம் வட இந்தியாவின் வேத மக்களின் (1500–பொ. ஊ. மு. 500) வேத காலமானது குறிக்கப்படுகிறது. சமூக அமைப்பானது வர்ண அமைப்பின் வழியாக தோராயமாக அமைக்கப்பட்டிருந்தது. அதிகமாகப் பரிணாமம் அடைந்த தற்கால சாதி அமைப்புக்குள் இது இணைக்கப்பட்டது. மேய்ச்சல் மற்றும் நாடோடி வாழ்க்கையை வாழ்ந்த இந்திய-ஆரியர்கள் பஞ்சாபில் இருந்து கங்கைச் சமவெளிக்குப் பரவினர். பொ. ஊ. மு. 600 வாக்கில் ஒரு புதிய, பகுதிகளுக்கு இடையிலான பண்பாடானது உருவானது. பிறகு தலைவர்களால் ஆளப்பட்ட சிறிய அரசுகள் (ஜனபாதங்கள்) பெரிய அரசுகளாக (மகாஜனபாதங்கள்) ஒருங்கிணைக்கப்பட்டன. இரண்டாவது நகரமயமாக்கலானது நடைபெற்றது. புதிய துறவு இயக்கங்கள் மற்றும் சமயக் கருத்துருக்களின் வளர்ச்சியுடன் இது நடைபெற்றது.[5] இதில் சைனம் மற்றும் பௌத்தத்தின் வளர்ச்சியும் அடங்கும். பௌத்தமானது துணைக் கண்டத்தின் ஏற்கெனவே இருந்த சமயப் பண்பாடுகளுடன் கலந்து இந்து சமயத்தின் வளர்ச்சிக்குக் காரணமானது.

இந்தியப் பண்பாட்டுத் தாக்கப் பகுதி (பெரிய இந்தியா)
இந்திய வரலாற்றின் காலக்கோடு

சந்திரகுப்த மௌரியர் நந்த அரசமரபைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தார். பண்டைக்கால இந்தியாவில் முதல் பெரும் பேரரசான மௌரியப் பேரரசை நிறுவினார். இந்தியாவின் மௌரிய மன்னரான அசோகர் வன்முறையான கலிங்கப் போருக்காகவும், பௌத்தத்தை வரலாற்று ரீதியாக ஏற்றுக் கொண்டதற்காகவும், தனது பேரரசு முழுவதும் அகிம்சை மற்றும் அமைதியைப் பரப்ப முயன்றதற்காகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அப்போதைய பேரரசர் பிரகத்ரதர் அவரது தளபதி புஷ்யமித்ர சுங்கனால் அரசியல் கொலை செய்யப்பட்டதற்குப் பிறகு பொ. ஊ. மு. 185-இல் மௌரியப் பேரரசானது வீழ்ச்சியடைந்தது. சுங்கன் சுங்க அரசமரபை துணைக்கண்டத்தின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் நிறுவினான். அதே நேரத்தில் கிரேக்க பாக்திரியா பேரரசானது துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியைக் கொண்டிருந்தது. இந்திய-கிரேக்க நாட்டை அமைத்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளானவை ஏராளமான அரசமரபுகளால் ஆளப்பட்டுள்ளன. பொ. ஊ. 4 மற்றும் 6-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த குப்தப் பேரரசும் இதில் அடங்கும். இக்காலகட்டமானது இந்தியாவின் செவ்வியல் காலம் அல்லது பொற்காலம் என்று அறியப்படும் ஓர் இந்து சமய மற்றும் சிந்தனை இன்பம்சார் புத்தெழுச்சியைக் கண்டது. இந்திய நாகரிகம், நிர்வாகம், பண்பாடு மற்றும் சமயத்தின் அம்சங்களானவை பெரும்பாலான ஆசியா முழுவதும் பரவின. இப்பகுதியில் இந்தியமயமாக்கப்பட்ட இராச்சியங்கள் நிறுவப்படுவதற்கு வழி வகுத்தன. இவ்வாறாக பெரிய இந்தியா எனும் பகுதியானது உருவானது.[6][5] 7-ஆம் மற்றும் 11-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மிக முக்கியமான நிகழ்வானது கன்னோசியை மையமாகக் கொண்டு நடைபெற்ற மும்முனைப் போட்டியாகும். ஐந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து பல ஏகாதிபத்திய சக்திகளின் வளர்ச்சியை தென்னிந்தியா கண்டது. 11-ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவை சோழர்கள் வென்றனர். தொடக்க நடுக் காலத்தின் போது இந்திய எண்கள் உள்ளிட்ட இந்திய கணிதமானது அரபு உலகத்தில் கணிதம் மற்றும் வானியலின் வளர்ச்சி மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய-அரபு எண் அமைப்பு உருவாக்கப்பட்டதும் இதில் அடங்கும்.[7]

இசுலாமியப் படையெடுப்புகளானவை எட்டாம் நூற்றாண்டிலேயே கூட நவீன கால ஆப்கானித்தான் மற்றும் சிந்து மாகாணத்திற்குள் வரம்புக்குட்பட்ட வகையில் நடத்தப்பட்டன.[8] இதற்குப் பிறகு கசினியின் மகுமூதுவின் படையெடுப்புகள் நடைபெற்றன.[9] 1206-இல் நடு ஆசிய துருக்கியர்களால் நிறுவப்பட்ட தில்லி சுல்தானகமானது 14-ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டது. இந்திய-துருக்கிய துக்ளக்குகள் உள்ளிட்ட பல்வேறு துருக்கிய மற்றும் ஆப்கானிய அரசமரபுகளால் இது ஆளப்பட்டது.[10][11] தைமூரின் படையெடுப்புகளைத் தொடர்ந்து 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுல்தானகமானது வீழ்ச்சியடையத் தொடங்கியது.[12] மால்வா, குசராத்து மற்றும் பாமினி சுல்தானகங்கள் தோன்றின. பாமினி 1518-இல் ஐந்து தக்காண சுல்தானகங்களாகப் பிரிந்தது. செழிப்பான வங்காள சுல்தானகமும் கூட ஒரு முதன்மையான சக்தியாக உருவாகியது. மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலான காலத்திற்கு நீடித்திருந்தது.[13] இக்காலகட்டத்தின் போது பல வலிமையான இந்து இராச்சியங்கள், குறிப்பாக விசயநகரப் பேரரசு மற்றும் மேவார் இராச்சியத்தின் கீழான இராசபுத்திர அரசுகள் முதலான அரசுகள் தோன்றின. இந்தியாவின் பண்பாட்டு மற்றும் அரசியல் அமைப்பை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றின.[14][15]

தொடக்க நவீன காலமானது 16-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அப்போது முகலாயப் பேரரசு இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியது.[16] இது தொடக்க கால தொழில்மயமாக்கலைக் குறித்தது. முகலாயப் பேரரசானது மிகப்பெரிய உலகப் பொருளாதாரமாகவும், உற்பத்தி மையமாகவும் உருவானது.[17][18][19] 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முகலாயர்கள் ஒரு படிப்படியான வீழ்ச்சியைக் கண்டனர். இதற்குப் பெரும்பகுதிக் காரணம் மராத்தியர்களாவர். இந்தியத் துணைக் கண்டத்தின் விரிவான பகுதிகளின் கட்டுப்பாட்டை மராத்தியர்கள் பெற்றனர். மேலும், ஏராளமான ஆப்கானியப் படையெடுப்புக்களும் இந்த வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.[20][21][22] பிரித்தானிய அரசாங்கத்துக்காக ஒரு இறையாண்மையுடைய படையாகச் செயல்பட்ட பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனமானது 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி மற்றும் 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு இடையில் இந்தியாவின் பெரும் பகுதிகளின் கட்டுப்பாட்டை படிப்படியாகப் பெற்றது. இந்தியாவில் நிறுவன ஆட்சியின் கொள்கைகளானவை 1857-ஆம் ஆண்டு சிப்பாய்க் கிளர்ச்சிக்குக் காரணமாயின. இதற்குப் பிறகு இந்தியா நேரடியாக பிரித்தானிய அரசாங்கத்தால் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசாக ஆளப்பட்டது. முதலாம் உலகப் போருக்குப் பிறகு காந்தி தலைமையில் இந்திய தேசிய காங்கிரசால் விடுதலைக்கான ஒரு தேசிய அளவிலான போராட்டமானது தொடங்கப்பட்டது. பிறகு, அகில இந்திய முசுலிம் லீக்கானது முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு தனி நாட்டுக்கு வலியுறுத்தியது. பிரித்தானிய இந்தியப் பேரரசானது ஆகத்து 1947-இல் இந்திய மேலாட்சி அரசு மற்றும் பாக்கித்தான் மேலாட்சி அரசாகப் பிரிக்கப்பட்டது. இரு அரசுகளும் தத்தமது விடுதலையைப் பெற்றன.

வரலாற்றுக்கு முந்தைய சகாப்தம் (அண். பொ. ஊ. மு. 3,300க்கு முன்)

மத்தியப் பிரதேசத்தின் பீம்பேட்காவில் உள்ள இடைக்கற்கால பாறை ஓவியங்கள். இவை ஒரு காட்டு விலங்கைக் காட்டுகின்றன. அநேகமாக ஒரு புனைவுக விலங்காக இது இருக்கலாம். மனித வேட்டைக்காரர்களை அது தாக்குகிறது. இந்தப் பாறை ஓவியமானது நேரடியாகக் காலமிடப்படாவிட்டாலும்,[23] பொ. ஊ. மு. 8,000-ஆம் ஆண்டு வாக்கில் இதில் பல ஓவியங்கள் வரைந்த முடிக்கப்பட்டன என சுற்றுப்புறக் காரணிகளைக் கொண்டு வாதிடப்படுகிறது.[24] சில ஓவியங்கள் அதற்கு சற்று முன்னர் வரைந்து முடிக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடப்படுகின்றன.[25]
கேரளத்தின் மறையூரில் புதிய கற்கால மக்களால் எழுப்பப்பட்ட ஒரு கல்திட்டை.
கேரளத்தின் எடக்கல் குகைகளில் கற்கால (பொ. ஊ. மு. 6,000) சிற்பங்கள்.

பழைய கற்காலம்

ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் விரிவடைந்ததானது இந்தியத் துணைக்கண்டத்தைத் தோராயமாக 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் அடைந்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. சாத்தியமான வகையில் 22 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்திருக்கலாம் என்றும் மதிப்பிடப்படுகிறது.[26][27][28] இந்தோனேசியாவில் 18 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரும், கிழக்காசியாவில் 13.6 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரும் ஓமோ இரெக்டசு இருந்தை அறியப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் காலம் மதிப்பிடப்படுகிறது. மேலும், பாக்கித்தானின் ரிவாத்தில் கற்கருவிகளின் கண்டுபிடிப்பும் இதற்குக் காரணமாகும்.[27][29] இதை விட முந்தைய கால கண்டுபிடிப்புகள் கூறப்பட்டாலும் அவை பரவலான ஆய்வாளர்களால் உறுதி செய்யப்படவில்லை. ஆறுகளின் வண்டல் மண்ணின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கான காலமானது பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.[28][30]

இந்திய துணைக் கண்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான மனித இன தொல்லியல் எச்சங்களானவை நடு இந்தியாவின் நர்மதைப் பள்ளத்தாக்கிலிருந்து எடுக்கப்பட்ட ஓமோ இரெக்டசு அல்லது ஓமோ எய்தெல்பெர்கெசன்சிசு இனத்தைச் சேர்ந்தவையாகும். இவை தோராயமாக 5 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாகக் காலமிடப்படுகின்றன.[27][30] இதை விடப் பழமையானது என கூறப்பட்ட தொல்லியல் எச்சங்களானவை குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், அவை பொதுவாக நம்ப இயலாதவையாகக் கருதப்படுகின்றன.[30] இந்திய துணைக் கண்டத்தை மனித இனங்கள் ஆக்கிரமித்ததானது தோராயமாக 7 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை தொடர்ச்சியற்றதாக இருந்தது என தொல்லியல் ஆதாரங்களின் ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. தோராயமாக 2.5 இலட்சம் ஆண்டுகள் வாக்கில் தான் புவியியல் ரீதியாக இந்த மனித இனங்கள் துணைக்கண்டம் முழுவதும் பரவத் தொடங்கின.[30][28]

தெற்காசியாவின் வரலாற்று ரீதியான மக்கள் தொகையியலாளர் டிம் டைசனின் கூற்றுப்படி:

நவீன மனித இனத்தவர்கள்-ஓமோ சேப்பியன்கள்-ஆப்பிரிக்காவில் உருவாயினர். பிறகு விட்டு விட்டு நடந்த நிகழ்வாக 60,000 மற்றும் 80,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஒரு காலத்தில் அவர்களில் சிறு குழுக்கள் இந்திய துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதிக்குள் நுழையத் தொடங்கினர். தொடக்கத்தில் அவர்கள் கடற்கரை வழியாகவே வந்திருக்க வாய்ப்பு இருந்துள்ளதாகத் தோன்றுகிறது. 55,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய துணைக் கண்டத்தில் ஓமோ சேப்பியன்கள் இருந்தனர் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். நிகழ்காலத்திலிருந்து சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் அவர்கள் குறித்து கண்டுபிடிக்கப்பட்ட தொடக்க கால தொல்லியல் எச்சங்களானவை காலமிடப்பட்டிருந்தாலும் இவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.[31]

மைக்கேல் டி. பெற்றாக்லியா மற்றும் பிரிட்செட் ஆல்ச்சின் ஆகியோரின் கூற்றுப்படி:

ஆப்பிரிக்காவில் தோன்றிய நவீன மனிதர்களால் தெற்காசியா குடியேற்றமடைந்ததற்கு ஒய்-குரோமோசோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியா-டிஎன்ஏ ஆகியவை ஆதரவளிக்கின்றன. ஐரோப்பியரல்லாத பெரும்பாலான மக்களுக்கு ஒன்றிணைந்த காலங்களானவை 73,000 - 55,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சராசரியாகக் கொண்டுள்ளன.[32]

தெற்காசியா குறித்த வரலாற்றாளரான மைக்கேல் எச். பிசர் குறிப்பிடுவதாவது:

ஆப்பிரிக்காவைத் தாண்டி அரேபியத் தீபகற்பம் வழியாக ஓமோ சேப்பியன்களின் முதல் வெற்றிகரமான விரிவாக்கமானது துரிதமாக 70,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகவும் தாமதமாக 40,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகவும் நடைபெற்றிருக்கலாம் என அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர். இதற்கு முன்னர் தோல்வியடைந்த புலப்பெயர்வுகள் இருந்திருக்கலாம் என்ற நிலை இருக்கும் போதும் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். அவர்களது வழித் தோன்றல்களில் சிலர் மனிதர்கள் வாழ்ந்து வந்த பரப்பளவை ஒவ்வொரு தலைமுறையிலும் அதிகரித்தனர். தாங்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு வாழத் தகுந்த நிலத்திற்கும் பரவினர். பாரசீக வளைகுடா மற்றும் வடக்கு இந்தியப் பெருங்கடலின் வெதுவெதுப்பான மற்றும் உற்பத்தித் திறன் உள்ள கடற்கரை நிலங்களின் நெடுகில் ஒரு மனிதத் தடம் இருந்திருக்க வேண்டும். இறுதியாக பல்வேறு குழுக்கள் இந்தியாவுக்குள் 75,000 மற்றும் 35,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட முந்தைய காலத்தில் நுழைந்தன.[33]

பின் வரும் புரிதலானது விவாதத்திற்கு உள்ளக்கப்பட்டாலும் இந்தியத் துணைக் கண்டத்தில் உடல் ரீதியாக நவீன மனிதர்களின் இருப்பானது 78,000 - 74,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது என தொல்லியல் ஆதாரத்திலிருந்து புரிந்து கொள்ளப்பட்டு பரிந்துரைக்கப்படுகிறது.[34][35][36] தொடக்கத்தில் தெற்காசியாவில் வேட்டையாடி-சேகரித்து உண்பவர்களாக தனித்து வாழும் வேறுபட்ட வடிவங்களில் இருந்த நவீன மனிதர்களின் வாழ்வானது ஒரு மிக வேறுபட்ட ஒன்றாக மாற்றமடைந்தது. மனித மரபணு வேறுபாட்டில் இந்தியாவுக்கு முந்தைய இடத்தில் ஆப்பிரிக்கா மட்டுமே உள்ளது எனும் அளவுக்கு இந்த மாற்றம் ஏற்பட்டது.[37]

டிம் டைசனின் கூற்றுப்படி:

துணைக்கண்டத்தின் மக்களின் வரலாற்றுக்கு முந்தைய காலம் குறித்த தகவலுக்குப் பிற அம்சங்களிலும் மரபணு ஆராய்ச்சியானது பங்களித்துள்ளது. குறிப்பாக, துணைக்கண்டப் பகுதியில் மக்களின் மரபணு வேறுபாட்டு நிலைகளானவை மிக மிக அதிகமாக உள்ளன. உண்மையில் ஆப்பிரிக்காவின் மக்கள் தொகை மட்டுமே இந்தியாவை விட மரபணு ரீதியாக மிகவும் வேறுபட்டதாகும். இதனுடன் தொடர்புடையதாக இந்தியத் துணைக் கண்டத்தில் 'தோற்றுவிப்பாளர்' நிகழ்வுக்கான வலிமையான ஆதாரங்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. இதன் மூலமாக வெகு சில எண்ணிக்கையிலான 'உண்மையான' தனி நபர்களிடமிருந்து ஒரு பழங்குடியினம் போன்ற ஒரு துணைக் குழுவானது உருவாவதற்கான சூழ்நிலைகள் இருந்தன எனப்படுகிறது. மேலும், உலகின் பெரும்பாலான பகுதிகளுடன் ஒப்பிடும் போது, துணைக்கண்டத்தின் மக்கள் ஒப்பீட்டளவில் அகமணத்தின் உயர்நிலைகளைப் பின்பற்றி பெரிதும் தனித்துவமானவர்களாக உள்ளனர்.[37]

புதிய கற்காலம்

தற்கால பாக்கித்தானின் பலுச்சிசுத்தானத்தில் உள்ள மெகர்கர் தளம்
பொ. ஊ. மு. 3,000 - 2,500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட மெகர்கரைச் சேர்ந்த வண்ணம் தீட்டப்பட்ட பானை[38]

துணைக்கண்டத்தில் நிலையாக வாழும் வாழ்க்கை முறையானது சிந்து ஆற்று வண்டல் சமவெளியின் மேற்கு விளிம்புகளில் தோராயமாக 9,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. பொ. ஊ. மு. மூன்றாவது ஆயிரமாண்டின் சிந்துவெளி நாகரிகமாக படிப்படியாக பரிணாமம் அடைந்தது.[2][39] டிம் டைசனின் கூற்றுப்படி, "7,000 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண்மையானது பலுச்சிசுத்தானத்தில் உறுதியாக நிலை பெற்றிருந்தது... மெதுவாக கிழக்கு நோக்கி சிந்து வெளிக்குள் பரவியது". மைக்கேல் பிசர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:[40]

நன்றாக-நிறுவப்பட்ட, நிலையான வேளாண்மை சமூகத்தின் தொடக்க கால கண்டுபிடிப்பானது போலன் கணவாய் மற்றும் சிந்துவெளிக்கு (தற்கால பாக்கித்தானில்) இடைப்பட்ட குன்றுகளில் மெகர்கரில் இருந்தன. பொ. ஊ. மு. 7,000 ஆம் ஆண்டிலிருந்தே நிலத்தைச் செப்பனிடுவது, குறிப்பிட்ட தானியம் விளைவிக்கும் தாவரங்களைத் தேர்ந்தெடுத்து, நட்டு, வளர்த்து மற்றும் அறுவடை செய்வதில் அதிகரித்து வந்த வேலைகளை சமூகங்கள் அங்கு தொடங்கின. செம்மறியாடு, ஆடு, பன்றி மற்றும் மாடு (திமில் உடைய செபு [பாஸ் இந்திகஸ்] மற்றும் திமிலற்ற [பாஸ் தௌரஸ்] ஆகிய இரு மாடுகளும்) உள்ளிட்ட விலங்குகளையும் கூட அவர்கள் கொல்லைப்படுத்தினர். எடுத்துக்காட்டாக, இனப்பெருக்க ஆற்றல் அழிக்கப்பட்ட மாடுகளானவை முதன்மையாக மாமிசம் தருபவை என்ற நிலையில் இருந்து கொல்லைப்படுத்தப்பட்ட வேலை விலங்குகளாக மாறின.[40]

வெண்கலக் காலம் (அண். 3300 – 1800 பொ. ஊ. மு.)

சிந்துவெளி நாகரிகம்

அண். பொ. ஊ. மு. 2,600-1,900 க்கு இடைப்பட்ட அரப்பா காலகட்டத்தின் உச்சநிலை

இந்தியத் துணைக் கண்டத்தில் வெண்கலக் காலமானது தோராயமாக பொ. ஊ. மு. 3,300 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது.[சான்று தேவை] பழைய உலகத்தின் மூன்று தொடக்க கால நாகரிகத் தொட்டில்களில் ஒன்று சிந்து சமவெளிப் பகுதியாகும். இந்த மூன்று நாகரிகங்களிலேயே சிந்துவெளி நாகரிகமானது மிகவும் விரிவடைந்ததாக இருந்தது.[3] இதன் உச்சநிலையில் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை இது கொண்டிருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[4]

இந்நாகரிகமானது முதன்மையாக தற்கால பாக்கித்தானை மையமாகக் கொண்டிருந்தது. சிந்து ஆற்றின் வடிநிலத்தில் அமைந்திருந்தது சிந்துவெளி நாகரிகத்தின் முதிர்ந்த காலகட்டமானது பொ. ஊ. மு. சுமார் 2,600 முதல் 1,900 வரை செழித்திருந்தது. இந்தியத் துணைக் கண்டத்தில் நகர்ப்புற நாகரிகத்தின் தொடக்கத்தை இது குறித்தது. தற்கால பாக்கித்தானிலிருந்த அரப்பா, கனேரிவாலா மற்றும் மொகெஞ்சதாரோ மற்றும், தற்கால இந்தியாவிலிருந்த தோலாவிரா, காளிபங்கான், இராக்கிகர்கி, மற்றும் லோத்தல் போன்ற நகரங்களை இது உள்ளடக்கியிருந்தது.

மிகப் பெரிய சிந்துவெளி நகரங்களில் ஒன்றான மொகெஞ்சதாரோ. இத்தளத்தின் பெரும் குளியல் தொட்டியுடன், சுற்றியுள்ள நகர்ப்புற அமைப்புகளும் காட்டப்பட்டுள்ளன.
சிந்துவெளி நாகரிகத்தின் ஒரு நகரமான தோலாவிரா. செயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட நீர்த் தேக்கங்களில் நீர் நிலையை அடைவதற்காக உருவாக்கப்பட்ட பவோலி படிக்கட்டுகளுடன் காணப்படுகிறது.[41]
லோத்தலில் உள்ள கழிப்பறை வடிகால் அமைப்பின் தொல்லியல் சிதிலங்கள்

பண்டைக்கால சிந்து ஆற்று சமவெளியின் குடியிருப்பாளர்களான அரப்பர்கள் உலோகவியல் மற்றும் கைவினைப் பொருட்களில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கினர். தாமிரம் வெண்கலம், ஈயம் மற்றும் வெள்ளீயம் ஆகிய உலோகங்களை உற்பத்தி செய்தனர்.[42] இந்நாகரிகமானது சுட்ட செங்கற்களால் கட்டமைக்கப்பட்ட இதன் நகரங்களுக்காகவும், இதன் சாலையோர சாக்கடை கழிவு நீக்கம் அமைப்புகளுக்காகவும் அறியப்படுகிறது. நகராட்சி அமைப்பு போன்ற ஒரு வகையை இது கொண்டிருந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இந்நாகரிகமானது சிந்துவெளி வரிவடிவத்தையும் கூட உருவாக்கியது. பண்டைக்கால இந்திய எழுத்துமுறைகளிலேயே இது தான் மிகப் பழமையானதாகும். இது இன்னும் புரிந்துகொள்ளப்படாமலேயே உள்ளது.[43] சிந்துவெளி மொழியானது நேரடியாக உறுதிப்படுத்தப்படாமல் இருப்பதற்கு இதுவே காரணமாகும். இம்மொழி எக்குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் தெளிவாகத் தெரியவில்லை.[44]

விலங்குகளுடன் சேர்த்து சிந்துவெளி வரிவடிவ எழுத்துக்களைக் காட்டும் மூன்று முத்திரைகளும், அவற்றின் மாதிரிகளும்: ஒற்றைக் கொம்புக் குதிரை (இடது), காளை (நடுவில்) மற்றும் யானை (வலது). இடம் குய்மெட் அருங்காட்சியகம்.

சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அங்கிருந்த குடியிருப்பாளர்கள் கங்கை-யமுனை வடிநிலத்தின் இமயமலை அடிவாரங்களை நோக்கி இடம் பெயர்ந்தனர்.[45]

காவி நிற மட்பாண்டப் பண்பாடு

சினௌலியின் உறுதியான சக்கரத்தைக் கொண்ட வண்டி. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் உள்ள ஒரு புகைப்படம் இதுவாகும்.[46]

பொ. ஊ. மு. இரண்டாவது ஆயிரமாண்டின் போது கங்கை யமுனை தோவாப் பகுதியில் காவி நிற மட்பாண்டப் பண்பாடு இருந்தது. வேளாண்மை மற்றும் வேட்டையாடுதலைக் கொண்டிருந்த கிராமப்புற குடியிருப்புகள் இவையாகும். கோடாரிகள், ஈட்டிகள், அம்புகள் மற்றும் வாள்கள் போன்ற தாமிரக் கருவிகளைப் பயன்படுத்தியும், கொல்லைப்படுத்தப்படுத்த விலங்குகளைக் கொண்டும் இவர்கள் வாழ்ந்தனர்.[47]

இரும்புக் காலம் (அண். 1800 – 200 பொ. ஊ. மு.)

வேத காலம் (அண். 1500 – 600 பொ. ஊ. மு.)

அண். பொ. ஊ. மு. 1,900 இல் தொடங்கி பல்வேறு புலப் பெயர்வு அலைகளாக நடு ஆசியாவிலிருந்து பஞ்சாப் பகுதிக்குள் இந்திய-ஆரியப் பழங்குடியினங்கள் நகர்ந்தன.[48][49] இந்திய-ஆரிய மக்களிடமிருந்த சமய சடங்கு பாடல்களில் இருந்து வேதங்கள் தொகுக்கப்பட்டது வேதகாலம் எனக் குறிப்பிடப்படுகிறது. வடமேற்கு இந்தியாவின் பகுதியில் வேதப் பண்பாடானது அமைந்திருந்தது. அதே நேரத்தில், இந்தியாவின் பிற பகுதிகள் தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டிருந்தன. இக்காலத்தில் தான் இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகள் செப்புக் காலத்தில் இருந்து இரும்புக் காலத்திற்கு மாற்றமடைந்தன.[50]

வேதப் பண்பாடானது வேதங்களில் விளக்கப்பட்டுள்ளது. வேதங்கள் இந்துக்களுக்கு இன்றும் புனிதமானதாக உள்ளன. வேத சமசுகிருதத்தில் வாய் வழியாக உருவாக்கப்பட்டு இவை பரப்பப்பட்டன. வேதங்களானவை இந்தியாவில் மிகப் பழமையான எஞ்சியிருக்கும் நூல்களில் சிலவாகும்.[51] வேத காலமானது 1500 முதல் பொ. ஊ. மு. 500 வரை நீடித்திருந்தது.[52][53] இந்திய துணைக் கண்டத்தின் பல பண்பாட்டு அம்சங்களின் அடித்தளத்திற்குப் பங்களித்தது.

வேத சமூகம்

தேவநாகரி எழுத்துமுறையில் எழுதப்பட்ட இருக்கு வேதத்தின் ஒரு தொடக்க 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கையெழுத்துப் பிரதி. வேதமானது தொடக்கத்தில் வாய் வழியாகச் சொற்களாக பரப்பப்பட்டது.[54]

பஞ்சாப் பகுதி மற்றும் மேல் கங்கைச் சமவெளியில் ஒரு வேதப் பண்பாட்டை நிலை நிறுத்த வரலாற்றாளர்கள் வேதங்களை ஆய்வு செய்துள்ளனர்.[50] தருமம் போன்ற பின்னர் உருவாக்கப்பட்ட இந்திய மெய்யியலின் பல அம்சங்கள் வேத கருத்துகளுக்கு தங்களது பூர்வீகத்தைக் கொண்டுள்ளன.[55]

தொடக்க கால வேத சமூகமானது இருக்கு வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது. இருக்கு வேதமே மிகப் பழமையான வேத நூல் ஆகும். பொ. ஊ. மு. இரண்டாவது ஆயிரமாண்டின் போது[56][57] இந்தியத் துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் இது தொகுக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.[58] அந்நேரத்தில் ஆரிய சமூகமானது முதன்மையாகப் பழங்குடியின மற்றும் மேய்ச்சல் வாழ்க்கை முறையைப் பின்பற்றிய நாடோடிக் குழுக்களாக இருந்தது.[59] கைவிடப்பட்ட அரப்பா நகர வாழ்க்கை முறையிலிருந்து இது வேறுபட்டிருந்தது. தொடக்க கால இந்திய ஆரியர்களின் இருப்பானது அநேகமாக தொல்லியல் பார்வையில் குறிப்பிடப்படும் காவி நிற மட்பாண்டப் பண்பாட்டுடன் பகுதியளவுக்கு ஒத்துப் போகிறது.[60][61]

இருக்கு வேத காலத்தின் முடிவில் ஆரிய சமூகமானது இந்தியத் துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியிலிருந்து மேற்கு கங்கை ஆற்றுச் சமவெளிக்கு விரிவடைந்தது. அதிகரித்து வந்த நிலையாக வேளாண்மை வாழ்க்கை முறைக்கு மாறியது. நான்கு வர்ணங்கள் அல்லது சமூக வகுப்புகளின் படிநிலையைச் சுற்றி சமூக ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டது.[62] சில பூர்வகுடி மக்களின் பணி நிலையை தூய்மையற்றதாகக் குறிப்பிட்டு விலக்கியதை இந்த சமூக அமைப்பானது பண்பாகக் கொண்டிருந்தது.[63] இக்காலகட்டத்தில் முந்தைய சிறு பழங்குடியினக் குழுக்கள் மற்றும் தலைவர்களைக் கொண்ட அரசுகள் பல ஒன்றிணைந்து ஜனபாதங்களாக (முடியாட்சி, நாடு நிலை அரசியல் அமைப்புகள்) மாறின.[64]

சமசுகிருத இதிகாசங்கள்

குருச்சேத்திரப் போர் குறித்த ஓவியத்துடன் கூடிய ஒரு கையெழுத்துப் பிரதி

இக்காலகட்டத்தின் போது சமசுகிருத இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவை உருவாக்கப்பட்டன.[65] இன்றும் உலகின் மிக நீண்ட ஒற்றைக் கவிதை மகாபாரதம் தான்.[66] வரலாற்றாளர்கள் முன்னர் இந்த இரு இதிகாசக் கவிதைகளின் சமூகச் சூழ்நிலையாக ஓர் "இதிகாச காலத்தை" முன் வைத்தனர். ஆனால், நூற்றாண்டுகளாக பல நிலை மேம்படுத்தலின் வழியாக இந்த நூல்களானவை மாற்றமடைந்தன என தற்போது ஒப்புக் கொண்டுள்ளனர்.[67] இந்த இதிகாசங்களின் தற்போது எஞ்சியிருக்கும் நூல்களானவை அண். பொ. ஊ. மு. 400 மற்றும் பொ. ஊ. 400க்கு இடைப்பட்ட வேத காலத்துக்கு பிந்தைய காலத்தைச் சேர்ந்தவை என நம்புகின்றனர்.[67][68]

ஜனபாதங்கள்

வட இந்தியாவில் ஜனபாதங்களுடன் ஆரியவர்த்தத்தின் எல்லைகளைக் காட்டும் பிந்தைய வேத சகாப்த வரைபடம். இந்தியாவில் குரு, பாஞ்சாலம், கோசலம் மற்றும் விதேகம் உள்ளிட்ட இரும்புக் கால இராச்சியங்களின் தொடக்கம் இதுவாகும்.

தோராயமாக பொ. ஊ. மு. 1,200 முதல் பொ. ஊ. மு. 6 ஆம் நூற்றாண்டு வரை இந்திய துணைக் கண்டத்தில் இருந்த இரும்புக் காலமானது ஜனபாதங்களின் வளர்ச்சியால் வரையறுக்கப்படுகிறது. இவை நாடுகள், குடியரசுகள், மற்றும் இராச்சியங்கள் ஆகும். இதில் குறிப்பிடத்தக்கவை குரு, பாஞ்சாலம், கோசலம் மற்றும் விதேகம் ஆகிய இரும்புக் கால இராச்சியங்கள் ஆகும்.[69][70]

வேத காலத்தின் முதல் அரசு நிலை சமூகம் குரு (அண். 1200–450 பொ. ஊ. மு.) ஆகும். பொ. ஊ. மு. சுமார் 1,200 மற்றும் 800 க்கு இடைப்பட்ட காலத்தில் வடமேற்கு இந்தியாவில் இரும்புக் காலத்தின் தொடக்கத்துடன் குரு தேசத்தின் காலம் ஒத்துப் போகிறது.[71] அதர்வண வேதமும் இக்காலத்தில் தான் உருவாக்கப்பட்டது.[72] குரு அரசானது வேதகால சமயப் பாடல்களை ஒருங்கிணைத்துத் தொகுத்தது. சமூக ஒழுங்கை நோக்கமாகக் கொண்டு இசுரதா சமயச் சடங்குகளை உருவாக்கியது.[72] குரு அரசின் இரு முக்கியமான நபர்கள் மன்னன் பரிட்சித்துவும், அவனுக்குப் பின் வந்த சனமேசயனும் ஆவர். அவர்கள் குரு நாட்டை வட இந்தியாவின் ஆதிக்கம் மிகுந்த, அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு சக்தியாக மாற்றினர்.[72] குரு இராச்சியம் வீழ்ச்சியடைந்த போது வேதப் பண்பாட்டின் மையமானது குரு நாட்டவரின் கிழக்கு அண்டையவரான பாஞ்சால இராச்சியத்திற்கு இடம் மாறியது.[72] தொல்லியல் ரீதியான சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடானது (அண். 1100–60 பொ. ஊ. மு.) வட கிழக்கு இந்தியாவின் அரியானா மற்றும் மேற்கு இந்தியாவின் உத்தரப் பிரதேசப் பகுதிகளில் செழித்திருந்தது.[60] இப்பண்பாடானது குரு மற்றும் பாஞ்சால இராச்சியங்களுடன் ஒத்துப் போவதாக நம்பப்படுகிறது.[72][73]

பிந்தைய வேத காலத்தின் போது விதேகமானது வேதப் பண்பாட்டின் ஒரு புதிய மையமாகத் தோன்றியது. இது மேலும் கிழக்கே (தற்கால நேபாளம் மற்றும் பீகார்) அமைந்திருந்தது.[61] மன்னன் சனகனின் கீழ் இது உச்ச நிலையை அடைந்தது. யாக்யவல்க்கியர், உத்தாலக ஆருணி, மற்றும் கார்கி வசக்னவி போன்ற பிராமண முனிவர்கள் மற்றும் தத்துவவாதிகளுக்கு சனகனின் அரசவையானது புரவு வழங்கியது.[74] இக்காலத்தின் பிந்தைய பகுதியானது அதிகரித்து வந்த நிலையாக பெரிய அரசுகள் மற்றும் இராச்சியங்களாக வட இந்தியா முழுவதும் ஜனபாதங்கள் ஒருங்கிணைக்கப்படுவதைக் கண்டது. அவை மகாஜனபாதங்கள் என்று அழைக்கப்பட்டன.

இரண்டாம் நகரமயமாக்கல் (அண். 600 – 200 பொ. ஊ. மு.)

பொ. ஊ. மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சாஞ்சி தூபி 1 இன் தெற்கு வாயிலில் உள்ள ஒப்பனைப் பட்டையில் உள்ளதன் படி பொ. ஊ. மு. 5 ஆம் நூற்றாண்டில் குசி நகரம் குறித்த சித்தரிப்பு

பொ. ஊ. மு. 800 மற்றும் பொ. ஊ. மு. 200 க்கு இடைப்பட்ட காலமானது சமண இயக்கம் உருவாவதைக் கண்டது. இந்த இயக்கத்திலிருந்து தான் சைனமும், பௌத்தமும் தோன்றின. இக்காலத்தின் போது முதல் உபநிடதமானது எழுதப்பட்டது. பொ. ஊ. மு. 500 க்கு பிறகு "இரண்டாவது நகரமயமாக்கல்"[note 1] என்றும் அழைக்கப்படும் காலமானது தொடங்கியது. கங்கைச் சமவெளியில் புதிய நகர்ப்புறக் குடியிருப்புகள் தோன்றின.[76] மேல் கங்கைச் சமவெளியின் சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாட்டில் பொ. ஊ. மு. 600 க்கு முந்தைய காலத்தில் இரண்டாம் நகரமயமாக்கலுக்கான அடித்தளங்கள் உருவாக்கப்பட்டன. மேற்குறிப்பிட்ட பண்பாட்டின் பெரும்பாலான தளங்களானவை சிறிய வேளாண்மைக் கிராமங்களாக இருந்திருந்தாலும், இறுதியாக ஒப்பீட்டளவில் "பல தசம" எண்ணிக்கையிலான தளங்கள் பெரிய குடியிருப்புகளாக மாறின. இவற்றை பட்டனங்கள் என்று குறிப்பிடலாம். இதில் மிகப் பெரியவை வாய்க்கால்கள் மற்றும் அகழிகளால் பாதுகாக்கப்பட்டன. மரத்தாலான வேலிகளையுடைய குவிக்கப்பட்ட மணலால் உருவாக்கப்பட்ட மண் சுவர் அமைப்புகளைக் கொண்டிருந்தன.[77]

மகதம் முக்கியத்துவத்தை அடைந்த நடு கங்கைச் சமவெளியானது மௌரியப் பேரரசின் அடித்தளத்தை அமைத்தது. இது ஒரு தனித்துவமான பண்பாட்டுப் பகுதியாகும்.[78] பொ. ஊ. மு. 500 க்கு பிறகு புதிய அரசுகள் இங்கு தோன்றின.[79][80] வேதப் பண்பாட்டால் இது தாக்கம் பெற்றிருந்தது.[81] ஆனால், குரு-பாஞ்சாலப் பகுதியில் இருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு வேறுபட்டிருந்தது.[82] "தெற்காசியாவில் நெல் அறுவடை செய்யப்பட்ட தொடக்க காலத்தில் அறியப்பட்ட பகுதியும், பொ. ஊ. மு. 1,800 வாக்கில் சிரந்த் மற்றும் செச்சர் தளங்களுடன் தொடர்புடைய முன்னேறிய புதிய கற்கால மக்களின் அமைவிடமும்" இதுவாகும்.[83] இப்பகுதியில் சிரமண இயக்கங்கள் செழித்திருந்தன. சைனமும், பௌத்தமும் இங்கு தோன்றின.[73]

பௌத்தமும், சைனமும்

உபநிடதங்களும், சிரமண இயக்கங்களும்
ஈசா வாஸ்ய உபநிடதத்தின் கையெழுத்துப் பிரதியின் ஒரு பக்கம்.
கௌதம புத்தரின் உடல் எரியூட்டப்பட்ட தூபி, குசிநகர்.

பொ. ஊ. மு. 800 மற்றும் பொ. ஊ. மு. 400 க்கு இடைப்பட்ட காலமானது தொடக்க கால உபநிடதம்[84][85][86] தொகுக்கப்படுவதைக் கண்டது. செவ்வியல் இந்து சமயத்தின் கோட்பாட்டு ரீதியான அடித்தளத்தை இது தான் உருவாக்கியது. இது வேதாந்தம் (வேதத்தின் இறுதி நிலை) என்றும் கூட அறியப்படுகிறது.[87]

பொ. ஊ. மு. 7 ஆம் மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் அதிகரித்து வந்த நகரமயமாக்கலானது புதிய துறவு அல்லது "சிரமண இயக்கங்களின்" வளர்ச்சிக்கு வழி வகுத்தது. இவை சமயச் சடங்குகளின் மரபுவழிக்குச் சவால் விடுத்தன.[84] சைனத்தைப் பரப்பிய மகாவீரர் (அண். 599–527 பொ. ஊ. மு.), மற்றும் பௌத்தத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தர் (அண். 563–483 பொ. ஊ. மு.) ஆகியோர் இந்த இயக்கத்தின் மிக முக்கியமான நபர்கள் ஆவர். பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சிக் கருத்துரு, பிறவிச்சுழற்சி கருத்துரு மற்றும் விடுதலை கருத்துரு ஆகியவற்றின் உருவாக்கத்துக்கு சிரமண இயக்கமானது காரணமானது.[88] சமண சமயங்களில் காணப்படும் மட்டுமீறிய துறவு நிலையை சீர் செய்த ஒரு நடு வழியை புத்தர் கண்டறிந்தார்.[89]

இதே நேரம் மகாவீரர் (சைனத்தின் 24 ஆவது தீர்த்தங்கரர்) பிற்காலத்தில் சைனமாக உருவாகிய ஒரு கருத்துருவைப் பரப்பினார்.[90] எனினும், சைன மரபுவழியானது தீர்த்தங்கரர்களின் போதனைகளானவை அறியப்பட்ட அனைத்து காலத்துக்கும் முந்தையவை என்று நம்புகின்றனர். 23 ஆவது தீர்த்தங்கரர் என்ற நிலையைப் பெற்ற பார்சுவநாதர் (அண். 872 – அண். 772 பொ. ஊ. மு.) வரலாற்று ரீதியான நபர் என அறிஞர்கள் நம்புகின்றனர். ஒரு சில தீர்த்தங்கரர்களையும், சிரமண இயக்கத்தை ஒத்த ஒரு துறவு நிலையையும் வேதங்கள் ஆவணப்படுத்தியுள்ளன என்று நம்பப்படுகிறது.[91]

மகாஜனபாதங்கள்

முதன்மையாக சிந்து-கங்கைச் சமவெளிக்குள் அமைந்திருந்த 16 சக்தி வாய்ந்த அரசியல் அமைப்புகள் மகாஜனபாதங்கள் ஆகும்.

அண். பொ. ஊ. மு. 600 முதல் அண். பொ. ஊ. மு. 300 வரையிலான காலகட்டமானது மகாஜனபாதங்களின் வளர்ச்சியைக் கண்டது. 16 சக்தி வாய்ந்த இராச்சியங்கள் மற்றும் சிலவர் ஆட்சிக் குடியரசுகள் இவையாகும். வடமேற்கே காந்தார தேசத்திலிருந்து இந்திய துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியான வங்காளம் வரை விரிவடைந்திருந்த ஒரு பட்டை போன்ற வழியில் இவை அமைந்திருந்தன. விந்திய மலையின் பகுதியும் இதில் அடங்கியிருந்தது.[92] அங்குத்தர நிகயா போன்ற பண்டைக்கால பௌத்த நூல்கள்[93] இந்த 16 பெரும் இராச்சியங்கள் மற்றும் குடியரசுகள் குறித்து அடிக்கடி குறிப்பிடுகின்றன. அவை அங்கம், அஸ்மகம், அவந்தி, சேதி, காந்தாரம், காசி, கம்போஜம், கோசலம், குரு, மகதம், மல்லம், மத்சயம் (அல்லது மச்சா), பாஞ்சாலம், சூரசேனம், வஜ்ஜி, மற்றும் வத்சம் ஆகியவையாகும். சிந்துவெளி நாகரிகத்துக்குப் பிறகு இந்தியாவில் இரண்டாவது முக்கிய நகரமயமாக்கலின் வளர்ச்சியை இக்காலகட்டமானது கண்டது.[94]

முதலாம் செர்கசின் கல்லறையில் இந்துசு (அகாமனிசியப் பேரரசின் இந்திய மாகாணம்) போர் வீரனின் புடைப்புச் சிற்பம். ஆண்டு அண். பொ. ஊ. மு. 480.

சாக்கியர், கோலியர், மல்லகர் மற்றும் லிச்சாவியர் போன்ற தொடக்க கால "குடியரசுகள்" அல்லது கணசங்கங்களானவை[95] குடியரசு அரசாங்கங்களைக் கொண்டிருந்தன. குசி நகரத்தில் மையம் கொண்டிருந்த மல்லகர் மற்றும் வைசாலி நகரத்தில் மையம் கொண்டிருந்த வஜ்ஜி நாடு போன்ற கணசங்கங்கள்[95] பொ. ஊ. மு. 6 ஆம் நூற்றாண்டு காலத்திலேயே நிலை பெற்றிருந்தன. பொ. ஊ. 4 ஆம் நூற்றாண்டு வரை சில பகுதிகளில் இவை நீடித்திருந்தன.[96] வஜ்ஜி மகாஜனபாதத்தின் ஆட்சி செய்த கூட்டமைப்பு இனங்களிலேயே மிகவும் பிரபலமான இனமானது லிச்சாவியர் ஆவர்.[97]

வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுடன் தொல்லியல் ரீதியாக இக்காலகட்டமானது ஒத்துப் போகிறது. குறிப்பாக, நடு கங்கைச் சமவெளியை இது கவனக் குவியமாகக் கொண்டிருந்தது. ஆனால், வட மற்றும் நடு இந்திய துணைக்கண்டத்தின் பரந்த பகுதிகளுக்குள்ளும் கூட இது பரவியிருந்தது. பெரும் அரண்களையுடைய பெரிய நகரங்களின் தோற்றம், குறிப்பிடத்தக்க மக்கள் தொகை வளர்ச்சி, அதிகரிக்கப்பட்ட சமூக படிநிலை அமைப்பு, பரவலான வணிக இணையங்கள், பொதுக் கட்டடக் கலை மற்றும் நீர் கால்வாய்களின் கட்டமைப்பு, தனித்துவமான கைவினை தொழில் துறைகள், எடைகளின் ஓர் அமைப்பு, முத்திரைக் காசு, பிராமி மற்றும் கரோஷ்டி எழுத்துமுறைகளின் வடிவத்தில் எழுத்தானது அறிமுகப்படுத்தப்பட்டது ஆகியவற்றை அம்சங்களாக இந்த பண்பாடானது கொண்டிருந்தது.[98][99] அந்நேரத்தில் உயர்குடி மக்களின் மொழியாக சமசுகிருதம் திகழ்ந்தது. அதே நேரத்தில், வட இந்தியாவின் பொது மக்களின் மொழிகளானவை பிராகிருதங்கள் என குறிப்பிடப்பட்டன.

கௌதம புத்தரின் காலத்தின் போது 16 இராச்சியங்களில் பல இணைந்து நான்கு பெரிய இராச்சியங்களாக உருவாயின. அவை வத்சம், அவந்தி, கோசலம் மற்றும் மகதம் ஆகியவை ஆகும்.[94]

தொடக்க கால மகத அரசமரபுகள்

அண். பொ. ஊ. மு. 600 ஆம் ஆண்டில் மகத அரசு. அரியங்க அரசமரபின் கீழும், பிறகு சிசுநாக அரசமரபின் கீழும் தங்களது தலைநகரமான இராசகிரகத்திலிருந்து இந்த அரசானது விரிவடைந்தது.

பண்டைக்கால இந்தியாவில் 16 மகாஜனபாதங்கள் (சமசுகிருதம்: "பெரும் அதிகார எல்லைகள்") அல்லது இராச்சியங்களில் ஒன்றை மகதமானது அமைத்தது. இந்த இராச்சியத்தின் மையமானது கங்கை ஆற்றுக்குத் தெற்கே அமைந்திருந்த பீகாரின் பகுதியாகும். இதன் முதல் தலைநகரம் இராஜகிரகம் (நவீனகால ராஜ்கிர்) பிறகு பாடலிபுத்திரம் (நவீனகால பட்னா) ஆகியவையாகும். பெரும்பாலான பீகார் மற்றும் வங்காளத்தை முறையே லிச்சாவி மற்றும் அங்க நாடுகளை வென்றதன் மூலம் மகதத்தின் விரிவாக்கமானது உள்ளடக்கியிருந்தது.[100] இதைத் தொடர்ந்து பெரும்பாலான கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் ஒரிசா ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. பண்டைக்கால மகத இராச்சியமானது சைனம் மற்றும் பௌத்த நூல்களில் மிக அதிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் கூட இந்நாடு குறிப்பிடப்பட்டுள்ளது.[101] மகத மக்கள் குறித்த தொடக்க கால குறிப்பானது அதர்வண வேதத்தில் உள்ளது. அங்கம், காந்தாரியர் மற்றும் முசவதியருடன் சேர்த்து இவர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். சைனம் மற்றும் பௌத்தம் வளர்ச்சியடைந்ததில் ஒரு முக்கியமான பங்கை மகதம் ஆற்றியது. இராஜகுமார சமூகம் போன்ற குடியரசு சமூகங்களானவை மகத இராச்சியத்துடன் இணைந்தன. கிராமகர் என்று அழைக்கப்பட்ட தங்களது உள்ளூர் தலைவர்களின் கீழ் கிராமங்களானவை தங்களது சொந்த அவைகளைக் கொண்டிருந்தன. இவர்களது நிர்வாகங்களானவை செயலாட்சி, நீதித்துறை மற்றும் இராணுவச் செயல்பாடுகள் என்று பிரிக்கப்பட்டிருந்தன.

பௌத்த பாளி திருமுறை முதல் சைன ஆகமங்கள் மற்றும் இந்து புராணங்கள் வரையிலான தொடக்க கால ஆதாரங்களானவை மகதமானது பிரத்யோதா வம்சம் மற்றும் ஹரியங்கா வம்சம் (அண். 544–413 பொ. ஊ. மு.) ஆகியவற்றால் சுமார் 200 ஆண்டுகளுக்கு (அண். 600–413 பொ. ஊ. மு.) ஆட்சி செய்யப்பட்டதாகக் குறிப்பிடுகின்றன. ஹரியங்கா வம்சத்தின் மன்னன் பிம்பிசாரன் ஒரு செயல்பாட்டிலிருந்த மற்றும் விரிவாக்கும் கொள்கைக்குத் தலைமை தாங்கினார். தற்போதைய கிழக்கு பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் அமைந்திருந்த அங்க நாட்டை வென்றார். மன்னன் பிம்பிசாரன் அவனது மகன் இளவரசன் அஜாதசத்துருவால் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு கொல்லப்பட்டார். அஜாதசத்துரு மகதத்தின் விரிவடைய வைக்கும் கொள்கையைத் தொடர்ந்தார். இந்த காலகட்டத்தின் போது பௌத்தத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தர் தனது வாழ்நாளில் பெரும்பாலான காலத்தை மகத இராச்சியத்தில் வாழ்ந்தார். புத்தகயையில் தன்னுடைய ஞானத்தைப் பெற்றார். சாரநாத்தில் தனது முதல் சமயச் சொற்பொழிவை ஆற்றினார். முதல் புத்த சங்கமானது இராசகிரகத்தில் நடத்தப்பட்டது.[102] ஹரியங்கா வம்சமானது சிசுநாக வம்சத்தால் (அண். 413–345 பொ. ஊ. மு.) பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டது. கடைசி சிசுநாக ஆட்சியாளரான காலசோகன் பொ. ஊ. மு. 345 இல் மகாபத்ம நந்தனால் அரசியல் கொலை செய்யப்பட்டார். ஒன்பது நந்தர்கள் (மகாபத்ம நந்தன் மற்றும் அவரது எட்டு மகன்கள்) என்று அழைக்கப்பட்டவர்களில் இவர் முதலாமவர் ஆவார்.

நந்தப் பேரரசும், அலெக்சாந்தரின் படையெடுப்பும்

நந்த அரசமரபானது (அண். 345–322 பொ. ஊ. மு.) அதன் உச்ச நிலையில் கிழக்கே வங்காளம் முதல் மேற்கே பஞ்சாப் பகுதி வரையிலும், தெற்கேவிந்திய மலைத்தொடர் வரையிலும் விரிவடைந்திருந்தது.[103] நந்த அரசமரபானது அவர்களுக்கு முன் ஆட்சியிலிருந்த அரியங்கர் மற்றும் சிசுநாகர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட அடித்தளங்களின் மீது கட்டமைக்கப்பட்டது.[104] நந்தப் பேரரசானது ஒரு பெரும் இராணுவத்தைக் கட்டமைத்தது. அது 200,000 காலாட் படை, 20,000 குதிரைப்படை, 2,000 போர் தேர்கள் மற்றும் 3,000 போர் யானைகளைக் (குறைந்தபட்ச மதிப்பீட்டில்) கொண்டிருந்தது.[105][106]

மௌரியப் பேரரசு

மௌரியப் பேரரசு
பேரரசர் அசோகரின் ஆட்சியின் கீழ் அதன் உச்சபட்ச நிலையில் மௌரியப் பேரரசு.
வைசாலியில் பொ. ஊ. மு. 3 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த அசோகரின் தூண்.

மௌரியப் பேரரசு (322–185 பொ. ஊ. மு.) இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளை ஒருங்கிணைத்து ஒற்றை அரசாக மாற்றியது. இந்திய துணைக்கண்டத்தில் எக்காலத்திலும் அமைந்திருந்த மிகப் பெரிய பேரரசாக உருவானது.[107] தன் உச்சபட்ச பரப்பளவின் போது மௌரியப் பேரரசானது வடக்கே இமயமலையின் இயற்கையான எல்லைகள் வரையிலும், கிழக்கே தற்போதைய அசாம் வரையிலும் விரிவடைந்திருந்தது. மேற்கே நவீன கால பாக்கித்தானைத் தாண்டி தற்போதைய ஆப்கானித்தானின் இந்து குஃசு மலைகள் வரையிலும் விரிவடைந்திருந்தது. மகதத்தில் (நவீன கால பீகார்) சாணக்கியனால் (அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடப்படும்) உதவி பெற்ற சந்திரகுப்த மௌரியர் நந்த அரசமரபைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்து இந்தப் பேரரசை நிறுவினார்.[108]

சந்திரகுப்தர் தனது சக்தியை துரிதமாக மேற்கு நோக்கி நடு மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் விரிவாக்கினார். பொ. ஊ. மு. 317 ஆம் ஆண்டு வாக்கில் பேரரசானது வடமேற்கு இந்தியாவை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. செலூக்கியப் பேரரசைத் தோற்றுவித்த முதலாம் செலூக்கசை மௌரியப் பேரரசானது செலுக்கியர்-மெளரியர் போரின் போது தோற்கடித்தது. இவ்வாறாக சிந்து ஆற்றுக்கு மேற்கே மேற்கொண்ட நிலப்பரப்பைப் பெற்றது. சந்திரகுப்தரின் மகனான பிந்துசாரர் பொ. ஊ. மு. 297 வாக்கில் அரியணைக்கு வந்தார். அண். பொ. ஊ. மு. 272 இல் அவர் இறந்த போது இந்திய துணைக் கண்டத்தின் ஒரு பெரும் பகுதியானது மௌரிய மேலாண்மையின் கீழ் இருந்தது. எனினும், கலிங்கப் பகுதியைச் (நவீன கால ஒடிசா) சுற்றியிருந்த பகுதி மௌரியக் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருந்தது. தென்னிந்தியாவுடன் மௌரியப் பேரரசின் வணிகத்தில் அநேகமாக இது தலையிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[109]

பராபர் குகைகளில் ஒன்றான லோம ரிஷியில் மௌரிய செதுக்கப்பட்ட கதவு. ஆண்டு அண். பொ. ஊ. மு. 250.

பிந்துசாரருக்குப் பிறகு அசோகர் மன்னரானார். அசோகரின் ஆட்சிக் காலமானது பொ. ஊ. மு. சுமார் 232 இல் அவரது இறப்பு வரை நீடித்திருந்தது.[110] பொ. ஊ. மு. 260 வாக்கில் கலிங்கர்களுக்கு எதிரான இவரது போர்ப் பயணமானது வெற்றிகரமாக இருந்தாலும் ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் பெரும் வருத்தத்திற்குக் காரணமாக அமைந்தது. இது அசோகர் வன்முறையைக் கைவிடுவதற்கு வழி வகுத்தது. இறுதியாக இவர் பௌத்தத்தைத் தழுவினார்.[109] இவரது இறப்பிற்குப் பிறகு பேரரசானது வீழ்ச்சியடையத் தொடங்கியது. கடைசி மௌரிய ஆட்சியாளரான பிரகத்ரதர் புஷ்யமித்திர சுங்கனால் அரசியல் கொலை செய்யப்பட்டார். புஷ்யமித்திர சுங்கன் சுங்க அரசமரபை நிறுவினார்.[110]

சந்திரகுப்த மௌரியர் மற்றும் அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களின் கீழ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகம், வேளாண்மை, மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகள் ஆகிய அனைத்தும் செழித்து இந்தியா முழுவதும் விரிவடைந்தன. இதற்குக் காரணம் நிதி, நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் ஓர் ஒற்றை ஆற்றல் மிக்க அமைப்பை உருவாக்கியதே ஆகும். மௌரியர்கள் பெரும் தலைநெடுஞ்சாலையைக் கட்டமைத்தனர். இந்திய துணைக் கண்டத்தை நடு ஆசியாவுடன் இணைத்த ஆசியாவின் மிக பழைய மற்றும் மிக நீண்ட முதன்மையான சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.[111] கலிங்கப் போருக்குப் பிறகு அசோகருக்குக் கீழ் பேரரசானது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு அமைதி மற்றும் பாதுகாப்பைக் கண்டது. மௌரிய இந்தியாவும் கூட சமூக ஒற்றுமை, சமய உருமாற்றம் மற்றும் அறிவியல் அறிவு விரிவடைதல் ஆகியவற்றின் சகாப்தத்தைக் கண்டது. சந்திரகுப்த மௌரிய சைனத்தைத் தழுவியதானது சமூக மற்றும் சமய புதுப்பிப்பு மற்றும் அவரது சமூகத்தில் சீர்திருத்தங்களை அதிகரித்தது. அதே நேரத்தில், அசோகர் பௌத்தத்தைத் தழுவியதானது இந்தியா முழுவதும் சமூக மற்றும் அரசியல் அமைதி, மற்றும் அகிம்சையின் ஆட்சிக் காலத்தின் அடித்தளத்தை அமைத்ததாகக் கூறப்படுகிறது.[சான்று தேவை] இலங்கை, தென்கிழக்காசியா, மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் நடுநிலக் கடல் ஐரோப்பாவுக்குள் என இந்திய-நடுநிலக் கடல் பகுதி முழுவதும் பௌத்த தூதுக் குழுக்களுக்கு அசோகர் புரவலராகத் திகழ்ந்தார்.[112]

சாணக்கியனால் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரம் மற்றும் அசோகரின் கல்வெட்டுக்கள் ஆகியவை மௌரிய காலத்தின் முதன்மையான எழுதப்பட்ட பதிவுகளாகத் திகழ்கின்றன. தொல்லியல் ரீதியாக இந்த காலமானது வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்ட பண்பாட்டின் சகாப்தத்தின் கீழ் வருகிறது. மௌரியப் பேரரசு ஒரு நவீன மற்றும் ஆற்றல் மிக்க பொருளாதார மற்றும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதில் பொருட்களின் விற்பனையானது அரசாங்கத்தால் கவனமாக ஒழுங்குபடுத்தப்பட்டது.[113] மௌரிய சமூகத்தில் வங்கித்துறை என்பது இல்லாதிருந்தாலும் கந்து வட்டியானது வழக்கமானதாக இருந்தது. அடிமைத்தனம் குறித்து எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க அளவு பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அடிமை முறையானது பரவலாக இருந்ததை இவை பரிந்துரைக்கின்றன.[114] இந்த காலத்தின் போது ஓர் உயர் தரமுடைய எஃகுவான உவூட்சு எஃகு தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்டு பிறகு சீனா மற்றும் அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.[115]

சங்க காலம்

தென்னிந்தியாவின் நுனியில் அமைந்திருந்த தமிழகமானது சங்க காலத்தின் போது சேரர், சோழர் மற்றும் பாண்டியரால் ஆளப்பட்டது.

பொ. ஊ. மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஊ. 4 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்த சங்க காலத்தின் போது தமிழ் இலக்கியமானது செழித்திருந்தது. தமிழகத்தின் மூவேந்தர் என்று ஒரு சேர அறியப்பட்ட சேரர், சோழர் மற்றும் பாண்டியர் ஆகிய மூன்று தமிழ் அரசமரபுகள் தென்னிந்தியாவின் பகுதிகளை ஆண்டன.[117]

இந்த காலத்தைச் சேர்ந்த தமிழ் மக்களின் வரலாறு, அரசியல், போர்கள் மற்றும் பண்பாடு குறித்து சங்க இலக்கியங்கள் எழுதின.[118] பெரும்பாலும் பிராமணர்களாகவே இருந்த சமசுகிருத எழுத்தாளர்களைப் போல் இல்லாமல் சங்க கால எழுத்தாளர்கள் வேறுபட்ட வகுப்புகள் மற்றும் சமூகப் பின்புலங்களிலிருந்து வந்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பிராமணர் அல்லாதவராவர்.[119]

அண். பொ. ஊ. மு. 300 - அண். பொ. ஊ. 200 வாக்கில் சங்க இலக்கியத்தின் பகுதியாகக் கருதப்படும் 10 நடுத்தர-அளவு நீளமுடைய புத்தகங்களின் தொடர்ச்சியின் தொகுப்புகளான பத்துப்பாட்டானது இயற்றப்பட்டது. எட்டுத்தொகை எனப்படும் எட்டு தொடர்ச்சியான நூல்கள், மேலும் 18 சிறு நூல்களான பதினெண் கீழ்க்கணக்கு ஆகியவையும் இயற்றப்பட்டன. அதே நேரத்தில், தமிழில் தொடக்க காலத்தில் அறியப்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியம் இயற்றப்பட்டது.[120] மேலும், சங்க காலத்தின் போது ஐம்பெருங் காப்பியங்களில் இரண்டு காப்பியங்கள் இயற்றப்பட்டன. அவை, இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் மற்றும் சீத்தலைச்சாத்தனார் எழுதிய மணிமேகலை ஆகியவையாகும். சிலப்பதிகாரமானது சமயம் சாராத நூலாகும். இது கண்ணகியைச் சுற்றி நடந்த நிகழ்வுகளைக் குறிப்பிட்டது.[121] மணிமேகலை சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகும். இது கோவலன் மற்றும் மாதவி ஆகியோரின் பௌத்த பிக்குணியாக மாறிய மகள் மணிமேகலையின் கதையைக் கூறியது.[122][123]

செவ்வியல் காலம் (அண். 200 பொ. ஊ. மு. – 650 பொ. ஊ.)

பொ. ஊ. மு. 3 ஆம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசு மற்றும் பொ. ஊ. 6 ஆம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் முடிவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலமானது இந்தியாவின் "செவ்வியல்" காலம் என்று குறிப்பிடப்படுகிறது.[126] இந்த நூற்றாண்டுகளில் இந்தியாவின் பகுதிகளை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இராச்சியங்கள் ஆண்ட போதும் குப்தப் பேரரசின் காலமானது (4 ஆம்-6 ஆம் நூற்றாண்டு) இந்தியாவின் பொற்காலம் என்று கருதப்படுகிறது. மேலும், சங்க இலக்கியமானது தென்னிந்தியாவில் பொ. ஊ. மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஊ. 3 ஆம் நூற்றாண்டு வரை செழித்திருந்தது.[127] இந்த காலகட்டத்தின் போது இந்தியாவின் பொருளாதாரமானது உலகிலேயே மிகப் பெரியதாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. பொ. ஊ. 1 முதல் பொ. ஊ. 1000 வரை உலகின் மொத்த செல்வத்தில் நான்கில் ஒரு பங்கு முதல் மூன்றில் ஒரு பங்கு வரை இந்தியாவின் பொருளாதாரமானது கொண்டிருந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.[128][129]

தொடக்க கால செவ்வியல் காலம் (அண். 200 பொ. ஊ. மு. – 320 பொ. ஊ.)

சுங்கப் பேரரசு

சுங்கப் பேரரசு
பொ. ஊ. மு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்குட் தூபியில் உள்ள கிழக்கு வாயிலும், வேலிகளும்.
பொ. ஊ. மு. 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுங்கக் கலையில் சித்தரிக்கப்பட்டுள்ள பண்டைக்கால வீணை.
மேற்கு வங்காளத்தில் பொ. ஊ. மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரச குடும்பம்.

சுங்கர்கள் மகதத்திலிருந்து தோன்றினர். சுமார் 187 முதல் பொ. ஊ. மு. 78 வரை நடு மற்றும் கிழக்கு இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கடைசி மௌரியப் பேரரசரை அரசியல் கொலை செய்த புஷ்யமித்திர சுங்கனால் இந்த அரசமரபானது நிறுவப்பட்டது. இந்த அரசின் தலைநகரம் பாடலிபுத்திரமாகும். ஆனால், பாகபத்திரன் போன்ற பிந்தைய பேரரசர்கள் தங்களது அரசவையை விதிஷாவிலும் (நவீன பெசுநகர்) கூட கொண்டிருந்தனர்.[130]

36 ஆண்டுகள் ஆட்சி செய்த புஷ்யமித்திர சுங்கனுக்குப் பின் அவரது மகன் அக்கினிமித்திரன் மன்னரானார். மொத்தமாக 10 சுங்க ஆட்சியாளர்கள் இருந்தனர். எனினும், அக்கினிமித்திரனின் இறப்பிற்குப் பிறகு இப்பேரரசானது துரிதமாக சிதைவடைந்தது.[131] எந்தவொரு சுங்க ஆதிக்கத்திலிருந்து சுதந்திரமாக இயங்கியவையாக இருந்த சிறிய இராச்சியங்கள் மற்றும் நகர-அரசுகளைக் கொண்டதாக பெரும்பாலான வடக்கு மற்றும் நடு இந்தியாவானது இருந்ததாக கல்வெட்டுக்கள் மற்றும் நாணயங்கள் வெளிக் காட்டுகின்றன.[132] அயல் நாட்டு மற்றும் உள் நாட்டு சக்திகள் ஆகிய இருவருடனான ஏராளமான இவர்களது போர்களுக்காக இப்பேரரசானது குறிப்பிடப்படுகிறது. கலிங்கத்தின் மகாமேகவாகன வம்சம், தக்காணத்தின் சாதவாகனர், இந்திய-கிரேக்கர் மற்றும் அநேகமாக பாஞ்சாலர் மற்றும் மதுராவின் மித்திரர் ஆகியோருடன் இவர்கள் சண்டையிட்டனர்.

இக்காலத்தின் போது கலை, கல்வி, தத்துவம் மற்றும் கற்றலின் பிற வடிவங்கள் செழித்திருந்தன. இதில் பர்குட்டில் உள்ள தூபி மற்றும் சாஞ்சியில் உள்ள புகழ்பெற்ற பெரிய தூபி போன்ற கட்டடக்கலை நினைவுச்சின்னங்களும் அடங்கும். கற்றல் மற்றும் கலைக்கு அரச குடும்பம் நிதியுதவி அளிக்கும் பாரம்பரியத்தை நிறுவ சுங்க ஆட்சியாளர்கள் உதவி புரிந்தனர். இப்பேரரசால் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறையானது பிராமி எழுத்து முறையின் ஒரு வகை வடிவம் ஆகும். சமசுகிருதத்தை எழுத இந்த எழுத்து முறை பயன்படுத்தப்பட்டது. இந்து சமய சிந்தனையில் மிக முக்கியமான வளர்ச்சிகளில் சில நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இந்தியப் பண்பாட்டுக்கு புரவலம் வழங்குவதில் சுங்கப் பேரரசு ஒரு தவிர்க்க முடியாத பங்கை ஆற்றியது.

சாதவாகனப் பேரரசு

சாதவாகனப் பேரரசு
வசிஸ்திபுத்திர சிறீ புலமவியின் ஒரு காரீய நாணயத்தில் இந்தியக் கப்பலின் பொறிப்பு. பொ. ஊ. 1 ஆம்-2 ஆம் நூற்றாண்டுகளின் போது சாதவாகனர்களின் கடற்படை, கடல் பயணம் மற்றும் வணிக ஆற்றலுக்கு இது ஒரு சான்றாகும்.

ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதி, மேலும் மகாராட்டிரத்தின் ஜுன்னர் (புனே) மற்றும் பிரதிசுதான் (பைத்தான்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சாதவாகனர் இருந்தனர். பொ. ஊ. மு. 1 ஆம் நூற்றாண்டு முதல் இந்தியாவின் பெரும் பகுதிகளை இப்பேரரசின் நிலப்பரப்பானது கொண்டிருந்தது. மௌரியப் பேரரசுக்குக் கீழ் குறுநில மன்னர்களாக சாதவாகனர் தங்களது காலத்தைத் தொடங்கினார். பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து சுதந்திரத்தை அறிவித்தனர்.

இந்து சமயம் மற்றும் பௌத்ததிற்கு இவர்களது புரவலத் தன்மைக்காக சாதவாகனர் அறியப்படுகின்றனர். எல்லோரா (ஓர் உலகப் பாரம்பரியக் களம்) முதல் அமராவதி வரை பௌத்த நினைவுச் சின்னங்கள் நிறுவப்படுவதற்கு இது காரணமாக அமைந்தது. தங்களது ஆட்சியாளர்களின் உருவத்தைக் கொண்ட நாணயங்களை வெளியிடப்பட்ட முதல் இந்திய அரசுகளில் ஒருவராக இவர்கள் திகழ்ந்தனர். இவர்கள் ஒரு பண்பாட்டுப் பாலத்தை உருவாக்கினர். வணிகத்தில் ஓர் இன்றியமையாத பங்கை ஆற்றினார். மேலும், சிந்து-கங்கைச் சமவெளி மற்றும் இந்தியாவின் தெற்குக் கோடி முனைக்கு இடையிலான சிந்தனைகள் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்துக்குக் காரணமாகத் திகழ்ந்தனர்.

தங்கள் ஆட்சியை நிறுவ சுங்கர், மற்றும் பிறகு மகதத்தின் கண்வ குலம் ஆகியோருடன் இவர்கள் போட்டியிட வேண்டியிருந்தது. சகர், யவனர் மற்றும் பகலவர் போன்ற அயல்நாட்டுப் படையெடுப்பாளர்களுக்கு எதிராக இந்தியாவின் பெரும் பகுதியைப் பாதுகாப்பதில் ஒரு முக்கியமான பங்கை பிற்காலத்தில் இவர்கள் ஆற்றினர். குறிப்பாக, மேற்கு சத்ரபதிகளுடன் இவர்களது போராட்டங்களானவை நீண்ட காலத்திற்கு நீடித்திருந்தன. சாதவாகன அரசமரபின் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களான கௌதமிபுத்ர சதகர்ணி மற்றும் சிறீ யச்ன சதகர்ணி ஆகியோரால் மேற்கு சத்ரபதிகள் போன்ற அயல்நாட்டுப் படையெடுப்பாளர்களைத் தோற்கடிக்கவும், அவர்களது விரிவாக்கத்தை நிறுத்தவும் முடிந்தது. பொ. ஊ. 3 ஆம் நூற்றாண்டில் இப்பேரரசானது சிறிய அரசுகளாகப் பிரிந்தது.[133]

இந்தியாவுக்கு வணிகமும், பயணங்களும்

பட்டுப் பாதை, மசாலாப் பொருள் வணிகம், மற்றும் பழைய உலகத்துடன் இந்தியாவை இணைத்த பண்டைக்கால வழிகள். பழைய உலகத்தின் பண்டைக்கால நாகரிகங்கள் மற்றும் இந்தியாவுக்கு இடையில் பொருட்கள் மற்றும் சிந்தனைகளை இவை எடுத்துச் சென்றன. நில வழிகளானவை சிவப்பு நிறத்திலும். நீர் வழிகளானவை நீல நிறத்திலும் குறிக்கப்பட்டுள்ளன.

கேரளத்தில் மசாலா பொருள் வணிகமானது பழைய உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வணிகர்களை இந்தியாவுக்கு ஈர்த்தது. சுமேரியப் பதிவுகளின் படி, பொ. ஊ. மு. 3,000 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியாவின் தென்மேற்குக் கடற்கரைத் துறைமுகமான முசிறியானது தன்னைத் தானே ஒரு முதன்மையான மசாலாப் பொருள் வணிக மையமாக நிறுவிக் கொண்டது. பொ. ஊ. மு. 562 ஆம் ஆண்டிலேயே கேரளத்தின் கொச்சிக்கு யூத வணிகர்கள் வருகை புரிந்தனர்.[134] சாம்பிராணி வழி மற்றும் உரோமை-இந்திய வழிகளின் நெடுகில் வணிகத்தின் மூலம் கிரேக்க-உரோமை உலகமானது இந்தியாவுக்குப் பின் தொடர்ந்தது.[135] பொ. ஊ. மு. 2 ஆம் நூற்றாண்டின் போது கிரேக்க மற்றும் இந்தியக் கப்பல்கள் ஏடன் போன்ற அரேபியத் துறைமுகங்களில் வணிகத்திற்காகச் சந்தித்துக் கொண்டன.[136] முதலாம் ஆயிரமாண்டின் போது இந்தியாவுக்கான கடல் வழிகளானவை இந்தியர்கள் மற்றும் எத்தியோப்பியர்களால் கட்டுப்படுத்தப்பட்டன. செங்கடலின் கடல்சார் வணிக சக்தியாக எத்தியோப்பியா உருவானது.

மசாலாப் பொருள் வணிகத்தில் ஈடுபட்டிருந்த இந்திய வணிகர்கள் இந்திய சமையல் பாணிகளை தென்கிழக்கு ஆசியாவிற்கு எடுத்துச் சென்றனர். பூர்வ குடிமக்கள் மத்தியில் அங்கு மசாலாப் பொருள் கலவைகள் மற்றும் குழம்புகளானவை பிரபலமாயின.[137] பௌத்தமானது சீனாவுக்குள் பட்டுப் பாதை வழியாக பொ. ஊ. 1 ஆம் அல்லது 2 ஆம் நூற்றாண்டில் நுழைந்தது.[138] புரலவர்களால் கொடை பெற்ற மூலதனங்களைக் குவித்ததன் காரணமாக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் இந்து மற்றும் பௌத்த சமய அமைப்புகளானவை உற்பத்தி மற்றும் வணிகத்தின் மையங்களாக உருவாயின. நில மேலாண்மை, கைவினைப் பயிற்சி, மற்றும் வணிகம் ஆகியவற்றில் ஈடுபட்டன. குறிப்பாக, பௌத்தமானது கடல்சார் வணிகத்தின் நெடுகில் பயணித்தது. எழுத்தறிவு, கலை மற்றும் நாணயப் பயன்பாட்டை ஊக்குவித்தது.[139]

குசானப் பேரரசு

குசானப் பேரரசு
ரபதக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி குசான நிலப்பரப்புகள் (முழுக் கோடு) மற்றும் கனித்கருக்குக் கீழான குசான மேலாட்சிப் பகுதிகளின் அதிகபட்ச விரிவு (புள்ளிக் கோடு)
கனித்கரின் நாணயங்களில் கௌதம புத்தரின் உருவம். பொ. ஊ. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரா கலை.

குசானப் பேரரசானது தற்போதைய ஆப்கானித்தானில் இருந்து வடமேற்கு இந்திய துணைக்கண்டத்திற்குள் தோராயமாக பொ. ஊ. முதலாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வாக்கில் அதன் முதல் பேரரசரான குசலா கத்பிசசின் தலைமைத்துவத்தின் கீழ் விரிவடைந்தது. குசானர் சாத்தியாமன வகையிலே ஒரு தொச்சரிய மொழி பேசிய,[140] உயேசி கூட்டமைப்பின் ஐந்து பிரிவுகளில் ஒரு பழங்குடியினமாகத் திகழ்ந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[141][142] அவரின் பேரன் கனித்கரின் காலத்தின் வாக்கில் இப்பேரரசானது பெரும்பாலான ஆப்கானித்தானையும்,[143] பிறகு இந்திய துணைக் கண்டத்தின் வடக்குப் பகுதிகளையும் உள்ளடக்கியிருக்கும் அளவுக்கு விரிவடைந்தது.[144]

பேரரசர் கனித்கர் பௌத்தத்திற்கு ஒரு பெரும் புரவலராகத் திகழ்ந்தார். எனினும், குசானர் தெற்கு நோக்கி விரிவடைந்த போது இவர்களின் பிந்தைய நாணயங்களில் காணப்பட்ட தெய்வங்களானவை இப்பேரரசின் புதிய இந்து பெரும்பான்மையை பிரதிபலிக்கத் தொடங்கின.[145][146] கனித்கர் குறித்து வரலாற்றாளர் வின்சென்ட் ஸ்மித் குறிப்பிடுவதாவது:

பௌத்தத்தின் வரலாற்றில் ஓர் இரண்டாம் அசோகராகக் கனித்கர் தன் பங்கை ஆற்றினார்.[147]

பட்டுப் பாதையின் வணிகத்துடன் இந்தியப் பெருங்கடலின் கடல்சார் வணிகத்தை குசானப் பேரரசானது சிந்துவெளி வழியாக இணைத்தது. நீண்ட-தொலைவு வணிகத்தை, குறிப்பாக, சீனா மற்றும் உரோமுக்கு இடையில் ஊக்குவித்தது. அப்போது தொடங்கி, வளர்ந்து கொண்டிருந்த காந்தாரக் கலை மற்றும் மதுரா கலைக்கு புதிய பாணிகளை குசானர் கொண்டு வந்தனர். மதுரா கலையானது குசான ஆட்சியின் போது அதன் உச்சநிலையை அடைந்தது.[148] குசான ஆட்சியின் கீழான அமைதியான காலமானது பாக்ஸ் குசானா (பொருள்: குசான அமைதி) என்று அறியப்படுகிறது. மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவில் இவர்களது பேரரசானது சிதைவடையத் தொடங்கியது. இவர்களின் கடைசியாக அறியப்பட்ட பெரும் பேரரசர் முதலாம் வாசுதேவன் ஆவார்.[149][150]

செவ்வியல் காலம் (அண். 320 – 650 பொ. ஊ.)

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு
முதலாம் குமாரகுப்தருக்குக் கீழ் அதன் உச்சபட்ச நிலப்பரப்பளவு விரிவின் போது தோராயமாக பொ. ஊ. 420 இல் குப்தப் பேரரசு.
புத்தகயையில் உள்ள மகாபோதிக் கோயிலின் தற்போதைய கட்டட அமைப்பானது பொ. ஊ. 5 ஆம் நூற்றாண்டில் குப்த சகாப்தத்தின் போது கட்டமைக்கப்பட்டதாகும். புத்தர் ஞானம் அடைந்ததாகக் கூறப்படும் இடமானது இங்கு குறிக்கப்பட்டுள்ளது.

குப்தர் காலமானது அதன் பண்பாட்டுப் புத்தாக்கங்களுக்காக அறியப்படுகிறது. குறிப்பாக, இலக்கியம், கட்டடக் கலை, சிற்பக்கலை மற்றும் ஓவியக்கலையில் இவை நடைபெற்றன.[151] காளிதாசன், ஆரியபட்டர், வராகமிகிரர், விஷ்ணு சர்மா, மற்றும் வாத்சாயனர் போன்ற அறிஞர்களை குப்தர் காலமானது உருவாக்கியது. இந்தியப் பண்பாட்டில் ஒரு திருப்பு முனையை குப்தர் காலமானது குறித்தது. குப்தர்கள் தங்களது ஆட்சியை முறைமைப்படுத்துவதற்காக வேதகால பலியீடல்களை நடத்தினர். ஆனால், பிராமண மரபு வழிக்கு மாற்றான பௌத்தத்திற்கும் கூட இவர்கள் புரவலம் வழங்கினர். முதலாம் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர், மற்றும் இரண்டாம் சந்திரகுப்தர் ஆகிய முதல் மூன்று குப்த ஆட்சியாளர்களின் இராணுவ சாதனைகளானவை பெரும்பாலான இந்தியாவை இவர்களது தலைமைத்துவத்தின் கீழ் கொண்டு வந்தது.[152] குப்தர் சகாப்தத்தின் போது அறிவியலும், அரசியல் நிர்வாகமும் புதிய உயரங்களைத் தொட்டன. வலிமையான வணிக உறவு முறைகளும் கூட இப்பகுதியை ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாக மாற்றின. அண்டைப் பகுதி இராச்சியங்கள் மற்றும் பகுதிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு மையமாக இப்பேரரசை நிறுவின.[153][154] குப்த ஆட்சிக்குக் கீழான அமைதிக் காலமானது பாக்ஸ் குப்தா என்று அறியப்படுகிறது.

அல்கான் ஊணர்களின் வருகை வரை பிந்தைய குப்தர்கள் வெற்றிகரமாக வடமேற்கு இராச்சியங்களை எதிர்த்துத் தாக்குப் பிடித்தனர். தங்கள் தலைநகரத்தை பாமியானில் அமைத்து பொ. ஊ. 5 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் ஆப்கானித்தானத்தில் தங்களைத் தாமே அல்கான் ஊணர்கள் நிறுவினர்.[155] எனினும், தக்காணம் உள்ளிட்ட பெரும்பாலான தென்னிந்தியாவானது இந்த நிகழ்வுகளால் பெரும்பாலும் பாதிக்கப்படாமல் இருந்தது.[156][157]

வாகாடகப் பேரரசு

வாகாடகப் பேரரசானது தக்காணப் பகுதியிலிருந்து பொ. ஊ. 3 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றியது. இவர்களது நாடானது வடக்கே மால்வாவின் தெற்கு விளிம்புகள் மற்றும் குசராத்து வரையிலும், தெற்கே துங்கபத்திரை ஆறு, மேற்கே அரபிக்கடல், கிழக்கே சத்தீசுகரின் விளிம்புகள் வரையிலும் விரிவடைந்திருந்ததாக நம்பப்படுகிறது. தக்காணத்தில் சாதவாகனருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மிக முக்கியமான அரசமரபினர் இவர்கள் ஆவர். வட இந்தியாவிலிருந்த குப்தர்களுக்கு சமகாலத்தவர்களாக தக்காணத்தில் இவர்கள் திகழ்ந்தனர். இவர்களுக்குப் பிறகு தக்காணத்தில் விஷ்ணுகுந்தினப் பேரரசு ஆட்சிக்கு வந்தது.

கலைகள், கட்டடக் கலை மற்றும் இலக்கியத்துக்குப் புரவலர்களாகத் திகழ்ந்ததற்காக வாகாடகர் குறிப்பிடப்படுகின்றனர். அஜந்தா குகைகளின் (ஓர் உலகப் பாரம்பரியக் களம்) குடைவரை பௌத்த விகாரங்கள் மற்றும் சைத்யங்கள் ஆகியவை வாகாடகப் பேரரசன் அரிசேனனின் புரவின் கீழ் கட்டமைக்கப்பட்டதாகும்.[158][159]

காமரூப இராச்சியம்

மதன் காமதேவன் சிதிலங்களில் காணப்படும் காமரூப மன்னர்களின் செப்புத் தகட்டு முத்திரை.

குப்தப் பேரரசின் எல்லைப்புற இராச்சியங்களாக காமரூபா (கீழ் அசாம் கோட்டம்)[160] மற்றும் தவகா (நடு அசாம்)[161] ஆகியவற்றை சமுத்திரகுப்தரின் 4 ஆம் நூற்றாண்டு அலகாபாத் தூண் கல்வெட்டானது குறிப்பிடுகிறது. தவகாவும் பிறகு காமரூபத்தால் இணைத்துக் கொள்ளப்பட்டது. காமரூபமானது கரதோயா ஆறு முதல் தற்கால சதியா வரையிலான பகுதி வரை விரிவடைந்திருந்த ஒரு பெரிய இராச்சியமாக வளர்ச்சியடைந்தது. ஒட்டு மொத்த பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு, வடக்கு வங்காளம், வங்காள தேசத்தின் பகுதிகள் மற்றும் சில நேரங்களில் பூர்ணியா மற்றும் மேற்கு வங்காளத்தின் பகுதிகளை இது கொண்டிருந்தது.[162]

வர்மன் (அண். 350–650 பொ. ஊ.), மிலேச்ச அரசமரபு (அண். 655–900 பொ. ஊ.) மற்றும் காமரூப-பாலர் (அண். 900–1100 பொ. ஊ.) ஆகிய மூன்று அரசமரபுகளால் அவற்றின் தலைநகரங்களான முறையே தற்கால குவகாத்தி (பிரக்சியோதிசுபுரம்), தேசுபூர் (தேஜ்பூர்), மற்றும் குவகாத்தி (துர்சயா) ஆகியவற்றிலிருந்து முறையே இது ஆளப்பட்டது. வர்ம மன்னனான பாஸ்கரவர்மனின் ஆட்சிக் காலத்தின் (அண். 600–650 பொ. ஊ) போது சீனப் பயணியான சுவான்சாங் இப்பகுதிக்கு வருகை புரிந்திருந்தார். தனது பயணங்களைப் பதிவு செய்தார். பின்னர், பலவீனமடைந்து, சிதைவடைந்ததற்குப் பிறகு (காமரூப-பாலருக்குப் பிறகு), காமரூப பாரம்பரியமானது அண். பொ. ஊ. 1255 வரை முதலாம் சந்திர (அண். 1120–1185 பொ. ஊ.) மற்றும் இரண்டாம் சந்திர (அண். 1155–1255 பொ. ஊ.) அரசமரபுகளால் ஓரளவுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.[163] முசுலிம் துருக்கியர்களின் படையெடுப்புக்குப் பிறகு, காமரூபநகரத்தின் சந்தியாவுக்குக் (வடக்கு குவகாத்தி) கீழான கென் அரசமரபானது தனது தலைநகரத்தை காமதாபூருக்கு (வடக்கு வங்காளம்) மாற்றிய போது, காமரூப இராச்சியமானது 13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் போது முடிவுக்கு வந்தது. சந்தியா காமதா இராச்சியத்தை நிறுவினார்.[164]

பல்லவப் பேரரசு

இரண்டாம் நரசிம்ம பல்லவனால் மாமல்லபுரத்தில் கட்டப்பட்ட மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் (ஓர் உலகப் பாரம்பரியக் களம்).

வடக்கின் குப்தர்களுடன் சேர்த்து 4 ஆம் - 9 ஆம் நூற்றாண்டுகளின் போது பல்லவர் இந்திய துணைக் கண்டத்தின் தெற்குப் பகுதியில் சமசுகிருத முன்னேற்றத்திற்குப் பெரும் புரவலர்களாகத் திகழ்ந்தனர். கிரந்தம் என்று அழைக்கப்படும் ஓர் எழுத்து முறையில் முதல் சமசுகிருதக் கல்வெட்டுக்களை பல்லவ ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது.[165] தென்கிழக்காசிய நாடுகளுடன் தொடக்க காலப் பல்லவர்கள் வேறுபட்ட தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மாமல்லபுரம், காஞ்சிபுரம் மற்றும் பிற பகுதிகளில் சில மிக முக்கியமான இந்துக் கோயில்கள் மற்றும் கல்வி நிலையங்களைக் கட்டமைக்க திராவிட கட்டடக்கலையைப் பல்லவர் பயன்படுத்தினர். பெரும் புலவர்களின் வளர்ச்சியை இவர்களது ஆட்சிக் காலமானது கண்டது. வெவ்வேறு தெய்வங்களுக்குக் கோயில்களை அர்ப்பணிக்கும் பழக்க வழக்கமானது நடப்பு பாணியாக பல்லவர் காலத்தில் உருவானது. நேர்த்தியான கலை நயம் உள்ள கோயில் கட்டடக்கலை மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் சிற்பக்கலை பாணி ஆகியவை இதைத் தொடர்ந்தன.[166]

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (571–630 பொ. ஊ.) மற்றும் முதலாம் நரசிம்ம பல்லவன் (630–668 பொ. ஊ.) ஆகியோரின் ஆட்சிக் காலத்தின் போது பல்லவர்கள் தங்களது சக்தியின் உச்சத்தை அடைந்தனர். 9 ஆம் நூற்றாண்டின் முடிவு வரை தெலுங்கு, மற்றும் தமிழகத்தின் வடக்குப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தினர்.[167]

கதம்பப் பேரரசு

தோத்தகத்தவல்லியில் கதம்ப சிகரமானது (கோபுரம்) உச்சியில் கலசத்துடன் (கோபுரமுகடு) காணப்படுகிறது.

கதம்பர் கருநாடகத்தில் இருந்து தோன்றியவர் ஆவர். பொ. ஊ. 345 இல் மயூரசர்மாவால் இந்தப் பேரரசானது நிறுவப்பட்டது. ஏகாதிபத்திய பரிமாணங்களுக்கு வளர்ச்சியடையக் கூடிய ஆற்றலை பிந்தைய காலங்களில் இப்பேரரசு காட்டியது. சாத்தியமான வகையிலே சில பூர்வீகப் பழங்குடியினங்களின் உதவியுடன் பல்லவர்களின் இராணுவத்தை மன்னன் மயூரசர்மா தோற்கடித்தார். ககுஸ்தவர்மாவின் ஆட்சிக் காலத்தின் போது கதம்பர்களின் புகழானது அதன் உச்சத்தை அடைந்தது. வட இந்தியாவின் குப்த மன்னர்கள் திருமண உறவு முறைகளை ஏற்படுத்திக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க ஆட்சியாளர் ககுஸ்தவர்மா ஆவார். கதம்பர்கள் மேலைக் கங்கருக்கு சமகாலத்தவர் ஆவர். முழுவதுமான தன்னாட்சியுடன் இந்நிலத்தை ஆண்ட தொடக்க கால பூர்வீக இராச்சியங்களை இவர்கள் அமைத்திருந்தனர். சாளுக்கிய மற்றும் இராட்டிரகூட பேரரசுகள் போன்ற பிந்தைய கன்னடப் பேரரசுகளுக்கு ஒரு குறுநில மன்னர்களாக இந்த அரசாங்கமானது பின்னர் தொடர்ந்து 500 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்தது. இக்காலத்தில் இவர்கள் சிறு அரசமரபுகளாகப் (கோவாவின் கதம்பர்கள், அலசியின் கதம்பர்கள், மற்றும் கங்கலின் கதம்பர்கள்) பிரிந்தனர்.

ஹர்ஷாவின் பேரரசு

பேரரசர் ஹர்ஷவர்தனரின் நாணயம். அண். பொ. ஊ. 606-647.[168]

ஹர்ஷவர்தனர் வட இந்தியாவை பொ. ஊ. 606 முதல் 647 வரை ஆண்டார். பிரபாகராவர்தனரின் மகனும், இராச்சியவர்தனரின் தம்பியும் இவராவார். இவர்கள் அனைவருமே புஷ்யபூதி வம்சத்தின் உறுப்பினர்களாவர். ஹர்ஷவர்தனர் தற்கால அரியானாவில் தானேசரை ஆண்டு வந்தார்.

6 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முந்தைய குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு வட இந்தியாவானது சிறிய குடியரசுகள் மற்றும் முடியாட்சி நாடுகள் என்ற நிலைக்கு மீண்டும் திரும்பியது. இதனால் ஏற்பட்ட அதிகார வெற்றிடமானது தானேசரின் வர்தனர்களின் வளர்ச்சிக்குக் காரணமானது. பஞ்சாப்பிலிருந்து நடு இந்தியா வரையிலான குடியரசுகள் மற்றும் முடியாட்சிகளை இவர்கள் ஒன்றிணைக்கத் தொடங்கினர். ஹர்ஷாவின் தந்தை மற்றும் அண்ணனின் இறப்பிற்குப் பிறகு பேரரசின் பிரதிநிதிகள் பொ. ஊ. 606 ஏப்ரலில் ஹர்ஷாவுக்குப் பேரரசனாக மகுடம் சூட்டினார். இவருக்கு மகாராஜா என்ற பட்டத்தைக் கொடுத்தனர்.[169] இவரது பேரரசானது அதன் உச்ச நிலையில் பெரும்பாலான வட மற்றும் வட மேற்கு இந்தியாவை உள்ளடக்கியிருந்தது. கிழக்கே காமரூப பேரரசு வரையிலும், தெற்கே நருமதை வரையிலும் இது விரிவடைந்திருந்தது. இறுதியாக கன்னோசியை (தற்கால உத்தரப் பிரதேசம்) தன் தலைநகராக இவர் ஆக்கினார். பொ. ஊ. 647 வரை ஆட்சி செய்தார்.[170]

இவரது ஆட்சியில் இருந்த அமைதியும், செழிப்பும் இவரது அரசவையை பல நாடுகளிலும் இருந்து வரப் பெற்றவர்களைக் கொண்டிருந்த ஒரு மையமாக ஆக்கியது. அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் சமயம் சார்ந்தவர்களை இவரது அரசவை ஈர்த்தது.[170] இக்காலத்தின் போது சூரிய வழிபாட்டிலிருந்து பௌத்தத்திற்கு ஹர்ஷர் மதம் மாறினார்.[171] ஹர்ஷரின் அரசவைக்கு சீனப் பயணியான சுவான்சாங் வருகை புரிந்தார். இவரைப் பற்றி மிக நல்ல கருத்துகளை எழுதினார். இவரது நீதி மற்றும் ஈகைக் குணத்தைப் புகழ்ந்தார்.[170] சமசுகிருதக் கவிஞர் பாணபட்டரால் எழுதப்பட்ட இவரது சுயசரிதையான ஹர்சசரிதம் ("ஹர்ஷாவின் செயல்கள்") தானேசருடன் இவரது தொடர்பை விளக்குகிறது. இரண்டு அடுக்கு தவலகிரகத்துடன் (வெள்ளை மாளிகை) கூடிய அரண்மனையைக் குறிப்பிடுகிறது.[172][173]

தொடக்க கால நடுக்காலம் (அண். 650 – 1200)

தொடக்க கால நடுக் காலமானது இந்தியாவில் பொ. ஊ. 6 ஆம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் முடிவுக்குப் பிறகு தொடங்கியது.[126] இந்து சமயத்தின் "பிந்தைய செவ்வியல் காலத்தையும்" கூட இக்காலம் உள்ளடக்கியிருந்தது. 7 ஆம் நூற்றாண்டில் ஹர்ஷப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இது தொடங்கியது.[174] வட இந்தியாவில் தில்லி சுல்தானகத்தின் வளர்ச்சியுடன் 13 ஆம் நூற்றாண்டில் இச்செவ்வியல் காலம் முடிவுக்கு வந்தது.[175] ஏகாதிபத்திய கன்னோசியின் தொடக்கமானது மூன்று அரசமரபுகளுக்கு இடையேயான போர்களுக்கு வழி வகுத்தது. தென்னிந்தியாவில் 1279 இல் மூன்றாம் இராசேந்திர சோழனின் இறப்புடன் இடைக்காலச் சோழர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. எனினும், செவ்வியல் காலத்தின் சில அம்சங்களானவை 17 ஆம் நூற்றாண்டு வாக்கில் தெற்கில் விசயநகரப் பேரரசு வீழ்ச்சியடையும் வரை தொடர்ந்திருந்தன.

5 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை இசுரதா பலியிடல்களானவை குறைந்தன. சைவம், வைணவம் மற்றும் சக்தியியம் ஆகியவற்றுக்கான ஆதரவானது அரசவைகளில் விரிவடைந்தது. அதே நேரத்தில், பௌத்தத்துக்கான ஆதரவானது குறைந்தது.[176] கிராமப்புற பொது மக்கள் மத்தியில் பௌத்தத்திற்கு ஈர்ப்புத் தன்மை இல்லாமல் இருந்ததால், இந்து சமய கலப்பில் உருவாகிய பிராமணிய இந்து சமயத்தை மக்கள் தழுவினர். இது மற்றும் வணிக சமூகங்கள் மற்றும் அரச குடும்ப உயர்குடியினரிடமிருந்து வந்த நிதி ஆதரவு குறைந்தது ஆகியவை பௌத்தம் வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியமான காரணிகளாகத் திகழ்ந்தன.[177]

7 ஆம் நூற்றாண்டில் குமாரிலபட்டர் மீமாஞ்சம் தத்துவத்தைக் கொண்ட தனது பள்ளியை வரையறுத்தார். வேதகால சடங்குகளின் நிலைக்காக வாதிட்டார்.[178]

8 ஆம் நூற்றாண்டு முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை மால்வாவின் கூர்ஜர பிரதிகாரர், வங்காளத்தின் பாலர், மற்றும் தக்காணத்தின் இராட்டிரகூடர் ஆகிய மூன்று அரசமரபுகள் வட இந்தியாவின் கட்டுப்பாட்டிற்காகப் போட்டியிட்டன. சென் பேரரசானது பின்னர் பாலப் பேரரசின் கட்டுப்பாட்டைப் பெற்றது. கூர்ஜர பிரதிகாரர் பல்வேறு அரசுகளாகச் சிதறுண்டனர். இதில் குறிப்பிடத்தக்கவை மால்வா இராச்சியம், பந்தேல்கந்த் இராச்சியம், தகலா இராச்சியம், அரியானாவின் தோமரா மற்றும் சம்பர் இராச்சியம் ஆகியவையாகும். இந்த அரசுகளானவை தொடக்க கால இராசபுத்திர இராச்சியங்களில் சிலவாகும்.[179] அதே நேரத்தில், இராட்டிரகூடர் மேலைச் சாளுக்கியரால் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.[180] இக்காலத்தின் போது சாளுக்கியப் பேரரசு தோன்றியது. சாளுக்கியர்கள் மரு-கூர்ஜரா கட்டடக்கலை பாணியில் தில்வாரா கோயில், மொதேரா சூரிய கோயில், இராணியின் படிக்கிணறு போன்றவற்றைக் கட்டமைத்தனர்.[181] அவர்களது தலைநகரமான அன்கில்வாரா (நவீன பதான்) இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. இந்நகரத்தின் மக்கள் தொகையானது அண். 1000 ஆம் ஆண்டில் 1 இலட்சம் பேர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

முதலாம் இராஜராஜ சோழன் மற்றும் இராசேந்திர சோழன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தின் போது இடைக்காலச் சோழர்கள் ஒரு முக்கிய சக்தியாக உருவாயினர். இராசேந்திர சோழன் வெற்றிகரமாக 11 ஆம் நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசியா மற்றும் இலங்கையின் பகுதிகள் மீது படையெடுத்தார்.[182] காசுமீரிய கார்கோடகப் பேரரசின் பேரரசராக இலலிதாதித்ய முக்தாபிதன் (ஆ. 724–760) திகழ்ந்தார். 625 முதல் 1003 வரை வடமேற்கு இந்தியாவில் இப்பேரரசானது செல்வாக்கு பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து லெகரா பேரரசு ஆட்சிக்கு வந்தது. கல்கணர் தன்னுடைய இராஜதரங்கிணியில் வட இந்தியா மற்றும் நடு ஆசியாவில் ஆக்ரோஷமான இராணுவ போர்ப் பயணங்களுக்கு மன்னர் இலலிதாதித்யன் தலைமை தாங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.[183][184][185]

இந்து ஷாகி அரசமரபானது கிழக்கு ஆப்கானித்தான், வடக்கு பாக்கித்தான் மற்றும் காசுமீரின் பகுதிகளை 7 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் 11 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஆட்சி செய்தது. அதே நேரத்தில், ஒடிசாவில் கீழைக் கங்கப் பேரரசானது ஆட்சிக்கு வந்தது. இந்து கட்டடக் கலையை மேம்படுத்தியதற்காக இப்பேரரசு அறியப்படுகிறது. ஜெகன்நாதர் கோயில் மற்றும் கொனார்க் சூரியக் கோயில் ஆகியவை இவர்கள் உருவாக்கிய மிக முக்கியமான கட்டடங்கள் ஆகும். மேலும், கலை மற்றும் இலக்கியத்துக்குப் புரவலர்களாகவும் இவர்கள் திகழ்ந்தனர்.

பிந்தைய குப்த அரசமரபு

பிந்தைய குப்தர்களின் நாட்டின் வரைபடம்

பிந்தைய குப்த அரசமரபானது பொ. ஊ. 6 ஆம் மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கிழக்கு இந்தியாவில் மகதப் பகுதியை ஆட்சி செய்தது. மகத்தின் ஆட்சியாளர்களாக ஏகாதிபத்திய குப்தர்களுக்குப் பிறகு பிந்தைய குப்தர்கள் பதவிக்கு வந்தனர். ஆனால், இரு அரசமரபுகளையும் தொடர்புபடுத்தும் எந்த ஓர் ஆதாரமும் கிடைக்கப் பெறவில்லை. இவை இரு தனித்தனிக் குடும்பங்களாக எண்ணப்படுகின்றன.[186] இவர்களது ஆட்சியாளர்களின் பெயரானது "-குப்தா" என்ற பின்னொட்டுடன் முடிவடைந்ததால் பிந்தைய குப்தர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர். ஏகாதிபத்திய குப்தர்களின் முறைமை வாய்ந்த தொடர்ச்சியாளர்களாகத் தங்களைத் தாமே காட்டிக் கொள்வதற்காக இவர்கள் இப்பெயரைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[187]

சாளுக்கியப் பேரரசு

சாளுக்கியப் பேரரசானது தெற்கு மற்றும் நடு இந்தியாவின் பெரும் பகுதிகளை ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆனால் தனித்தனியான மூன்று அரசமரபுகளாக 6 ஆம் மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஆட்சி செய்தது. இதில் தொடக்க கால அரசமரபானது "பாதமி சாளுக்கியர்" என்று அறியப்படுகின்றனர். 6 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாதபியில் (நவீன பாதமி) இருந்து இவர்கள் ஆட்சி செய்தனர். பனவாசியின் கதம்ப இராச்சியத்தின் வீழ்ச்சியின் போது தங்களது சுதந்திரத்தை பாதமி சாளுக்கியர் உறுதிப்படுத்தத் தொடங்கினர். இரண்டாம் புலிகேசியின் ஆட்சிக் காலத்தின் போது முக்கியத்துவம் பெற்ற நிலைக்கு துரிதமாக வளர்ச்சியடைந்தனர். தென்னிந்தியாவின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல் கல்லாக சாளுக்கியர்களின் ஆட்சியானது குறிக்கப்படுகிறது. கருநாடகத்தின் வரலாற்றில் ஒரு பொற்காலமாகக் கருதப்படுகிறது. பாதமி சாளுக்கியர் ஆட்சிக்கு வந்த போது தென்னிந்தியாவின் அரசியல் சூழ்நிலையானது சிறிய இராச்சியங்கள் என்பதிலிருந்து பெரிய பேரரசுகள் என்று மாற்றமடைந்தது. தென்னிந்தியாவை அடிப்படையாகக் கொண்ட இந்த இராச்சியமானது காவிரி மற்றும் நருமதை ஆறுகளுக்கு இடைப்பட்ட அனைத்து பகுதிகளையும் கட்டுப்பாட்டில் எடுத்து நிலைப்படுத்தியது. செயலாற்றல் மிக்க நிர்வாகத்தின் உருவாக்கம், அயல்நாட்டு வணிகம் மற்றும் "சாளுக்கிய கட்டடக்கலை" என்ற அழைக்கப்பட்ட ஒரு புதிய பாணி கட்டடக்கலையின் உருவாக்கம் ஆகியவற்றை இப்பேரரசின் காலமானது கண்டது. தெற்கு மற்றும் நடு இந்தியாவின் பகுதிகளை 550 மற்றும் 750 க்கு இடையில் கருநாடகாவின் பாதமியிலிருந்தும், பிறகு மீண்டும் 970 மற்றும் 1190 க்கு இடையில் கல்யாணியிலிருந்தும் சாளுக்கிய அரசமரபானது ஆண்டது.

இராட்டிரகூடப் பேரரசு

753 வாக்கில் தந்திதுர்கனால் நிறுவப்பட்ட[188] இராட்டிரகூடப் பேரரசானது அதன் தலைநகரான மல்கெடாவில் இருந்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்தது.[189] தம் உச்ச நிலையின் போது இராட்டிரகூடர் வடக்கே தோவாப்பிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரை ஆட்சி புரிந்தனர். கட்டடக் கலை மற்றும் இலக்கியச் சாதனைகளுக்கு இது ஒரு செழிப்பான காலமாகத் திகழ்ந்தது.[190][191]

இந்த அரசமரபின் தொடக்க கால ஆட்சியாளர்கள் இந்து சமயத்தைப் பின்பற்றியவர்களாக இருந்தனர். ஆனால், இந்த ஆட்சியாளர்கள் சைனத்தால் வலிமையான தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.[192] இந்த அரசமரபால் உருவாக்கப்பட்ட திறமை வாய்ந்த நிர்வாகிகளின் நீண்ட தொடர்ச்சியில் மிகப் பிரபலமானவர்களாக மூன்றாம் கோவிந்தனும், முதலாம் அமோகவர்சனும் திகழ்ந்தனர். அமோகவர்சன் ஓர் எழுத்தாளரும் ஆவார். தொடக்க காலத்தில் அறியப்பட்ட, புலமை குறித்த கன்னட நூலான கவிராஜமார்க்கத்தை இவர் எழுதினார்.[189][193] திராவிட பாணியில் கட்டடக்கலையானது இவர்களது ஆட்சியில் ஒரு மைல் கல்லை அடைந்தது. எல்லோராவில் காணப்படும் கைலாசநாதர் கோயிலில் இதற்கு மிக நேர்த்தியான எடுத்துக்காட்டைக் காணலாம். காசி விசுவநாதர் கோயில் மற்றும் கருநாடகத்தின் பட்டடக்கல்லில் உள்ள சைன நாராயணர் கோயில் ஆகியவை இவர்களின் பிற முக்கியமான பங்களிப்புகள் ஆகும்.

அரேபியப் பயணியான சுலைமான் இராட்டிரகூடப் பேரரசை உலகின் நான்கு பெரும் பேரரசுகளில் ஒன்று என்று குறிப்பிட்டார்.[194] தென்னிந்திய கணிதவியலுக்கு பொற்காலத்தின் தொடக்கத்தை இராட்டிரகூட காலமானது குறித்தது. மிகச் சிறந்த தென்னிந்திய கணிதவியலாளரான மகாவீரர் நடுக்கால தென்னிந்திய கணிதவியலாளர்கள் மீது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.[195] ஒரு பல்வேறுபட்ட மொழிகளில் செயலாற்றிய எழுத்தாளர்களுக்கு இராட்டிரகூட ஆட்சியாளர்கள் புரவு வழங்கினர்.[189]

கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு

சிந்து ஆற்றுக்குக் கிழக்கே அரேபிய இராணுவங்கள் வருவதைத் தடுத்ததில் முக்கியமான பங்கை கூர்ஜர-பிரதிகாரர் ஆற்றினர். இந்தியாவில் உமையதுகளின் படையெடுப்புக் காலத்தின் போது ஜுனைத் மற்றும் தமீன் ஆகியோரின் கீழான அரேபிய இராணுவத்தை நாகபட்டர் தோற்கடித்தார்.[196] இரண்டாம் நாகபட்டருக்குக் கீழ் கூர்ஜர-பிரதிகாரர் இந்தியாவில் மிக சக்தி வாய்ந்த அரசமரபாக உருவாயினர். இவருக்குப்பின் இவரது மகன் இராமபத்திரன் ஆட்சிக்கு வந்தார். அவர் குறுகிய காலத்திற்கு ஆட்சி புரிந்தார். அவருக்குப் பின் அவரது மகன் மிகிர போஜன் ஆட்சிக்கு வந்தார். போஜன் மற்றும் அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த முதலாம் மகேந்திரபாலன் ஆகியோரின் கீழ் பிரதிகாரப் பேரரசானது செழிப்பு மற்றும் சக்தியில் அதன் உச்சத்தை அடைந்தது. மகேந்திரபாலனின் ஆட்சிக் காலம் வாக்கில் இப்பேரரசின் நிலப்பரப்பானது மேற்கே சிந்துவின் எல்லை முதல் கிழக்கே பீகாரின் எல்லை வரையிலும், வடக்கே இமயமலையிலிருந்து தெற்கே நருமதை ஆறு வாக்கிலும் விரிவடைந்தது இருந்தது.[197] இந்த விரிவாக்கமானது இராட்டிரகூடர் மற்றும் பாலப் பேரரசுடன் இந்திய துணைக்கண்டத்தின் கட்டுப்பாட்டிற்காக இவர்களின் ஒரு மும்முனைப் போட்டிக்குக் காரணமானது.

பத்தாம் நூற்றாண்டின் முடிவு வாக்கில் இப்பேரரசின் ஏராளமான குறுநில மன்னர்கள் கூர்ஜர-பிரதிகாரரின் தற்காலிக பலவீன நிலையைத் தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்தி தங்களது சுதந்திரத்தை அறிவித்தனர். இதில் குறிப்பிடத்தக்கவர்கள் மால்வா இராச்சியம், பந்தேல்கந்து இராச்சியம், அரியானாவின் தோமரா, சம்பார் இராச்சியம்[198] மற்றும் தகாலா இராச்சியம் ஆகியவையாகும்.[சான்று தேவை]

ககதவால அரசமரபு

தற்கால இந்திய மாநிலங்களான உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரின் பகுதிகளை ககதவால அரசமரபானது 11 ஆம் மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளின் போது ஆட்சி செய்தது. இவர்களது தலைநகரமானது வாரணாசியில் அமைந்திருந்தது.[200]

கர்னாட் அரசமரபு

கர்னாட் தலைநகரமான சிம்ரௌன்கத்தைச் சேர்ந்த ஒரு தூண்

பொ. ஊ. 1097இல் மிதிலையின் கர்னாட் அரசமரபானது பீகார் அல்லது நேபாள எல்லைப் பகுதியில் தோன்றியது. தர்பங்கா மற்றும் சிம்ரோன்கத் ஆகிய இடங்களில் தலைநகரங்களைக் கொண்டிருந்தது. கர்னாடகப் பூர்வீகத்தைக் கொண்ட ஓர் இராணுவத் தளபதியான நான்யதேவனால் இந்த அரசமரபானது நிறுவப்பட்டது. இந்த அரசமரபின் கீழ் ஜோதிரீசுவர தாகூரால் 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மைதிலி இலக்கியத்தின் முதல் நூலான வர்ண ரத்னாகரத்துடன் மைதிலி மொழியானது வளர்ச்சியடையத் தொடங்கியது. கர்னாடர் நேபாளத்துக்குள்ளும் ஊடுருவல்களை நடத்தினர். கியாத் அல்-தின் துக்ளக்கின் படையெடுப்பைத் தொடர்ந்து 1324 ஆம் ஆண்டு இவர்கள் வீழ்ச்சியடைந்தனர்.[201][202]

பாலப் பேரரசு

450 முதல் 1193 ஆம் ஆண்டு வரை பௌத்த கற்றல் மையமாகத் திகழ்ந்த நாளந்தாவின் அகழ்வாய்வு செய்யப்பட்ட சிதிலங்கள்

பாலப் பேரரசானது முதலாம் கோபாலனால் நிறுவப்பட்டது.[203][204][205] வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பௌத்த அரசமரபால் இது ஆளப்பட்டது. சசாங்கனின் கௌடப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு வங்காளத்தை பாலர் மீண்டும் ஒன்றிணைந்தனர்.[206]

பாலர் மகாயானப் பௌத்தம் மற்றும் பௌத்தத்தின் தந்திரியப் பள்ளிகளைப் பின்பற்றியவர்கள் ஆவர்.[207] சைவம் மற்றும் வைணவத்திற்கும் கூட இவர்கள் புரவு வழங்கினர்.[208] தர்மபாலன் மற்றும் தேவபாலன் ஆகியோரின் ஆட்சியின் கீழ் இப்பேரரசு அதன் உச்சத்தை அடைந்தது. கன்னோசியை வென்று வடமேற்கில் இந்தியாவின் தொலைதூர எல்லைகள் வரை தன்னுடைய நாட்டை தர்மபாலன் விரிவாக்கினார் என்று நம்பப்படுகிறது.[208]

பாலப் பேரரசின் ஆட்சிக் காலமானது வங்காளத்தின் பொற்காலம் என்று கருதப்படுகிறது.[209] தர்மபாலன் விக்கிரமசீலாவை நிறுவினார். நாளந்தாவை மீண்டும் புதுப்பித்தார்.[208] பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் முதல் மிகப் பெரும் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக நாளந்தா கருதப்படுகிறது. பாலப் பேரரசின் புரவின் கீழ் நாளந்தா அதன் உச்சத்தை அடைந்தது.[209][210] பாலர் பல புத்த தூபிகளையும் கூட கட்டமைத்தனர். தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் திபெத்துடன் நெருங்கிய பண்பாட்டு மற்றும் வணிக உறவு முறைகளை இவர்கள் பேணி வந்தனர். பாலப் பேரரசின் செழிப்பிற்கு கடல் வணிகமானது பெரும் பங்களித்தது.

சோழர்

இராசேந்திர சோழனுக்குக் கீழ் இடைக்காலச் சோழர்கள், அண். 1030

9 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் போது இடைக்காலச் சோழர் முக்கியத்துவத்திற்கு உயர்ந்தனர். தென்னிந்தியா எக்காலத்திலும் கண்ட மிகப் பெரிய பேரரசை நிறுவினர்.[211] தங்கள் ஆட்சியின் கீழ் தென்னிந்தியாவை இவர்கள் வெற்றிகரமாக ஒன்றிணைத்தனர். தங்களுடைய கடற்படை வலிமையின் மூலமாக தங்களது செல்வாக்கை சிறீவிஜயம் போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கு விரிவாக்கினர்.[182] முதலாம் இராஜராஜ சோழன் மற்றும் அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த இராசேந்திர சோழன், இராஜாதிராஜ சோழன், வீரராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோரின் கீழ் இந்த அரசமரபானது ஓர் இராணுவ, பொருளாதார மற்றும் பண்பாட்டு சக்தியாக தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் உருவானது.[212][213] பர்மா முதல் வியட்நாம்,[214] அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமாத்திரா, மற்றும் மலாய் தீபகற்பம் வரையிலான கடற்கரைகளை முதலாம் இராஜேந்திர சோழனின் கடற்படைகளானவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. கங்கை ஆற்றுக்கு முதலாம் இராஜேந்திர சோழன் போர்ப் பயணத்தை மேற்கொண்டது, தென்கிழக்கு ஆசியாவில் சிறீவிஜயம் போன்ற கடல்சார் பேரரசுகளின் நகரங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது, மேலும் சீனாவுக்கு தொடர்ச்சியாக தூதுக் குழுக்கள் அனுப்பப்பட்டது ஆகியவற்றின் மூலம் இந்தப் புதிய பேரரசின் சக்தியானது கிழக்கு உலகத்திற்கு அறிவிக்கப்பட்டது.[215]

இவர்கள் இலங்கையின் அரசியல் விவகாரங்களை இரு நூற்றாண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான படையெடுப்புகள் மற்றும் ஆட்சியின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அரேபியர் மற்றும் சீனப் பேரரசுடனும் கூட இவர்கள் தொடர்ந்து வணிகத் தொடர்புகளைக்கொண்டிருந்தனர்.[216] முதலாம் இராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் முதலாம் இராஜேந்திர சோழன் ஆகியோர் ஒட்டு மொத்த தென்னிந்தியாவிற்கும் அரசியல் ஒற்றுமையை வழங்கினர். மதிப்பிற்குரிய ஒரு கடல்சார் சக்தியாக சோழப் பேரரசை நிறுவினர்.[217] சோழர்களின் கீழ் கலை, சமயம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் தென்னிந்தியாவானது தனிச் சிறப்பின் புதிய உச்சங்களைத் தொட்டது. இந்த அனைத்துத் துறைகளிலும் பல்லவர்களுக்குக் கீழான முந்தைய காலத்தில் தொடங்கிய இயக்கங்களின் உச்சத்தை சோழர் காலமானது குறித்தது.இந்தியாவில் அதற்கு முன்னர் அடைந்திராத அளவுக்கு கல் மற்றும் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட கம்பீரமான கோயில்கள் மற்றும் சிற்பங்களின் வடிவத்தில் நினைவுச்சின்னக் கட்டடக்கலையானது ஒரு நேர்த்தியைத் தொட்டது.[218]

உலகின் மிகப் பெரிய செயல்பாட்டில் உள்ள இந்துக் கோயில் திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலாகும்.[219] இது இந்தியாவில் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது.

மேலைச் சாளுக்கியப் பேரரசு

மேலைச் சாளுக்கியப் பேரரசானது 10 ஆம் மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மேற்கு தக்காணம் மற்றும் தென்னிந்தியா ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டது.[220] வடக்கே நருமதை மற்றும் தெற்கே காவிரிக்கு இடைப்பட்ட பெரும் பகுதிகள் சாளுக்கிய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.[220] தக்காணத்தின் பிற முக்கிய ஆளும் குடும்பங்களான போசளப் பேரரசு, தேவகிரி யாதவப் பேரரசு, காக்கத்தியர் மற்றும் தெற்கு காலச்சூரியர் ஆகியோர் இந்த காலகட்டத்தின் போது மேலைச் சாளுக்கியருக்கு அடிபணிந்தவர்களாகத் திகழ்ந்தனர். 12 ஆம் நூற்றாண்டின் பிந்தைய பாதியில் சாளுக்கிய சக்தி மங்கிய போது தான் அவர்கள் தங்கள் சுதந்திரத்தைப் பெற்றனர்.[221]

மேலைச் சாளுக்கியர் ஒரு வடிவ மாற்ற பாணி என்று தற்காலத்தில் அறியப்படும் ஒரு கட்டடக்கலை பாணியை உருவாக்கினர். முந்திய சாளுக்கிய அரசமரபு மற்றும் பிந்தைய போசளப் பேரரசு ஆகியவற்றின் பாணிகளுக்கு இடையிலான ஒரு கட்டடக்கலை இணைப்பு இதுவாகும். இப்பேரரசின் பெரும்பாலான நினைவுச் சின்னங்களானவை நடு கருநாடகத்தின் துங்கபத்திரை ஆற்றை ஒட்டியுள்ள மாவட்டங்களில் காணப்படுகின்றன. இலக்குண்டி காசிவிசுவேசுவரர் கோயில், குருவட்டி மல்லிகார்ஜுன கோயில், பகாலி கல்லேசுவரர் கோயில், அவேரி சித்தேசுவரர் கோயில் மற்றும் இட்டகி மகாதேவர் கோயில் ஆகியவை இவர்களின் கட்டடக்கலைக்கான நன்றாக அறியப்பட்ட எடுத்துக்காட்டுகள் ஆகும்.[222] தென்னிந்தியாவில் நேர்த்தியான கலைகளின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான காலகட்டமாக இவர்களது ஆட்சிக் காலமானது திகழ்ந்தது. குறிப்பாக இலக்கியத்தில், பூர்வீக மொழியான கன்னடத்தில் எழுத எழுத்தாளர்களை மேலைச் சாளுக்கிய மன்னர்கள் ஊக்குவித்தனர். தத்துவவாதி மற்றும் அரசியல் மேதையான பசவர் மற்றும் புகழ்பெற்ற கணிதவியலாளரான இரண்டாம் பாஸ்கரர் போன்றோர் இவர்களால் ஊக்குவிக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.[223][224]

பிந்தைய நடுக் காலம் (அண். 1200 – 1526)

பிந்தைய நடுக் காலமானது முசுலிம் நடு ஆசிய நாடோடி இனங்களால் நடத்தப்பட்ட தொடர்ச்சியான படையெடுப்புகள்,[225][226] தில்லி சுல்தானகத்தின் ஆட்சி மற்றும் சுல்தானகத்தின் இராணுவத் தொழில்நுட்பத்தால் கட்டமைக்கபட்ட பிற அரசுகளின் வளர்ச்சி ஆகியவற்றால் குறிக்கப்படுகிறது.[227]

தில்லி சுல்தானகம்

தில்லியை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஒரு தொடர்ச்சியான இசுலாமிய அரசுகள் தில்லி சுல்தானகம் என்று அழைக்கப்படுகின்றன. பல்வேறு பூர்வீகங்களைக் கொண்ட வேறுபட்ட அரசமரபுகளால் இவை ஆளப்பட்டன. 13 ஆம் முதல் தொடக்க 16 ஆம் நூற்றாண்டு வரை இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகள் மீது இந்த அரசானது ஆட்சியமைத்தது.[228] 12 ஆம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் நடு ஆசிய துருக்கியர்களால் இந்த சுல்தானகமானது நிறுவப்பட்டது. வட இந்தியாவின் பகுதிகள் மீது இவர்கள் படையெடுத்தனர். முந்தைய இந்து அரசுகளின் மீது தங்களது அரசை நிறுவினர்.[229] இதைத் தொடர்ந்து வந்த தில்லியின் மம்லூக் அரசமரபால் வட இந்தியாவின் பெரும் பகுதிகளை வெல்ல முடிந்தது. கல்சி அரசமரபானது நடு இந்தியாவின் பெரும் பகுதிகளை வென்றது. அதே நேரத்தில், தென்னிந்தியாவின் முதன்மையான இந்து இராச்சியங்களை திறை செலுத்தும் அரசுகளாக மாறும் நிலைக்குக் கட்டாயப்படுத்தியது.[228]

சுல்தானகமானது இந்தியப் பண்பாட்டு மறுமலர்ச்சியின் ஒரு காலத்தைத் தொடங்கி வைத்தது. இதன் விளைவாக ஏற்பட்ட "இந்திய-முசுலிம்" கலப்புப் பண்பாடானது கட்டடக்கலை, இசை, இலக்கியம், சமயம் மற்றும் உடையில் நீண்ட காலம் நீடித்திருக்கும் கலவையான நினைவுச் சின்னங்களை விட்டுச் சென்றுள்ளது. உருது மொழியானது தில்லி சுல்தானகத்தின் காலத்தின் போது தான் உருவானது என்று கூறப்படுகிறது. இந்தியாவின் வெகு சில பெண் ஆட்சியாளர்களில் ஒருவரான ரசியா பேகத்தை (. 1236–1240) அரியணையில் அமர வைத்த ஒரே இந்திய இசுலாமிய அரசாக சுல்தானகமானது திகழ்கிறது.

பூர்வீக இந்திய உயர்குடியினரிடமிருந்து துருக்கிய முசுலிம் உயர்குடியினரிடம் அதிகாரம் மாறியதன் காரணமாக தொடக்கத்தில் தடங்கல்கள் ஏற்பட்ட போதும் தில்லி சுல்தானகமானது ஒரு வளர்ந்து வந்த உலக அமைப்பில் இந்திய துணைக் கண்டத்தை இணைத்ததற்காக அறியப்படுகிறது. ஒரு பரந்த பன்னாட்டு இணையத்திற்குள் இந்தியாவை இது இழுத்தது. இந்தியப் பண்பாடு மற்றும் சமூகம் மீது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளது.[230] எனினும், தில்லி சுல்தானகமானது இந்திய துணைக்கண்டத்தில் பெருமளவிலான கோயில்களின் அழிப்பு மற்றும் அவை சிதைக்கப்பட்டு அவமதிக்கப்படுதலுக்கும் கூட காரணமாக அமைந்தது.[231]

அலாவுதீன் கல்சியின் ஆட்சிக் காலத்தின் போது மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்புகளானவை தில்லி சுல்தானகத்தால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. இவர்களது வெற்றியின் முதன்மையான காரணியாக இருந்தது இவர்களது துருக்கிய மம்லூக் அடிமை இராணுவம் ஆகும். மங்கோலியர்கள் கொண்டிருந்த அதே பாணி நாடோடி குதிரைப் படை போர் முறையில் உயர்தரத் திறமையை இவர்களும் கொண்டிருந்தனர். மங்கோலியர்களை முறியடிப்பதில் தில்லி சுல்தானகத்தின் பங்கு இல்லாதிருந்தால் இந்தியாவிற்குள் மங்கோலியப் பேரரசு விரிவடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[232] மங்கோலிய ஊடுருவாளர்களைத் தொடர்ந்து முறியடித்ததன் மூலம்[233] சுல்தானகமானது மேற்கு மற்றும் நடு ஆசியா மீது நடந்த அழிவிலிருந்து இந்தியாவைக் காத்தது. ஈரான் மீதான மங்கோலியப் படையெடுப்புகளிலிருந்து தப்பி வந்த அப்பகுதியைச் சேர்ந்த போர் வீரர்கள், கற்றறிந்த அறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்திய துணைக்கண்டத்திற்குப் புலம் பெயர்ந்தனர். இவ்வாறாக வட இந்தியாவில் ஒரு கலவையான இந்திய-இசுலாமியப் பண்பாட்டை உருவாக்கினர்.[232]

நடு ஆசியாவைச் சேர்ந்த ஒரு துருக்கிய-மங்கோலியப் படையெடுப்பாளரான தைமூர் தில்லியில் துக்ளக் அரசமரபின் ஆட்சி செய்து கொண்டிருந்த சுல்தானான நசீருதீன் மெகுமுதுவைத் தாக்கினார்.[234] 17 திசம்பர் 1398 அன்று சுல்தானகத்தின் இராணுவமானது தோற்கடிக்கப்பட்டது. தைமூர் தில்லிக்குள் நுழைந்தார். நகரமானது சூறையாடப்பட்டு, அழிக்கப்பட்டது. மூன்று பகல்கள் மற்றும் இரவுகள் தைமூரின் இராணுவமானது படுகொலைகள் மற்றும் சூறையாடல்களை நடத்தியதற்குப் பிறகு நகரமானது சிதிலமாக விடப்பட்டது. சையிதுகள், அறிஞர்கள் மற்றும் "பிற முசுலிம்கள்" (கலைஞர்கள்) தவிர ஒட்டு மொத்த நகரமும் சூறையாடப்பட வேண்டுமென தைமூர் ஆணையிட்டார். ஒரே நாளில் 1 இலட்சம் போர்க் கைதிகள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று கூறப்பட்டது.[235] தில்லி சூறையாடப்பட்டதன் காரணமாக சுல்தானகமானது பெருமளவுக்குப் பாதிப்படைந்தது. சையிது மற்றும் லௌதி அரசமரபுகளின் கீழ் குறுகிய காலத்திற்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்டாலும் முந்தைய நிலையே தில்லி எப்போதுமே அடையவில்லை. பாபுரின் படைகளிடம் 1526 இல் கடைசி சுல்தான் இப்ராகிம் லௌதி தோற்கும் வரை தில்லியில் லௌதி ஆட்சியானது நீடித்திருந்தது.[236]

விசயநகரப் பேரரசு

விசயநகரப் பேரரசின் சங்கம அரசமரபின் வரைபடம்

சங்கம அரசமரபின் முதலாம் ஹரிஹரர் மற்றும் அவரது சகோதரர் முதலாம் புக்கா ராயன் ஆகியோரால் 1336 ஆம் ஆண்டு விசயநகரப் பேரரசு நிறுவப்பட்டது.[237] போசளப் பேரரசு, காக்கத்தியப் பேரரசு[238] மற்றும் பாண்டியர்[239] ஆகியோரின் ஓர் அரசியல் வாரிசாக இது தோன்றியது. 13 ஆம் நூற்றாண்டின் முடிவில் இசுலாமியப் படையெடுப்புகளைத் தவிர்ப்பதற்கான தென்னிந்திய சக்திகளின் முயற்சிகளின் உச்சநிலையாக இது தோன்றியது. தக்காண சுல்தானகங்களின் ஒன்றிணைந்த இராணுவங்களால் 1565 ஆம் ஆண்டு ஒரு முக்கியமான இராணுவத் தோல்விக்குப் பிறகு இதன் சக்தியானது வீழ்ச்சியடைந்தாலும் இது 1646 ஆம் ஆண்டு வரை நீடித்திருந்தது. இப்பேரரசு அதன் பெயரை இதன் தலைநகரமான விசயநகரத்திலிருந்து பெறுகிறது. விசயநகரத்தின் சிதிலங்களானவை தற்கால அம்பியைச் சுற்றி அமைந்துள்ளன. கருநாடகத்தில் உள்ள ஓர் உலகப் பாரம்பரியக் களம் அம்பியாகும்.[240]

பேரரசு நிறுவப்பட்டதற்குப் பிறகு முதல் இரு தசாப்தங்களில் முதலாம் ஹரிஹரர் துங்கபத்திரை ஆற்றுக்குத் தெற்கில் இருந்த பெரும்பாலான பகுதிகள் மீது கட்டுப்பாட்டைப் பெற்றார். பூர்வபஸ்சிம சமுத்திராதீசுவரன் ("கிழக்கு மற்றும் மேற்குக் கடல்களின் எசமானன்") என்ற பட்டத்தைப் பெற்றார். 1374 வாக்கில் முதலாம் ஹரிஹரருக்குப் பின் வந்த முதலாம் புக்காராயர் ஆற்காடு அரசு, கொண்டாவீடு ரெட்டியர் மற்றும் மதுரை சுல்தான் ஆகியோரைத் தோற்கடித்தார். மேற்கில் கோவா மற்றும் வடக்கே துங்கபத்திரா-கிருஷ்ணா ஆற்று தோவாப் ஆகியவற்றின் கட்டுப்பாட்டைப் பெற்றார்.[241][242]

முதலாம் புக்கா ராயனின் இரண்டாவது மகனான இரண்டாம் ஹரிஹர ராயன் கிருஷ்ணா ஆற்றைத் தாண்டி இராச்சியத்தை மேற்கொண்டு நிலைப்படுத்தினார். ஒட்டு மொத்த தென்னிந்தியாவையும் விசயநகரக் குடையின் கீழ் கொண்டு வந்தார்.[243] அடுத்த ஆட்சியாளரான முதலாம் தேவ ராயன் ஒடிசாவின் கஜபதிகளுக்கு எதிராக வெற்றி பெற்றார். அரண்கள் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகளை அமைத்தல் ஆகிய முக்கியமான பணிகளைச் செய்தார்.[244] இத்தாலியப் பயணியான நிக்கோலோ டி கோண்டி இந்தியாவின் மிக சக்தி வாய்ந்த ஆட்சியாளர் என்று இவரைக் குறிப்பிட்டுள்ளார்.[245] 1424 ஆம் ஆண்டு இரண்டாம் தேவ ராயன் அரியணைக்கு வந்தார். சாத்தியமான வகையிலே சங்கம அரசமரபின் ஆட்சியாளர்களிலேயே மிகவும் செயல் வல்லமையுடையவராக இவர் திகழ்ந்தார்.[246] கிளர்ச்சி செய்த குறுநில மன்னர்களை இவர் ஒடுக்கினார். மேலும், தெற்கில் கோழிக்கோட்டின் சமோரின் மற்றும் குயிலோன் ஆகிய பகுதிகளை வென்றார். இலங்கை மீது படையெடுத்தார். பெகு மற்றும் தனசெரிம் ஆகிய இடங்களில் இருந்த பர்மா மன்னர்கள் மீது மேலாட்சி செய்தார்.[247][248][249]

அனைத்து சமயங்கள் மற்றும் சமயப் பிரிவுகளிடமும் விசயநகரப் பேரரசர்கள் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டனர். இதை அயல்நாட்டுப் பயணிகளின் நூல்கள் காட்டுகின்றன.[250] இப்பேரரசின் மன்னர்கள் கோப்ராமண பிரதிபலனாச்சார்யா ("பசுக்கள் மற்றும் பிராமணர்களின் பாதுகாவலர்") மற்றும் இந்துராயசுரத்ரனா ("இந்து சமய நம்பிக்கையை நிலைநாட்டுபவர்") போன்ற பட்டங்களைப் பயன்படுத்தினர். இந்து சமயத்தைப் பாதுகாக்கும் இவர்களது எண்ணத்திற்கு சான்றாக இது இருந்த்து. அதே நேரத்தில், தங்களது அரசவை விழாக்கள் மற்றும் உடைகளில் இவர்கள் உறுதியாக இசுலாமியமயமாக்கப்பட்டு இருந்தனர்.[251] முதலாம் ஹரிஹரன் மற்றும் முதலாம் புக்கா ராயன் போன்ற பேரரசின் நிறுவனர்கள் சைவ சமயத்தைப் (சிவனை வழிபடுவோர்) பின்பற்றினர். ஆனால், வித்யாரண்யரைத் தங்களது புரவலத் துறவியாகக் கொண்டிருந்த சிருங்கேரி வைணவ மடத்துக்கு இவர்கள் அறக்கொடைகளை அளித்தனர். வராக அவதாரத்தை (விஷ்ணுவின் ஓர் அவதாரம்) தங்களது சின்னமாக வடிவமைத்தனர்.[252] நடு ஆசியாவின் தைமூரிய இராச்சியங்களைச் சேர்ந்த உயர்குடியினரும் கூட விசயநகரத்திற்கு வருக புரிந்தனர்.[253] பிந்தைய சாளுவ மற்றும் துளுவ மன்னர்கள் சமய நம்பிக்கையின்படி வைணப் பிரிவைப் பின்பற்றினர். ஆனால், அம்பியில் இருந்த விருபாக்சர் (சிவன்) மற்றும் திருப்பதியில் இருந்த வெங்கடாசலபதி (விஷ்ணு) ஆகிய இரு கடவுள்களையும் வழிபட்டனர்.[254] ஜாம்பவதி கல்யாணம் எனும் மன்னர் கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட ஒரு சமசுகிருத நூலானது கடவுள் விருபாக்சரை கர்நாட ராஜ்ய ராக்‌ஷா மணி ("கருநாடப் பேரரசின் பாதுகாப்பு அணிகலன்") என்று குறிப்பிட்டது.[255] உடுப்பியில் இருந்த மத்துவரின் துவைத பிரிவு துறவிகளுக்கும் இம்மன்னர்கள் புரவு வழங்கினர்.[256]

தென்னிந்தியா முழுவதும் பரவியுள்ள பல நினைவுச் சின்னங்கள் உள்ளிட்டவை இப்பேரரசின் மரபாகும். இதில் மிக நன்றாக அறியப்பட்டவை அம்பியில் அமைந்துள்ள கட்டடங்கள் ஆகும். தென்னிந்தியாவில் முந்தைய கோயில் கட்டமைக்கும் பாரம்பரியங்களானவை ஒன்றிணைந்து விசயநகரக் கட்டடக்கலை பாணியில் வந்தன. அனைத்து நம்பிக்கைகள் மற்றும் வட்டார வழக்குகளைக் கலந்தது என்பது இந்துக் கோயில் கட்டமைப்பில் கட்டடக்கலை புதுமைக்கு அகத் தூண்டுதலாக விளங்கியது. கேரளாவில் விசயநகரப் பேரரசின் பாதுகாப்பின் கீழ் தென்னிந்திய கணிதவியலானது செழித்திருந்தது. தென்னிந்திய கணிதவியலாளரான சங்கமகிராம மாதவன் பிரபலமான கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியை 14 ஆம் நூற்றாண்டில் நிறுவினார். பரமேசுவரன், நீலகண்ட சோமயாஜி, மற்றும் ஜேஷ்டதேவர் போன்ற ஏராளமான மிகச் சிறந்த தென்னிந்திய கணிதவியலாளர்களை இப்பள்ளி உருவாக்கியது.[259] செயல் திறனுள்ள நிர்வாகம் மற்றும் ஊக்கமான அயல்நாட்டு வணிகம் ஆகியவை நீர்ப்பாசனத்திற்கான நீர் மேலாண்மை அமைப்புகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை இங்கு கொண்டு வந்தன.[260] கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் சமசுகிருதத்தில் நேர்த்தியான கலைகள் மற்றும் இலக்கியமானது புதிய உச்சங்களைத் தொடுவதற்கு இப்பேரரசின் புரவு உதவியது. அதே நேரத்தில், கருநாடக சங்கீதமானது அதன் தற்போதைய வடிவத்திற்கு இக்காலத்தின் போது பரிணாமம் அடைந்தது.[261]

தலைக்கோட்டை யுத்தத்தில் (1565) அடைந்த தோல்விக்குப் பிறகு விசயநகரப் பேரரசானது வீழ்ச்சியடையத் தொடங்கியது. தலைக்கோட்டை யுத்தத்தில் அலிய ராம ராயனின் இறப்பிற்குப் பிறகு திருமலை தேவ ராயன் அரவிடு அரசமரபைத் தொடங்கினார். அழிக்கப்பட்ட அம்பியை இடமாற்றம் செய்வதற்காக பெனுகொண்டாவில் ஒரு புதிய தலைநகரத்தை நிறுவினார். விசயநகரப் பேரரசின் எஞ்சியவற்றை மீண்டும் ஒருங்கிணைக்க முயற்சித்தார்.[262] 1572 ஆம் ஆண்டு திருமலை தேவ ராயன் பதவி விலகினார். தன்னுடைய இராச்சியத்தின் எஞ்சிய பகுதிகளை தன் மூன்று மகன்களுக்கு இடையில் பிரித்துக் கொடுத்தார். 1578 ஆம் ஆண்டு தன்னுடைய இறப்பு வரை ஒரு சமயம் சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்தார். அரவிடு அரசமரபின் பிந்தைய ஆட்சியாளர்கள் இப்பகுதியை ஆண்டனர். ஆனால், 1614 ஆம் ஆண்டு இப்பேரரசானது வீழ்ச்சியடைந்தது. இப்பேரரசின் எஞ்சிய பகுதிகள் 1646 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தன. பீஜப்பூர் சுல்தானகம் மற்றும் பிறருடனான தொடர்ச்சியான போர்களே இதற்குக் காரணமாகும்.[263][264][265] இக்காலத்தின் போது தென்னிந்தியாவிலிருந்த பல இராச்சியங்கள் சுதந்திரமடைந்தன. விசயநகரத்திலிருந்து பிரிந்தன. மைசூர் இராச்சியம், கேளடி நாயக்கர், மதுரை நாயக்கர், தஞ்சாவூர் நாயக்கர், சித்திரதுர்க நாயக்கர், மற்றும் செஞ்சி நாயக்கர் உள்ளிட்டோர் இதில் அடங்குவர். இவர்கள் அனைவருமே தங்கள் சுதந்திரத்தை அறிவித்தனர். எனினும், பின் வந்த நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவின் வரலாறு மீது ஒரு முக்கியமான தாக்கத்தை இவர்கள் ஏற்படுத்தினர்.[263]

பிற இராச்சியங்கள்

13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து இரண்டரை நூற்றாண்டுகளுக்கு அரசியலில் வட இந்தியாவில் தில்லி சுல்தானாகமும், தென்னிந்தியாவில் விசயநகரப் பேரரசும் ஆதிக்கம் செலுத்தின. எனினும், பிற மாகாண சக்திகளும் ஆட்சி புரிந்து கொண்டிருந்தன. பாலப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு செரோ அரசமரபானது கிழக்கு உத்தரப்பிரதேசம், பீகார், சார்க்கண்டு ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகளை 12 ஆம் முதல் 18 ஆம் நூற்றாண்டுகள் வரை ஆண்டது.[266][267][268] ரெட்டிப் பேரரசானது தில்லி சுல்தானகத்தை வெற்றிகரமாகத் தோற்கடித்து தன் ஆட்சியை வடக்கே கட்டக்கில் இருந்து தெற்கே காஞ்சிபுரம் வரை விரிவுபடுத்தியது. இறுதியாக, விரிவடைந்து வந்த விசயநகரப் பேரரசுக்குள் இழுத்துக் கொள்ளப்பட்டது.[269]

வடக்கில், மேற்கு மற்றும் நடு இந்தியாவில் இராசபுத்திர இராச்சியங்கள் தொடர்ந்து ஆதிக்கமிக்க சக்தியாக இருந்தன. மகாராணா அம்மீரின் தலைமையிலான உதய்பூர் இராச்சியமானது பர்குசர்களை தன்னுடைய முதன்மையான கூட்டாளிகளாகக் கொண்டிருந்த முகம்மது பின் துக்ளக்கைத் தோற்கடித்து சிறைப்பிடித்தது. துக்ளக்கை விடுவிக்க ஒரு பெரும் பிணையத் தொகையைச் செலுத்த வேண்டியிருந்தது. மேவாரின் அனைத்து நிலங்களையும் துக்ளக் கைவிட வேண்டியிருந்தது. இந்நிகழ்வுக்குப் பிறகு ஒரு சில நூற்றாண்டுகளுக்கு சித்தோரை தில்லி சுல்தானகமானது தாக்கவில்லை. இராசபுத்திரர்கள் தங்களது சுதந்திரத்தை மீண்டும் நிறுவினர். கிழக்கே வங்காளம் வரையிலும், வடக்கே பஞ்சாப் பகுதிக்குள்ளும் இராசபுத்திர அரசுகள் நிறுவப்பட்டன. தோமர்கள் தங்களைத் தாமே குவாலியரில் நிறுவிக் கொண்டனர். மான் சிங் தோமர் குவாலியர் கோட்டையை மீண்டும் கட்டமைத்தார்.[270] இக்காலத்தின் போது மேவார் முன்னணி இராசபுத்திர அரசாக உருவானது. மால்வா மற்றும் குசராத்து சுல்தானகங்களிடமிருந்து பெற்ற பகுதிகள் மூலம் ராணா கும்பா தன்னுடைய இராச்சியத்தை விரிவாக்கினார்.[270][271] அடுத்த பெரும் இராசபுத்திர ஆட்சியாளரான மேவாரின் ராணா சங்கா வட இந்தியாவில் முதன்மையான ஆட்சியாளராக உருவானார். இவரது குறிக்கோள்களானவை வாய்ப்பு எல்லையில் வளர்ச்சியடைந்தன - தில்லியைக் கைப்பற்ற இவர் திட்டமிட்டார். ஆனால், கன்வா போரில் இவர் தோல்வியடைந்தது இந்தியாவில் புதிய அரசமரபான முகலாய அரசமரபு நிலை நிறுத்தப்படுவதற்குக் காரணமானது.[270] மகாராணா இரண்டாம் உதய் சிங் தலைமையிலான மேவார் அரசமரபானது முகலாயப் பேரரசர் அக்பரால் மேற்கொண்டு தோல்வியை எதிர் கொண்டது. இவர்களது தலைநகரமான சித்தோர் கைப்பற்றப்பட்டது. இந்நிகழ்வின் காரணமாக இரண்டாம் உதய் சிங் உதய்பூரை நிறுவினார். மேவார் இராச்சியத்தின் புதிய தலைநகரமாக இது உருவானது. இவரது மகன் மேவாரின் மகாராணா பிரதாப் முகலாயர்களை உறுதியாக எதிர்த்துப் போராடினார். இவருக்கு எதிராக பல இராணுவக் குழுக்களை அக்பர் அனுப்பினார். சித்தோர்கர் கோட்டையைத் தவிர்த்து மேவாரின் அனைத்து பகுதிகளின் கட்டுப்பாட்டையும் இறுதியாகப் பெறும் நிலைக்கு மகாராணா பிரதாப் தப்பித்தார்.[272]

தெற்கில் 1347 ஆம் ஆண்டில் துக்ளக் அரசமரபுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியில் தோன்றிய தக்காணத்திலிருந்த பாமினி சுல்தானகமானது விசயநகரப் பேரரசுக்கு முதன்மையான எதிரியாக இருந்தது.[273] அப்பேரரசுக்குத் தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்தது.[274] 1490 இல் தொடங்கி பாமினி சுல்தானகத்தின் ஆளுநர்கள் கிளர்ச்சி செய்தனர். அவர்களது சுதந்திரமான அரசுகளில் ஐந்து தக்காணச் சுல்தானகங்கள் உள்ளடங்கியிருந்தன. அதில் அகமது நகர் சுதந்திரத்தை அறிவித்தது. இதைத் தொடர்ந்து அதே ஆண்டு பிஜப்பூரும், பெராரும் சுதந்திரத்தை அறிவித்தன. 1518 இல் கோல்கொண்டா சுதந்திரமடைந்தது. 1528 இல் பீதர் சுதந்திரமடைந்தது.[275] பொதுவாக எதிரிகளாக இவர்கள் இருந்த போதும் 1565 இல் விசயநகரப் பேரரசுக்கு எதிராக இவர்கள் அனைவரும் கூட்டணியை ஏற்படுத்தினர். தலைக்கோட்டை யுத்தத்தில் விசயநகரப் பேரரசை நிரந்தரமாகப் பலவீனமாக்கினர்.[276][277]

கிழக்கில் கஜபதி இராச்சியமானது தொடர்ந்து ஒரு வலிமையான மாகாண சக்தியாகத் திகழ்ந்தது. மகாணப் பண்பாடு மற்றும் கட்டடக்கலையின் வளர்ச்சியில் ஒரு உச்ச நிலையுடன் தொடர்புடையதாக இருந்தது. கபிலேந்திர தேவனின் கீழ் வடக்கே கீழ் கங்கை ஆற்றுப்பகுதி முதல் தெற்கே காவிரியாறு வரை விரிவடைந்திருந்த ஒரு பேரரசாக கஜபதி பேரரசு உருவானது.[278] வடகிழக்கு இந்தியாவில் அகோம் பேரரசானது ஆறு நூற்றாண்டுகளுக்கு ஒரு முதன்மையான சக்தியாகத் திகழ்ந்தது.[279][280] அகோம்-முகலாயச் சண்டைகளின் போது லச்சித் பர்பூக்கனால் தலைமை தாங்கப்பட்ட அகோம்கள் சராய்காட் போரில் முகலாய இராணுவத்தைத் தீர்க்கமாகத் தோற்கடித்தனர்.[281] வடகிழக்கு இந்தியாவில் மேற்கொண்டு கிழக்கே மணிப்பூர் இராச்சியம் அமைந்திருந்தது. காங்லா அரண்மனையில் தங்களது அதிகார இருப்பிடத்திலிருந்து அவர்கள் ஆட்சி செய்தனர். ஒரு நுண்ணயம் வாய்ந்த இந்து கௌடிய வைணவப் பண்பாட்டை இது உருவாக்கியது.[282][283][284]

கங்கை வடிநிலத்தின் ஆதிக்கம் மிகுந்த சக்தியாக வங்காள சுல்தானகம் திகழ்ந்தது. இப்பகுதி முழுவதும் பரவியிருந்த நாணயம் அச்சிடும் பட்டணங்களின் ஓர் இணையத்துடன் இது அமைந்திருந்தது. இந்திய-துருக்கிய, அரேபிய, அபிசீனிய மற்றும் வங்காள-முசுலிம் உயர்குடியினருடன் கூடிய ஒரு சன்னி முடியாட்சியாக இது திகழ்ந்தது. இந்த சுல்தானகமானது இதன் சமய பன்முகத் தன்மைக்காக அறியப்படுகிறது. இங்கு முசுலிம் சாராத சமூகங்கள் முசுலிம்களுடன் அமைதியாக வாழ்ந்து வந்தன. வங்காள சுல்தானகமானது திறை செலுத்திய அரசுகளின் ஒரு வட்டத்தைக் கொண்டிருந்தது. இதில் தென் மேற்கில் ஒடிசா, தென்கிழக்கில் அரகான் மற்றும் கிழக்கில் திரிபுரா ஆகியவை அடங்கியிருந்தன. 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்காள சுல்தானகமானது வடகிழக்கில் காமரூபா மற்றும் காமதா மற்றும், மேற்கே ஜவுன்பூர் மற்றும் பீகார் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டுடன் அதன் நிலப்பரப்பு வளர்ச்சியில் உச்சத்தை அடைந்தது. ஒரு செழித்தோங்கியிருந்த வணிக நாடாக இது பெயர் பெற்றிருந்தது. ஆசியாவின் மிக வலிமையான அரசுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. ஒப்பீட்டளவில் ஒரு செழிப்பான இராச்சியம் மற்றும் "வணிகம் செய்வதற்கு ஏற்ற மிக செல்வ வளம் மிக்க நாடு" என சமகால ஐரோப்பிய மற்றும் சீனப் பயணிகளால் வங்காள சுல்தானகமானது குறிப்பிடப்பட்டது. வங்காள சுல்தானகமானது ஒரு வலிமையான கட்டடக்கலை மரபை விட்டுச் சென்றது. அயல்நாட்டுத் தாக்கங்களுடன் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு தனித்துவமான வங்காள பாணி கட்டடக்கலையை இக்காலத்தைச் சேர்ந்த கட்டடங்கள் காட்டுகின்றன. வங்காள வரலாற்றில் சுதந்திரமான நடுக் கால, முசுலிம்களால் ஆளப்பட்ட அரசுகளில் மிகப் பெரியதாகவும், மிக மதிப்புமிக்க அதிகாரத்தைக் கொண்டிருந்ததாகவும் வங்காள சுல்தானகமானது திகழ்ந்தது. வங்காள சுல்தானகத்தின் வீழ்ச்சியானது இதன் ஆட்சிக் காலத்தில் ஓர் இடையீட்டுக் காலமாக சூர் பேரரசின் காலம் வந்ததுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து முகலாயர்கள் இப்பகுதியை வென்றனர். பிறகு சிறு இராச்சியங்களாக இது சிதைவடைந்தது.

பக்தி இயக்கமும், சீக்கியமும்

நடுக்கால இந்து சமயத்தில் தோன்றி,[285] பின்னர் சீக்கியத்தில் புரட்சிமயமாக்கப்பட்ட ஓர் ஆத்திக, பக்திப் போக்கானது பக்தி இயக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.[286] ஏழாம் நூற்றாண்டு தென்னிந்தியாவில் (தற்போதைய தமிழ்நாடு மற்றும் கேரளத்தின் பகுதிகள்) இது தோன்றி, வடக்கு நோக்கிப் பரவியது.[285] 15 ஆம் நூற்றாண்டிலிருந்து கிழக்கு மற்றும் வட இந்தியாவில் இது துடைத்துச் சென்றது போல் பரவியது. 15 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இதன் உச்ச நிலையை அடைந்தது.[287]

தொடக்க நவீன காலம் (1526–1858)

இந்திய வரலாற்றில் தொடக்க நவீன காலமானது 1526 முதல் 1858 வரை நீடித்த காலம் ஆகும். இது முகலாயப் பேரரசின் உருவாக்கம் மற்றும் வீழ்ச்சியுடன் ஒத்துப் போகிறது. முகலாயப் பேரரசானது தைமூரிய மறுமலர்ச்சியில் இருந்து உருவானதாகும். இக்காலத்தின் போது இந்தியாவின் பொருளாதாரமானது விரிவடைந்தது. ஒப்பீட்டளவிலான அமைதியானது பேணப்பட்டது. கலைகள் புரவு பெற்றன. இந்திய-இசுலாமியக் கட்டடக் கலையின் மேற்கொண்ட வளர்ச்சியை இக்கால கட்டமானது கண்டது.[297][298] முகலாயப் பேரரசு மதிப்பிழந்து கொண்டிருந்த நாட்களின் போது மராத்தியர் மற்றும் சீக்கியர்களின் வளர்ச்சியானது இந்தியாவின் குறிப்பிடத்தக்க பகுதிகளை அவர்கள் ஆள்வதை சாத்தியமாக்கியது.[16] 1500 களில் நன்னம்பிக்கை முனை வழி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து கடல் வழியாக முதல் ஐரோப்பியர்கள் வருகை புரிந்தனர். தங்களைத் தாமே நிறுவிக் கொண்டனர். இதில் முதன்மையானவர்கள் போர்த்துகேயர் ஆவர்.[299]

முகலாயப் பேரரசு

முகலாயப் பேரரசு
1700 ஆம் ஆண்டில் அதன் உச்சபட்ச பரப்பளவின் போது முகலாயப் பேரரசின் வரைபடம்
இந்தியாவில் முசுலிம் கட்டடக் கலையின் ஓர் ஆபரணமாக தாஜ்மகாலானது 1983ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியக் கள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.[300]

1526 இல் பாபுர் கைபர் கணவாய் வழியாக துடைத்தெடுத்ததைப் போல் பயணித்தார். முகலாயப் பேரரசை நிறுவினார். அதன் உச்ச நிலையின் போது இப்பேரரசானது தெற்காசியா முழுவதையும் தன்னகத்தே கொண்டிருந்தது.[301] எனினும், பாபுரின் மகன் உமாயூன் 1540 ஆம் ஆண்டு ஆப்கானியப் போர் வீரரான சேர் ஷா சூரியால் தோற்கடிக்கப்பட்டார். காபுலுக்குப் பின் வாங்கும் நிலைக்கு உமாயூன் தள்ளப்பட்டார். சேர் ஷாவின் இறப்பிற்குப் பிறகு அவரது மகன் இசுலாம் ஷா மற்றும் இசுலாம் ஷாவின் இந்துத் தளபதி ஹெமு ஆகியோர் வட இந்தியாவில் சமயச் சார்பற்ற ஆட்சியை நிறுவினர். 1556 வரை தில்லியில் இருந்து இவர்கள் ஆட்சி புரிந்தனர். பாபுரின் பேரனான அக்பர் (. 1556–1605) தில்லி யுத்தத்தில் வென்றதற்குப் பிறகு 1556 நவம்பர் 6 அன்று இரண்டாம் பானிபட் போரில் ஹெமுவைத் தோற்கடித்தார். இந்துக்களுடன் நல்ல உறவு முறைகளை நிறுவ அக்பர் முயற்சித்தார். சைனத்தின் புனித நாட்களின் போது "அமரி" அல்லது விலங்குகளைக் கொல்லதிருக்க வேண்டும் என்று அக்பர் அறிவித்தார். முசுலிம் அல்லாதவருக்கு விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரிகளைத் திரும்பப் பெற்றார். உள் நாட்டு அரச குடும்பங்களுடன் முகலாயப் பேரரசர்கள் திருமண உறவு முறைகளை ஏற்படுத்திக் கொண்டனர். உள்ளூர் மகாராஜாக்களுடன் தங்களாக முன் வந்து கூட்டணி வைத்துக் கொண்டனர். பண்டைக் கால இந்திய பாணிகளுடன் தங்களது துருக்கிய-பாரசீகப் பண்பாட்டை இணைக்க முயற்சித்தனர். ஒரு தனித்துவமான இந்திய-பாரசீகப் பண்பாடு மற்றும் இந்திய-சராசனியக் கட்டடக்கலையை இது உருவாக்கியது.

அக்பர் ஓர் இராசபுத்திர இளவரசியான மரியம் உசு-சமானியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜஹாங்கீர் (. 1605–1627) என்ற ஒரு மகன் பிறந்தார்.[302] ஜஹாங்கீர் தன்னுடைய தந்தையின் கொள்கைகளைப் பின்பற்றினார். 1600 வாக்கில் இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளை முகலாய அரசமரபானது ஆண்டது. முகலாயக் கட்டடக் கலையின் பொற்காலமாக ஷாஜகானின் (. 1628–1658) ஆட்சிக் காலமானது குறிப்பிடப்படுகிறது. இவர் ஏராளமான பெரிய நினைவுச் சின்னங்களை எழுப்பினார். இதில் மிகவும் பிரபலமானது ஆக்ராவில் உள்ள தாஜ் மகால் ஆகும்.

இந்தியத் துணைக் கண்டத்தில் அக்காலத்தில் அமைந்திருந்த மிகப் பெரிய பேரரசுகளில் இதுவும் ஒன்றாகத் திகழ்ந்தது.[303] உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக சீனாவை முந்தி இது உருவானது. உலகப் பொருளாதாரத்தில் 24.4%ஐ இது தனது கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது.[304] உற்பத்தியில் உலகத் தலைமை நாடாக உருவானது.[305] உலகளாவிய தொழில்துறை உற்பத்தியில் 25%ஐ உற்பத்தி செய்தது.[306] வேளாண்மை உற்பத்தியைச் செறிவாக்கிய முகலாய நிலச் சீர்திருத்தங்களால் பொருளாதார மற்றும் மக்கள் தொகைப் பெருக்கமானது தூண்டப்பட்டது.[307] ஓர் ஒப்பீட்டளவில் அதிகப்படியான நகரமயமாக்கமும் இப்பெருக்கத்திற்குக் காரணம் ஆகும்.[308]

முகலாயப் பேரரசு அதன் நிலப்பரப்பு விரிவாக்கத்தில் உச்ச நிலையை ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தின் போது (. 1658–1707) அடைந்தது. ஔரங்கசீப்பின் ஆட்சியின் கீழ் இந்தியா சிங் சீனாவை முந்தி உலகின் மிகப் பெரிய பொருளாதாரமானது.[309][310] தனக்கு முன்பிருந்த மன்னர்களை விட ஔரங்கசீப் குறைவான சகிப்புத் தன்மை உடையவராக இருந்தார். ஜிஸ்யா வரியை மீண்டும் அறிமுகப்படுத்தினார். வரலாற்று ரீதியிலான கோயில்களை அழித்தார். அதே நேரத்தில், தான் அழித்ததை விட அதிகமான இந்துக் கோயில்களைக் கட்டினார்.[311] தனக்கு முன்பிருந்த மன்னர்களை விட தன்னுடைய ஏகாதிபத்திய அரசுத் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகப்படியான இந்துக்களைப் பணியமர்த்தினார். சமயத்தை அடிப்படையாகக் கொண்டிராமல் திறமையை அடிப்படையாகக் கொண்டு நிர்வாகிகளுக்குப் பதவி வழங்கினார்.[312] எனினும், தனக்கு முன்பிருந்த மன்னர்களின் சகிப்புத் தன்மையுடைய கலப்புப் பாரம்பரியம் படிப்படியாக அழிக்கப்பட்டதற்கும் கூட இவர் மீது அடிக்கடி குற்றம் சுமத்தப்படுகிறது. அதிகரித்து வந்த சமயம் சார்ந்த சர்ச்சைகள் மற்றும் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்காகவும் கூட இவர் அறியப்படுகிறார். ஆங்கிலேய-முகலாயப் போரில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனமானது தோல்வியை அடைந்தது.[313][314]

இந்தியாவில் 18 ஆம் நூற்றாண்டில் அரசியல் அமைப்புகள்

மராத்தியர்கள், இராசபுத்திரர்கள், ஜாட்கள் மற்றும் ஆப்கானியர்களிடமிருந்து வந்த படையெடுப்புகளின் காரணமாக முகலாயர்கள் ஏராளமான தாக்குதல்களுக்கு உள்ளாயினர். 1737 இல் மராத்தியப் பேரரசின் தளபதியான பாஜிராவ் தில்லி மீது படையெடுத்துச் சூறையாடினார். முகலாயப் பேரரசர் தன் தளபதி அமீர் கான் உம்ராவ் அல் உதாத்தின் கீழ் 8,000 துருப்புக்களை 5,000 மராத்தியக் குதிரைப்படை வீரர்களைத் துரத்தியடிக்க அனுப்பினார். அனுபவமற்ற முகலாயத் தளபதியை பாஜிராவ் எளிதாகத் தோற்கடித்தார். 1737 இல் முகலாயப் பேரரசின் கடைசித் தோல்வியாக முகலாய இராணுவத்தின் தலைமைத் தளபதியான நிசாம்-உல்-முல்க் போபாலில் மராத்திய இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டார். இது கிட்டத்தட்ட முகலாயப் பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்தது.[சான்று தேவை] அதே நேரத்தில், ஜாட் ஆட்சியாளர் சூரஜ் மல்லுக்குக் கீழான பரத்பூர் அரசானது ஆக்ராவில் இருந்த முகலாயக் கோட்டைக் காவல் படையினரை எளிதாகத் தோற்கடித்து நகரைச் சூறையாடியது.[315] 1739 இல் ஈரானின் பேரரசரான நாதிர் ஷா கர்னால் போரில் முகலாய இராணுவத்தைத் தோற்கடித்தார்.[316] தனது வெற்றிக்குப் பிறகு நாதிர் தில்லியைக் கைப்பற்றிச் சூறையாடினார். மயிலாசனம் உள்ளிட்ட பொக்கிஷங்களை எடுத்துச் சென்றார்.[317] துராணிப் பேரரசின் ஆட்சியாளராக தனது சொந்தப் படையெடுப்புகளை அகமது ஷா துராணி தொடங்கினார். 1757 இல் இறுதியாக தில்லியைச் சூறையாடினார்.[318] தொடர்ச்சியான பூர்வீக இந்திய எதிர்ப்பாலும் முகலாய ஆட்சியானது மேற்கொண்டு பலவீனமாக்கப்பட்டது. இதில் முகலாய சமய ஒடுக்குமுறைக்கு எதிரான பண்டா சிங் பகதூர் தலைமை தாங்கிய சீக்கிய கால்சா, வங்காளத்தின் இந்து இராஜாக்களான பிரதாபாதித்யா மற்றும் இராஜா சீதாராம் ராய் கிளர்ச்சி செய்தது, மற்றும் பந்தேலா இராசபுத்திரர்களின் மகாராஜா சத்திரசால் முகலாயர்களுடன் சண்டையிட்டு பன்னா இராச்சியத்தை நிறுவியது ஆகியவை அடங்கும்.[319] முகலாய அரசமரபானது 1757 வாக்கில் கைப்பாவை ஆட்சியாளர்களால் ஆளப்படும் நிலைக்கு வீழ்ச்சியடைந்தது. சீக்கியர்களை அழிப்பதற்காக இலாகூரை அடிப்படையாகக் கொண்டிருந்த முசுலிம் மாகாண அரசாங்கத்தின் கீழ் வத்தா கலுகரா நிகழ்வானது நடைபெற்றது. இதில் 30,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். சோட்டா கலுகரா எனும் தாக்குதலை முகலாயர்கள் தொடங்கிய போது தொடங்கப்பட்ட ஒரு தாக்குதல் இதுவாகும்.[320] இதற்குப் பின் வந்த முசுலிம் அரசுகளின் கீழ் பல தசாப்தங்களுக்கு இது நீடித்திருந்தது.[321]

மராத்தியப் பேரரசு

மராத்தியப் பேரரசு
1760 இல் அதன் உச்ச நிலையின் போது மராத்தியப் பேரரசு (மஞ்சள் பகுதி). இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும்பாலான பகுதியை இது உள்ளடக்கியிருந்தது. தென்னிந்தியாவிலிருந்து தற்கால பாக்கித்தான் வரை விரிவடைந்திருந்தது.
புனேயில் உள்ள சனிவார்வாடா அரண்மனை. 1818 வரை மராத்தியப் பேரரசின் பேஷ்வா ஆட்சியாளர்களின் ஆட்சியிடமாக இது திகழ்ந்தது.

மராத்திய இராச்சியமானது சிவாஜியால் நிறுவப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டது.[322] எனினும், தேசிய அளவில் மராத்தியர்களை சக்தி வாய்ந்தவர்களாக ஆக்கியதற்கான பெயரை பேஷ்வா (முதலமைச்சர்) பாஜிராவ் பெற்றுள்ளார். வரலாற்றாளர் கே. கே. தத்தா முதலாம் பாஜிராவைப் பற்றி "மராத்தியப் பேரரசின் இரண்டாவது நிறுவனராக இவரை நன்றாகக் குறிப்பிடலாம்" என்று எழுதியுள்ளார்.[323]

18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பேஷ்வாக்களின் கீழ் மராத்தியர்கள் நிலை நிறுத்தப்பட்டு, தெற்காசியாவின் பெரும்பாலான பகுதி மீது ஆட்சி செலுத்தினர். இந்தியாவில் முகலாய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததில் ஒரு பெரும் பங்கு காரணமாக மராத்தியர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.[324][325][326] 1737 இல் தில்லி யுத்தத்தில் தங்களது தலைநகரான தில்லியில் ஒரு முகலாய இராணுவமானது மராத்தியர்களால் தோற்கடிக்கப்பட்டது. இவர்களது எல்லைகளை மேலும் விரிவாக்குவதில் முடிவடைந்த செயலாக முகலாயர்கள், ஐதராபாத் நிசாம், வங்காள நவாபுகள் மற்றும் துராணிப் பேரரசு ஆகிய அரசுகளுக்கு எதிராகத் தங்களது இராணுவப் பயணங்களை மராத்தியர்கள் தொடர்ந்தனர். அதன் உச்ச நிலையின் போது மராத்தியர்களின் நிலப்பரப்பானது பெரும்பாலான இந்தியத் துணைக்கண்டத்தை உள்ளடக்கியிருந்தது.[327] தில்லியைக் கைப்பற்றவும் கூட மராத்தியர்கள் முயற்சித்தனர். முகலாயப் பேரரசருக்குப் பதிலாக அங்கு பேஷ்வா விசுவாசராவை அரியணையில் அமர வைப்பது குறித்து விவாதித்தனர்.[328]

மராத்தியப் பேரரசானது அதன் உச்ச நிலையின் போது தெற்கே தமிழ்நாட்டிலிருந்து,[329] வடக்கே பெசாவர் (நவீன கால பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணம்[330] [note 2]) மற்றும் கிழக்கே வங்காளம் வரை பரவியிருந்தது. மூன்றாம் பானிபட் போருக்குப் (1761) பிறகு மராத்தியரின் வடமேற்கு விரிவாக்கமானது நிறுத்தப்பட்டது. எனினும், வடக்கில் மராத்திய அதிகாரமானது ஒரு தசாப்தத்திற்கும் உள்ளாகவே பேஷ்வா மாதவராவின் கீழ் மீண்டும் நிறுவப்பட்டது.[332]

முதலாம் மாதவராவின் கீழ் வலிமையான குதிரைப்படை வீரர்கள் பகுதியளவு-சுயாட்சியைப் பெற்றனர். பரோடாவின் கெய்வாட்டுகள். இந்தோர் மற்றும் மால்வாவின் கோல்கர்கள், குவாலியர் மற்றும் உஜ்ஜைனின் சிந்தியாக்கள், நாக்பூரின் போன்சலேக்கள் மற்றும், தார் மற்றும் தேவாசுவின் புவர்கள் ஆகியோருக்குக் கீழ் ஒன்றிணைந்த மராத்திய அரசுகளின் ஒரு கூட்டமைப்பானது உருவாக்கப்பட்டது. 1775 இல் புனேவில் ஒரு பேஷ்வா குடும்ப வாரிசுரிமைப் பிரச்சனையில் கிழக்கிந்திய நிறுவனமானது தலையிட்டது. இது முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போருக்கு வழி வகுத்தது. இது ஒரு மராத்திய வெற்றியில் முடிவடைந்தது.[333] இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆங்கிலேய-மராத்தியப் போர்களில் (1805-1818) இவர்களது தோல்வி வரை இந்தியாவில் ஒரு முக்கியமான சக்தியாக மராத்தியர்கள் தொடர்ந்து திகழ்ந்தனர்.

சீக்கியப் பேரரசு

பஞ்சாபைச் சுற்றியிருந்த பகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்தியத் துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதிகளை 1799 முதல் 1849 வரை ஆட்சி செய்த ஓர் அரசியல் அமைப்பு சீக்கியப் பேரரசு ஆகும். மகாராஜா இரஞ்சித் சிங்கின் (1780-1839) தலைமைத்துவத்தின் கீழ் கால்சாவின் அடித்தளங்களிலிருந்து இது உருவாக்கப்பட்டது.[சான்று தேவை]

தன்னுடைய சீக்கிய கால்சா இராணுவத்தைப் பயன்படுத்தி பெரும்பாலான வட இந்தியாவை ஒரு பேரரசாக மகாராஜா இரஞ்சித் சிங் வலுப்படுத்தினார். இந்த இராணுவமானது ஐரோப்பிய இராணுவத் தொழில்நுட்பங்களில் பயிற்றுவிக்கப்பட்டும், நவீன இராணுவத் தொழில்நுட்பங்களுடன் கூடிய உபகரணங்களைக் கொண்டும் இருந்தது. இரஞ்சித் சிங் ஒரு சிறந்த இராணுவ உத்தியாளர் என்று நிரூபித்தார். தன்னுடைய இராணுவத்திற்கு நன்றாக தகுதி பெற்ற தளபதிகளைத் தேர்ந்தெடுத்தார். ஆப்கானிய-சீக்கியப் போர்களை இவர் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்தார். படிப்படியாக இவர் நடு பஞ்சாப்பையும், முல்தான் மற்றும் காசுமீர் மாகாணங்களையும், மற்றும் பெசாவர் பள்ளத்தாக்கையும் தன்னுடைய பேரரசில் இணைத்தார்.[334][335]

19 ஆம் நூற்றாண்டில் இதன் உச்ச நிலையின் போது இப்பேரரசு மேற்கே கைபர் கணவாயிலிருந்து, வடக்கே காசுமீர் வரையிலும், தெற்கே சிந்து வரையிலும், கிழக்கே சத்லஜ் ஆற்றின் நெடுகில் இமாச்சலம் வரையிலும் விரிவடைந்திருந்தது. இரஞ்சித் சிங்கின் இறப்பிற்குப் பிறகு இப்பேரரசானது பலவீனம் அடைந்தது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துடன் சண்டைகளுக்கு இது வழி வகுத்தது. முதலாம் ஆங்கிலேய-சீக்கியப் போர் மற்றும் இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போர் ஆகியவை சீக்கியப் பேரரசின் வீழ்ச்சியைக் குறித்தன. பிரித்தானியரால் இந்தியத் துணைக்கண்டத்தில் வெல்லப்பட்ட கடைசிப் பகுதிகளில் ஒன்றாக இது இதை ஆக்கியது.

பிற இராச்சியங்கள்

1763 இல் இந்தியாவின் நிலப்பரப்புகள்

தென்னிந்தியாவில் இருந்த மைசூர் அரசு 18 ஆம் நூற்றாண்டின் பிந்தைய பாதியில் ஐதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தானின் கீழ் அதன் உச்சபட்ச பரப்பளவுக்கு விரிவடைந்தது. இவர்களின் ஆட்சியின் கீழ் மராத்தியர்கள் மற்றும் பிரித்தானியர் அல்லது அவர்களது ஒன்றிணைந்த படைகளுக்கு எதிராக ஒரு தொடர்ச்சியான போர்களில் மைசூர் சண்டையிட்டது. கஜேந்திரகத் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் 1787 இல் மராத்திய மைசூர் போரானது முடிவுக்கு வந்தது. இதில் மராத்தியர்களுக்குத் திப்பு சுல்தான் திறை செலுத்த வேண்டிய தேவை என்பது சட்டப்படி பொறுப்பாக்கப்பட்டது. இதே வேளையில், ஆங்கிலேய மைசூர் போர்கள் நடைபெற்றன இப்போரில் மைசூரியர்கள் மைசூரிய ஏவூர்திகளைப் பயன்படுத்தினர். நான்காம் ஆங்கிலேய மைசூர் போரானது (1798-1799) திப்பு சுல்தான் இறப்பதைக் கண்டது. பிரெஞ்சுக்காரர்களுடனான மைசூரின் கூட்டணியானது பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு ஓர் அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டது. அனைத்து நான்கு திசைகளிலும் இருந்து மைசூர் தாக்கப்பட்டது. வடக்கிலிருந்து ஐதராபாத் நிசாம் மற்றும் மராத்தியர்கள் ஒரு படையெடுப்பைத் தொடங்கினர். சீரங்கப்பட்டிண முற்றுகையில் (1799) பிரித்தானியர் ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றனர்.

ஐதராபாத்தானது 1591 இல் கோல்கொண்டாவில் குதுப் சாகி அரசமரபால் நிறுவப்பட்டது. ஒரு குறுகிய கால முகலாய ஆட்சியைத் தொடர்ந்து ஒரு முகலாய அதிகாரியான ஆசிப் ஜா ஐதராபாத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார். 1724 இல் தன்னைத் தானே ஐதராபாத்தின் நிசாம்-அல்-முல்க்காக அறிவித்துக் கொண்டார். பல்கேத் யுத்தம் போன்ற பல யுத்தங்களில் தோற்றதற்குப் பிறகு மராத்தியப் பேரரசிடம் நிசாம்கள் குறிப்பிடத்தக்க அளவுக நிலப்பரப்பை இழந்தும், திறை செலுத்தவும் தொடங்கினர்.[336] எனினும், முதலில் மராத்தியர்களுக்குத் திறை செலுத்தியும், பின்னர் பிரித்தானியருக்கு அடி பணிந்தவர்களாகவும் இருந்ததன் மூலம் நிசாம்கள் தங்களது இறையாண்மையை 1724 முதல் 1948 வரை தக்க வைத்துக் கொண்டனர். 1798 இல் பிரித்தானிய இந்தியாவில் ஒரு மன்னர் அரசாக ஐதராபாத் இராச்சியம் உருவானது.

முகலாயப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து வங்காளத்தின் நடைமுறை ரீதியிலான ஆட்சியாளர்களாக வங்காள நவாபுகள் உருவாயினர். எனினும், 1741 முதல் 1748 வரை வங்காளத்திற்குள் ஆறு போர்ப் பயணங்களை நடத்திய மராத்தியர்களால் இந்த ஆட்சியானது தடைப்பட்டது. இதன் விளைவாக வங்காளமானது மராத்தியர்களுக்குத் திறை செலுத்திய ஓர் அரசானது. 1757 சூன் 23 அன்று வங்காளத்தின் கடைசி சுதந்திரமான நவாபான சிராச் உத் தௌலாவுக்கு பிளாசி சண்டையில் மிர் சாபர் நம்பிக்கை துரோகம் செய்தார். சிராச் உத் தௌலா பிரித்தானியரிடம் தோற்றார். 1757 இல் வங்காளத்தின் கட்டுப்பாட்டை பிரித்தானியர் பெற்றனர். மிர் சாபரை மசனத்தில் (அரியணையில்) பிரித்தானியர் அமர்த்தினர். வங்காளத்தில் ஓர் அரசியல் சக்தியாக தம்மைத் தாமே பிரித்தானியர் நிறுவிக் கொண்டனர்.[337] 1765 இல் இரட்டை அரசாங்க அமைப்பானது நிறுவப்பட்டது. இதில் பிரித்தானியருக்காக நவாபுகள் ஆட்சி செய்தனர். பிரித்தானியரின் வெறும் கைப்பாவைகளாக நவாபுகள் திகழ்ந்தனர். 1772 இல் இந்த அமைப்பானது ஒழிக்கப்பட்டது. வங்காளமானது பிரித்தானியரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1793 இல் நவாபின் நிசாமத்தும் (ஆளுநர் பதவியும்) கூட பறித்துக் கொள்ளப்பட்டது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் வெறும் ஓய்வூதியம் பெற்றவர்களாக நவாபுகள் தொடர்ந்தனர்.[338][339]

18 ஆம் நூற்றாண்டில் ஒட்டு மொத்த இராசபுதனமும் மராத்தியர்களால் அடி பணிய வைக்கப்பட்டது. 1807 முதல் 1809 வரை இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரானது மராத்தியர்களின் கவனத்தைச் சிதற வைத்தது. ஆனால், இதற்குப் பிறகு இராசபுதனம் மீதான மராத்தியர்களின் ஆதிக்கமானது மீண்டும் தொடர்ந்தது. 1817 இல் பிண்டாரிகளுடன் பிரித்தானியர் போருக்குச் சென்றனர். மராத்திய நிலப்பரப்புக்குள் தப்பித்து ஓடிய ஊடுருவாளர்கள் இந்த பிண்டாரிகள் ஆவர். இது மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரானது. பிண்டாரிகள் மற்றும் மராத்தியர்களிடமிருந்து இராசபுத்திர ஆட்சியாளர்களுக்குத் தங்களது பாதுகாப்பை அளிக்க பிரித்தானிய அரசாங்கம் முன் வந்தது. 1818 ஆம் ஆண்டின் முடிவு வாக்கில் பிற இராசபுத்திர அரசுகள் மற்றும் பிரித்தானியருக்கு இடையில் இதே போன்ற ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்பட்டன. குவாலியரின் மராத்திய சிந்தியா ஆட்சியாளர் அஜ்மீர்-மேர்வாரா மாவட்டத்தைப் பிரித்தானியருக்கு விட்டுக் கொடுத்து விட்டார். இராசத்தானில் மராத்திய செல்வாக்கானது முடிவுக்கு வந்தது.[340] 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கிளர்ச்சியில் பெரும்பாலான இராசபுத்திர இளவரசர்கள் பிரித்தானியருக்குத் தொடர்ந்து விசுவாசமாக இருந்தனர். 1947 இல் இந்தியா சுதந்திரம் அடையும் வரை இராசபுதனத்தில் வெகு சில அரசியல் மாற்றங்களே பிரித்தானியரால் கொண்டு வரப்பட்டன. இராசபுதன முகமையானது 20 க்கும் மேற்பட்ட மன்னர் அரசுகளைக் கொண்டிருந்தது. அதில் மிக முக்கியமானவையாக உதய்பூர் இராச்சியம், ஜெய்பூர் இராச்சியம், பிகானேர் இராச்சியம் மற்றும் ஜோத்பூர் சமஸ்தானம் ஆகியவை திகழ்ந்தன.

மராத்தியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரித்தானியரிடம் ஓர் அடி பணிந்த கூட்டணியில் பல மராத்திய அரசமரபுகளும், அரசுகளும் வந்தன. சீக்கியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு 1846 இல் முதலாம் ஆங்கிலேய சீக்கியப் போரைத் தொடர்ந்து அமிர்தசரசு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின் கீழ் பிரித்தானிய அரசாங்கமானது காசுமீர் மகாராஜா குலாப் சிங்கிடம் காசுமீரை விற்றது. பிரித்தானிய இந்தியாவில் இரண்டாவது மிகப் பெரிய மன்னர் அரசான சம்மு மற்றும் காசுமீரின் மன்னர் அரசானது டோக்ரா அரசமரபால் உருவாக்கப்பட்டது.[341][342] இதே நேரத்தில், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கூச் பெகர் சமஸ்தானம், திவிப்ரா இராச்சியம் மற்றும் சிக்கிம் இராச்சியம் ஆகிய இந்து மற்றும் பௌத்த அரசுகள் பிரித்தானியரால் இணைத்துக் கொள்ளப்பட்டன. அடி பணிந்த மன்னர் அரசுகளாக மாற்றப்பட்டன.

விசயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு தென்னிந்தியாவில் பாளையக்காரர் அரசுகள் தோன்றத் தொடங்கின. பாளையக்காரர் போர்கள் வரையில் படையெடுப்புகளைத் தடுத்தும், செழித்தும் வந்தன. இப்போர்களில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் படைகளால் அவை தோற்கடிக்கப்பட்டன.[343] 18 ஆம் நூற்றாண்டு வாக்கில் நேபாள இராச்சியமானது இராசபுத்திர ஆட்சியாளர்களால் நிறுவப்பட்டது.[344]

ஐரோப்பிய இட ஆய்வுப் பயணம்

வாஸ்கோ ட காமாவின் முதல் நீண்ட கடற்பயணத்தின் (1497-1499) போது பின்பற்றப்பட்ட வழி

1498 இல் வாஸ்கோ ட காமா தலைமையிலான ஒரு போர்த்துகேய கப்பல் குழுவானது ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு ஒரு புதிய கடல் வழியைக் கண்டுபிடித்தது. நேரடியான இந்திய-ஐரோப்பிய வணிகத்திற்கு இது வழியை அமைத்தது. வெல்கா கோவா, தாமன், தியூ தீவு, மற்றும் பாம்பேயில் போர்த்துகேயர் சீக்கிரமே வாணிக நிலையங்களை அமைத்தனர். கோவா சமயக் குற்றவிசாரணையை போர்த்துகேயர் தொடங்கி வைத்தனர். கிறித்தவத்திற்கு எதிராக வதந்திகளைப் பரப்பியதாக சந்தேகிக்கப்பட்ட, கிறித்தவத்துக்கு மாறிய புதிய இந்தியர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். கிறித்தவர் அல்லாதவர்கள் கண்டிக்கப்பட்டனர்.[345] 1961 இல் இந்தியாவால் இணைக்கப்படும் வரை கோவா முதன்மையான போர்த்துக்கேய நிலப்பரப்பாகத் தொடர்ந்து இருந்தது.[346]

அடுத்ததாக இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர் டச்சுக்காரர் ஆவர். அவர்கள் தங்களது முதன்மையான அடித்தளத்தை இலங்கையில் கொண்டிருந்தனர். மலபாரில் அவர்கள் துறைமுகங்களை நிறுவினர். எனினும், திருவாங்கூர்-டச்சுப் போர்களின் போது திருவாங்கூர் இராச்சியத்தால் குளச்சல் போரில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு இந்தியாவில் அவர்களது விரிவாக்கமானது இடை நிறுத்தப்பட்டது. அதிலிருந்து டச்சுக்காரர்கள் என்றுமே மீளவில்லை. இந்தியாவுக்கு ஒரு பெரிய குடியேற்ற அச்சுறுத்தலை அவர்கள் அதற்குப் பிறகு ஏற்படுத்தவில்லை.[347][348]

இந்திய இராச்சியங்கள் நடுவிலான உள்நாட்டுச் சண்டைகளானவை படிப்படியாக அரசியல் செல்வாக்கை நிறுவவும், நிலங்களை எடுத்துக் கொள்ளவும் ஐரோப்பிய வணிகர்களுக்கு வாய்ப்புகளைக் கொடுத்தன. டச்சுக்காரர்களைத் தொடர்ந்து பிரித்தானியர் வந்தனர். 1619 இல் சூரத்தில் மேற்குக் கடற்கரைத் துறைமுகத்தை அமைத்தனர். பிறகு பிரெஞ்சுக்காரர்கள் வந்தனர். இரு நாட்டவரும் இந்தியாவில் வணிக நிலையங்களை நிறுவினர். கண்டப்பகுதி ஐரோப்பிய சக்திகள் தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் தொடர்ந்து வந்த நூற்றாண்டின் போது பல்வேறு கடற்கரைப் பகுதிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டிருந்த போதும், இந்தியாவில் தங்களது அனைத்து நிலப்பரப்புகளையும் அவர்கள் இறுதியாகப் பிரித்தானியரிடம் பறி கொடுத்தனர். பிரெஞ்சு வணிக நிலையங்களான பாண்டிச்சேரி மற்றும் சந்தன்நகர் மற்றும் போர்த்துகேய குடியேற்றப் பகுதிகளான கோவா, தாமன் மற்றும் தியூ ஆகியவையே இதில் விதி விலக்காகும்.[349][350]

இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவன ஆட்சி

கிழக்கிந்திய நிறுவன ஆட்சியின் கீழ் இந்தியா
1765 மற்றும் 1805 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் வரைபடங்களானவை கிழக்கிந்திய நிறுவனத்தின் நிலப்பரப்புகளை இளஞ்சிவப்பு நிறத்தில் காட்டுகின்றன
1837 மற்றும் 1857 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் வரைபடங்களானவை கிழக்கிந்திய நிறுவனம் (இளஞ்சிவப்பு) மற்றும் பிற நிலப்பரப்புகளைக் காட்டுகின்றன

ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனமானது 1600 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1611 இல் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் மச்சிலிப்பட்டணத்தில் ஒரு தொழிற்சாலையை நிறுவியது மற்றும் 1612 இல் சூரத்தில் ஒரு தொழிற்சாலையை நிறுவ முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் உரிமைகளை வழங்கியது ஆகியவற்றுடன் இது இந்தியாவில் காலூன்றியது. மேலும், தெற்கே விசயநகர ஆட்சியாளரிடமிருந்து இதே போன்ற ஓர் அனுமதியைப் பெற்றதற்குப் பிறகு 1640 இல் தென்கிழக்குக் கடற்கரையில் சென்னையில் ஓர் இரண்டாவது தொழிற்சாலையானது நிறுவப்பட்டது. தற்கால மும்பையில் (பாம்பே) இருந்த பாம் பாகியா சிறு தீவானது சூரத்தில் இருந்து வெகு தொலைவில் அமைந்திராத ஒரு போர்த்துகேய வணிக நிலையமாக இருந்தது. போர்த்துகலின் மன்னனின் மகளான கேத்தரீன் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட போது வரதட்சணையாக இது கொடுக்கப்பட்டது. பதிலுக்கு சார்லசு 1668 இல் நிறுவனத்திடம் பாம்பேயை குத்தகைக்குக் கொடுத்தார். இரு தசாப்தங்கள் கழித்து நிறுவனமானது கங்கையாற்று கழிமுகப் பகுதியில் ஒரு வணிக நிலையத்தை நிறுவியது. இக்காலத்தின் போது போர்த்துகேயர், டச்சு, பிரெஞ்சு மற்றும் டென்மார்க் நாட்டவர்களால் நிறுவப்பட்ட பிற நிறுவனங்களும் இதே போல துணைக்கண்டத்தில் விரிவடைந்து கொண்டிருந்தன.

1757 ஆம் ஆண்டின் பிளாசி சண்டையில் ராபர்ட் கிளைவுக்குக் கீழான நிறுவனத்தின் வெற்றி மற்றும் 1764 இல் பக்சார் சண்டையில் (பீகாரில்) வெற்றி ஆகியவை நிறுவனத்தின் சக்தியை நிலை நிறுத்தின. வங்காளம், பீகார் மற்றும் ஒடிசாவின் திவான் அல்லது வருவாய் வசூலிப்பாளராக கிழக்கிந்திய நிறுவனத்தை நியமிக்கும் நிலைக்கு முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலம் தள்ளப்பட்டார். இவ்வாறாக நிறுவனமானது 1773 வாக்கில் கீழ் கங்கைச் சமவெளியின் பெரும் பகுதிகளின் நடைமுறை ரீதியிலான ஆட்சி அமைப்பாக உருவானது. பாம்பே மற்றும் மதராசைச் சுற்றியிருந்த இதன் நிலப்பரப்புகளை விரிவாக்க ஆணைகளும் கூட இதற்கு முன்னர் பெறப்பட்டிருந்தன. ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள் (1766–99) மற்றும் ஆங்கிலேய-மராத்தியப் போர்கள் (1772–1818) ஆகியவை சத்லஜ் ஆற்றுக்குத் தெற்கே இருந்த இந்தியாவின் பெரும் பகுதிகளின் கட்டுப்பாட்டை நிறுவனம் பெறும் நிலைக்குக் காரணமானது. மராத்தியர்களின் தோல்வியுடன் எந்த ஓர் உள்நாட்டு சக்தியும் நிறுவனத்திற்கு ஓர் அச்சுறுத்தலாக விளங்கியது என்ற நிலை இல்லாமல் போனது.[351]

நிறுவனத்தின் சக்தி விரிவடைந்தது என்பது முதன்மையாக இரு வடிவங்களில் நடைபெற்றது. இதில் முதல் வடிவமானது இந்திய அரசுகளை வெளிப்படையாக இணைத்துக் கொள்வதாகும். இதைத் தொடர்ந்து அந்த அரசுக்குக் கீழ் இருந்த பகுதிகளானவை நிறுவனத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. இவை பிரித்தானிய இந்தியாவின் பகுதிகளாயின. வடமேற்கு மாகாணங்கள் (ரோகில்கண்ட், கோரக்பூர் மற்றும் தோவாப் பகுதிகளை உள்ளடக்கியது) (1801), தில்லி (1803), அசாம் (அகோம் பேரரசு 1828) மற்றும் சிந்து (1843) உள்ளிட்டவை இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளில் உள்ளடங்கியிருந்தன. 1849-56 இல் நடந்த ஆங்கிலேய-சீக்கியப் போர்களுக்குப் பிறகு பஞ்சாப் பகுதி, வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-2010), மற்றும் காசுமீர் ஆகியவை இணைத்துக் கொள்ளப்பட்டன (டல்கௌசி தலைமை ஆளுநராக இருந்த காலத்தில்). எனினும், காசுமீரானது உடனடியாக அமிர்தசரசு ஒப்பந்தத்தின் கீழ் சம்முவின் டோக்ரா அரசமரபினரிடம் விற்கப்பட்டது. இவ்வாறாக ஒரு மன்னர் அரசாக உருவானது. 1854 இல் பேரர் இணைத்துக் கொள்ளப்பட்டது. இதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து ஔத் அரசு இணைத்துக் கொள்ளப்பட்டது.[சான்று தேவை]

அதிகாரத்தை நிறுவும் இரண்டாவது வடிவமானது ஒப்பந்தங்களை உள்ளடக்கியிருந்தது. இந்த ஒப்பந்தங்களில் இந்திய ஆட்சியாளர்கள் நிறுவனத்தின் ஆதிக்கத்தை ஒப்புக் கொள்வார். இதற்குப் பதிலாக வரம்புக்குட்பட்ட உட்புற தன்னாட்சியைப் பெறுவர். நிறுவனமானது நிதி பிரச்சனைகளுடன் செயல்பட்டு வந்ததன் காரணமாக, தன் ஆட்சிக்காக நிறுவனம் இத்தகைய அரசியல் அடியுதைவுக் கட்டுமானங்களை அமைக்க வேண்டியிருந்தது.[352] மிக முக்கியமான இத்தகைய ஆதரவானது இந்திய ஆட்சியாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட துணைப்படைத் திட்டங்களில் இருந்து கிடைக்கப் பெற்றது.[352] 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தகைய ஆட்சியாளர்களின் நிலப்பரப்புகளானவை ஒட்டு மொத்த இந்தியாவில் மூன்றில் இரு பங்கு நிலப்பரப்பாக இருந்தன.[352] தன்னுடைய நிலப்பரப்பை நிலையாகக் கொண்டிருக்க முடிந்த ஓர் இந்திய ஆட்சியாளர் இத்தகைய ஒரு கூட்டணிக்குள் நுழைய விரும்பிய போது மறைமுக ஆட்சியின் ஒரு பொருளாதார வழி முறையாக இதை நிறுவனமானது வரவேற்றது. நேரடி நிர்வாகத்தின் பொருளாதாரச் செலவீனங்களைக் கொண்டிருக்காத அல்லது அயல் நாட்டு மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான அரசியல் செலவீனங்களைக் கொண்டிருக்காததாக இந்த வழி முறை இருந்தது.[353]

பதிலுக்கு நிறுவனமானது "இந்த அடிபணிந்த கூட்டாளிகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றது. பாரம்பரிய மரியாதை மற்றும் மதிப்பின் அறிகுறிகளுடன் அவர்களை நடத்தியது".[353] இந்து மகாராஜாக்கள் மற்றும் முசுலிம் நவாபுகளின் மன்னர் அரசுகளுடன் துணைநிலைக் கூட்டணிகள் உருவாக்கப்பட்டன. இந்த மன்னர் அரசுகளில் முக்கியமானவையாக கொச்சி (1791), ஜெய்பூர் (1794), திருவிதாங்கூர் (1795), ஐதராபாத் (1798), மைசூர் (1799), சிசு-சத்லஜ் குன்று அரசுகள் (1815), மத்திய இந்திய முகமை (1819), கட்ச் மற்றும் குசராத்து கெய்க்வாட் நிலப்பரப்புகள் (1819), இராசபுதனம் (1818),[354] மற்றும் பகவல்பூர் (1833) ஆகியவை திகழ்ந்தன. மேற்கு ஆப்கானித்தானில் பாரசீகத் திட்டங்களுக்கு உருசியாவின் ஆதரவை சமநிலைப்படுத்துவதற்காக கிழக்கிந்திய நிறுவனமானது பல்வேறு ஆப்கானிய ஆட்சியாளர்களுடனும், பஞ்சாபின் இரஞ்சித் சிங்குடனும் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியது. 1839 இல் முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போரில் (1839-42) நிறுவனம் ஈடுபட்டது. எனினும், இந்தியாவில் பிரித்தானியர் தங்களது நிலப்பரப்பை விரிவாக்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில் நடு ஆசியாவில் உருசியாவும் தன்னுடைய நிலப்பரப்பை விரிவாக்கிக் கொண்டிருந்தது. 1863 மற்றும் 1868 ஆகிய ஆண்டுகளில் முறையே புகாரா மற்றும் சமர்கந்து ஆகிய நகரங்களைக் கைப்பற்றியது. இவ்வாறாக, நடு ஆசியாவில் பெரும் விளையாட்டு எனப்படும் பிரச்சினைகளுக்கான தளம் அமைக்கப்பட்டது.[355]

இந்திய சட்டமுறை ஆவண அமைப்பு

இந்திய சட்டமுறை ஆவண அமைப்பு என்பது ஒரு காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு சட்டமுறை ஆவண அமைப்பாகும். கடன் அடிப்படையிலான அடிமைத் தனத்தின் ஒரு வடிவம் இதுவாகும். இதன் மூலம் 35 இலட்சம் இந்தியர்கள் ஐரோப்பிய சக்திகளின் குடியேற்றங்களுக்கு இடமாற்றப்பட்டனர். தோட்டங்களுக்கு (முதன்மையாகக் கரும்புத் தோட்டங்கள்) பணியாளர்களை வழங்குவதற்காக இவர்கள் அனுப்பப்பட்டனர். 1833 ஆம் ஆண்டு அடிமை முறை ஒழிக்கப்பட்டத்திலிருந்து இது தொடங்கியது. 1920 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. கரீபியன் முதல் அமைதிப் பெருங்கடல் வரை பரவியிருந்த ஒரு பெரிய வெளிநாடு வாழ் இந்தியர்களின் மக்கள் தொகையின் வளர்ச்சி மற்றும் பெரிய இந்திய கரீபியர்கள் மற்றும் இந்திய-ஆப்பிரிக்க மக்கள் தொகையின் வளர்ச்சிக்கு இது காரணமானது.

பிந்தைய நவீன கால மற்றும் சம கால வரலாறு (1857–1947)

1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியும், அதன் விளைவுகளும்

1857 ஆம் ஆண்டின் சிப்பாய்க் கிளர்ச்சி என்பது நிறுவனத்தின் ஆட்சிக்கு எதிராக வடக்கு மற்றும் நடு இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டிருந்த போர் வீரர்களால் நடத்தப்பட்ட ஒரு பெரும் அளவிலான கிளர்ச்சியாகும். என்பீல்டு துப்பாக்கிகளுக்காக வழங்கப்பட்ட புதிய வெடிமருந்துத் தோட்டாக்களின் விவகாரமே கிளர்ச்சிக்கு வழி வகுத்த பொறியாக இருந்தது. உள்நாட்டு சமயங்களில் தடை செய்யப்பட்டிருந்த பழக்க வழக்கங்களுக்கு இதில் மதிப்பளிக்கப்படாமல் இருந்தது. முதன்மையான கிளர்ச்சியாளராக மங்கள் பாண்டே திகழ்ந்தார்.[356] இதனுடன் சேர்த்து பிரித்தானிய வரி விதிப்பு குறித்த மனக்குறைகள், பிரித்தானிய அதிகாரிகள் மற்றும் அவர்களது இந்தியத் துருப்புக்களுக்கு இடையிலான இன வேறுபாடு மற்றும் நிலப்பரப்புகள் இணைத்துக் கொள்ளப்பட்டது ஆகியவை கிளர்ச்சியில் ஒரு முதன்மையான பங்கை ஆற்றின. பாண்டேயின் கிளர்ச்சிக்குப் பிறகு சில வாரங்களுக்குள்ளாகவே பரவலான கிளர்ச்சியில் இந்திய இராணுவத்தின் டசன் கணக்கிலான பிரிவுகளுடன், விவசாய இராணுவங்களும் இணைந்தன. கிளர்ச்சி செய்த போர் வீரர்களுடன் பின்னர் இந்திய உயர்குடியினரும் இணைந்தனர். அவகாசியிலிக் கொள்கையின் கீழ் தங்களது பட்டங்கள் மற்றும் நிலப்பரப்புகளை இழந்தவர்களாக இந்த உயர்குடியினரில் பெரும்பாலானவர்கள் இருந்தனர். தங்களது மரபுரிமையின் ஒரு பாரம்பரிய அமைப்பில் நிறுவனமானது தலையிட்டதாக அவர்கள் கருதினர். நானா சாகிப் மற்றும் இராணி இலட்சுமிபாய் போன்ற கிளர்ச்சித் தலைவர்கள் இவ்வாறாக பாதிப்படைந்தவர்களில் சிலர் ஆவர்.[357]

மீரட்டில் கிளர்ச்சி வெடித்த போது கிளர்ச்சியாளர்கள் வெகு சீக்கிரமாக தில்லியை அடைந்தனர். வடமேற்கு மாகாணங்கள் மற்றும் அவத்தின் (ஔத்) பெரும் நிலப்பகுப்புகளையும் கூட கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். மிகக் குறிப்பாக, அவத்தில் பிரித்தானிய இருப்புக்கு எதிராக ஒரு தேசப்பற்றுடைய கிளர்ச்சியின் அம்சங்களுடன் இக்கிளர்ச்சி நடைபெற்றது.[358] எனினும், நட்புடைய மன்னர் அரசுகளின் உதவியுடன் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனமானது துரிதமாக இராணுவத்தை ஒருங்கிணைத்தது. ஆனால், 1858 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி வரை இக்கிளர்ச்சியை ஒடுக்க பிரித்தானியருக்கு காலம் பிடித்தது. போதிய ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களிடம் இல்லாதது, மற்றும் வெளிப்புற ஆதரவு அல்லது நிதியுதவி இல்லாததன் காரணமாக கிளர்ச்சியாளர்கள் மிருகத்தனமாக பணிய வைக்கப்பட்டனர்.[359]

இதற்குப் பிறகு அனைத்து அதிகாரமும் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்திடம் இருந்து பிரித்தானிய அரசாங்கத்துக்கு மாற்றப்பட்டது. பிரித்தானிய அரசாங்கமானது பெரும்பாலான இந்தியாவை மாகாணங்களாக நிர்வகிக்கத் தொடங்கியது. பிரித்தானிய அரசாங்கமானது நிறுவனத்தின் நிலங்களை நேரடியாகக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. உள்நாட்டு அரச குடும்பங்களால் ஆளப்பட்ட மன்னர் அரசுகளைக் கொண்டிருந்த எஞ்சிய இந்தியா மீது பிரித்தானிய அரசாங்கமானது குறிப்பிடத்தக்க அளவுக்கு மறைமுக செல்வாக்கைக் கொண்டிருந்தது. 1947 இல் அலுவல்பூர்வமாக 565 மன்னர் அரசுகள் இந்தியாவில் இருந்தன. ஆனால், வெறும் 21 அரசுகள் மட்டுமே உண்மையான அரசாங்கங்களைக் கொண்டிருந்தன. வெறும் மூன்று (மைசூர், ஐதராபாத் மற்றும் காசுமீர்) மட்டுமே பெரியவையாக இருந்தன. 1947-48 இல் சுதந்திரமடைந்த இந்தியாவுடன் இவை இணைத்துக் கொள்ளப்பட்டன.[360]

பிரித்தனியாவின் இந்தியப் பேரரசு (1858–1947)

பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
1909 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் வரைபடம். பிரித்தனிய இந்தியாவானது இளஞ்சிவப்பு நிறத்திலும், மன்னர் அரசுகள் மஞ்சள் நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன.
1887 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட, தற்போது ஓர் உலகப் பாரம்பரியக் களமாகத் திகழும் மும்பையில் உள்ள ஒரு தொடருந்து நிலையமான சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையத்தின் ஒரு 1903 ஆம் ஆண்டு காட்சி வரைபடம்.

1857 ஆம் ஆண்டுக்குப் பிறகு குடியேற்ற அரசாங்கமானது வலிமைப்படுத்தப்பட்டது. நீதி அமைப்பு, சட்ட செயல்முறைகள் மற்றும் விதிமுறைகளின் வழியாக அதன் உட்கட்டமைப்பை விரிவாக்கியது. இந்திய தண்டனைச் சட்டமானது கொண்டு வரப்பட்டது.[361] கல்வியில் தாமஸ் பேபிங்டன் மெக்காலி பள்ளிக் கல்வியை பேரரசின் ஒரு முன்னுரிமையாக 1835 ஆம் ஆண்டு வைத்தார். கற்றலுக்கான மொழியாக ஆங்கிலத்தின் பயன்பாட்டை அமல்படுத்தியதில் வெற்றியடைந்தார். 1890 வாக்கில் சுமார் 60,000 இந்தியர்கள் கல்லூரிகளுக்குள் நுழைந்தனர்.[362] 1880 முதல் 1920 வரை இந்தியப் பொருளாதாரமானது ஓராண்டுக்கு சுமார் 1% என்ற அளவில் வளர்ச்சியடைந்தது. மக்கள் தொகையும் ஓராண்டுக்கு சுமார் 1% என்ற அளவில் வளர்ச்சியடைந்தது. எனினும், 1910 களிலிருந்து இந்திய தனியார் தொழிற்துறையானது குறிப்பிடத்தக்க அளவுக்கு வளரத் தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் ஒரு நவீன தொடருந்து அமைப்பானது கட்டமைக்கப்பட்டது. உலகின் நான்காவது மிகப் பெரிய தொடருந்து அமைப்பாக இது இருந்தது.[363] பொருளாதார வரலாற்றின் விவகாரங்களில் வரலாற்றாளர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர். பிரித்தானிய ஆட்சியின் காரணமாக இந்தியா ஏழை நாடாகத் தொடர்ந்ததாக தேசியவாத வரலாற்றாளர்கள் வாதிடுகின்றனர்.[364]

1905 இல் கர்சன் வங்காளத்தின் பெரிய மாகாணத்தை பெரும்பாலும் இந்துக்களைக் கொண்டிருந்த மேற்குப் பகுதி மற்றும் பெரும்பாலும் முசுலிம்களைக் கொண்டிருந்த கிழக்குப் பாதியான "கிழக்கு வங்காளம் மற்றும் அசாம்" ஆகப் பிரித்தார். பிரித்தானிய நோக்கமானது திறமையான நிர்வாகம் என்று கூறப்பட்டது. ஆனால், வெளிப்படையாகத் தெரிந்த "பிரித்தாளும் சூழ்ச்சியால்" வங்காள மக்கள் கொதிப்படைந்தனர். குடியேற்றத்திற்கு எதிரான அமைப்பு ரீதியிலான இயக்கத்தின் தொடக்கத்தையும் கூட இது குறித்தது. 1906 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் தாராண்மைக் கட்சியானது அதிகாரத்திற்கு வந்த போது கர்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டு வங்காளமானது மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது. புதிய தலைமை ஆளுநரான கில்பர்ட் மின்டோ மற்றும் இந்தியாவுக்கான புதிய உள்துறைச் செயலரான யோவான் மோர்லே ஆகியோர் அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து காங்கிரசு தலைவர்களுடன் கலந்து பேசினர். 1909 ஆம் ஆண்டில் மோர்லே-மின்ண்டோ சீர்திருத்தங்களானவை மாகாண செயலாட்சி மன்றங்கள், மேலும் தலைமை ஆளுநரின் செயலாட்சி மன்றத்தில் இந்தியர்களுக்கு உறுப்பினர் பதவியைக் கொடுத்தன. ஏகாதிபத்திய சட்டமியற்றும் மன்றமானது 25 இலிருந்து 60 உறுப்பினர்களைக் கொண்டதாகப் பெரிதாக்கப்பட்டது. பிரநிதித்துவ மற்றும் பொறுப்புடைய நிர்வாகத்தை நோக்கிய ஒரு கவனம் ஈர்க்கும் நடவடிக்கையாக முசுலிம்களுக்கான தனியான சமூக பிரதிநிதித்துவமானது நிறுவப்பட்டது.[365] அந்நேரத்தில், பல சமூக-சமய அமைப்புகள் உருவாகத் தொடங்கின. 1906 இல் அகில இந்திய முசுலிம் லீக் அமைக்கப்பட்டது.[366] சீக்கியர்கள் 1920 இல் சிரோமணி அகாலி தளத்தை நிறுவினர்.[367] எனினும், 1885 இல் தொடங்கப்பட்ட மிகப் பெரிய மற்றும் மிகப் பழமையான அரசியல் கட்சியான இந்திய தேசிய காங்கிரசு சமூக-சமய இயக்கங்கள் மற்றும் அடையாள அரசியலிலிருந்து விலகியே இருக்க முயற்சித்தது.[368]

இந்திய மறுமலர்ச்சி

19 ஆம் மற்றும் தொடக்க 20 ஆம் நூற்றாண்டுகளின் போது இந்திய துணைக்கண்டத்தின் வங்காளப் பகுதியில் வங்காள இந்துக்களால் முதன்மையாக நடத்தப்பட்ட ஒரு சமூக சீர்திருத்த இயக்கமானது வங்காள மறுமலர்ச்சி என்று குறிப்பிடப்படுகிறது. இது பிரித்தானிய ஆட்சியின் கீழ் நடைபெற்றது. சீர்திருத்தவாதியும், மனிதாபிமானியுமான இராசாராம் மோகன் ராயில் (1775–1833) தொடங்கி ஆசியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவரான இரவீந்திரநாத் தாகூருடன் (1861–1941) மறுமலர்ச்சியானது முடிவடைந்ததாக வரலாற்றாளர் நிதிஷ் சென்குப்தா விளக்குகிறார்.[369] சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகள், அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தோன்றியதானது வரலாற்றாளர் டேவிட் கோப்பால் "இந்திய வரலாற்றில் மிகவும் புதுமைகளை உருவாக்கிய காலங்களில் ஒன்று" என்று குறிப்பிடப்படுகிறது.[370]

இக்காலத்தின்போது சில வழிகளில் மறுமலர்ச்சியை ஒத்த ஒரு சிந்தனைசார் விழிப்படைதலை வங்காளமானது கண்டது. ஏற்கனவே இருந்த பழமையான பழக்கவழக்கங்களை இந்த இயக்கமானது கேள்விக்கு உள்ளாக்கியது. குறிப்பாக பெண்கள், திருமணம், வரதட்சணை அமைப்பு, சாதி மற்றும் சமயம் குறித்து கேள்வி எழுப்பியது. இக்காலத்தின் போது தோன்றிய தொடக்க கால சமூக இயக்கங்களில் ஒன்று இளைய வங்காளம் இயக்கமாகும். மேல் சாதி கற்றறிந்த இந்துக்களுக்கு மத்தியில் குடிசார் நடத்தையின் பொதுவான பகுதிகளாக பகுத்தறிவியம் மற்றும் இறைமறுப்புக்கு இது ஆதரவளித்தது.[371] இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இந்திய மனங்கள் மற்றும் சிந்தனைசார்ந்தோரை மீண்டும் விழிப்படைய வைக்கும் ஒரு முதன்மையான பங்கினை இது ஆற்றியது.

பஞ்சங்கள்

பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் பிரித்தானிய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின் போது எக்காலத்திலும் பதிவு செய்யப்பட்ட மிக அதிக இறப்பை ஏற்படுத்திய பஞ்சங்களில் சிலவற்றை இந்தியா கண்டது. பயிர் விளைச்சலில் வீழ்ச்சிகள் காரணமாக பொதுவாகத் தொடங்கிய இப்பஞ்சகளானவை குடியேற்ற அரசாங்கத்தின் கொள்கைகளால் வழக்கமாக மோசமாக்கப்பட்டன.[372] 61 இலட்சம் முதல் 1.03 கோடி வரையிலான மக்கள் இறந்த 1876-78 சென்னை மாகாணப் பெரும் பஞ்சம்,[373] 10 இலட்சம் மற்றும் 1 கோடிக்கிடையிலான மக்கள் இறந்த 1770 வங்காளப் பஞ்சம்,[374][375] 12.50 இலட்சம் முதல் 1 கோடி வரையிலான மக்கள் இறந்த 1899–1900 இந்தியப் பஞ்சம்,[372] 21 மற்றும் 38 இலட்சங்களுக்கிடையிலான மக்கள் இறந்த 1943 வங்காளப் பஞ்சம் ஆகியவை இத்தகைய பஞ்சங்கள் ஆகும்.[376] 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மூன்றாவது பிளேக்கு கொள்ளை நோயானது இந்தியாவில் 1 கோடி மக்களைக் கொன்றது.[377]

முதலாம் உலகப் போர்

முதலாம் உலகப் போரின் போது இராணுவத்திற்காக எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்களாக உதவ முன் வந்தனர். நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சண்டை சாராத பணிகளில் ஈடுபட தன்னார்வலர்களாக முன் வந்தனர். போருக்கு முன்னர் வருடாந்திரமாக சுமார் 15,000 பேர் என்று சேர்க்கப்பட்ட அளவை விட இது அதிகமானதாகும்.[378] மேற்குப் போர் முனையில் முதலாம் இப்ரேசு யுத்தத்தில் இராணுவமானது தொடக்க சண்டைகளைக் கண்டது. போர் முனைப் பணியில் ஓராண்டுக்குப் பிறகு படைகளைப் பின் வாங்கும் நிலைக்கு இந்தியப் பிரிவுகளை உடல் நலக்குறைவுகளும், இழப்புகளும் உள்ளாக்கின. மெசொப்பொத்தேமியப் படையெடுப்பில் கிட்டத்தட்ட 7 இலட்சம் இந்தியர்கள் துருக்கியர்களை எதிர்த்துச் சண்டையிட்டனர். இந்தியப் படைகளானவை கிழக்கு ஆப்பிரிக்கா, எகிப்து மற்றும் கல்லிப்போலி ஆகிய இடங்களுக்கும் கூட அனுப்பப்பட்டன.[379]

1915 இல் சினாய் மற்றும் பாலத்தீனப் போர் நடவடிக்கைகளின் சூயஸ் கால்வாய் தற்காப்பிலும், 1916 இல் உரோமானியில் மற்றும் 1917 இல் எருசேலத்திற்குள் ஆகிய சண்டைகளில் இந்திய இராணுவமும், ஏகாதிபத்திய சேவைத் துருப்புகளும் சண்டையிட்டன. இந்தியப் பிரிவுகளானவை யோர்தான் பள்ளத்தாக்கை ஆக்கிரமித்தன. செருமானிய வசந்த காலத் தாக்குதலுக்குப் பிறகு இவர்கள் மெகித்தோ யுத்தத்தின் போது எகிப்திய குறிக்கோள் பயணப் படையிலும், திமிஷ்குவை நோக்கிய பாலைவன குதிரைப் படைப் பிரிவின் முன்னேற்றம் மற்றும் அலெப்போவுக்குள்ளான முன்னேற்றம் ஆகியவற்றின் போதும் ஒரு முதன்மையான சக்தியாக உருவாயினர். வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தைப் பாதுகாப்பதற்கும், உள்நாட்டுப் பாதுகாப்புக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பிற பிரிவுகள் இந்தியாவிலேயே இருந்தன.

இப்போரின் போது 10 இலட்சம் இந்தியத் துருப்புக்கள் அயல்நாடுகளில் சேவையாற்றினர். ஒட்டு மொத்தமாக 74,187 பேர் இறந்தனர்.[380] 67,000 பேர் காயமடைந்தனர்.[381] முதலாம் உலகப் போர் மற்றும் ஆப்கானியப் போர்களில் சண்டையிட்டு மடிந்த தோராயமாக 90,000 போர் வீரர்கள் இந்தியாவின் வாயிலால் நினைவுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டாம் உலகப் போர்

செப்டம்பர் 1939 இல் நாசி செருமனி மீது பிரித்தானிய இந்தியா அலுவல் பூர்வமாக போரை அறிவித்தது.[382] நேச நாடுகளின் ஒரு நாடாக பிரித்தானிய இந்தியாவானது அச்சு நாடுகளுக்கு எதிராக பிரித்தானியத் தலைமையின் கீழ் சண்டையிடுவதற்காக 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வல போர் வீரர்களை அனுப்பியது. நேச நாடுகளின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக மேற்கொண்டு பல மன்னர் அரசுகள் பெரும் நன்கொடைகளை அளித்தன. சீனா, பர்மா, இந்தியா போர் அரங்கில் சீனாவுக்கு ஆதரவளிப்பதற்காக நடத்தப்பட்ட அமெரிக்கப் போர் நடவடிக்கைகளுக்கு தளத்தையும் கூட இந்தியா அளித்தது.

உலகம் முழுவதும் இந்தியர்கள் சண்டையிட்டனர். இதில் செருமனிக்கு எதிரான ஐரோப்பியப் போர் அரங்கு, செருமனி மற்றும் இத்தாலிக்கு எதிராக வடக்கு ஆப்பிரிக்காவில், இத்தாலியர்களுக்கு எதிராக கிழக்கு ஆப்பிரிக்காவில், விச்சி பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக மத்திய கிழக்கில், தெற்காசியப் பகுதியில் இந்தியாவைத் தற்காப்பதில் சப்பானியருக்கு எதிராக மற்றும் பர்மாவில் சப்பானியருக்கு எதிராகச் சண்டையிட்டது ஆகியவை அடங்கும். ஆகத்து 1945 இல் சப்பானிய சரணடைவுக்குப் பிறகு சிங்கப்பூர் மற்றும் ஆங்காங்கு போன்ற பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளை விடுதலை பெற வைப்பதிலும் கூட இந்தியர்கள் உதவி புரிந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது 87,000 க்கும் மேற்பட்ட துணைக் கண்டத்தைச் சேர்ந்த போர் வீரர்கள் இறந்தனர்.

இந்திய தேசிய காங்கிரசு நாசி செருமனியைக் கண்டித்தது. ஆனால், நாசி செருமனியையோ அல்லது பிற எந்தவொரு நாட்டையுமோ எதிர்த்து இந்தியா சுதந்திரம் அடையும் வரை சண்டையிட மாட்டோம் என்று குறிப்பிட்டது. ஆகத்து 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காங்கிரசு தொடங்கியது. சுதந்திரம் கொடுக்கப்படும் வரை பிரித்தானிய அரசாங்கத்துடன் எந்த வழியிலும் ஒத்துழைக்க மறுத்தது. பிரித்தானிய அரசாங்கமானது உடனடியாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய மற்றும் உள்ளூர் காங்கிரசு தலைவர்களைக் கைது செய்தது. முசுலிம் லீக் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நிராகரித்தது. பிரித்தானிய அதிகார அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றியது.

சுபாஷ் சந்திர போஸ் காங்கிரசிலிருந்து பிரிந்தார். செருமனி அல்லது சப்பானிய உதவியுடன் ஓர் இராணுவக் கூட்டணியை விடுதலை பெறுவதற்காக அமைக்க முயற்சித்தார். இந்தியப் படைப் பிரிவை அமைப்பதில் செருமானியர் போசுக்கு உதவி புரிந்தனர்.[383] எனினும், மோகன் சிங்குக்குக் கீழான முதல் இந்தியத் தேசிய இராணுவம் கலைக்கப்பட்டதற்குப் பிறகு இந்திய தேசிய இராணுவத்தை புதுப்பிக்க இவருக்கு உதவியது சப்பான் தான். இந்திய தேசிய இராணுவமானது சப்பானின் வழிகாட்டுதலின் கீழ் பெரும்பாலும் பர்மாவில் சண்டையிட்டது.[384] நாடு கடந்த இந்திய அரசுக்குப் (அல்லது ஆசாத் ஹிந்த்) போஸ் தலைமை தாங்கவும் கூட செய்தார். சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்டிருந்த ஒரு நாடு கடந்த அரசு இதுவாகும்.[385][386]

1942 வாக்கில் அண்டைப் பகுதியான பர்மா மீது சப்பான் படையெடுத்தது. அந்நேரத்தில் சப்பான் ஏற்கனவே அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றியிருந்தது. 21 அக்டோபர் 1943 அன்று நாடு கடந்த இந்திய அரசுக்கு இத்தீவுகளின் பெயரளவுக் கட்டுப்பாட்டை சப்பான் கொடுத்தது. அதைத் தொடர்ந்து மார்ச்சில் சப்பானின் உதவியுடன் இந்திய தேசிய இராணுவமானது இந்தியாவுக்குள் நுழைந்தது. நாகலாந்தின் கோகிமா வரை முன்னேறியது. இந்திய துணைக்கண்டத்தின் கண்டப் பகுதியில் இவ்வாறு அடைந்த முன்னேற்றமானது இந்திய நிலப்பரப்பில் அதன் தொலைதூரப் புள்ளியை அடைந்தது. சூனில் கோகிமா யுத்தத்திலிருந்தும், 3 சூலை 1944 இல் இம்பால் சண்டையிலிருந்தும் பின் வாங்கியது.

1940-43 ஆகிய ஆண்டுகளின் போது பிரித்தானிய இந்தியாவின் வங்காளப் பகுதியானது ஓர் அழிவை ஏற்படுத்திய பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. 21 முதல் 30 இலட்சம் பேர் இப்பஞ்சத்தால் இறந்தனர் என மதிப்பிடப்பட்டது. இது பொதுவாக "மனிதர்களால்-உருவாக்கப்பட்ட" பஞ்சம் என்று குறிப்பிடப்படுகிறது.[387] குடியேற்ற அரசாங்கத்தின் போர்க் காலக் கொள்கைகளே இப்பிரச்சினையை மோசமாக்கின என பெரும்பாலான நூல்கள் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிடுகின்றன.[388]

இந்திய விடுதலை இயக்கம் (1885–1947)

இந்தியாவில் இருந்த பிரித்தானியரின் எண்ணிக்கையானது சிறியதாகும்.[391] இருந்த போதிலும் இந்திய துணைக் கண்டத்தின் 52% பகுதிகளை நேரடியாக அவர்களால் ஆள முடிந்தது. எஞ்சிய 48% பகுதிகளைக் கொண்டிருந்த மன்னர் அரசுகள் மீது குறிப்பிடத்தக்க அளவு ஊக்கு ஆற்றலைக் கொண்டிருக்க முடிந்தது.[392]

19 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று இந்திய தேசியவாதத்தின் வளர்ச்சியாகும்.[393] இந்தியா முதலில் "சுயாட்சியை" வேண்டுவதற்கும், பிறகு "முழு சுதந்திரத்தை" வேண்டுவதற்கும் இது வழி வகுத்தது. எனினும், இந்த வளர்ச்சியின் காரணங்கள் குறித்து வரலாற்றாளர்கள் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர். "பிரித்தானிய விருப்பங்களுடன் இந்திய மக்களின் விருப்பங்கள் மோதியது",[393] "இன ரீதியான பாரபட்சங்கள்"[394] மற்றும் "இந்தியாவின் முந்தைய கால வரலாறு குறித்த வெளிப்பாடுகள் வெளியில் தெரியத் தொடங்கியது" உள்ளிட்டவை அநேகமான காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.[395]

இந்தியா சுயாட்சியை நோக்கிய முதல் படியானது 1861 இல் பிரித்தானிய தலைமை ஆளுநருக்கு ஆலோசனை கூறுவதற்காக மன்றாளர்கள் நியமிக்கப்பட்டதாகும். 1909 ஆம் ஆண்டு முதல் இந்தியர் இவ்வாறு நியமிக்கப்பட்டார். இந்திய உறுப்பினர்களுடன் கூடிய மாகாண மன்றங்களும் கூட அமைக்கப்பட்டன. மன்றாளர்களின் பங்கெடுப்பானது இறுதியாக சட்டமியற்றும் மன்றங்களுக்கும் கூட விரிவாக்கம் செய்யப்பட்டது. பிரித்தானியர் ஒரு பெரிய பிரித்தானிய இந்திய இராணுவத்தைக் கட்டமைத்திருந்தனர். இதில் மூத்த அதிகாரிகள் அனைவருமே பிரித்தானியராக இருந்தனர். துருப்புகளில் பெரும்பாலானவர்கள் நேபாளத்தைச் சேர்ந்த கூர்க்காக்கள் மற்றும் சீக்கியர் போன்ற சிறிய சிறுபான்மையினக் குழுக்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.[396] கீழ்நிலைகளில் இருந்த குடிமைப்பணி சேவைப் பதவிகளை உள்நாட்டவரைக் கொண்டு நிரப்பும் தன்மையானது அதிகரித்து வந்தது. மிக உயர்ந்த பதவிகளை பிரித்தானியர் வைத்துக் கொண்டனர்.[397]

ஓர் இந்திய தேசியவாதத் தலைவரான பால கங்காதர திலகர் சுவராஜ் (சுயாட்சி) நாட்டின் விதி என்று அறிவித்தார். "சுவராஜ் எனது பிறப்புரிமை, நான் அதைக் கட்டாயம் பெற்றே தீர வேண்டும்"[398] என்ற இவரது பிரபலமான சொற்றொடரானது பிறரின் அகத்தூண்டுதலுக்கான ஓர் ஆதாரமானது. பிபின் சந்திர பால் மற்றும் லாலா லஜபதி ராய் போன்ற வளர்ந்து வந்த மக்கள் தலைவர்களால் திலகருக்கு ஆதரவளிக்கப்பட்டது. இவர்கள் திலகரைப் போன்ற அதே பார்வையைக் கொண்டிருந்தனர். குறிப்பாக, இவர்கள் சுதேசி இயக்கத்திற்கு ஆதரவளித்தனர். இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைப் புறக்கணிப்பது மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றைக் கொண்டதாக சுதேசி இயக்கம் திகழ்ந்தது.[399] இந்த மூவரும் பிரபலமாக லால்-பால்-பால் என்று அறியப்பட்டனர். 1907 இல் காங்கிரசானது இரு பிரிவுகளாகப் பிரிந்தது. திலகரின் தலைமையிலான தீவிர காங்கிரசார் பிரித்தானியப் பேரரசைப் பதவியிலிருந்து தூக்கி எறியவும், பிரித்தானியாவுடன் தொடர்புடைய அனைத்தையும் கைவிடவும் குடிசார் போராட்டம் மற்றும் நேரடி புரட்சிக்கு வலியுறுத்தினர். தாதாபாய் நௌரோஜி மற்றும் கோபால கிருஷ்ண கோகலே போன்ற தலைவர்களால் தலைமை தாங்கப்பட்ட மிதவாதிகள் மற்றொரு புறம் பிரித்தானிய ஆட்சியின் வரைவுச் சட்டத்திற்குள் சீர்திருத்தத்தை வேண்டினர்.[399]

1905 இல் வங்காளம் பிரிக்கப்பட்டதானது இந்திய விடுதலைக்கான புரட்சி இயக்கங்களை மேலும் அதிகப்படுத்தியது. இந்த உரிமைப் பறிப்பானது சிலர் வன்முறையான செயல்களில் ஈடுபடுவதற்கு வழி வகுத்தது.

மீண்டும் தொடங்கிய தேசியவாதக் கோரிக்கைகளுக்கு எதிர் வினையாக பிரித்தானியரும் கூட "கேரட் மற்றும் குச்சி" என்ற ஓர் அணுகு முறையைப் பின்பற்றினர். இந்த முன்மொழியப்பட்ட குறிக்கோள்களை அடையும் வழி முறைகளானவை பின்னர் 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்தில் வைக்கப்பட்டிருந்தன. ஓர் இரட்டை முறை நிர்வாகம் அல்லது இரு அதிகார அமைப்புகளின் ஆட்சியை அறிமுகப்படுத்துவதை இது கொண்டிருந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட பிரித்தானிய அதிகாரிகள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டனர்.[400] 1919 இல் கர்னல் ரெசினால்டு டையர் நிராயுதபாணிகளான பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அமைதியான போராட்டக்காரர்கள் மீது தம் ஆயுதங்களை வைத்து சுடுமாறு தன்னுடைய துருப்புகளுக்கு ஆணையிட்டார். இது ஜலியான்வாலா பாக் படுகொலையில் முடிந்தது. 1920-1922 ஆம் ஆண்டின் ஒத்துழையாமை இயக்கத்திற்கு இது வழி வகுத்தது. இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் முடிவை நோக்கிய ஒரு தீர்க்கமான நிகழ்வாக இந்தப் படுகொலை அமைந்தது.[401]

1920 இலிருந்து காந்தி போன்ற தலைவர்கள் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மிகவும் பிரபலமான, ஏராளமான பொதுமக்களைக் கொண்ட இயக்கங்களை பெரும்பாலும் அமைதியான வழி முறைகளைப் பயன்படுத்தி நடத்தத் தொடங்கினர். ஒத்துழையாமை, சட்ட மறுப்பு மற்றும் பொருளாதார எதிர்ப்பு போன்ற அகிம்சை வழி முறைகளைப் பயன்படுத்தி பிரித்தானிய ஆட்சியை காந்தியின் தலைமையிலான விடுதலை இயக்கம் எதிர்த்தது. எனினும், பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான புரட்சிகரமான செயல்பாடுகளானவை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் நடைபெற்றன. இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு போன்ற சில பிறர் ஒரு போராளி அணுகு முறையைப் பின்பற்றினர். பிரித்தானிய ஆட்சியை ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலம் தூக்கி எறிய விரும்பினர்.

ஏப்ரல் 1940 இல் தில்லியில் அனைத்திந்திய ஆசாத் முசுலிம் மாநாடு ஒன்று கூடியது. ஒரு சுதந்திரமான மற்றும் ஒன்றிணைந்த இந்தியாவிற்கு அதன் ஆதரவுக் குரலை எழுப்பியது.[402] இந்தியாவில் இருந்த பல இசுலாமிய அமைப்புகள், மேலும் 1,400 தேசியவாத முசுலிம் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதன் உறுப்பினர்களாக இருந்தனர்.[403][404][405] பிரிவினைக்கு ஆதரவளித்த அனைத்து இந்திய முசுலிம் லீக் இந்தியாவின் பிரிவினைக்கு எதிராக இருந்த அந்த தேசியவாத முசுலிம்களைப் பெரும்பாலும் "அச்சுறுத்தல் மற்றும் கட்டாயத்தைப்" பயன்படுத்தி மௌனமாக்க முயற்சித்தது.[404][405] அனைத்திந்திய ஆசாத் முசுலிம் மாநாட்டுத் தலைவர் அல்லா பக்சு சூம்ரோவின் கொலையும் கூட பாக்கித்தானின் உருவாக்கத்திற்கான கோரிக்கையை பிரிவினைக்கு ஆதரவான அனைத்து இந்திய முசுலிம் லீக் எழுப்புவதை எளிதாக்கியது.[405]

இரண்டாம் உலகப் போருக்குப் பின் (அண். 1946–1947)

“அந்தத் தருணம் வந்து விட்டது. இது வரலாற்றில் மிக அரிதாகவே வரும். ஒரு வரலாறு முடிவுக்கு வந்து மற்றொரு புதிய வரலாறு உருவாகும் காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா இன்று மௌனம் கலைக்கிறது.”

 — 14 ஆகத்து 1947 அன்று சுதந்திரத்திற்கு முந்தைய மாலையில் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தில் ஜவகர்லால் நேரு ஆற்றிய விதியுடனான ஒப்பந்தம் எனும் உரையிலிருந்து.[406]

1947 இல் சுதந்திரமடையும் வரை இந்தியாவில் எழுத்தறிவானது மிக மெதுவாகவே அதிகரித்தது. 1991 மற்றும் 2001 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் எழுத்தறிவு விகிதத்தின் வளர்ச்சியில் ஒரு வேகமானது ஏற்பட்டது.

சனவரி 1946 இல் இராணுவத்தில் ஏராளமான கிளர்ச்சிகள் வெடித்தன. சொந்த நாட்டுக்குத் தாங்கள் மெதுவாகத் திருப்பி அனுப்பப்படுவதால் வெறுப்படைந்த வேத்தியல் விமானப் படை வீரர்களிடமிருந்து தொடங்கியது. இது பெப்ரவரி 1946 இல் பாம்பேயில் வேத்தியல் இந்தியக் கடற்படையின் ஒரு கிளர்ச்சியால் இது வெளிப்படத் தொடங்கியது. கொல்கத்தா, சென்னை, மற்றும் கராச்சி ஆகிய இடங்களிலும் கிளர்ச்சிகள் பிறரால் தொடங்கப்பட்டன. கிளர்ச்சிகளானவை துரிதமாக ஒடுக்கப்பட்டன. 1946 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. 11 மாகாணங்களில் எட்டு மாகாணங்களைக் காங்கிரசு வேட்பாளர்கள் வென்றனர்.

1946 இன் பிற்பகுதியில் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர தொழிலாளர் கட்சி தீர்மானித்தது. 1947 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சூன் 1948 க்கும் மேலான காலத்திற்குச் சென்று விடாமல் அதிகாரத்தைக் கைமாற்றும் தனது எண்ணத்தை அறிவித்தது. ஓர் இடைக்கால அரசு அமைக்கப்படுவதில் பங்கெடுப்பதையும் குறிப்பிட்டது.

சுதந்திரத்திற்கான விருப்பத்துடன் சேர்த்து இந்துக்கள் மற்றும் முசுலிம்களுக்கு இடையிலான பதற்றங்களும் கூட ஆண்டுகள் போக்கில் அதிகரிக்கத் தொடங்கின. முசுலிம் லீக் தலைவர் முகம்மது அலி ஜின்னா 16 ஆகத்து 1946 ஆம் நாளை நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்தார். பிரித்தானிய இந்தியாவில் ஒரு முஸ்லிம் தாயகத்திற்கான கோரிக்கையை அமைதியாக சுட்டிக்காட்ட விரும்பினார். பிற்காலத்தில் "ஆகத்து 1946 இன் பெரிய கொல்கத்தா கொலைகள்" என்று அழைக்கப்பட்ட வன்முறை சுழற்சியின் வெடிப்பிற்கு இது காரணமானது. இந்த சமூக வன்முறையானது பீகார், வங்காளத்தில் நவகாளி, ஐக்கிய மாகாணங்களில் கர்முக்தேசுவர் மற்றும் மார்ச் 1947 இல் இராவல்பிண்டிக்குள் என பரவியது. இராவல்பிண்டியில் முசுலிம்களால் சீக்கியர்களும், இந்துக்களும் தாக்கப்பட்டு துரத்தியடிக்கப்பட்டனர்.

சுதந்திரமும், பிரிப்பும் (1947–தற்காலம்)

ஆகத்து 1947 இல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசானது இந்திய மேலாட்சி அரசு மற்றும் பாக்கித்தான் மேலாட்சி அரசு என பிரிக்கப்பட்டது. குறிப்பாக, பஞ்சாப் மற்றும் வங்காளம் ஆகியவை பிரிக்கப்பட்டதானது இந்த மாகாணங்களில் இருந்த இந்துக்கள், முசுலிம்கள் மற்றும் சீக்கியர்களுக்கு இடையே வன்முறைக்கு வழி வகுத்தது. பிற அண்டைப் பகுதிகளுக்கும் இது பரவியது. சுமார் 5 இலட்சம் பேர் இதன் காரணமாக இறந்தனர். காவல் துறையும், இராணுவப் பிரிவுகளும் பெருமளவுக்குப் பலனற்றுப் போயின. பிரித்தானிய அதிகாரிகள் சென்று விட்டனர். தங்களது சமய எதிரிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடாவிட்டாலும் அப்பிரிவுகளானவை வன்முறையை சகித்துக் கொண்டன.[407][408][409] நவீன கால வரலாற்றில் உலகில் எந்தப் பகுதியிலும் ஏற்பட்ட மிகப் பெரிய மக்கள் புலப்பெயர்வுகளில் ஒன்றை இக்காலகட்டமானது கண்டது. ஒட்டு மொத்தமாக 1.20 கோடி இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் முசுலிம்கள் புதிதாக உருவாக்கப்பட்ட நாடுகளான இந்தியா மற்றும் பாக்கித்தானுக்கு இடையில் புலம்பெயர்ந்தனர். இந்நாடுகள் முறையே 15 மற்றும் 14 ஆகத்து 1947 ஆகிய நாட்களில் சுதந்திரத்தைப் பெற்றிருந்தன.[408] 1971 இல் முன்னர் கிழக்கு பாக்கித்தான் மற்றும் கிழக்கு வங்காளம் என்று அழைக்கப்பட்ட வங்காளதேசமானது பாக்கித்தானில் இருந்து பிரிந்தது.[410]

15 ஆகத்து 1947அன்று இந்திய விடுதலைக்குப் பின் பிரதமர் ஜவகர்லால் நேரு தலைமையில் முதல் இந்திய அரசு உருவானது. 26 சனவரி 1950 இல் இந்திய அரசியலமைப்பு உருவான அதே நாளில் இந்தியா குடியரசு நாடானது. 1951-1952 ஆம் ஆண்டுகளில் இந்திய நாடாளுமன்ற முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 562 மன்னர் அரசுகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. 1960 ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாக மாற்றியமைக்கப்பட்டன.

இந்திய விடுதலைக்குப் பின்னர் சனவரி 30, 1948 ஆம் நாள் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும் காண்க

குறிப்புகள்

  1. The "First urbanisation" was the Indus Valley Civilisation.[75]
  2. Many historians consider அட்டோக் to be the final frontier of the Maratha Empire[331]

மேற்கோள்கள்

  1. Michael D. Petraglia; Bridget Allchin (22 May 2007). The Evolution and History of Human Populations in South Asia: Inter-disciplinary Studies in Archaeology, Biological Anthropology, Linguistics and Genetics. இசுபிரிங்கர் பதிப்பகம். p. 6. ISBN 978-1-4020-5562-1. Quote: "Y-Chromosome and Mt-DNA data support the colonization of South Asia by modern humans originating in Africa. ... Coalescence dates for most non-European populations average to between 73–55 ka."
  2. 2.0 2.1 Wright 2010, ப. 44, 51.
  3. 3.0 3.1 Wright 2010, ப. 1.
  4. 4.0 4.1 McIntosh, Jane (2008). The Ancient Indus Valley: New Perspectives. ABC-Clio. p. 387. ISBN 978-1-57607-907-2.
  5. 5.0 5.1 Flood, Gavin. Olivelle, Patrick. 2003. The Blackwell Companion to Hinduism. Malden: Blackwell. pp. 273–274
  6. The Cambridge History of Southeast Asia: From Early Times to c. 1800, Band 1 by Nicholas Tarling, p. 281
  7. Essays on Ancient India by Raj Kumar p. 199
  8. Al Baldiah wal nahaiyah vol: 7 p. 141 "Conquest of மக்ரான்"
  9. Meri 2005, ப. 146.
  10. Dr. K. S. Lal (1967). History of the Khaljis, A.D. 1290-1320. p. 14. The khalji revolt is essentially a revolt of the Indian Muslims against the Turkish hegemony, of those who looked to Delhi, against those who sought inspiration from Ghaur and Ghazna.
  11. Radhey Shyam Chaurasia (2002). History of Medieval India:From 1000 A.D. to 1707 A.D. Atlantic. p. 30. ISBN 978-81-269-0123-4. In spite of all this, capturing the throne for Khilji was a revolution, as instead of Turks, Indian Muslims gained power
  12. Kumar, Sunil (2013). "Delhi Sultanate (1206-1526)". The Princeton Encyclopedia of Islamic Political Thought. Princeton University Press. 127–128. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-13484-0. 
  13. Eaton, Richard M. (31 July 1996). The Rise of Islam and the Bengal Frontier, 1204–1760. University of California Press. pp. 64–. ISBN 978-0-520-20507-9.
  14. Darwin, John (2008). After Tamerlane: The Rise and Fall of Global Empires, 1400-2000. Penguin Books Limited. pp. Only in Mewar and in Vijaynagar had Hindu states withstood the deluge". ISBN 978-0141010229.
  15. Majumdar, R.C (1960). History and Culture of the Indian People, Volume 06,The Delhi Sultanate (3rd ed.). Bhartiya Vidya Bhavan. pp. 70 "It is also quite clear from contemporary chronicles that Muhammad Tughluq and the later Sultans practically left Rajputana severely alone, and the various Rajput principalities recognised Mewar as the paramount power at least in name".
  16. 16.0 16.1 "India before the British: The Mughal Empire and its Rivals, 1526–1857". University of Exeter.
  17. Parthasarathi, Prasannan (11 August 2011). Why Europe Grew Rich and Asia Did Not: Global Economic Divergence, 1600–1850. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 39–45. ISBN 978-1-139-49889-0.
  18. Maddison, Angus (25 September 2003). Development Centre Studies The World Economy Historical Statistics: Historical Statistics. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு. pp. 259–261. ISBN 9264104143.
  19. Harrison, Lawrence E.; Berger, Peter L. (2006). Developing cultures: case studies. Routledge. p. 158. ISBN 978-0-415-95279-8.
  20. MacDonald, Myra (2017-01-01). Defeat is an Orphan: How Pakistan Lost the Great South Asian War (in ஆங்கிலம்). Oxford University Press. p. 85. ISBN 978-1-84904-858-3.
  21. Ian Copland; Ian Mabbett; Asim Roy; et al. (2012). A History of State and Religion in India. Routledge. p. 161.
  22. Michaud, Joseph (1926). History of Mysore Under Hyder Ali and Tippoo Sultan. p. 143.
  23. Taçon, Paul S.C. (17 October 2018). "The Rock Art of South and East Asia". In David, Bruno; McNiven, Ian J. (eds.). The Oxford Handbook of the Archaeology and Anthropology of Rock Art. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 181–. ISBN 978-0-19-084495-0.
  24. Mithen, Steven J. (2006). After the Ice: A Global Human History, 20,000–5000 BC. Harvard University Press. pp. 411–. ISBN 978-0-674-01999-7.
  25. Dubey-Pathak, Meenakshi (2014). "The Rock Art of the Bhimbetka Area in India". Adoranten: 16, 19. https://www.rockartscandinavia.com/images/articles/a14pathak.pdf. 
  26. Chauhan 2010, ப. 147.
  27. 27.0 27.1 27.2 Petraglia & Allchin 2007, ப. 5.
  28. 28.0 28.1 28.2 Petraglia 2010, ப. 167–170.
  29. Mishra, Sheila (1999). "Developing an Indian stone age chronology". In Murray, Tim (ed.). Time and Archaeology. Routledge. p. 84. ISBN 978-0-415-11762-3.
  30. 30.0 30.1 30.2 30.3 Chauhan 2010, ப. 147–160.
  31. Dyson 2018, ப. 1.
  32. Petraglia & Allchin 2007, ப. 6.
  33. Fisher 2018, ப. 23.
  34. Tuniz, Claudio; Gillespie, Richard; Jones, Cheryl (16 June 2016). The Bone Readers: Science and Politics in Human Origins Research. Routledge. pp. 163–. ISBN 978-1-315-41888-9.
  35. Petraglia, Michael D.; Haslam, Michael; Fuller, Dorian Q.; Boivin, Nicole; Clarkson, Chris (25 March 2010). "Out of Africa: new hypotheses and evidence for the dispersal of Homo sapiens along the Indian Ocean rim". Annals of Human Biology 37 (3): 288–311. doi:10.3109/03014461003639249. பன்னாட்டுத் தர தொடர் எண்:0301-4460. பப்மெட்:20334598. http://espace.library.uq.edu.au/view/UQ:205007/HCA15UQ205007.pdf. 
  36. Mellars, Paul; Gori, Kevin C.; Carr, Martin; Soares, Pedro A.; Richards, Martin B. (25 June 2013). "Genetic and archaeological perspectives on the initial modern human colonization of southern Asia". Proceedings of the National Academy of Sciences 110 (26): 10699–10704. doi:10.1073/pnas.1306043110. பப்மெட்:23754394. Bibcode: 2013PNAS..11010699M. 
  37. 37.0 37.1 Dyson 2018, ப. 28.
  38. "Metropolitan Museum of Art". www.metmuseum.org. Archived from the original on 16 March 2022. Retrieved 21 April 2019.
  39. Dyson 2018, ப. 4-5.
  40. 40.0 40.1 Fisher 2018, ப. 33.
  41. Shuichi Takezawa (August 2002). "Stepwells – Cosmology of Subterranean Architecture As Seen in Adalaj". Journal of Architecture and Building Science 117 (1492): 24. http://news-sv.aij.or.jp/jabs/s1/jabs0208-019.pdf. பார்த்த நாள்: 18 November 2009. 
  42. Kenoyer, J. M., Miller, H. M.-L. "Metal technologies of the Indus Valley tradition in Pakistan and western India." The Archaeometallurgy of the Asian Old World, MASCA research papers in science and archaeology. 1999, Vol 16, pp 107-151; ref : 7 p.1/4. ISSN 1048-5325
  43. Early India: A Concise History, D.N. Jha, 2004, p. 31
  44. Menon, Sunil; Mishra, Siddhartha (13 August 2018). "We Are All Harappans". Outlook. Archived from the original on 2018-08-03.
  45. Sarkar, Anindya; Mukherjee, Arati Deshpande; Bera, M. K.; Das, B.; Juyal, Navin; Morthekai, P.; Deshpande, R. D.; Shinde, V. S. et al. (May 2016). "Oxygen isotope in archaeological bioapatites from India: Implications to climate change and decline of Bronze Age Harappan civilization". Scientific Reports 6 (1): 26555. doi:10.1038/srep26555. பப்மெட்:27222033. Bibcode: 2016NatSR...626555S. 
  46. Kumar, Vijay. "A note on Chariot Burials found at Sinauli district Baghpat U.P". Indian Journal of Archaeology. http://ijarch.org/Admin/Articles/9-Note%20on%20Chariots.pdf. 
  47. Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Pearson Education India. pp. 216–219. ISBN 9788131711200. Retrieved 8 September 2018.
  48. Stein, Burton (2010). Arnold, David (ed.). A History of India (2nd ed.). Oxford: பிளக்வெல் பதிப்பகம். p. 47. ISBN 978-1-4051-9509-6.
  49. Kulke & Rothermund 2004, ப. 31.
  50. 50.0 50.1 Upinder Singh 2008, ப. 255.
  51. Antonova, Bongard-Levin & Kotovsky 1979, ப. 51.
  52. MacKenzie, Lynn (1995). Non-Western Art: A Brief Guide. Prentice Hall. p. 151. ISBN 978-0-13-104894-2.
  53. Romila Thapar, A History of India: Part 1, pp. 29–30.
  54. Staal, Frits (1986). The Fidelity of Oral Tradition and the Origins of Science. எல்செவியர்.
  55. Day, Terence P. (1982). The Conception of Punishment in Early Indian Literature. Ontario: Wilfrid Laurier University Press. pp. 42–45. ISBN 978-0-919812-15-4.
  56. Duiker, William J.; Spielvogel, Jackson J. (2018) [First published 1994]. World History (9th ed.). Cengage. pp. 44, 59. ISBN 978-1-337-40104-3.
  57. Nelson, James Melvin (2009). Psychology, Religion, and Spirituality. Springer. p. 77.
  58. Flood, Gavin Dennis (13 July 1996). An Introduction to Hinduism. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 37. ISBN 978-0-521-43878-0.
  59. "India: The Late 2nd Millennium and the Reemergence of Urbanism". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 
  60. 60.0 60.1 Reddy 2003, ப. A11.
  61. 61.0 61.1 மைக்கேல் விட்செல் (1989), Tracing the Vedic dialects in Dialectes dans les litteratures Indo-Aryennes ed. Caillat, Paris, 97–265.
  62. Samuel 2008, ப. 43, 48, 51, 86–87.
  63. Kulke & Rothermund 2004, ப. 41–43.
  64. Upinder Singh 2008, ப. 200.
  65. Valmiki (10 April 1990). Goldman, Robert P.; Pollock, Sheldon (eds.). The Ramayana of Valmiki: An Epic of Ancient India, Volume 1: Balakanda. Princeton, New Jersey: Princeton University Press. p. 23. ISBN 978-0-691-01485-2.
  66. Romila Thapar, A History of India Part 1, p. 31.
  67. 67.0 67.1 Upinder Singh 2008, ப. 18–19.
  68. Brockington, J. L. (1998). The Sanskrit epics, Part 2. Vol. 12. Brill. p. 21. ISBN 978-90-04-10260-6.
  69. Lanman, Charles Rockwell (1912) [First published 1884]. A Sanskrit reader: with vocabulary and notes. Boston: Ginn & Co. கணினி நூலகம் 633836. ... jána, m. creature; man; person; in plural, and collectively in singular, folks; a people or race or tribe ... cf. γένος, Lat. genus, Eng. kin, 'race' ...
  70. Potter, Stephen; Sargent, Laurens Christopher (1974). Pedigree: The Origins of Words from Nature. Taplinger Publishing Company. ISBN 978-0-8008-6248-0. ... *gen-, found in Skt. jana, 'a man', and Gk. genos and L. genus, 'a race' ...
  71. Basu, Abhijit (2013). Marvels and Mysteries of the Mahabharata. Leadstart publishing. p. 153. ISBN 978-93-84027-47-6.
  72. 72.0 72.1 72.2 72.3 72.4 Michael Witzel (1995). "Early Sanskritization. Origins and Development of the Kuru State". Electronic Journal of Vedic Studies 1 (4): 1–26. doi:10.11588/ejvs.1995.4.823. https://crossasia-journals.ub.uni-heidelberg.de/index.php/ejvs/article/view/823/913. பார்த்த நாள்: 20 November 2018. 
  73. 73.0 73.1 Samuel 2008, ப. 48.
  74. H.C. Raychaudhuri (1950), Political History of Ancient India and Nepal, Calcutta: University of Calcutta, p. 58
  75. Samuel 2008, ப. 41.
  76. Samuel 2008, ப. 47.
  77. Heitzman, James (31 March 2008). The City in South Asia. Routledge. pp. 12–13. ISBN 978-1-134-28963-9.
  78. Samuel 2008, ப. 47–48.
  79. "The beginning of the historical period, c. 500–150 BCE". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். (2015). 
  80. Samuel 2008, ப. 41, 43.
  81. Samuel 2008, ப. 61.
  82. Samuel 2008, ப. 48–51.
  83. Samuel 2008, ப. 49.
  84. 84.0 84.1 Flood, Gavin Dennis (1996). An Introduction to Hinduism. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 82. ISBN 978-0-521-43878-0.
  85. Mascaró, Juan (1965). The Upanishads. Penguin Books. pp. 7–. ISBN 978-0-14-044163-5.
  86. Olivelle, Patrick (2008). Upaniṣads. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. xxiv–xxix. ISBN 978-0-19-954025-9.
  87. "Hinduism". Religions of the World (2nd) 3. (2010). ABC-Clio. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59884-204-3. 
  88. Olivelle, Patrick (2003). "The Renouncer Tradition". In Flood, Gavin (ed.). The Blackwell Companion to Hinduism. Blackwell. pp. 273–274. ISBN 978-0-631-21535-6. The second half of the first millennium BC was the period that created many of the ideological and institutional elements that characterise later Indian religions. The renouncer tradition played a central role during this formative period of Indian religious history. ... Some of the fundamental values and beliefs that we generally associate with Indian religions in general and Hinduism, in particular, were in part the creation of the renouncer tradition. These include the two pillars of Indian theologies: samsara—the belief that life in this world is one of suffering and subject to repeated deaths and births (rebirth); moksa/nirvana—the goal of human existence ...
  89. Laumakis, Stephen (2008). An Introduction to Buddhist Philosophy. Cambridge University Press. p. 4. ISBN 978-0-511-38589-6.
  90. Fisher, Mary Pat (2011) [First published 1991]. Living Religions: An Encyclopedia of the World's Faiths (8th ed.). Prentice Hall. p. 121. ISBN 978-0-205-83585-0. Jainism's major teacher for this age is Mahavira ... was a contemporary of the Buddha and died approximately 527 BCE.
  91. Fisher, Mary Pat (2011) [First published 1991]. Living Religions: An Encyclopedia of the World's Faiths (8th ed.). Prentice Hall. p. 122. ISBN 978-0-205-83585-0. The extreme antiquity of Jainism as a non-Vedic, indigenous Indian religion is well documented. Ancient Hindu and Buddhist scriptures refer to Jainism as an existing tradition which began long before Mahavira.
  92. Upinder Singh 2008, ப. 260–261.
  93. Anguttara Nikaya I. p. 213; IV. pp. 252, 256, 261.
  94. 94.0 94.1 Reddy 2003, ப. A107.
  95. 95.0 95.1 Thapar, Romila (2002). Early India: From the Origins to AD 1300. University of California Press. pp. 146–150. ISBN 978-0-520-24225-8. Retrieved 28 October 2013.
  96. Raychaudhuri Hemchandra (1972), Political History of Ancient India, Calcutta: University of Calcutta, p. 107
  97. Republics in ancient India. Brill Archive. pp. 93–. GGKEY:HYY6LT5CFT0.
  98. J.M. Kenoyer (2006), "Cultures and Societies of the Indus Tradition. In Historical Roots" in the Making of 'the Aryan, R. Thapar (ed.), pp. 21–49. New Delhi, National Book Trust.
  99. Shaffer, Jim(1993). "Reurbanization: The eastern Punjab and beyond". {{{booktitle}}}, 53–67, National Gallery of Art.
  100. Majumdar, Ramesh Chandra (1977). Ancient India (8th ed.). மோதிலால் பனர்சிதாசு. ISBN 978-81-208-0436-4.
  101. "Magadha Empire – Magadha Empire in India, History of Magadh Empire". iloveindia.com.
  102. "Lumbini Development Trust: Restoring the Lumbini Garden". lumbinitrust.org. Archived from the original on 6 March 2014. Retrieved 6 January 2017.
  103. Mookerji 1988, ப. 28–33.
  104. Upinder Singh 2008, ப. 273.
  105. Mookerji 1988, ப. 34.
  106. Raychaudhuri, Hem Chandra; Mukherjee, Bratindra Nath (1996) [First published 1923]. Political History of Ancient India: From the Accession of Parikshit to the Extinction of the Gupta Dynasty (8th ed.). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 208–209. ISBN 978-0-19-563789-2.
  107. Turchin, Peter; Adams, Jonathan M.; Hall, Thomas D. (December 2006). "East–West Orientation of Historical Empires". Journal of World-Systems Research 12 (2): 223. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X. http://jwsr.pitt.edu/ojs/index.php/jwsr/article/view/369/381. பார்த்த நாள்: 12 September 2016. 
  108. Romila Thapar. A History of India: Volume 1. p. 70.
  109. 109.0 109.1 Thapar 2003, ப. 178–180.
  110. 110.0 110.1 Thapar 2003, ப. 204–206.
  111. Bhandari, Shirin (5 January 2016). "Dinner on the Grand Trunk Road". Roads & Kingdoms (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 19 July 2016.
  112. Kulke & Rothermund 2004, ப. 67.
  113. Romila Thapar. A History of India: Volume 1. p. 78.
  114. Antonova, Bongard-Levin & Kotovsky 1979, ப. 91.
  115. Technology and Society by Menon, R.V.G. p. 15
  116. Rosen, Elizabeth S. (1975). "Prince ILango Adigal, Shilappadikaram (The anklet Bracelet), translated by Alain Damelou. Review.". Artibus Asiae 37 (1/2): 148–150. doi:10.2307/3250226. 
  117. Sen 1999, ப. 204–205.
  118. Essays on Indian Renaissance by Raj Kumar p. 260
  119. The First Spring: The Golden Age of India by Abraham Eraly p. 655
  120. *Zvelebil, Kamil. 1973. The smile of Murugan on Tamil literature of South India. Leiden: Brill. Zvelebil dates the Ur-Tholkappiyam to the 1st or 2nd century BCE
  121. "Silappathikaram Tamil Literature". Tamilnadu.com. 22 January 2013. Archived from the original on 11 April 2013.
  122. Mukherjee 1999, ப. 277
  123. "Cittalaiccattanar (c. 500): Manimekalai". gretil.sub.uni-goettingen.de.
  124. Hardy, Adam (1995). Indian Temple Architecture: Form and Transformation : the Karṇāṭa Drāviḍa Tradition, 7th to 13th Centuries (in ஆங்கிலம்). Abhinav Publications. p. 39. ISBN 978-81-7017-312-0.
  125. Le, Huu Phuoc (2010). Buddhist Architecture (in ஆங்கிலம்). Grafikol. p. 238. ISBN 978-0-9844043-0-8.
  126. 126.0 126.1 Stein, B. (27 April 2010), Arnold, D. (ed.), A History of India (2nd ed.), Oxford: Wiley-Blackwell, p. 105, ISBN 978-1-4051-9509-6
  127. A Social History of Early India by Brajadulal Chattopadhyaya p. 259
  128. "The World Economy (GDP) : Historical Statistics by Professor Angus Maddison" (PDF). World Economy. 17 September 2006. Retrieved 21 May 2013.
  129. Maddison, Angus (2006). The World Economy – Volume 1: A Millennial Perspective and Volume 2: Historical Statistics. OECD Publishing by பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு. p. 656. ISBN 978-92-64-02262-1.
  130. Stadtner, Donald (1975). "A Śuṅga Capital from Vidiśā". Artibus Asiae 37 (1/2): 101–104. doi:10.2307/3250214. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-3648. 
  131. K. A. Nilkantha Shastri (1970), A Comprehensive History of India: Volume 2, p. 108: "Soon after Agnimitra there was no 'Sunga empire'".
  132. Bhandare, Shailendra. "Numismatics and History: The Maurya-Gupta Interlude in the Gangetic Plain" in Between the Empires: Society in India, 300 to 400 ed. Patrick Olivelle (2006), p. 96
  133. Sircar, D. C. (2008). Studies in Indian Coins. Motilal Banarsidass Publishers. ISBN 9788120829732.
  134. Schreiber, Mordecai (2003). The Shengold Jewish Encyclopedia. Rockville, MD: Schreiber Publishing. p. 125. ISBN 978-1-887563-77-2.
  135. Law 1978, ப. 164.
  136. Greatest emporium in the world, CSI, UNESCO.
  137. Collingham 2006, ப. 245.
  138. The Medical Times and Gazette, Volume 1. London: John Churchill. 1867. p. 506.
  139. Donkin 2003, ப. 67, 60–70.
  140. Loewe, Michael; Shaughnessy, Edward L. (1999). The Cambridge History of Ancient China: From the Origins of Civilization to 221 BC. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 87–88. ISBN 978-0-521-47030-8. Retrieved 1 November 2013.
  141. Runion, Meredith L. (2007). The history of Afghanistan. Westport: Greenwood Press. p. 46. ISBN 978-0-313-33798-7. The Yuezhi people conquered Bactria in the second century BCE. and divided the country into five chiefdoms, one of which would become the Kushan Empire. Recognizing the importance of unification, these five tribes combined under the one dominate Kushan tribe, and the primary rulers descended from the Yuezhi.
  142. Liu, Xinrui (2001). Adas, Michael (ed.). Agricultural and pastoral societies in ancient and classical history. Philadelphia: Temple University Press. p. 156. ISBN 978-1-56639-832-9.
  143. Buddhist Records of the Western World Si-Yu-Ki, (Tr. Samuel Beal: Travels of Fa-Hian, The Mission of Sung-Yun and Hwei-Sing, Books 1–5), Kegan Paul, Trench, Trubner & Co. Ltd. London. 1906 and Hill (2009), pp. 29, 318–350
  144. which began about 127 CE. "Falk 2001, pp. 121–136", Falk (2001), pp. 121–136, Falk, Harry (2004), pp. 167–176 and Hill (2009), pp. 29, 33, 368–371.
  145. Grégoire Frumkin (1970). Archaeology in Soviet Central Asia. Brill Archive. pp. 51–. GGKEY:4NPLATFACBB.
  146. Rafi U. Samad (2011). The Grandeur of Gandhara: The Ancient Buddhist Civilization of the Swat, Peshawar, Kabul and Indus Valleys. Algora Publishing. pp. 93–. ISBN 978-0-87586-859-2.
  147. Oxford History of India – Vincent Smith
  148. Los Angeles County Museum of Art; Pratapaditya Pal (1986). Indian Sculpture: Circa 500 B.C.–A.D. 700. University of California Press. pp. 151–. ISBN 978-0-520-05991-7.
  149. "The History of Pakistan: The Kushans". kushan.org. Archived from the original on 7 July 2015. Retrieved 6 January 2017.
  150. Si-Yu-Ki, Buddhist Records of the Western World, (Tr. Samuel Beal: Travels of Fa-Hian, The Mission of Sung-Yun and Hwei-Sing, Books 1–5), Kegan Paul, Trench, Trubner & Co. Ltd. London. 1906
  151. "Gupta dynasty: empire in 4th century". Encyclopædia Britannica. 
  152. "The Story of India – Photo Gallery". PBS. Retrieved 16 May 2010.
  153. Coedes, G. (1968) The Indianized States of Southeast Asia Edited by Walter F. Vella. Translated by Susan Brown Cowing. Canberra: Australian National University Press. Introduction... The geographic area here called Farther India consists of Indonesia, or island Southeast Asia....
  154. Bernard Philippe Groslier (1962). The art of Indochina: including Thailand, Vietnam, Laos and Cambodia. Crown Publishers.
  155. Iaroslav Lebedynsky, Les Nomades, p. 172.
  156. Early History of India, p. 339, Dr V.A. Smith; See also Early Empire of Central Asia (1939), W.M. McGovern.
  157. Ancient India, 2003, p. 650, Dr V.D. Mahajan; History and Culture of Indian People, The Age of Imperial Kanauj, p. 50, Dr ரமேஷ் சந்திர மஜும்தார், Dr A.D. Pusalkar.
  158. Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 173.
  159. The precise number varies according to whether or not some barely started excavations, such as cave 15A, are counted. The ASI say "In all, total 30 excavations were hewn out of rock which also include an unfinished one", UNESCO and Spink "about 30". The controversies over the end date of excavation is covered below.
  160. Tej Ram Sharma, 1978, "Personal and geographical names in the Gupta inscriptions. (1.publ.)", p. 254, Kamarupa consisted of the Western districts of the Brahmaputra valley which being the most powerful state.
  161. Suresh Kant Sharma, Usha Sharma – 2005, "Discovery of North-East India: Geography, History, Culture, ... – Volume 3", p. 248, Davaka (Nowgong) and Kamarupa as separate and submissive friendly kingdoms.
  162. The eastern border of Kamarupa is given by the temple of the goddess Tamreshvari (Pūrvāte Kāmarūpasya devī Dikkaravasini in காளிகா புராணம்) near present-day Sadiya. "...the temple of the goddess Tameshwari (Dikkaravasini) is now located at modern Sadiya about 100 miles to the northeast of Sibsagar" (Sircar 1990, pp. 63–68).
  163. Barpujari, H.K., ed. (1990). The Comprehensive History of Assam (1st ed.). Guwahati, India: Assam Publication Board. கணினி நூலகம் 499315420.
  164. Sarkar, J.N. (1992), "Chapter II The Turko-Afghan Invasions", in Barpujari, H.K., The Comprehensive History of Assam, 2, Guwahati: Assam Publication Board, pp. 35–48
  165. "Pallava script". SkyKnowledge.com. 30 December 2010.
  166. Nilakanta Sastri, pp. 412–413
  167. Hall, John Whitney, ed. (2005) [1988]. "India". History of the World: Earliest Times to the Present Day. John Grayson Kirk. North Dighton, MA: World Publications Group. p. 246. ISBN 978-1-57215-421-6.
  168. "CNG: eAuction 329. India, Post-Gupta (Ganges Valley). Vardhanas of Thanesar and Kanauj. Harshavardhana. Circa AD 606–647. AR Drachm (13 mm, 2.28 g, 1h)". cngcoins.com.
  169. RN Kundra & SS Bawa, History of Ancient and Medieval India
  170. 170.0 170.1 170.2 International Dictionary of Historic Places: Asia and Oceania by Trudy Ring, Robert M. Salkin, Sharon La Boda p. 507
  171. "Harsha". Encyclopædia Britannica. (2015). 
  172. "Sthanvishvara (historical region, India)". Encyclopædia Britannica. 
  173. "Harsha (Indian emperor)". Encyclopædia Britannica. 
  174. Michaels 2004, ப. 41.
  175. Michaels 2004, ப. 43.
  176. Sanderson, Alexis (2009). "The Śaiva Age: The Rise and Dominance of Śaivism during the Early Medieval Period". In Einoo, Shingo (ed.). Genesis and Development of Tantrism. Institute of Oriental Culture Special Series. Vol. 23. Tokyo: Institute of Oriental Culture, University of Tokyo. pp. 41–43. ISBN 978-4-7963-0188-6.
  177. Sarao, Decline of Buddhism in India
  178. Sheridan, Daniel P. "Kumarila Bhatta", in Great Thinkers of the Eastern World, ed. Ian McGready, New York: HarperCollins, 1995, pp. 198–201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-270085-5.
  179. Avari, Burjor (2007). India: The Ancient Past. A History of the Indian-Subcontinent from 7000 BC to AD 1200. New York: Routledge. pp. 204–205. ISBN 978-0-203-08850-0. Madhyadesha became the ambition of two particular clans among a tribal people in Rajasthan, known as Gurjara and Pratihara. They were both parts of a larger federation of tribes, some of which later came to be known as the Rajputs
  180. Kamath 1980, ப. 93.
  181. Vinod Chandra Srivastava (2008). History of Agriculture in India, Up to C. 1200 A.D. Concept. p. 857. ISBN 978-81-8069-521-6.
  182. 182.0 182.1 The Dancing Girl: A History of Early India by Balaji Sadasivan p. 129
  183. Pollock, Sheldon (2006). The Language of the Gods in the World of Men: Sanskrit, Culture, and Power in Premodern India. University of California Press. pp. 241–242. ISBN 978-0-520-93202-9.
  184. Sunil Fotedar (June 1984). The Kashmir Series: Glimpses of Kashmiri Culture – Vivekananda Kendra, Kanyakumari (p. 57).
  185. R. C. Mazumdar, Ancient India, p. 383
  186. Karl J. Schmidt (2015). An Atlas and Survey of South Asian History. Routledge. p. 26. ISBN 9781317476818.
  187. Sailendra Nath Sen (1999). Ancient Indian History and Civilization. New Age. p. 246. ISBN 9788122411980.
  188. Thapar 2003, ப. 334.
  189. 189.0 189.1 189.2 Chandra, Satish (2009). History of Medieval India. New Delhi: Orient Blackswan. pp. 19–20. ISBN 978-81-250-3226-7.
  190. Kamath 1980, ப. 83, 85, 97.
  191. Puttaswamy, T.K. (2012). "Mahavira". Mathematical Achievements of Pre-modern Indian Mathematicians. London: Elsevier Publications. p. 231. ISBN 978-0-12-397913-1.
  192. Sen 1999, ப. 380.
  193. Sen 1999, ப. 380–381.
  194. Daniélou 2003, ப. 170.
  195. The Britannica Guide to Algebra and Trigonometry by William L. Hosch p. 105
  196. Wink, André (2002) [First published 1990]. Al-Hind: The making of the Indo-Islamic World. Vol. I. Brill Academic Publishers. pp. 283–284. ISBN 978-0-391-04173-8.
  197. Avari 2007, ப. 204.
  198. Wink, André (2002) [First published 1990]. Al-Hind: The making of the Indo-Islamic World. Vol. I. Brill Academic Publishers. pp. 285–286. ISBN 978-0-391-04173-8.
  199. K.D. Bajpai (2006). History of Gopāchala. Bharatiya Jnanpith. p. 31. ISBN 978-81-263-1155-2.
  200. Niyogi 1959, ப. 38.
  201. Sinha, CPN (1969). "Origin of the Karnatas of Mithila - A Fresh Appraisal". Proceedings of the Indian History Congress 31: 66–72. 
  202. Chakrabarty, Dilip (2010). The Geopolitical Orbits of Ancient India: The Geographical Frames of the Ancient Indian Dynasties. Oxford University Press. pp. 47–48. ISBN 978-0-19-908832-4.
  203. எபிகிராபியா இண்டிகா, XXIV, p. 43, Dr N.G. Majumdar
  204. Nitish K. Sengupta (2011). Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib. Penguin Books India. pp. 43–45. ISBN 978-0-14-341678-4.
  205. Biplab Dasgupta (2005). European Trade and Colonial Conquest. Anthem Press. pp. 341–. ISBN 978-1-84331-029-7.
  206. Kulke & Rothermund 2004, ப. 112, 119.
  207. History of Buddhism in India, Translation by A Shiefner
  208. 208.0 208.1 208.2 Chandra, Satish (2009). History of Medieval India. New Delhi: Orient Blackswan. pp. 13–15. ISBN 978-81-250-3226-7.
  209. 209.0 209.1 Sen 1999, ப. 278.
  210. PN Chopra; BN Puri; MN Das; AC Pradhan, eds. (2003). A Comprehensive History Of Ancient India (3 Vol. Set). Sterling. pp. 200–202. ISBN 978-81-207-2503-4.
  211. History of Ancient India: Earliest Times to 1000 A.D. by Radhey Shyam Chaurasia p. 237
  212. Kulke & Rothermund 2004, ப. 116.
  213. Keay 2000, ப. 215: The Cholas were in fact the most successful dynasty since the Guptas ... The classic expansion of Chola power began anew with the accession of Rajaraja I in 985.
  214. "The Last Years of Cholas: The decline and fall of a dynasty". En.articlesgratuits.com. 22 August 2007. Archived from the original on 20 January 2010. Retrieved 23 September 2009.
  215. க. அ. நீலகண்ட சாத்திரி, A History of South India, p. 158
  216. Buddhism, Diplomacy, and Trade: The Realignment of Sino-Indian Relations by Tansen Sen p. 229
  217. History of Asia by B.V. Rao p. 297
  218. Indian Civilization and Culture by Suhas Chatterjee p. 417
  219. "Sri Ranganathaswamy Temple, Srirangam".
  220. 220.0 220.1 A Comprehensive History of Medieval India: by Farooqui Salma Ahmed, Salma Ahmed Farooqui p. 24
  221. Ancient Indian History and Civilization by Sailendra Nath Sen pp. 403–405
  222. World Heritage Monuments and Related Edifices in India, Band 1 by ʻAlī Jāvīd pp. 132–134
  223. History of Kannada Literature by E.P. Rice p. 32
  224. Bilhana by Prabhakar Narayan Kawthekar, p. 29
  225. Asher & Talbot 2006, ப. 47.
  226. Metcalf & Metcalf 2006, ப. 6.
  227. Asher & Talbot 2006, ப. 53.
  228. 228.0 228.1 Delhi Sultanate, பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
  229. Bartel, Nick (1999). "Battuta's Travels: Delhi, capital of Muslim India". The Travels of Ibn Battuta – A Virtual Tour with the 14th Century Traveler. Archived from the original on 12 June 2010.
  230. Asher & Talbot 2006, ப. 50–52.
  231. Richard Eaton (2000), Temple Desecration and Indo-Muslim States, Journal of Islamic Studies, 11(3), pp. 283–319
  232. 232.0 232.1 Asher & Talbot 2006, ப. 50–51.
  233. Ludden 2002, ப. 67.
  234. "Timur – conquest of India". Gardenvisit. Archived from the original on 12 October 2007.
  235. Elliot & Dawson. The History of India As told By Its Own Historians Vol III. pp. 445–446.
  236. வார்ப்புரு:Encyclopaedia Islamica
  237. History of Classical Sanskrit Literature: by M. Srinivasachariar p. 211
  238. Eaton 2005, ப. 28–29.
  239. Sastri 2002, ப. 239.
  240. South India by Amy Karafin, Anirban Mahapatra p. 32
  241. Kamath 1980, ப. 170–171.
  242. Sastri 1955, ப. 317.
  243. The success was probably also due to the peaceful nature of Muhammad II Bahmani, according to Sastri 1955, ப. 242
  244. From the notes of Portuguese Nuniz. Robert Sewell notes that a big dam across was built the Tungabhadra and an aqueduct 15 மைல்கள் (24 km) long was cut out of rock (Sastri 1955, ப. 243).
  245. Bowman, John Stewart, ed. (2000). Columbia Chronologies of Asian History and Culture. Columbia University Press. p. 271. ISBN 0-231-11004-9.
  246. Sastri 1955, ப. 244.
  247. From the notes of Persian Abdur Razzak. Writings of Nuniz confirms that the kings of Burma paid tributes to Vijayanagara empire. (Sastri 1955, ப. 245)
  248. Kamath 1980, ப. 173.
  249. From the notes of Abdur Razzak about Vijayanagara: a city like this had not been seen by the pupil of the eye nor had an ear heard of anything equal to it in the world (Hampi, A Travel Guide 2003, p. 11)
  250. From the notes of Duarte Barbosa. (Kamath 1980, ப. 189)
  251. Wagoner, Phillip B. (November 1996). "Sultan among Hindu Kings: Dress, Titles, and the Islamicization of Hindu Culture at Vijayanagara". The Journal of Asian Studies 55 (4): 851–880. doi:10.2307/2646526. 
  252. Kamath 1980, ப. 188-189.
  253. Fritz, John M.; Michell, George (2015) [First published 2011]. Hampi Vijayanagara. Jaico Publishing House. p. 50. ISBN 978-8 1-8495-602-3.
  254. Fritz, John M.; Michell, George (2015) [First published 2011]. Hampi Vijayanagara. Jaico Publishing House. pp. 41, 43. ISBN 978-8 1-8495-602-3.
  255. Wagoner, Phillip B. (2001). "Architecture and Royal Authority under the Early Sangamas". In Fritz, John. M.; Michell, George (eds.). New Light on Hampi: Recent Research at Vijayanagara. Marg Publications. p. 14. ISBN 81-85026-53-X.
  256. Kamath 1980, ப. 189.
  257. "The austere, grandiose site of Hampi was the last capital of the last great Hindu Kingdom of Vijayanagar. Its fabulously rich princes built Dravidian temples and palaces which won the admiration of travellers between the 14th and 16th centuries. Conquered by the Deccan Muslim confederacy in 1565, the city was pillaged over a period of six months before being abandoned." From the brief description UNESCO World Heritage List.
  258. "Vijayanagara Research Project::Elephant Stables". Vijayanagara.org. 9 February 2014. Archived from the original on 17 May 2017. Retrieved 21 May 2018.
  259. History of Science and Philosophy of Science by Pradip Kumar Sengupta p. 91
  260. Medieval India: From Sultanat to the Mughals-Delhi Sultanat (1206–1526) by Satish Chandra pp. 188–189
  261. Art History, Volume II: 1400–present by Boundless p. 243
  262. Eaton 2005, ப. 100–101.
  263. 263.0 263.1 Kamath 1980, ப. 185.
  264. Vijaya Ramaswamy (2007). Historical Dictionary of the Tamils. Scarecrow Press. pp. li–lii. ISBN 978-0-8108-6445-0.
  265. Eaton 2005, ப. 101–115.
  266. Singh, Pradyuman (19 January 2021). Bihar General Knowledge Digest. Prabhat Prakashan. ISBN 9789352667697.
  267. Surendra Gopal (2017). Mapping Bihar: From Medieval to Modern Times. Taylor & Francis. pp. 289–295. ISBN 978-1-351-03416-6.
  268. Surinder Singh; I. D. Gaur (2008). Popular Literature and Pre-modern Societies in South Asia. Pearson Education India. pp. 77–. ISBN 978-81-317-1358-7.
  269. Gordon Mackenzie (1990) [First published 1883]. A manual of the Kistna district in the presidency of Madras. Asian Educational Services. pp. 9–10, 224–. ISBN 978-81-206-0544-2.
  270. 270.0 270.1 270.2 Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 116–117. ISBN 978-93-80607-34-4.
  271. Lectures on Rajput history and culture by Dr. Dasharatha Sharma. Publisher: Motilal Banarsidass, Jawahar Nagar, Delhi 1970. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8426-0262-3.
  272. John Merci, Kim Smith; James Leuck (1922). "Muslim conquest and the Rajputs". The Medieval History of India pg 67–115
  273. Eaton 2005, ப. 41–42.
  274. Farooqui Salma Ahmed, A Comprehensive History of Medieval India: From Twelfth to the Mid-Eighteenth Century, (Dorling Kindersley Pvt. Ltd., 2011)
  275. Majumdar, R. C., ed. (1974). The Mughul Empire. The History and Culture of the Indian People. Vol. VII. Bombay: Bharatiya Vidya Bhavan. p. 412.
  276. Mitchell, George; Zebrowski, Mark (1999). Architecture and Art of the Deccan Sultanates (The New Cambridge History of India Vol. I:7). Cambridge: Cambridge University Press. p. 10. ISBN 0-521-56321-6.
  277. Eaton 2005, ப. 98.
  278. Majumdar, R. C.; Pusalker, A. D.; Majumdar, A. K., eds. (1980) [First published 1960]. The Delhi Sultanate. The History and Culture of the Indian People. Vol. VI (3rd ed.). Bombay: Bharatiya Vidya Bhavan. p. 367. கணினி நூலகம் 664485. [Describing the Gajapati kings of Orissa] Kapilendra was the most powerful Hindu king of his time, and under him Orissa became an empire stretching from the lower Ganga in the north to the Kaveri in the south.
  279. Sailendra Nath Sen (1999). Ancient Indian History and Civilization. New Age International. p. 305. ISBN 978-81-224-1198-0.
  280. Yasmin Saikia (2004). Fragmented Memories: Struggling to be Tai-Ahom in India. Duke University Press. p. 8. ISBN 978-0-8223-8616-2.
  281. Sarkar, J.N. (1992), "Chapter VIII Assam-Mughal Relations", in Barpujari, H.K. (ed.), The Comprehensive History of Assam, vol. 2, Guwahati: Assam Publication Board, p. 213
  282. Williams 2004, ப. 83–84, the other major classical Indian dances are: Bharatanatyam, Kathak, Odissi, Kathakali, Kuchipudi, Cchau, Satriya, Yaksagana and Bhagavata Mela.
  283. Massey 2004, ப. 177.
  284. Devi 1990, ப. 175–180.
  285. 285.0 285.1 Schomer & McLeod (1987), ப. 1.
  286. Johar, Surinder (1999). Guru Gobind Singh: A Multi-faceted Personality. MD Publications. p. 89. ISBN 978-81-7533-093-1.
  287. Schomer & McLeod (1987), ப. 1–2.
  288. Lance Nelson (2007), An Introductory Dictionary of Theology and Religious Studies (Editors: Orlando O. Espín, James B. Nickoloff), Liturgical Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8146-5856-7, pp. 562–563
  289. SS Kumar (2010), Bhakti – the Yoga of Love, LIT Verlag Münster, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-643-50130-1, pp. 35–36
  290. Wendy Doniger (2009), Bhakti, Encyclopædia Britannica; The Four Denomination of Hinduism பரணிடப்பட்டது 13 சனவரி 2020 at the வந்தவழி இயந்திரம் Himalayan Academy (2013)
  291. Schomer & McLeod (1987), ப. 2.
  292. Novetzke, Christian (2007). "Bhakti and Its Public". International Journal of Hindu Studies 11 (3): 255–272. doi:10.1007/s11407-008-9049-9. 
  293. Singh, Patwant (2000). The Sikhs. Alfred A Knopf Publishing. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-375-40728-6.
  294. Louis Fenech and WH McLeod (2014), Historical Dictionary of Sikhism, 3rd Edition, Rowman & Littlefield, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4422-3600-4, p. 17
  295. William James (2011), God's Plenty: Religious Diversity in Kingston, McGill Queens University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7735-3889-4, pp. 241–242
  296. Mann, Gurinder Singh (2001). The Making of Sikh Scripture. United States: Oxford University Press. p. 21. ISBN 978-0-19-513024-9.
  297. Asher & Talbot 2006, ப. 115.
  298. Robb 2001, ப. 90–91.
  299. Flores, Jorge (5 June 2018). Unwanted Neighbours: The Mughals, the Portuguese, and Their Frontier Zones. Oxford University Press. ISBN 978-0-19-909368-7.
  300. Centre, UNESCO World Heritage. "Taj Mahal". UNESCO World Heritage Centre.
  301. "The Islamic World to 1600: Rise of the Great Islamic Empires (The Mughal Empire)". University of Calgary. Archived from the original on 27 September 2013.
  302. Jeroen Duindam (2015), Dynasties: A Global History of Power, 1300–1800, p. 105, Cambridge University Press
  303. Peter Turchin; Adams, Jonathan M.; Hall, Thomas D (December 2006). "East-West Orientation of Historical Empires". Journal of World-Systems Research 12 (2): 223. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X. https://peterturchin.com/PDF/Turchin_Adams_Hall_2006.pdf. பார்த்த நாள்: 2 October 2021. 
  304. Maddison, Angus (2003): Development Centre Studies The World Economy Historical Statistics: Historical Statistics, பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-64-10414-3, p. 261
  305. Parthasarathi, Prasannan (2011), Why Europe Grew Rich and Asia Did Not: Global Economic Divergence, 1600–1850, Cambridge University Press, p. 2, ISBN 978-1-139-49889-0
  306. Jeffrey G. Williamson, David Clingingsmith (August 2005). "India's Deindustrialization in the 18th and 19th Centuries" (PDF). ஆர்வர்டு பல்கலைக்கழகம். Retrieved 18 May 2017.
  307. Richards, John F. (1995) [First published 1993]. The Mughal Empire. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 190. ISBN 978-0-521-56603-2.
  308. Abraham Eraly (2007). The Mughal World: Life in India's Last Golden Age. Penguin Books. p. 5. ISBN 978-0-14-310262-5.
  309. Maddison, Angus (2003): Development Centre Studies The World Economy Historical Statistics: Historical Statistics, பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9264104143, pages 259–261
  310. Giorgio Riello, Tirthankar Roy (2009). How India Clothed the World: The World of South Asian Textiles, 1500–1850. Brill Publishers. p. 174. ISBN 9789047429975.
  311. Ian Copland; Ian Mabbett; Asim Roy; et al. (2012). A History of State and Religion in India. Routledge. p. 119. ISBN 978-1-136-45950-4.
  312. Audrey Truschke (2017). Aurangzeb: The Life and Legacy of India's Most Controversial King. Stanford University Press. pp. 56, 58. ISBN 978-1-5036-0259-5.
  313. Hasan, Farhat (1991). "Conflict and Cooperation in Anglo-Mughal Trade Relations during the Reign of Aurangzeb". Journal of the Economic and Social History of the Orient 34 (4): 351–360. doi:10.1163/156852091X00058. 
  314. Vaugn, James (September 2017). "John Company Armed: The English East India Company, the Anglo-Mughal War and Absolutist Imperialism, c. 1675–1690". Britain and the World 11 (1). 
  315. Royina Grewal (2007). In the Shadow of the Taj: A Portrait of Agra. Penguin Books. p. 220. ISBN 978-0-14-310265-6.
  316. Dupuy, R. Ernest and Trevor N. Dupuy (1993). The Harper Encyclopedia of Military History (4th ed.). Harper Collins Publishers. p. 711.
  317. "Iran in the Age of the Raj". avalanchepress.com. Retrieved 6 January 2017.
  318. Gupta, Hari Ram (1961). Marathas and Panipat (in ஆங்கிலம்). Panjab University. p. 326.
  319. Asher & Talbot 2006, ப. 265.
  320. A Popular Dictionary of Sikhism: Sikh Religion and Philosophy, p. 86, Routledge, W. Owen Cole, Piara Singh Sambhi, 2005
  321. குஷ்வந்த் சிங், A History of the Sikhs, Volume I: 1469–1839, Delhi, Oxford University Press, 1978, pp. 127–129
  322. Shivaji and his Times (1919) – J.N. Sarkar
  323. An Advanced History of India, Dr. K.K. Datta, p. 546
  324. Pearson, M.N. (February 1976). "Shivaji and the Decline of the Mughal Empire". The Journal of Asian Studies 35 (2): 221–235. doi:10.2307/2053980. 
  325. Capper, J. (1918). Delhi, the Capital of India. Asian Educational Services. p. 28. ISBN 978-81-206-1282-2. Retrieved 6 January 2017.
  326. Sen, S.N. (2010). An Advanced History of Modern India. Macmillan India. p. 1941. ISBN 978-0-230-32885-3. Retrieved 6 January 2017.
  327. "Maratha empire | History, Definition, Map, & Facts | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). 2023-12-01. Retrieved 2024-01-21.
  328. Ghazi, Mahmood Ahmad (2002). Islamic Renaissance in South Asia 1707–1867: The Role of Shāh Walī Allāh and His Successors. Islamic Research Institute. pp. 129–130. ISBN 969-408-232-3.
  329. Mehta, Jaswant Lal (2005). Advanced Study in the History of Modern India, 1707–1813. New Dawn Press. p. 204. ISBN 978-1-932705-54-6. The Maratha Governor of Trichinopoly
  330. Sailendra Nath Sen (2010). An Advanced History of Modern India. Macmillan India. p. 16. ISBN 978-0-230-32885-3.
  331. Bharatiya Vidya Bhavan, Bharatiya Itihasa Samiti, Ramesh Chandra Majumdar – The History and Culture of the Indian People: The Maratha supremacy
  332. N.G. Rathod (1994). The Great Maratha Mahadaji Scindia. Sarup & Sons. p. 8. ISBN 978-81-85431-52-9.
  333. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. p. 63. ISBN 978-81-313-0034-3.
  334. Singh, Gulcharan (July 1981). "Maharaja Ranjit Singh and the Principles of War". USI Journal 111 (465): 184–192. 
  335. Grewal, J.S. (1990). The Sikhs of the Punjab. The New Cambridge History of India. Vol. II.3. Cambridge University Press. pp. 101, 103–104. ISBN 978-0-521-26884-4. Aggrandisement which made him the master of an empire ... the British recognized Ranjit Singh as the sole sovereign ruler of the Punjab and left him free to ... oust the Afghans from Multan and Kashmir ... Peshawar was taken over ... The real strength of Ranjit Singh's army lay in its infantry and artillery ... these new wings played an increasingly decisive role ... possessed 200 guns. Horse artillery was added in the 1820s ... nearly half of his army in terms of numbers consisted of men and officers trained on European lines ... In the expansion of Ranjit Singh's dominions ... vassalage proved to be nearly as important as the westernized wings of his army.
  336. Sen, S. N. (15 August 2006). History Modern India. New Age International. ISBN 9788122417746 – via Google Books.
  337. Chaudhury, Sushil; Mohsin, KM (2012). "Sirajuddaula". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம். Archived from the original on 14 June 2015. Retrieved 15 August 2018.
  338. Singh, Vipul (2009). Longman History & Civics (Dual Government in Bengal). Pearson Education India. pp. 29–. ISBN 978-8131728888.
  339. Madhya Pradesh National Means-Cum-Merit Scholarship Exam (Warren Hasting's system of Dual Government). Upkar Prakashan. 2009. pp. 11–. ISBN 978-81-7482-744-9.
  340. Black, Jeremy (2006), A Military History of Britain: from 1775 to the Present, Westport, Conn.: Greenwood Publishing Group, p. 78, ISBN 978-0-275-99039-8
  341. "Treaty of Amritsar" (PDF). Archived from the original (PDF) on 26 August 2014. Retrieved 25 August 2014.
  342. Rai, Mridu (2004). Hindu Rulers, Muslim Subjects: Islam, Rights, and the History of Kashmir. Princeton University Press. pp. 27, 133. ISBN 978-0-691-11688-4.
  343. Indian History. Allied Publishers. 1988. pp. C-114. ISBN 978-81-8424-568-4.
  344. Karl J. Schmidt (20 May 2015). An Atlas and Survey of South Asian History. Routledge. pp. 138–. ISBN 978-1-317-47681-8.
  345. Glenn Ames (2012). Ivana Elbl (ed.). Portugal and its Empire, 1250–1800 (Collected Essays in Memory of Glenn J. Ames).: Portuguese Studies Review, Vol. 17, No. 1. Trent University Press. pp. 12–15 with footnotes, context: 11–32.
  346. Praval, K. C. (2009) [First published 1987]. Indian Army after Independence. New Delhi: Lancer. p. 214. ISBN 978-1-935501-10-7.
  347. Koshy, M.O. (1989). The Dutch Power in Kerala, 1729–1758. Mittal Publications. p. 61. ISBN 978-81-7099-136-6.
  348. http://mod.nic.in பரணிடப்பட்டது 12 மார்ச் 2016 at the வந்தவழி இயந்திரம் 9th Madras Regiment
  349. "The British in India – The Map Archive". themaparchive.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 18 February 2022. Retrieved 2024-11-16.
  350. Magedera, Ian H. (November 2010). "Arrested Development: The Shape of 'French India' after the Treaties of Paris of 1763 and 1814" (in en). Interventions 12 (3): 331–343. doi:10.1080/1369801X.2010.516092. பன்னாட்டுத் தர தொடர் எண்:1369-801X. http://www.tandfonline.com/doi/abs/10.1080/1369801X.2010.516092. 
  351. Markovits, Claude, ed. (2004) [First published 1994 as Histoire de l'Inde Moderne]. A History of Modern India, 1480–1950 (2nd ed.). London: Anthem Press. pp. 271–. ISBN 978-1-84331-004-4.
  352. 352.0 352.1 352.2 Brown 1994, ப. 67
  353. 353.0 353.1 Brown 1994, ப. 68
  354. Ludden 2002, ப. 133
  355. Ludden 2002, ப. 135
  356. Saul David, p. 70, The Indian Mutiny, Penguin Books 2003
  357. Bandyopadhyay 2004, ப. 172, Bose & Jalal 2003, ப. 91, Brown 1994, ப. 92
  358. Bandyopadhyay 2004, ப. 177, Bayly 2000, ப. 357
  359. Christopher Hibbert, The Great Mutiny: India 1857 (1980)
  360. Pochhammer, Wilhelm von (1981), India's road to nationhood: a political history of the subcontinent, Allied Publishers, ISBN 978-81-7764-715-0
  361. "Law Commission of India – Early Beginnings"
  362. Suresh Chandra Ghosh (1995). "Bentinck, Macaulay and the introduction of English education in India". History of Education 24 (1): 17–25. doi:10.1080/0046760950240102. 
  363. I.D. Derbyshire (1987). "Economic Change and the Railways in North India, 1860–1914". Modern Asian Studies 21 (3): 521–545. doi:10.1017/S0026749X00009197. 
  364. Robb, Peter (November 1981). "British Rule and Indian 'Improvement'". Economic History Review 34 (4): 507–523. doi:10.2307/2595587. 
  365. S.A. Wolpert, Morley and India, 1906–1910, (1967)
  366. Democracy and Hindu nationalism, Chetan Bhatt (2013)
  367. Harjinder Singh Dilgeer. Shiromani Akali Dal (1920–2000). Sikh University Press, Belgium, 2001.
  368. The History of the Indian National Congress, B. Pattabhi Sitaramayya (1935)
  369. Nitish Sengupta (2001). History of the Bengali-speaking People. UBS Publishers' Distributors. pp. 210–213. ISBN 978-81-7476-355-6. Producing in about three quarters of a century so many creative stalwarts in literature, art, music, social and religious reform and also trading and industry ... The Bengal Renaissance can be said to have started with Raja Ram Mohan Roy (1775–1833) and ended with Rabindranath Tagore (1861–1941) ... On the whole, it remained an elitist movement restricted to Hindu bhadralok (gentry) and zamindars.
  370. David Kopf (December 1994). "Amiya P. Sen. Hindu Revivalism in Bengal 1872". American Historical Review 99 (5): 1741–1742. doi:10.2307/2168519. 
  371. Sharma, Mayank (January 2012). "Essay on 'Derozio and the Young Bengal Movement'". Archived from the original on 14 November 2018. Retrieved 9 August 2017.
  372. 372.0 372.1 Davis, Mike. Late Victorian Holocausts. 1. Verso, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85984-739-0 p. 173
  373. Davis, Mike. Late Victorian Holocausts. 1. Verso, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85984-739-0 p. 7
  374. Datta, Rajat (2000). Society, economy, and the market : commercialization in rural Bengal, c. 1760-1800. New Delhi: Manohar Publishers & Distributors. pp. 262, 266. ISBN 81-7304-341-8. கணினி நூலகம் 44927255.
  375. Amartya Sen (1981). Poverty and Famines: An Essay on Entitlement and Deprivation. Oxford University Press. p. 39. ISBN 978-0-19-828463-5.
  376. Greenough, Paul Robert (1982). Prosperity and Misery in Modern Bengal: The Famine of 1943–1944. Oxford University Press. ISBN 978-0-19-503082-2.
  377. "Plague". Archived from the original on 17 February 2009. Retrieved 5 July 2014.. World Health Organisation.
  378. Pati 1996, ப. 31
  379. "Participants from the Indian subcontinent in the First World War". Memorial Gates Trust. Retrieved 12 September 2009.
  380. "Commonwealth War Graves Commission Annual Report 2007–2008 Online". Archived from the original on 26 September 2007.
  381. Sumner 2001, ப. 7.
  382. Kux, Dennis (1992). India and the United States: estranged democracies, 1941–1991. Diane Publishing. ISBN 978-1-4289-8189-8.
  383. Müller 2009, ப. 55.
  384. Fay 1993, ப. viii
  385. Sarkar 1989, ப. 410
  386. Bandyopadhyay 2004, ப. 426
  387. Arnold 1991, ப. 97–98
  388. (Devereux 2000, ப. 6)
  389. Marshall, P. J. (2001), The Cambridge Illustrated History of the British Empire, Cambridge University Press, p. 179, ISBN 978-0-521-00254-7 Quote: "The first modern nationalist movement to arise in the non-European empire, and one that became an inspiration for many others, was the Indian Congress."
  390. "Information about the Indian National Congress". open.ac.uk. Arts & Humanities Research council. Retrieved 29 July 2015.
  391. "Census Of India 1931". archive.org. 1933.
  392. Markovits, Claude (2004). A history of modern India, 1480–1950. Anthem Press. pp. 386–409. ISBN 978-1-84331-004-4.
  393. 393.0 393.1 Modern India, Bipin Chandra, p. 76
  394. India Awakening and Bengal, N.S. Bose, 1976, p. 237
  395. British Paramountcy and Indian Renaissance, Part–II, Dr. R.C. Majumdar, p. 466
  396. "'India's well-timed diversification of army helped democracy' | Business Standard News". Business Standard. http://www.business-standard.com/article/news-ians/india-s-well-timed-diversification-of-army-helped-democracy-115032000283_1.html. 
  397. Anil Chandra Banerjee, A Constitutional History of India 1600–1935 (1978) pp. 171–173
  398. R, B.S.; Bakshi, S.R. (1990). Bal Gangadhar Tilak: Struggle for Swaraj. Anmol Publications Pvt. Ltd. ISBN 978-81-7041-262-5. Retrieved 6 January 2017.
  399. 399.0 399.1 Chandra, Bipan; Mukherjee, Mridula; Mukherjee, Aditya; Mahajan, Sucheta; Panikkar, K.N. (2016) [First published 1987]. India's Struggle for Independence (Revised and updated ed.). Penguin Books. p. 128. ISBN 978-0-14-010781-4.
  400. Albert, Sir Courtenay Peregrine. The Government of India. Clarendon Press, 1922. p. 125
  401. Bond, Brian (October 1963). "Amritsar 1919". History Today. Vol. 13, no. 10. pp. 666–676.
  402. Qasmi, Ali Usman; Robb, Megan Eaton (2017). Muslims against the Muslim League: Critiques of the Idea of Pakistan (in ஆங்கிலம்). Cambridge University Press. p. 2. ISBN 978-1-108-62123-6.
  403. Haq, Mushir U. (1970). Muslim politics in modern India, 1857–1947 (in ஆங்கிலம்). Meenakshi Prakashan. p. 114. This was also reflected in one of the resolutions of the Azad Muslim Conference, an organization which attempted to be representative of all the various nationalist Muslim parties and groups in India.
  404. 404.0 404.1 Ahmed, Ishtiaq (27 May 2016). "The dissenters". The Friday Times (in ஆங்கிலம்). However, the book is a tribute to the role of one Muslim leader who steadfastly opposed the Partition of India: the Sindhi leader Allah Bakhsh Soomro. Allah Bakhsh belonged to a landed family. He founded the Sindh People's Party in 1934, which later came to be known as 'Ittehad' or 'Unity Party'. ... Allah Bakhsh was totally opposed to the Muslim League's demand for the creation of Pakistan through a division of India on a religious basis. Consequently, he established the Azad Muslim Conference. In its Delhi session held during April 27–30, 1940 some 1,400 delegates took part. They belonged mainly to the lower castes and working class. The famous scholar of Indian Islam, Wilfred Cantwell Smith, feels that the delegates represented a 'majority of India's Muslims'. Among those who attended the conference were representatives of many Islamic theologians and women also took part in the deliberations ... Shamsul Islam argues that the All-India Muslim League at times used intimidation and coercion to silence any opposition among Muslims to its demand for Partition. He calls such tactics of the Muslim League as a 'Reign of Terror'. He gives examples from all over India including the NWFP where the Khudai Khidmatgars remain opposed to the Partition of India.
  405. 405.0 405.1 405.2 Ali, Afsar (17 July 2017). "Partition of India and Patriotism of Indian Muslims". தி மில்லி கெஜட் (in ஆங்கிலம்).
  406. "Great speeches of the 20th century". The Guardian. 8 February 2008. https://www.theguardian.com/theguardian/series/greatspeeches. 
  407. Philip Ziegler, Mountbatten(1985) p. 401.
  408. 408.0 408.1 Symonds, Richard (1950). The Making of Pakistan. London: Faber and Faber. p. 74. கணினி நூலகம் 1462689. At the lowest estimate, half a million people perished and twelve millions became homeless.
  409. Abid, Abdul Majeed (29 December 2014). "The forgotten massacre". The Nation. On the same dates [4 and 5 March 1947], Muslim League-led mobs fell with determination and full preparations on the helpless Hindus and Sikhs scattered in the villages of Multan, Rawalpindi, Campbellpur, Jhelum and Sargodha. The murderous mobs were well supplied with arms, such as daggers, swords, spears and fire-arms. (A former civil servant mentioned in his autobiography that weapon supplies had been sent from NWFP and money was supplied by Delhi-based politicians.)
  410. Srinath Raghavan (2013). 1971. Harvard University Press. ISBN 978-0-674-73129-5.

நூல் ஆதாரங்கள்

பதிப்பிக்கப்பட்ட ஆதாரங்கள்

மேலும் படிக்க

பொது

வரலாற்றியல்

முதன்மை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya