புதுக்கோட்டை தொடருந்து நிலையம்
புதுக்கோட்டை தொடருந்து நிலையம் (Pudukkottai railway station, நிலையக் குறியீடு:PDKT) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், புதுக்கோட்டை நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின், மதுரை கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த நிலையம் திருச்சிராப்பள்ளி - காரைக்குடி வழித்தடத்தில் உள்ள ஒரு முக்கிய தொடருந்து நிலையமாகும்.[1] இந்த நிலையம் தமிழகத்தின், தென்மாவட்டங்களுக்கு மாற்று இரயில் பாதையாகவும் செயல்படுகிறது.[2] வரலாறு1886 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், புதுக்கோட்டையை தொடருந்து மூலம் திருச்சி மற்றும் பிற இடங்களுடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகள் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தபோது, புதுக்கோட்டை சமஸ்தானம் ஒரு மன்னரால் ஆளப்பட்டதால், இவர்களுக்கிடையில் முன்மொழியப்பட்ட ரயில் பாதையின் செலவுத் தொகை பங்கீடு குறித்து நீடித்த பேச்சுவார்த்தைகள் நடந்தன. பின்னர், ஒரு வழியாக 35 ஆண்டுகளுக்கு பிறகு 1921ஆம் ஆண்டில், திருச்சிராப்பள்ளி- புதுக்கோட்டை- காரைக்குடி பாதையின் போக்குவரத்துக்கான செலவு கணக்கெடுப்பானது, தென்னிந்திய இரயில்வேயின் (எஸ்.ஐ.ஆர்) ராவ் சாஹிப் எஸ்.கிருஷ்ணமாச்சாரியால் எடுக்கப்பட்டது. இதில் இரயில் பாதை அமைப்பதற்கான செலவு மைலுக்கு, ரூ. 1.32 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஒரு குறுகிய கால கட்டுமானத்திற்குப் பிறகு, திருச்சிராப்பள்ளி - புதுக்கோட்டை வழித்தடமானது ஏப்ரல் 17, 1929 இல் திறக்கப்பட்டது மற்றும் சூலை 1, 1930 அன்று புதுக்கோட்டை - மானாமதுரை வழித்தடமானது திறக்கப்பட்டது. அமைவிடம்இந்த தொடருந்து நிலையம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2.1 கிலோமீட்டர் (1.3 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது நகரத்திலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளதால் இதை எளிதில் அணுக முடியாது. இதை ஒரு வாடகையுந்து அல்லது ஆட்டோ ரிக்சா மூலம் அணுகலாம். பாதை மாற்றத்திற்கு முன், நிலையத்தில் 3 தடங்கள் மட்டுமே இருந்தன. இப்போது சரக்கு தொடருந்துகளை கையாள, கூடுதல் நான்காவது பாதை அமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தொடருந்து நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு கணிசமான அளவு இடமும் உள்ளது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6][7] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, புதுக்கோட்டை தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 10.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [8][9][10][11][12][13] சேவைகள்திருச்சிராப்பள்ளியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை செல்லும் அனைத்து தொடருந்துகளும், சென்னை எழும்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் சில தொடருந்துகளும் மற்றும் செங்கோட்டைக்கு செல்லும் ஒரு தொடருந்தும் நிலையம் வழியாக செல்கின்றன. இந்த நிலையத்தில் அனைத்து தொடருந்துகளும், குறைந்தபட்சம் 1-2 நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia