விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையம் (Viluppuram railway station, நிலையக் குறியீடு:VM) இந்தியாவின், தமிழ்நாட்டின், விழுப்புரம் நகரில் அமைந்துள்ள முக்கிய தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின் முக்கியமான தொடருந்து நிலையமாகும், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையையும், தென்தமிழகத்தினையும் இணைக்கும் மிகமுக்கியமான இணைப்பு நிலையமாகத் திகழ்கிறது. இது தென்னக இரயில்வேயின் ஐந்து முக்கியமான தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகவும், ('A Grade') நிலையமாகவும் திகழ்கிறது.
அமைவிடமும், அமைப்பும்
விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையம் 20 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு ஆறு நடைமேடைகள் உள்ளன. 1 முதல் 3 தளங்கள் 600 மீட்டர் (2,000 அடி) நீளத்தையும், 4 முதல் 6 தளங்கள் தலா 550 மீட்டர் நீளத்தையும் கொண்டுள்ளன. இந்த ஆறு நடைமேடைகளையும் இரண்டு பாலங்கள் இணைக்கின்றன. இது கிழக்கு பாண்டி சாலை, கீழ்பெரும்பாக்கத்தில் அமைந்திருக்கிறது.
விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் 1 கி.மீ. தொலைவிலும், புதிய பேருந்து நிலையம் 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. மேலும் 40 கிலோமீட்டர் தொலைவில் புதுச்சேரி வானூர்தி நிலையம் உள்ளது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[1][2][3]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 23.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[4][5]
இணைப்புகள்
விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து, 5 தொடருந்து இணைப்புகள் பிரிந்து செல்கின்றன.
மின்சாரமயமாக்கப்பட்ட இரட்டை அகல இரயில்பாதை இணைப்பு, சென்னை எழும்பூரை நோக்கிச் செல்கிறது.[6][7]