கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்![]() கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Kempegowda International Airport) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூரில் அமைந்துள்ளது. இதன் முந்தைய பெயர் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இதன் பெயரைக் கெம்பேகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று மாற்ற இந்திய அரசிடம் கர்நாடக அரசு வலியுறுத்தியதையடுத்து, பெயர் மாற்றப்பட்டது. இந்தியாவில் அதிக பயணிகளைக் கையாளும் முதன்மை வானூர்தி நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் பெங்களுர் நகருக்கு வடக்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் தேவனகல்லி என்ற கிராமத்திற்கு அருகில் இப்பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. பொது-தனியார் கூட்டமைப்பிற்குச் சொந்தமான பெங்களூரு பன்னாட்டு விமானநிலைய நிறுவனம் இதை இயக்குகிறது. பெங்களுர் நகரத்திற்கு சேவை செய்த அசல் முதன்மை வணிக விமான நிலையமான எச்.ஏ.எல். விமான நிலையத்தில் அதிகரித்த நெரிசலுக்கு மாற்றாக இந்த விமான நிலையம் மே 2008-இல் திறக்கப்பட்டது. பெங்களூரின் நிறுவனர் முதலாம் கெம்பே கவுடாவின் பெயர் விமானநிலையத்திற்கு வைக்கப்பட்டது. கெம்பேகவுடா பன்னாட்டு விமான நிலையம் கர்நாடகாவின் முதல் சூரிய சக்தியால் இயங்கும் விமான நிலையமாக மாறியது [1][2]. தில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை அடுத்து பயணிகள் போக்குவரத்தில் பரபரப்பாக உள்ள மூன்றாவது விமான நிலையம் கெம்பேகவுடா விமான நிலையமாகும். ஆசிய அளவில் 29-ஆவது பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்பும் கெம்பகவுடா விமான நிலையத்திற்கு உண்டு. 2017-18 நிதியாண்டில் சர்வதேச போக்குவரத்தைப் பொறுத்தவரை இது தில்லி மற்றும் மும்பை, சென்னை மற்றும் கொச்சினுக்குப் பின்னால் பெங்களுரு விமான நிலையம் நாட்டின் 5-ஆவது பரபரப்பான விமான நிலையமாகும்[3]. 2017 நாட்காட்டி ஆண்டில் 25.04 மில்லியன் பயணிகளை ஒரு நாளைக்கு 600 க்கும் மேற்பட்ட விமான இயக்கங்களுடன் இந்நிலையம் கையாண்டது. ஏப்ரல் 2018 மற்றும் மார்ச் 2019 ஆகிய மாதங்களுக்கு இடையில் சுமார் 3,86,849 டன் சரக்குகளை இவ்விமான நிலையம் கையாண்டுள்ளது. இந்த சரக்கு அளவு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது[4] இவ்விமான நிலையத்தில் ஒற்றை ஓடுபாதையும் பயணிகள் முனையமும் மட்டுமே உள்ளது. இங்குதான் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் கையாளப்படுகின்றன. இரண்டாவது ஓடுபாதை, லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது.[5] . கட்டப்படும் பணிகள் தொடக்க நிலையில் இருந்தாலும் 2019 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இரண்டாவது ஓடு பாதை பயன்பாட்டிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ்வோடு பாதைகள் தவிற ஒரு சரக்கு கிராமம் மற்றும் மூன்று சரக்கு முனையங்கள் இங்கு உள்ளன. விமான நிலையத்தில் ஏர் ஆசியா இந்தியா, அலையன்சு ஏர் இந்தியா, இண்டிகோ, ஏர் இந்தியா, சிபைசு செட் போன்ற நிறுவனங்களின் விமானங்கள் பறந்து செல்கின்றன. வரலாறுநகரத்தின் மையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த எச்.ஏ.எல் விமான நிலையம் பெங்களூருக்கு சேவை செய்யும் அசல் விமான நிலையம் ஆகும். இருப்பினும், பெங்களூரு இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்காக வளர்ந்து வந்ததால் நகரத்திற்கு வந்துபோகும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்ததால் அந்த விமான நிலையத்தால் சமாளிக்க முடியவில்லை[6] . விமானநிலையத்தை விரிவாக்கவும் அங்கு இடமில்லை மற்றும் விமான நிலையத்தில் ஆறு விமானங்களை மட்டுமே நிறுத்த முடியும்[7]. மார்ச் 1991 இல் இந்திய தேசிய விமான நிலைய ஆணையத்தின் முன்னாள் தலைவர் எசு. ராமநாதன் ஒரு புதிய விமான நிலையத்திற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க ஒரு குழுவைக் கூட்டினார். பெங்களூருக்கு வடக்கே 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் உள்ள தேவானகல்லி என்ற கிராமத்தை அக்குழு முடிவு செய்தது[8][9]. விமான நிலையத்தை தனியார் உதவியுடன் கட்டி முடிக்க மாநில அரசு முன்மொழிந்தது, இதற்கு 1994 இல் மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது[10] டிசம்பர் 1995 இல், டாடா குழுமம், ரேதியோன் மற்றும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு இந்த திட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. எவ்வாறாயினும் சூன் 1998 இல் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஒப்புதல் தாமதத்தால் திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது. விமான நிலையத்தின் இருப்பிடம் மற்றும் எச்ஏஎல் விமான நிலையத்தின் தலைவிதி தொடர்பான சர்ச்சைகளும் இதில் அடங்கும்[8][11]. மே 1999 இல், இந்திய விமான நிலைய ஆணையமும் மாநில அரசின் கர்நாடக மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகமும் இத்திட்டத்தின் தன்மை குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது ஒரு பொது-தனியார் கூட்டாண்மையாக மலர்ந்தது. இவ்விரு நிறுவனங்களும் 26% பங்கையும், தனியார் நிறுவனங்கள் மீதமுள்ள 74% பங்கையும் வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது[10]. சனவரி 2001 இல் கர்நாடக மாநில அரசு பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் என்ற ஒரு நிறுவனத்தை சிறப்பு நோக்க நிறுவனமாக உருவாக்கி கூட்டாளர்களைத் தேடத் தொடங்கியது[12] . நவம்பர் மாதத்தில் இந்த திட்டம் தனித்துவமான சூரிச் விமான நிலையம், சீமென்சு திட்ட வென்ச்சர்சு மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனங்களை ஈர்த்தது[13] அக்டோபர் 2002 இல் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அரசாங்க தாமதங்கள் நீடித்தன[14][15] மாநில அரசு, மத்திய அரசு மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே சலுகை ஒப்பந்தம் சூலை 2004 இல் கையெழுத்தானது. அதில் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் எச்,ஏ,எல் விமான நிலையத்தை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia