கயை வானூர்தி நிலையம்
கயை வானூர்தி நிலையம் (Gaya Airport) அல்லது புத்தகயை வானூர்தி நிலையம், (Bodhgaya Airport, (ஐஏடிஏ: GAY, ஐசிஏஓ: VEGY) இந்தியாவில் பீகார் மாநிலத்தில் கயை நகரில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். இது கயை நகரிலிருந்து தென்மேற்கே 12 கி.மீ. தொலைவிலும் கோவில் நகரான புத்தகயாவிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது. புத்தகயாவில் தான் புத்தருக்கு ஞானோதயம் உண்டானது. இந்த வானூர்தி நிலையம் பீகாரில் உள்ள இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையமாகும்; முதலாவது மாநிலத் தலைநகர் பட்னாவிலுள்ள செயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். தாய்லாந்து, மியான்மர், பூட்டான், இலங்கை போன்ற பௌத்தர்கள் மிகுந்துள்ள நாடுகளுக்கு இந்த வானூர்தி நிலையத்திலிருந்து நிரந்தரமாக சமயச் சுற்றுலாப் பறப்புகள் இயக்கப்படுகின்றன. பௌத்தர்களுக்கு இதுவே உலகின் மிகவும் புனிதமானத் தலமாகும். ஏர் இந்தியா மட்டுமே இந்த வானூர்தி நிலையத்திலிருந்து இயங்குகின்றது. மேற்சுருக்கம்கயை வானூர்தி நிலையத்தின் பரப்பளவு 954 ஏக்கர்களாகும். கூடுதலாக 100 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது; தவிரவும் ஓடுபாதையை விரிவுபடுத்த மேலும் 100 ஏக்கர்கள் அண்மையிலுள்ள நான்கு சிற்றூர்களிலிருந்து நில கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 7,500 சது மீட்டர்களில் கட்டப்பட்டுள்ள வானூர்திநிலையக் கட்டிடம் ஒரே நேரத்தில் 250 பயணிகளை வரவேற்கவும் 250 பயணிகளுக்கு விடை தரவும் திறனுள்ளது. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் இந்த வானூர்தி நிலையத்தை கொல்கத்தா வானூர்தி நிலையத்திற்கு நெருக்கடிக் கால மாற்றாக பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.[2] ஆகத்து 28, 2013இல் மாநிலங்களையில் குடிசார் வான்பயண அமைச்சகத்தின் துணை அமைச்சர் வேணுகோபால் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் வானூர்திநிலைய விரிவாக்கத்திற்காக பீகார் மாநில அரசிடம் மேலும் 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்த கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த வானூர்தி நிலையம் பெரும்பாலும் சுற்றுலாப் பருவம் சார்ந்தது. முதன்மையாக பௌத்த சமய சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை மற்றும் தென் கிழக்கு நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், கம்போடியாவிற்கு வானூர்தி சேவை வழங்குகின்றது.[3] வான்சேவை நிறுவனங்களும் சேரிடங்களும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia