சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்
சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் (Chhatrapati Shivaji International Airport, CSIA, (ஐஏடிஏ: BOM, ஐசிஏஓ: VABB)) முன்பாக சாகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Sahar International Airport) மும்பையில் உள்ள முதன்மை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது 17வது நூற்றாண்டின் மராத்தா பேரரசர், சத்திரபதி சிவாஜி போசுலேயின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஐஏடிஏ குறியீடான – "BOM", என்பது மும்பையின் முந்தையப் பெயரான பம்பாய் என்பதிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள வானூர்தி நிலையங்களில் மொத்தப் பயணிகள் போக்குவரத்தில் இரண்டாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது.[1] இந்த வானூர்தி நிலையத்தில் ஐந்து முனையங்கள் செயற்பாட்டில் உள்ளன. 1,500 ஏக்கர்கள் (610 ha) பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ள சத்திரபதி சிவாஜி நிலையம் 2011-12 நிதியாண்டில் 30.74 மில்லியன் பயணிகளையும் 656,369 டன்கள் சரக்குகளையும் கையாண்டுள்ளது.[4] இதுவும் தில்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையமும் தெற்கு ஆசியாவின் 50%க்கும் கூடுதலான வான் போக்குவரத்தை கையாள்கின்றன.[5][6] 2010இல் இந்த வானூர்தி நிலையம் 671,238 டன்களை கையாண்டு சரக்கு போக்குவரத்தில் உலகின் 30வது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. 2011ஆம் ஆண்டு வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு வெளியிட்ட 25–40 மில்லியன் பயணிகள் புழங்கும் வானூர்தி நிலையங்களின் தரவரிசையில் மூன்றாவது சிறந்த வானூர்தி நிலையமாக இருந்தது.[7] மேலும் 2011இல் 30,439,122 பயணிகள் பயன்படுத்திய இந்த நிலையம் உலகளவில் 44வது போக்குவரத்து மிகுந்த நிலையமாக இருந்தது.[8] நகரத்தின் மாநகராட்சிப் பகுதிக்குள் இருக்கும் உலகின் சில வானூர்தி நிலையங்களில் ஒன்றான சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் அந்தேரியின் சிறுநகரப்பகுதிகளான சான்டா குரூஸ் மற்றும் சாகர் பகுதிகளில் அமைந்துள்ளது.[9] தனியார் நிறுவனமான ஜிவிகே இன்டஸ்ட்ரீசு, இந்திய வானூர்தி நிலைய ஆணையம் மற்றும் பிட்வெஸ்ட் இவற்றின் கூட்டுத் தாபனமான மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையம் லிமிடெட்,[10] 2006இல் இந்த வானூர்தி நிலையத்தை நவீனப்படுத்த நியமிக்கப்பட்டது. இந்தத் திட்டப்பணி 2013ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவேற்றப்பட இருப்பினும் ஒரு ஆண்டு தாமதமாக 2014இல் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.[11] இத்திட்டம் முடிவடைந்த பிறகு சத்திரபதி சிவாஜி வானூர்தி நிலையம் ஆண்டுக்கு 40 மில்லியன் பயணிகளையும் 1 மில்லயன் மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாளக்கூடியத் திறன் உடையதாக இருக்கும். இந்த வானூர்தி நிலையத்தை மேற்கத்திய விரைவு நெடுஞ்சாலையுடன் இணைக்க ஆறு தடம் கொண்ட சாலை ஒன்று கட்டமைக்கப்பட்டு வருகிறது.[12] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
}} |
Portal di Ensiklopedia Dunia