கைவிடப்பட்ட செல்லப்பிராணிகள்![]() கைவிடப்பட்ட செல்லப்பிராணிகள் (ஆங்கிலம்: Abandoned pets) என்பவை கவனக்குறைவாகவோ அல்லது வேண்டுமென்றேயோ அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட வளர்ப்பு விலங்குகள் ஆகும். இவ்விலங்குகள் தெருக்களில் விடப்படுதல், எவரும் கண்டுகொள்ளாத பராமரிப்பற்ற இடங்களில் விடப்படுதல், விலங்குக் காப்பகங்களில் விடப்படுதல் என பல்வேறு வழிகளில் அவற்றின் வளர்ப்பு மனிதர்களால் கைவிடப்படுகின்றன. அமெரிக்காவின் பல மாகாணங்களில் விலங்குகள் நலச் சட்டங்கள் செல்லப்பிராணியைக் கைவிடுவதைக் குற்றமாக்குகின்றன.[1] 1960-ம் ஆண்டு விலங்குகளை கைவிடுதல் சட்டம் என்ற சட்டத்தை இங்கிலாந்து நிறைவேற்றியது. இது கைவிடப்படும் குற்றத்தை "ஒரு விலங்கின் உரிமையாளராகவோ அல்லது அவ்விலங்கிற்குப் பொறுப்பேற்றோ அல்லது அதனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராகவோ விளங்கும் எந்தவொரு நபரும் அவ்விலங்கிற்குத் தேவையற்ற துன்பம் தரக்கூடிய எந்த ஒரு சூழ்நிலையிலும் நியாயமான காரணமேதும் இல்லாமல் நிரந்தரமாகவோ அல்லது அவ்வாறின்றியோ அவ்விலங்கினைக் கைவிடுவதோ அல்லது அத்தகைய செயலுக்குக் காரணமாக இருந்தலோ அல்லது ஒரு உரிமையாளராக இருந்து அச்செயலை அனுமதித்தாலோ அது கைவிடுதல் குற்றத்திற்குப் பாற்படும்" என்று விவரிக்கிறது.[2] ![]() பெரும்பாலும், கைவிடப்பட்டபின் செல்லப்பிராணிகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றன. இதன் காரணமாக அது தனித்தும் காட்டுத்தனமாகவும் மாற வாய்ப்புள்ளது. இவ்வாறு மாறிய காட்டுத்தனப் பூனைகள் (feral cats) காட்டுத்தன நாய்களை (feral dogs) விட எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இத்தகைய விலங்குகளைக் கையாள்வதும் வீட்டு வாழ்க்கைக்குப் பழகுவதும் பெரும் சவாலாக இருக்கும் என்பதால் மீண்டும் ஒரு புதிய மனித உரிமையாளர் அவற்றை எடுத்து வளர்ப்பது என்பது கடினமாகிவிடும். பொதுவாக, புதிதாக கைவிடப்பட்ட சில பூனைகள், மிக இளம் காட்டுத்தனப் பூனைக்குட்டிகள் போன்றவை மட்டுமே மீண்டும் பழக்குவதற்கு ஒத்துவரும்.[3] வளர்ப்பு விலங்குகளைக் கைவிடுதலைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் பெருகிவருகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.[4] கைவிடப்பட்ட விலங்குகள் வெறிநாய்க்கடி நோய் போன்ற விலங்குசார் நோய்களின் தொற்றுக்குக் ஏதுவாக அமைந்து விடுகின்றன. பூனைக்கடி, தெரு அல்லது காட்டுத்தன விலங்குகளினால் ஏற்படும் கீறல்கள் உள்ளிட்டவை பொதுவாக நாய்க்கடியை விட எட்டு மடங்கு அதிகமான அளவில் நிகழ்கின்றன.[5] விலங்குக் காப்பகங்களில் சேர்க்கப்பட்டு கைவிடப்படும் சில செல்லப்பிராணிகள் இடப்பற்றாக்குறை அல்லது நிதி ஆதாரம் இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் கருணைக்கொலை செய்யப்படுகின்றன.[6] அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான செல்லப்பிராணிகள் விலங்குக் காப்பகங்களில் தள்ளப்படுகின்றன.[7] இருப்பினும், அமெரிக்க விலங்குக் காப்பகங்களில் கருணைக்கொலை செய்யப்பட்ட நாய்கள் மற்றும் பூனைகளின் எண்ணிக்கை 2011-ல் தோராயமாக 2.6 மில்லியனில் இருந்து 2018-ல் 1.5 மில்லியனாக குறைந்துள்ளது. இந்த கருணைக்கொலையின் எண்ணிக்கைச் சரிவிற்குக் காரணம் அதிக சதவிகித அதிகரிப்பில் விலங்குகள் தத்தெடுக்கப்பட்டதும் கைவிடப்பட்ட விலங்குகளில் கூடுதலான எண்ணிக்கைகள் அவற்றின் உரிமையாளர்களிடம் வெற்றிகரமாக மீண்டும் ஒப்படைக்கப்பட்டதுமே ஆகும்.[8] தங்களது ஒரு செல்லப்பிராணியைத் துறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களது நாயுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருப்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[9] ஒரு அவசரகால வெளியேற்றத்தில் மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளைக் கைவிட வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தப்படும்போது துக்கம், மனச்சோர்வு, பின்னதிர்ச்சி மனவழுத்த நோய் (post-traumatic stress disorder) போன்ற மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும் உள்ள உறவின் முக்கியத்துவத்தையும் பொதுச் சுகாதாரத்தில் அவற்றின் பங்கையும் மேலும் ஆராய்ந்து அறிந்துகொள்ளவேண்டியது என்பது கடந்த காலங்களில் பரவலாகக் காணப்பட்ட இந்தப் பொது சுகாதாரப் பிரச்சனையை மேம்படுத்துவதற்கான இன்றியமையாத முதற் படியாகும்.[10] 2007-2008 ஆண்டுகளின் ஐக்கிய அமெரிக்காவில் இருந்த நிதி நெருக்கடியின் போது செல்லப்பிராணிகளைக் கைவிடுவது அதிகரித்தது.[11] 2009-ம் ஆண்டின் முற்பகுதியில், ஏ.எஸ்.பி.சி.ஏ. தங்கள் செல்லப்பிராணிகளின் இழப்பை எதிர்நோக்கும் நபர்களுக்கான ஆலோசனை ஒன்றை வெளியிட்டது. அதில் செல்லப்பிராணிக்கான வளர்ப்பு மற்றும் தத்தெடுப்புச் சூழ்நிலையைக் கண்டறியவும் செல்லப்பிராணிகளுக்கான வாடகைச் சொத்து விதிகளைப் பற்றி அறிந்திருக்கவும், விலங்குக் காப்பகங்கள் மற்றும் விலங்கு மீட்புக் குழுக்களுடன் தொடர்புகொள்ளுதல் பற்றியும் பரிந்துரை செய்தது.[12] மேலும் காண்கஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia