திறன்மிகு ஒப்புரவாண்மை அல்லது திறன்மிகு பரோபகாரம் (Effective altruism [EA]) என்பது நன்மைகளை பாரபட்சமின்றி கணக்கிட்டு அவற்றுள் சிறந்த நன்மையை வழங்குவதற்கான காரணங்களை முன்னுரிமைப்படுத்துவதை ஆதரிக்கும் 21-ம் நூற்றாண்டின் மெய்யியல் மற்றும் சமூக இயக்கமாகும். இது "மற்றவர்களுக்கு முடிந்தவரை எவ்வாறு பயனளிப்பது என்பதைக் கண்டறிய ஆதாரங்களையும் பகுத்தறிவையும் பயன்படுத்தி, அந்த அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதை" அடிப்படையாகக் கொண்டது.[1][2] திறன்மிகு பரோபகாரத்தின் இலக்குகளைப் பின்பற்றும் நோக்குடன் தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பது, நேர்மறையான தாக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் தமது படிப்பையும் தொழில்களையும் தேர்ந்தெடுப்பது போன்ற இவ்வியக்கத்தால் முன்மொழியப்பட்ட பல்வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றுபவர்கள் "திறன்மிகு பரோபகாரிகள்" (effective altruists) என்று அழைக்கப்படுகிறார்கள்.[3] இவ்வியக்கம் கல்வித்துறைக்கு வெளியேயும் பிரபலமடைந்ததன் விளைவாக பல ஆராய்ச்சி மையங்களும், ஆலோசனை நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் உருவாகி, கூட்டாக பல நூறு மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளன.[4]:xxii
பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும்போது பாரபட்சமற்ற தன்மையையும் உலகளாவிய சிந்தனையான நலத்தேவைகளின் சமபாவனைச் சிந்தனையையும் கருத்தில் கொள்வதை திறன்மிகு பரோபகாரிகள் வலியுறுத்துகின்றனர். திறன்மிகு ஒப்புரவாண்மையில் பிரபலமான முன்னுரிமைகளில் உலகளாவிய சுகாதாரம் மற்றும் மேம்பாடு, சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மை, விலங்குரிமை மற்றும் விலங்கு நலன், மற்றும் தொலைவெதிர்காலத்தில் மனிதகுலத் தழைப்பை அச்சுறுத்தும் அபாயங்கள் ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும். மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் விலங்குரிமைச் செயற்பாட்டில் திறன்மிகு ஒப்புரவாண்மையின் செல்வாக்கு மிக வேகமாக வலுப்பெற்றுக்கொண்டு வருகிறது.[5]
திறன்மிகு பரோபகாரம் ஒரு இயக்கமாக 2000களில் உருபெற்றதென்றாலும், 2011-ல் துவங்கியே திறன்மிகு பரோபகாரம் என்று பெயர் கொண்டு அழைக்கப்பெற்றது. இந்த இயக்கத்திற்கு சிந்தனைத் தாக்கம் செலுத்திய மெய்யியலாளர்களில் பீட்டர் சிங்கர், டோபி ஆர்ட், மற்றும் வில்லியம் மெக்ஆஸ்கில் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். பரவலான சிந்தனைகளால் பரிந்துரைக்கப்பட்ட மதிப்பீட்டு நுட்பங்களின் தொகுப்பாகத் துவங்கப்பட்ட இது பின்னர் ஒரு இயக்கமாகித் தனி அடையாளமாக உருவெடுத்தது.[6] திறன்மிகு ஒப்புரவாண்மை ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள உயரடுக்கு பல்கலைக்கழகங்களுடன் வலுவான தொடர்பினைக் கொண்டுள்ளது. மேலும் இன்று அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு திறன்மிகு பரோபகாரத்தின் "தொலைநோக்குத்" துணை இயக்கத்திற்கான முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. அங்கு இது ஒரு இறுக்கமான துணைக் கலாச்சாரமாக மாறியுள்ளது.[7]
2022-ம் ஆண்டின் பிற்பகுதிக்கு முன்னர் வரை கிரிப்டோகரன்சி பரிவர்தனை நிறுவனமான FTX-ன் நிறுவனர் சாம் பேங்க்மேன்-ஃபிரைட் திறன்மிகு பரோபகார இயக்கத்திற்கு முக்கிய நிதியளிப்பவராக இருந்த நிலையில் அந்நிறுவனம் திவாலான பின்னர் இந்த இயக்கம் வெகுஜன கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாது சிலரது விமர்சனத்துக்கும் உள்ளானது. சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் சிலர் இதைப் பாலியல் துஷ்பிரயோக கலாச்சாரம் என்றும் விமர்சித்தனர்.
↑The quoted definition is endorsed by a number of organizations at: "CEA's Guiding Principles". Centre For Effective Altruism. Retrieved 2021-12-03.
↑The term effective altruists is used to refer to people who embrace effective altruism in many published sources such as (Oliver 2014), (Singer 2015), and (MacAskill 2017), though as (Pummer & MacAskill 2020) noted, calling people "effective altruists" minimally means that they are engaged in the project of "using evidence and reason to try to find out how to do the most good, and on this basis trying to do the most good", not that they are perfectly effective nor even that they necessarily participate in the effective altruism community.
Ioannidis, Iraklis (Dec 31, 2020). "Shackling the poor, or effective altruism: a critique of the philosophical foundation of effective altruism". Conatus5 (2): 25–46. doi:10.12681/cjp.22296.