செங்கன்னூர் மகாதேவர் கோயில், செங்கண்ணூர் சிவன் கோயில் அல்லது செங்கன்னூர் பகவதி கோயில் என்பது, கேரளாவின்ஆலப்புழாவின்செங்கன்னூர் நகரில் அமைந்துள்ள சிவாலயம் ஆகும். இங்குள்ள பகவதியும்) புகழ்பெற்றவள் என்பதால், இது பகவதி கோயிலாகவும் கருதப்படுகின்றது. மானுடப் பெண்டிருக்கு ஏற்படும் மாதவிடாய் இங்குள்ள பகவதிக்கும் ஏற்படுகின்றது என்பது அதிசயம் ஆகும். ஆண்டின் வருடாந்திர விழா, டிசம்பர் - ஜனவரி மாதங்களில் இருபத்தெட்டு நாட்கள் இடம்பெறுகின்றது.[1]
இத்தலம் விறன்மிண்ட நாயனார் அவதரித்த திருத்தலமாகும்.
தொன்மம்
இங்கு வீற்றிருக்கும் பகவதியே கண்ணகியாக அவதரித்தாள்.[5] கண்ணகி விண்ணுலகுக்கு ஏகிய திருச்செங்குன்றம் இதுவே என்று சொல்லப்படுகின்றது. மானுடப்பெண்ணாக அவதரித்தவள் என்பதாலேயே இத்தேவிக்கும் மாதவிலக்கு ஏற்படுகின்றது[6] ஐம்பொன்னாலான தேவியின் விக்கிரகம், "பெருமாச்சுதன்" என்பவரால் இக்கோயிலுக்குக் கொணரப்பட்டது.[7] பொதுவாக கோவில்களுக்கு தலபுராணம் என்பது ஒன்றுதான் இருக்கும். ஆனால், கேரளாவின், ஆலப்புழா செங்கன்னூரில் அமைந்திருக்கும் பகவதியம்மன் கோவில் குறித்து மூன்று விதமான தல வரலாறுகள் சொல்லப்படுகின்றன.
கட்டுமானம்
ஆலயக் கருவறை
சிவாலயமான செங்கன்னூர் திருத்தலத்தில் ஈசன் கிழக்கு நோக்கி அருள்புரிய, அவர் சன்னதிக்குப் பின்னால் மேற்கு நோக்கியவளாக பகவதி வீற்றிருக்கின்றாள். திருச்சுற்றில், சாஸ்தா, பிள்ளையார், நீலக்கிரீவன் முதலானோர் வீற்றிருக்கின்றனர். கோயிற்சுவரை அண்டி சுற்றம்பலம் அரங்கும், கோயிற்பகுதியைச் சூழ நாலம்பலமும் அமைந்திருக்கின்றன. ஆலயக்கூரையிலும் சில தூண்களிலும், பாரத - இராமயணச் சிற்பங்கள் விளங்குகின்றன. [8] பரிவார தேவதை சன்னிதிகளாக கணபதி, ஐயப்பன், கிருஷ்ணர், நீலக்கிரீவன், சண்டிகேஸ்வரன், நாகர் மற்றும் கங்கா ஆகியவை உள்ளன.
விழாக்கள்
ஈசனுக்கு மூன்று, தேவிக்கு இரண்டு என்று அன்றாடம் ஐந்து சரப்பலிகள் (பூசைகள்) இடம்பெறுகின்றன. "திருப்பூத்து ஆராட்டு" என்பது, இக்கோவிலுக்கு மட்டுமே சிறப்பான, தேவியின் மாதவிலக்கு வைபவம் ஆகும். அம்மூன்று நாட்களும் தேவியின் திருமுன் மூடப்படும். திருப்பூத்து சிந்திய தேவியின் வெண்ணிறாடை, புனிதமாகப் போற்றப்படுகின்றது..[9] மாதமொரு முறை நிகழ்ந்துவந்த திருப்பூத்து, அண்மைக்காலமாக, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்வதாகச் சொல்லப்படுகின்றது.[10] திருப்பூத்து நிகழ்ந்த நான்காம் நாள், தேவி திருக்குளத்தில் நீராட்டப்படுவதும், பின் மகளிர் தாலப்பொலி ஏந்தி வணங்குவதும் நிகழும்.[11] தனு மாதத்து திருவாதிரையில் நிகழும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் வருடாந்திர உற்சவம், 28 நாட்கள் தொடர்ந்து, மகர மாதத்து திருவாதிரையில் நிகழும் "ஆறாட்டுடன்" (தீர்த்த உற்சவம்) முடிவுறுகின்றது.[12]