வாலீஸ்வரர் சுவாமி மற்றும் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில்தமிழ்நாட்டில்திருப்பூர் மாவட்டம், சேவூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இக்கோயில் இயங்குகிறது.[2] "சேவூர் வாலீசுவரர் கோயில்" என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [3] இத்தலம் சுந்தரரால் பாடப்பெற்ற வைப்புத்தலமாகும்.[4]
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 370 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°14'56.2"N, 77°14'20.6"E (அதாவது, 11.248955°N, 77.239050°E) ஆகும்.
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக வாலீவரர் உள்ளார். வாலி வழிபட்டதால் மூலவர் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இறைவி அறம்வளர்த்த நாயகி ஆவார். கோயிலில் தல தீர்த்தமாக தெப்பம் உள்ளது. சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிசேகம், கார்த்திகை உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன.[4]
வரலாறு
சோழர் காலம் காலத்து கோயிலான இது பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் வாலீஸ்வரர் சுவாமி, வெங்கட்ரமணசுவாமி, அறம்வளர்த்த நாயகி அம்மன் சன்னதிகளும், சுப்பிரமணிய சுவாமி, நடராஜர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், காலபைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[5]
இத்தலத்து விநாயகர் அனுக்கை விநாயகர் ஆவார். மூலவருக்கு இடது புறம் இறைவி தனி சன்னதியில் உள்ளார். இறைவியின் சன்னதிக்குப் பின்புறம் பால தண்டாயுதபாணி கையில் தண்டத்துடன் உள்ளார். திருச்சுற்றில் பஞ்ச லிங்கம், சகஸ்ர லிங்கம், சூரியன், சந்திரன், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் உள்ளனர். மேற்கு நோக்கிய நிலையில் சனீசுவரர் தனி சன்னதியில் உள்ளார். நவக்கிரக மண்டபமும் இக்கோயிலில் உள்ளது. கோயிலுக்கு எதிரில் தீப ஸ்தம்பம் காணப்படுகிறது. இதில் வாலி சிவனுக்கு பூசை செய்வது போன்ற சிற்பம் காணப்படுகிறது. அரச மரத்தடியில் விநாயகர் உள்ளார். அருகில் லிங்க பாணம் உள்ளது.[4]
பூசைகள்
இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.