சைலோத்பவ வம்சம்
சைலோத்பவ வம்சம் (Shailodbhava dynasty) என்பது 6 முதல் 8-ஆம் நூற்றாண்டு வரை கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளை ஆண்ட ஒரு இந்திய வம்சமாகும். இவர்களின் முக்கிய பிரதேசம் கொங்கோட-மண்டலம் என்று அறியப்பட்டது. மேலும் ஒடிசா மாநிலத்தில் உள்ள இன்றைய கஞ்சாம், கோர்த்தா , பூரி மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கியது. இவர்களின் தலைநகரம் கொங்கோடாவில் அமைந்திருந்தது. இது நவீன பானாபூர் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. வம்சத்தின் ஆரம்பகால ஆட்சியாளர்கள் விக்ரகர்கள், முத்கலன்கள், கௌடர்கள் ஆகியோருக்கு நிலப்பிரபுக்களாக இருந்தனர். சைலோத்பவ ஆட்சியாளர் இரண்டாம் மாதவராஜா பொ.ச.620-க்குப் பிறகு தன்னை சுதந்திர ஆட்சியாளராக அறிவித்துக் கொண்டதாகத் தெரிகிறது. 8-ஆம் நூற்றாண்டில் வம்சம் வீழ்ச்சியடைந்தது. மேலும் அவர்களின் பிரதேசம் பௌமா-கர ஆட்சியாளர்களின் கீழ் வந்தது. தோற்றம்![]() "சைலோத்பவ" என்ற வார்த்தையின் அர்த்தம் "பாறைகளிலிருந்து பிறந்தது" எனப் பொருளாகும். [1] சைலோத்பவ கல்வெட்டுகள் வம்சத்தின் தோற்றம் பற்றிய பின்வரும் கட்டுக்கதையை விவரிக்கின்றன: கலிங்கத்தின் புகழ்பெற்ற மனிதரான புலிந்தசேனன், பூமியை ஆளும் திறன் கொண்ட ஒரு மனிதனை உருவாக்க சுயம்புலிங்கக் கடவுளை வேண்டிக்கொண்டான். இந்த பிரார்த்தனையின் விளைவாக வம்சத்தின் நிறுவனர் சைலோத்பவர் ஒரு பாறையிலிருந்து வெளிப்பட்டார். ஒரு கல்வெட்டில் கடவுள் 'ஹர' ( சிவன் ) என்று அடையாளம் காணப்படுகிறார். [2] புலிந்தசேனனின் பண்டைய புலிந்தப் பழங்குடியினருடன் தொடர்புபடுத்தி, உபிந்தர் சிங் போன்ற வரலாற்றாசிரியர்கள் இந்த புராணம் வம்சத்தின் பழங்குடி தோற்றத்தை பிரதிபலிக்கிறது என்று நம்புகிறார்கள். ஒரு பாறையில் இருந்து உருவானதன் மையக்கருத்து, வம்சம் ஆரம்பத்தில் பாறை நிலப்பரப்பைக் கொண்ட ஒரு பகுதியில் அமைந்ததாகக் கூறலாம். சைலோத்பவ கல்வெட்டுகள் மகேந்திர மலையை வம்சத்தின் 'குல-கிரி' (பயிற்சி மலை) என்று பெயரிடுகின்றன. சிவனைக் குறிப்பிடுவது ஆட்சியாளர்கள் சைவர்கள் என்பதைக் காட்டுகிறது. [3] சைலோத்பவர்கள் பழங்குடி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் பதிட் பாபன் மிஸ்ரா கூறுகிறார்.[4] வரலாறுவம்சத்தைப் பற்றிய பெரும்பாலான தகவல்கள் அதன் பதினாறு செப்புத் தகடுகளிலிருந்து அறிய வருகின்றன. இந்த தகவல் நினைவுச்சின்னங்களாலும், வெளிநாட்டு பயணிகளின் கணக்குகள் போன்ற பிற ஆதாரங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. [5] நிலப்பிரபுத்துவவாதிகளாகசைலோத்பவர்கள் இன்றைய கஞ்சாமை மையமாகக் கொண்ட ஒரு பகுதியை ஆட்சி செய்தனர். இவர்களது ஆட்சியின் போது இப்பகுதி கொங்கோட மண்டலம் என அழைக்கப்பட்டது.[6] முன்னதாக, சுமார் பொ.ச.570-71-இல் (250 குப்தர் சகாப்தம் ), இந்த பகுதி அபய குடும்பத்தின் தர்மராஜா என்பவரால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அவர் விக்ரகர்களின் நிலப்பிரபுத்துவமாக ஆட்சி செய்தார். [7] பின்னர் இது அரை-சுதந்திர மன்னன் சரம்பராஜா என்பவரால் ஆளப்பட்டது. [7] சைலோத்பவ ஆட்சியாளர் இரண்டாம் மாதவராஜாவின் பொ.ச.620-21 தேதியிட்ட கல்வெட்டின் அறிமுக பகுதி, அபய குடும்பத்தின் தர்மராஜாவின் 570-71 சுமண்டல கல்வெட்டைப் போன்றது. [7] வரலாற்றாசிரியர் சினிக்தா திரிபாதி, அபய குடும்பத்தின் தர்மராஜா மற்றும் சரம்பரராஜா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதுகிறார். அது பின்னர் சைலோத்பவ என்று அறியப்பட்டது என்கிறார். கௌட மன்னன் சசாங்கன் இப்பகுதியை கைப்பற்றுவதற்கு முன், இந்த குடும்பத்தின் ஆட்சியாளர்கள் விக்ரகர் மற்றும் முத்கல வம்சங்களின் மேலாதிக்கத்தை ஒப்புக்கொண்டிருந்தனர். [7] சைலோத்பவ கல்வெட்டுகள் புராண சைலோத்பவரின் வழித்தோன்றல்களை அரணபிதா, முதலாம் சைன்யபிதா, யசோபிதா , மாதவவர்மன் அல்லது இரண்டாம் சைன்யபிதா என்று பெயரிடுகின்றன.[8] 620-21 பொ.ச. (300 குப்தர் சகாப்தம் ) இரண்டாம் மாதவராஜாவின் கல்வெட்டு அவர் சசாங்கனின் நிலப்பிரபுவாக இருந்ததைக் காட்டுகிறது. [9] அவரது முன்னோடிகளான முதலாம் மாதவராஜா, அயசோபிதா ஆகியோர் சசாங்கனின் நிலப்பிரபுக்களாகவும் இருந்திருக்கலாம். இருப்பினும் இதை உறுதியாகக் கூற முடியாது. [10] வரலாற்றாசிரியர் எஸ். சி. பெஹெரா அயசோபிதாவை சரம்பராஜா என்று அடையாளம் காண முயன்றார். [10] இறையாண்மையாகசைலோத்பவ பிரதேசம் கொங்கோட-மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இன்றைய ஒடிசாவைக் கைப்பற்றிய பிறகு, கௌடா மன்னன் சசாங்கன் கொங்கோட மாகாணத்தை உருவாக்கி, அப்பகுதியில் தனது நிலப்பிரபுவாக இரண்டாம் மாதவராஜாவை நியமித்ததாக வரலாற்றாசிரியர் சினிக்தா திரிபாதி கருதுகிறார்.[5] இந்த மாகாணம் இன்றைய கஞ்சாம், கோர்த்தா, பூரி மாவட்டங்களை மையமாகக் கொண்டது. அதன் தலைநகரம் கொங்கோடா ஆகும், இது வம்சத்தின் கல்வெட்டுகளின்படி சலிமா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த நகரம் நவீன பானாபூர் என்றும், நவீன சாலியா ஆற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. [11] இரண்டாம் மாதவராஜா பொ.ச. 620-க்குப் பிறகு சுதந்திரம் பெற்றதாகத் தெரிகிறது. ஏனெனில் அவரது கோர்த்தா கல்வெட்டு எந்த மேலாதிக்கத்தையும் குறிப்பிடவில்லை. இது அவரை 'சகல-கலிங்காதிபதி' (முழு கலிங்கத்தின் அதிபதி) என்று விவரிக்கிறது. இருப்பினும் அவர் உண்மையில் முழு கலிங்கத்தையும் கைப்பற்றினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை (சமகால கீழைக் கங்க மன்னர் இந்திரவர்மனும் கலிங்கம் முழுவதையும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறார்).[12] அரசர்களான ஹர்ஷவர்தனர், பாஸ்கரவர்மன் ஆகியோரால் சசாங்கன் தோல்வியடைந்ததைப் பயன்படுத்தி, இரண்டாம் மாதவராஜா சுதந்திரத்தை அறிவித்திருக்கலாம். இந்த வெற்றி தற்காலிகமாக இருந்திருக்க வேண்டும் என்றாலும், கங்கை பிரதேசத்தின் சில பகுதியை அவர் இணைத்திருக்கலாம். [7] மறைமுகமாக தனது சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள அவர் அசுவமேத யாகம் போன்ற பிற யாகங்களைச் செய்ததாக அவரது கல்வெட்டுகள் கூறுகின்றன.[7] பரசுராமேசுவரர் கோவில் சிற்பங்கள்
ஆட்சியின் பிற்பகுதியில் இரண்டாம் மாதவராஜாவால் வெளியிடப்பட்ட கல்வெட்டுகள் சைலோத்பவ வம்சத்தின் தோற்றம் பற்றிய கட்டுக்கதையைக் கொண்டுள்ளன. [7] சமகால நடைமுறைகளுக்கு இணங்க, இந்த புராணத் தோற்றம் வம்சம் சுதந்திரமடைந்த பிறகு ஒரு அரசவைக் கவிஞரால் புனையப்பட்டிருக்கலாம். [7] இந்த கல்வெட்டுகளின் அறிமுக பகுதி வசன வடிவில் உள்ளது (முந்தைய கல்வெட்டுகளில் இடம்பெற்ற உரைநடை வடிவத்திற்கு பதிலாக). இரண்டாம் புலகேசியின் அய்கொளெ கல்வெட்டில் இடம்பெறும் பாணியைப் போன்றே வசன நடை உள்ளது (சசாங்கனின் மரணத்திற்குப் பிறகு ஹர்ஷன் இப்பகுதியை ஆக்கிரமித்திருக்கலாம். பின்னர் புலிகேசி, ஹர்ஷனை தோற்கடித்திருக்கலாம்). [12] பொ.ச.638-ஆம் ஆண்டு இரண்டாம் மாதவராஜாவின் ஆட்சியின் போது, சீன யாத்ரீகர் சுவான்சாங் கொங்கோடத்திற்கு வருகை புரிந்துள்ளார். (இதை அவர் கொங்-யு-டி'ஓ' என்று அழைக்கிறார்).[13] இரண்டாம் மாதவராஜாவுக்குப் பிறகு அவரது மகன் மத்யமராஜா ( இரண்டாம் ஆயசோபிதன்) பதவியேற்றார், அவருடைய கல்வெட்டுகள் அசுவமேத யாகம் போன்ற பிற யாகங்களைச் செய்ததற்காக அவருக்குப் பெருமை சேர்த்துள்ளன. [7] அவர் குறைந்தது 26 ஆண்டுகள் (7 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை) ஆட்சி செய்ததாக கல்வெட்டுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. மேலும் அவரது ஆட்சி அமைதியாகவும் வளமாகவும் இருந்தது. [7] மத்யமராஜாவுக்குப் பிறகு அவரது மகன் தர்மராஜா (மானாபிதன் என்றழைக்கப்படுகிறார்). தர்மராஜாவின் கல்வெட்டுகளின்படி, அவர் தனது அண்ணன் மாதவனை (மூன்றாம் மாதவராஜா) பாசிகாவில் தோற்கடித்து அரியணையை கைப்பற்றினார். அவரது தோல்விக்குப் பிறகு, மாதவன் ஓடிப்போய் அரசன் திவரனிடம் தஞ்சம் புகுந்தான். ஆனால் தர்மராஜா, மாதவனையும் திவரனையும் கொன்றான். [7] தர்மராஜா ஒரு வலிமையான ஆட்சியாளராக இருந்தார். மேலும் குறைந்தது 30 ஆண்டுகள் ஆட்சி செய்தார். [7] அவரது நிமினா (நிவினா) கல்வெட்டில், அவர் பரமபட்டாரகன், மகாராஜாதிராஜா, பரமேசுவரன் ஆகிய அரச பட்டங்களை ஏற்றுக்கொண்டதாகக் கூறுகிறாது.[7] வீழ்ச்சிசைலோத்பவ இராச்சியத்தின் வீழ்ச்சி தர்மராஜாவின் ஆட்சியின் கடைசி நாட்களில் தொடங்கியதாகத் தெரிகிறது. அவரது வாரிசும் அவரது மகனுமான இரண்டாம் மத்யமராஜாவிற்கு (மூன்றாம் அயசோபிதா) வாரிசு இல்லை. மூன்றாம் மத்யமராஜாவின் பிற்கால கல்வெட்டின் படி, அவருக்கு அல்லபராஜா என்ற தந்தைவழி உறவினர் இருந்தார். (மறைமுகமாக மூன்றாம் மாதவராஜாவின் மகன்). கல்வெட்டு அல்லபராஜாவின் மகன் தைலபாணிபாவை பட்டத்து இளவரசன் என்று விவரிக்கிறது. [14] அல்லபராஜா அல்லது தைலபாணிபா எப்போதாவது அரியணை ஏறினார்களா என்பது தெரியவில்லை. அவர்கள் அகால மரணமடைந்திருக்கலாம். [7] வம்சத்தின் கடைசியாக அறியப்பட்ட உறுப்பினர் மூன்றாம் மத்யமராஜா, அவர் அநேகமாக தைலபாணிபாவின் மகனாக இருக்கலாம். [15] 8ஆம் நூற்றாண்டில் சைலோத்பவர்கள் இருளில் விழுந்தனர். அவர்களின் பிரதேசம் சில காலம் பௌமாகர மன்னன் உன்மத்தகேசரியின் ஆட்சியாளர்களாக இருந்த சுவேதகாவின் கங்கர்கலின் ஒரு பகுதியாக மாறியதாகத் தெரிகிறது. பொ.ச.786-77 தேதியிட்ட கல்வெட்டின் படி, இரணக விசவர்ணவன் என்பவர் கொங்கோட-மண்டலத்தின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார். இது இப்போது பௌமா-கர இராச்சியத்தின் மாகாணமாக இருந்தது. [16] சில அறிஞர்கள், சைலோத்பவர்களை தென்கிழக்கு ஆசியாவின் சைலேந்திர வம்சத்துடனும், இன்றைய பாலாகாட் மாவட்டத்தில் ஒரு இராச்சியயத்தை ஆண்ட சைலவன்ச வம்சத்துடனும் இணைக்க முயற்சித்துள்ளனர். இருப்பினும், இந்த கருதுகோள்கள் எந்த உறுதியான ஆதாரங்களாலும் ஆதரிக்கப்படவில்லை. [7] மதம்![]() சைலோத்பவ ஆட்சியாளர்கள் சைவ சமயத்தைப் பின்பற்றினர். அவர்களின் தோற்றம் பற்றிய தொன்மம், வம்சத்தை நிறுவியவர் சிவனிடமிருந்து தோன்றியதாகக் கூறுகிறது. கூடுதலாக, சைலோத்பவ கல்வெட்டுகள் சிவனை அழைப்பதில் தொடங்குகின்றன. முத்திரையில் காளை ( நந்தி) உருவம் இடம்பெற்றுள்ளது. மேலும் மன்னனை பரம-மகேசுவரன் (சிவ பக்தர்) என்று விவரிக்கிறது. [2] புவனேசுவரத்தில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான கோவிலான பரசுராமேசுவரர் கோவில் இரண்டாம் மாதவராஜாவின் ஆட்சியின் போது கட்டப்பட்டிருக்கலாம். [17] சான்றுகள்
உசாத்துணை
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia