பால்ராஜ் மாதோக்
பால்ராஜ் மாதோக் (Balraj Madhok) (இந்தி:बलराज मधोक) (பிறப்பு: 25 சனவரி 1920), 1960ஆம் ஆண்டில் பாரதிய ஜனசங்கத்தின் அகில இந்தியத் தலைவராக இருந்த மூத்த இந்திய அரசியல்வாதி ஆவார். ஆரம்பத்தில் தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக இருந்தவர். இந்துத்துவா கருத்தியல் கொள்கையாளர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான ஜில்ஜிட்-பால்டிஸ்தானின் ஸ்கர்டு பகுதியில் பிறந்து, இந்தியப் பிரிவினையின் போது, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தில் குடிபெயர்ந்து, 1947ல் ஜம்மு பிரஜா பரிசத் கட்சியை நிறுவினார்.. பின்னர் அதனை சியாமா பிரசாத் முகர்ஜி தலைமையிலான பாரதிய ஜனசங்கத்துடன் இணைத்து, அக்கட்சியின் முதல் அகில இந்தியப் பொதுச்செயலராக பணியாற்றியவர். 1966-இல் பாரதிய ஜனசங்கத்தின் அகில இந்திய தலைவராக இருக்கையில், 1967-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனசங்கம், முதல் முறையாக இரட்டை இலக்கத்தில் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரண்டாவது மற்றும் நான்காவது நாடாளுமன்றத்திற்கு, தில்லி வடக்கு மற்றும் தெற்கு தில்லி தொகுதியிலிருந்து வென்றவர். இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில், நெருக்கடி நிலையின் போது 1975-1977ஆம் ஆண்டில் 18 மாதங்கள் சிறை சென்றவர். அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி மற்றும் நானாஜி தேஷ்முக் போன்ற தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக மார்ச், 1973ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியேறினார். இந்தி மொழியிலும், ஆங்கிலத்திலும் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மறைவுபால்ராஜ் மாதோக் தமது 96-வது வயதில் உடலநலக்குறைவால் 2 மே 2016 அன்று புதுதில்லியில் மறைந்தார்.[1][2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia