இராணுவ பேட்டையாக திகழ்ந்த இராணிப்பேட்டை நகரம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், பெரிய இராணுவத்தளமாகவும் இருந்துள்ளது. அதற்கு அத்தாட்சியாக, இன்றும் இராணிப்பேட்டையில் பல கட்டிடங்கள், கல்லறைகள் உள்ளன.
ஆங்கிலேயர்களின் இராணுவத்தில் இடம் பெற்றிருந்த பெரிய குதிரைப்படை, இராணிப்பேட்டையில் நிலை நிறுத்தபட்டிருந்தது. அந்த இடத்தில் தான் இப்போது இராணிப்பேட்டை நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
தற்போதைய டிஎஸ்பி அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், அரசினர் மகளிர் ஆசிரியர் பயிற்சி பள்ளி மற்றும் பல பாழடைந்த கட்டிடங்கள் போன்ற அனைத்தும் குதிரைப் படையினர் தங்கள் குதிரையுடன் தங்கிய இடங்கள் ஆகும்.
அரசினர் சிறுவர் காப்பகம் முன்பாக, சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள ஒரு பழைய கட்டிடம் வெடிமருந்து கிடங்காக இயங்கி வந்துள்ளது.
இப்போதுள்ள சிறுவர் இல்லத்திலும் ஆங்கிலேய இராணுவத்தினர் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
மாவட்டத்தின் பெரிய வார சந்தையான இராணிப்பேட்டை வார சந்தை ஒரு காலத்தில் இரும்பு வேலி அமைக்கப்பட்டு அதில் போர்க் கைதிகள் தங்கவைக்கப்படும் திறந்த வெளிச்சிறையாக செயல்பட்டு உள்ளது என வரலாற்றுக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.
இராணிப்பேட்டையின் மையப்பகுதியான நவல்பூர் பகுதியில் ஒரு கல்லறை உள்ளது. இந்தக் கல்லறையில் உள்ள அனைத்து பழமை வாய்ந்த சமாதிகள், ஆங்கிலேயர் அரசின் கப்பல் படை வீரர்களின், போரின்போது இறந்த வீரர்கள் அடக்கம் செய்யப்பட்ட சமாதிகள் ஆகும். மேலும் அவர்களின் குடும்பத்தினரின் சமாதிகளும் இங்கு உள்ளன. இந்த இடத்திற்கு நோவல் கிரேவ் யார்ட் என்று பெயர் இருந்துள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் காலத்தில் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்த இராணுவத்தினருக்கு உதவியாக மிக பெரிய ராணுவம் இங்கு நிலை நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. மேலும் இராணுவத்தினர் சென்னையில் இருந்து பெங்களூருற்கும், பெங்களூரில் இருந்து சென்னைக்கும் செல்லும் போது இங்குதான் கூடாரம் அமைத்து தங்கும் இடமாக பயன்படுத்தி உள்ளனர். இராணிப்பேட்டை நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 11,764 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 50,764 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 90.09% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 996 வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5124ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 998 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 76.42%, இசுலாமியர்கள் 15.19%, கிறித்தவர்கள் 8.02% , தமிழ்ச் சமணர்கள் 0.27%, பிறர் 0.10% ஆகவுள்ளனர்.[1]
நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
நகராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர்
ஆர். காந்தி
மக்களவை உறுப்பினர்
எஸ். ஜெகத்ரட்சகன்
இராணிப்பேட்டை நகராட்சியானது இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.