இவர் தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிங்கமலை என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சாமிக்கண்ணு கவுண்டர் மற்றும் தாய் இலட்சுமி அம்மா ஆகியோர் ஆவர். இவர் வழுதாவூரில் தன்னுடைய பள்ளிக்கல்வியை முடித்தார். இவருக்கு அனுசுயா என்னும் மனைவியும், ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.
அரசியல் வாழ்க்கை
இவர் 1996 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்றுமுறை தமிழ்நாட்டின் அரக்கோணம் தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012 நவம்பர் முதல் 2013 மார்ச்சு வரை மாநிலத் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சராகப் பணிபுரிந்தார்.[2] பாலாஜி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். அன்னை தெரேசா என்னும் நூல் உட்பட 30 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
இவர் தன்னுடைய அரசியல் வாழ்வில் 1980ஆம் ஆண்டு முதன்முதலாக தமிழக சட்ட மன்ற உறுப்பினர் ஆனார். 1984 இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்(அதிமுக) கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று இந்திய மக்களவை உறுப்பினரானார்.[1] இவர் 1985 முதல் 1989 வரை அதிமுகவின்மக்களவைத் தலைவராகச் செயல்பட்டார்.[1][3][4] 1999 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2004 இல் வன்னியர் இனத்தை அடிப்படையாகக் கொண்ட வீர வன்னியர் பேரவை என்ற கட்சியைத் தொடங்கினார். 2004லேயே இக்கட்சி ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது. பின்னர் இக்கட்சி 2009இல் திமுகவுடன் இணைந்தது.
1999-2004: 13வது மக்களவை உறுப்பினர் (இரண்டாவது முறை)
1999-2000: வெளியுறவு மற்றும் மனித வள மேம்பாட்டு குழுவின் உறுப்பினர்
2000 முதல்: கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களின் அமைச்சகத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்
மே 2009: 15வது மக்களவை உறுப்பினர் (மூன்றாவது முறை)
சூன் 2009-28 அக்டோபர் 2012:மாநில, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்[12]
2 நவம்பர் 2012 – 20 மார்ச் 2013:மாநில, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்[2]
மே 2019: 17வது மக்களவை உறுப்பினர் (நான்காவது முறை)
முறைகேடுகள்
மார்ச்சு 2012 இல் வெளியான இந்திய நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு போன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய, பிரச்சினைகளில் எஸ். ஜெகத்ரட்சகனின் பெயர் முக்கிய இடம் பெற்றிருந்தது. இவர் தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி 2007இல் தன்னுடைய நிறுவனத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி ஒதுக்கீடு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர் 2009இல் ரூ.5 கோடியும், 2011ல் ரூ.70 கோடியும் சொத்துக்குவிப்பு செய்ததாக நம்பப்படுகிறது. மத்திய அரசின் அமைச்சர்களை ஒப்பிடும்போது இது அதிகப்படியான சொத்துக்குவிப்பு சதவீதமாகும். ஜூன் 2009இல் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இவர் தன்னுடைய ஒரு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு ஓர் இடத்திற்கு ரூ. 20 லட்சங்கள் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது.[13][14][15]