சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு (ஆங்கிலம்Selangor State Executive Council (EXCO); மலாய்: Majlis Mesyuarat Kerajaan Negeri Selangor (MMKN) என்பது மலேசியாசிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழுவாகும். சிலாங்கூர் சுல்தான் அவர்களால் நியமிக்கப்பட்ட சிலாங்கூர் மந்திரி பெசார் ஆட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். அவர் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். ஆட்சிக்குழுவில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.
சிலாங்கூர் ஆட்சிக்குழு மலேசிய அமைச்சரவை கட்டமைப்பைப் போன்றதாகும். ஆனாலும் இந்த ஆட்சிக்குழு அளவில் சிறியது. கூட்டாட்சி நடுவண் அரசாங்கத்தின் பொறுப்புகளும், மாநில அரசாங்கத்தின் பொறுப்புகளும் வேறுபடுவதால்; மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலேயும் பல துறைகளும் மாறுபடுகின்றன.
சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சிலாங்கூர் மந்திரி பெசாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சுல்தானால் நியமிக்கப்படுகிறார்கள். சிலாங்கூர் ஆட்சிக்குழுவிற்கு அமைச்சுகள் இல்லை, மாறாக பல குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் மாநில விவகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பல்வகைத் துறைகளைக் கவனித்துக் கொள்ளும். ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் வழக்கமாக ஒரு குழுவின் தலைவராக இருப்பார்கள்.
2023 ஆகஸ்டு 12-ஆம் தேதி நடைபெற்ற 2023 சிலாங்கூர் மாநிலத் தேர்தலைத் தொடர்ந்து அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் 2023 ஆகஸ்டு 21-ஆம் தேதி பதவியேற்றனர். அவர்களின் மாநில அரசு துறைகள் 2023 ஆகஸ்டு 23-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.[1][2]