புக்கிட் மெலாவத்தி
புக்கிட் மெலாவத்தி அல்லது மாலாவதி மலை (மலாய் மொழி: Bukit Malawati; ஆங்கிலம்: Malawati Hill) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலா சிலாங்கூர் மாவட்டம், கோலா சிலாங்கூர் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள ஒரு மலைக் கோட்டை ஆகும்.[1] கோலா சிலாங்கூர் நகராட்சி மன்றத்தால் இந்தக் கோட்டை நிர்வகிக்கப்படுகிறது. புக்கிட் மெலாவத்தி ஒரு பிரபலமான உள்ளூர் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.[2] மலாக்கா நீரிணையில் கலக்கும் சிலாங்கூர் ஆற்றின் முகத்துவாரத்தில் இந்தக் கோட்டை இருப்பதால், இது உத்திநோக்கு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. மேலும் இந்த இடம் இந்தோனேசியாவின் சுமாத்திரா மற்றும் மலாக்கா நீரிணை இரண்டிற்கும் சாதகமான புவியியல் கூறுகளையும் கொண்டுள்ளது. புக்கிட் மெலாவத்தியின் வரலாற்றுச் சிறப்புக் கூறுகளில் அங்குள்ள் பழைய கலங்கரை விளக்கம்; மெலாவத்தி கோட்டையின் (Fort Malawati) எச்சங்கள் ஆகியவை அடங்கும்.[3] சிலாங்கூரின் தொடக்கக்கால சுல்தான்கள் மூவரின் அடக்க இடமாகவும் புக்கிட் மெலாவத்தி அறியப்படுகிறது. வரலாறு![]() இந்தக் கோட்டை முதன்முதலில் உள்ளூர் மலாய்க்காரர்களால் 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. மலாக்காவின் சுல்தான் மகமுட் சா கட்டுமானத்திற்கு உத்தரவிட்டார். 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில், பூகிஸ் குடியேறிகள் மலாய் தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளத் தொடங்கினர். பின்னர் அவர்கள் 1742-இல் சிலாங்கூரின் முதல் சுல்தானாக ராஜா லுமுவை (Raja Lumu) நியமித்தனர். அவர் தன்னை சுல்தான் சாலேவுதீன் சா என்று அழைத்துக் கொண்டார். 1778-இல் ராஜா லுமுவுக்குப் பிறகு வந்த சுல்தான் இப்ராகிம் சா, கோட்டையை மேலும் பலப்படுத்தினார். இடச்சு படையெடுப்புகளுக்கு எதிரான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகச் செய்யப்பட்டது. இருந்தபோதிலும், 1784-ஆம் ஆண்டு இடச்சுக்காரர்கள் கோட்டையைத் தாக்கியபோது கோலா சிலாங்கூர் நகரம் இடச்சுப் படைகளிடம் வீழ்ந்தது. இந்தத் தாக்குதலுக்கு டிர்க் வான் கோகெண்டோர்ப் (Dirk van Hogendorp) எனும் இடச்சு கப்பல் தளபதி தலைமை தாங்கினார். சுல்தான் இப்ராகிம் சா அவர்களின் நண்பரான ராஜா அஜி பிசாபிலில்லா (Raja Haji Fisabilillah), ஏற்கனவே இடச்சுக்காரர்கள் மீது நடத்திய தொடர் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில் இந்தக் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது.[4] இடச்சு தாக்குதல்![]() ![]() ஏற்கனவே ராஜா அஜி பிசாபிலில்லா மலாக்காவில் உள்ள ஆ பாமோசா கோட்டையைத் தாக்கிச் சேதப் படுத்தினார். அந்தக் கோட்டை அப்போது இடச்சுக்காரர்களின் கோட்டையாக இருந்தது. கோலா சிலாங்கூர் போரின் போது ராஜா பிசாபிலில்லா கொல்லப்பட்டார். அதன் பின்னர், இடச்சுக்காரர்கள் சுல்தான் இப்ராகிம் சாவை பழிவாங்க விரும்பினர். ஏனெனில் சுல்தான் இப்ராகிம் சா, ராஜா பிசாபிலில்லாவுக்கு தன்னுடைய கடற்படையின் ஆதரவை வழங்கினார். ஆ பாமோசா கோட்டை தாக்கப்படுவதற்கு சுல்தான் இப்ராகிம் சா, ஒரு காரணி என இடச்சுக்காரர்கள் கருதினார்கள்.[4][5] அதன் பின்னர் இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் (VOC) சுல்தான் இப்ராகிம் சாவைத் தாக்க, கோலா சிலாங்கூருக்கு தங்களின் கப்பல்களை அனுப்பியது. அங்கு வந்த இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பல்கள், கடலில் இருந்து இரண்டு வாரங்களுக்கு பீரங்கிகளால் மெலாவத்தி கோட்டையைத் தாக்கின. அதன் விளைவாக சுல்தான் இப்ராகிம் சாவின் படைகள் அருகிலுள்ள காடுகளுக்குள் விரட்டப்பட்டன. சுல்தான் இப்ராகிம் சா பெர்ணம் பகுதிக்கு தப்பிச் சென்றார். பின்னர் அவர் பகாங்கிற்குச் சென்றார். அதைத் தொடர்ந்து, இடச்சுக்காரர்கள் மெலாவத்தி கோட்டையைக் கைப்பற்றினர். ஆல்டிங்பர்க் கோட்டை (Fort Altingburg) என்று பெயர் மாற்றினர். வில்லெம் அர்னால்ட் ஆல்டிங் என்பவர் 1780-ஆம் ஆண்டு முதல் 1797-ஆம் ஆண்டு வரை இடச்சு கிழக்கிந்திய தீவுகளின் தலைமை ஆளுநராக இருந்தவர் ஆவார்.[6] பின்னர் சுல்தான் இப்ராகிம் சா திரும்பி வந்து, 1785-இல் கோட்டையை மீண்டும் கைப்பற்றினார். தன்னுடைய சகோதரர் டத்தோ பெங்காவா பெர்மாத்தாங் மகாபிஜயா (Dato' Penggawa Permatang Mahabijaya); மற்றும் பெண்டகாரா அடிப் (Bendahara Adb) ஆகியோரின் உதவியுடன் அவர் மெலாவத்தி கோட்டையைக் கைப்பற்றினார். இருப்பினும், 19-ஆம் நூற்றாண்டில், கிள்ளான் போர் என்று அழைக்கப்படும் சிலாங்கூர் உள்நாட்டுப் போரின் போது இந்தக் கோட்டை முற்றாக அழிக்கப்பட்டது.[5] சிறப்புக் கூறுகள்புக்கிட் மெலாவத்தி, கம்போங் குவாந்தான் மின்மினி பூச்சி பூங்கா மற்றும் கோலா சிலாங்கூர் இயற்கை பூங்கா போன்ற பிற சுற்றுலா தலங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.[1][5] மலைக்கோட்டையில் உள்ள பிரபலமான ஈர்ப்புகளில் அமிழ் தண்டூர்தி சவாரி, ஓர் அரச கல்லறை மற்றும் ஓர் அருங்காட்சியகம் ஆகியவை அடங்கும்.[1][3] கோலா சிலாங்கூர் கலங்கரை விளக்கம்![]() ![]() கோலா சிலாங்கூர் கலங்கரை விளக்கம் (மலாய் மொழி: Rumah Api Kuala Selangor; ஆங்கிலம்: Kuala Selangor Lighthouse) என்பது ஆல்டிங்ஸ்பர்க் கலங்கரை விளக்கம் (Altingsburgh Lighthouse) என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கலங்கரை விளக்கம் முதலில் 1794-இல் டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. 1907-இல் ஆங்கிலேயர்களால் பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்டது. 1910-இல் அதிகாரப்பூர்வமாக மீண்டும் திறக்கப்பட்டது. முழுமையாகச் செயல்படும் நிலையில் உள்ள இந்தக் கலங்கரை விளக்கம், தற்போது புக்கிட் மெலாவத்தியின் குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 83 மீட்டர்; நிலத்தில் இருந்து 27 மீட்டர் உயரத்திலும் உள்ளது. தற்போது இந்தக் கலங்கரை விளக்கம் மின்சாரத்தில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு 15 வினாடிகளுக்கு இரண்டு முறை அடர் ஒளிக் கற்றையை வெளிப்படுத்துகிறது, அந்த ஒளிக்கற்றை 56 கிலோமீட்டர் தொலைவு வரை; சில வேளைகளில் சுமாத்திரா தீவு வரை தெரிகிறது.[1][3] பத்து அம்பார் பாறைப் பலகைபத்து அம்பார் (மலாய் மொழி: Batu Hampar; ஆங்கிலம்: The Bedrock) என்பது 5x5x1 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு பெரிய பாறைப் பலகை ஆகும். இது புக்கிட் மெலாவத்தியின் மேற்கில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பாறைப் பலகை மரணதண்டனை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக சுல்தானின் துரோகிகளுக்கு தலை துண்டிக்கப் படுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. உள்ளூர் புராணத்தின் படி, சிலாங்கூரின் நான்காவது சுல்தானான சுல்தான் அப்துல் சமாட், தன்னுடைய மாலைப் பொழுதை அந்தப் பலகையில் அமர்ந்து சூரியன் மறைவதைப் பார்ப்பார் என்றும் அறியப்படுகிறது.[1][3] மெலாவத்தி கோட்டைமெலாவத்தி கோட்டை (மலாய் மொழி: Kota Malawati; ஆங்கிலம்: Malawati Fort) என்பது அதன் சுற்றுப்புறங்களில் பீரங்கிகளால் வலுப்படுத்துப்பட்ட கோட்டை ஆகும். மெலாவத்தி கோட்டையைச் சுற்றிலும் வளைக்கப்பட்ட அமைப்பில் அந்தப் பீரங்கிகள் பதிக்கப்பட்டு உள்ளன. 18-ஆம் நூற்றாண்டில், சிலாங்கூரின் இரண்டாவது சுல்தான் சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம் சா ஆட்சியின் போது உள்ளூர் கிராமவாசிகளால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. பீரங்கிகள் பின்னர் சேர்க்கப்பட்டன.[1][3] கோலா சிலாங்கூர் வரலாற்று அருங்காட்சியகம்![]() கோலா சிலாங்கூர் கலங்கரை விளக்கத்தில் இருந்து மிக அருகில் ஓர் உள்ளூர் அருங்காட்சியகம் (மலாய் மொழி: Muzium Sejarah Kuala Selangor; ஆங்கிலம்: Kuala Selangor Historical Museum) உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால ஆயுதங்கள், ஒளி - நிழல் வண்ண ஓவியங்களின் மூலம் இயற்கை நேர்க் காட்சிகள் (Dioramas), பழைய நாணயங்களின் மாதிரிகள்; பிற நினைவுச் சின்னங்கள்; மற்றும் கலைப்பொருட்களின் தொகுப்புகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. கோலா சிலாங்கூரின் உள்ளூர் வரலாற்றை, கலைப்பொருட்களின் தொகுப்புகளில் இருந்து பார்வையாளர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் கோலா சிலாங்கூரின் தொடக்கக்கால குடியேற்றம், அதன் மீன்பிடி பண்பாடு மற்றும் வணிகக வரலாறு பற்றியும் அறிந்து கொள்ளலாம்.[1][3] நச்சுக் கிணறுநச்சுக் கிணறு (மலாய் மொழி: Perigi Beracun; ஆங்கிலம்: Poisoned Well) என்பது நச்சுப் பொருட்கள் கலந்த ஒரு வகையான கிணறு. அரசருக்குத் துரோகம் செய்தவர்களைச் சித்திரவதை செய்ய இந்தக் கிணறு பயன்படுத்தப்பட்டதாக உள்ளூர் வரலாறு கூறுகிறது. குற்றவாளிகள் கிணற்றுக்குள் இறக்கப் படுவார்கள். ரப்பர் போன்ற திரவ நிலையிலான காட்டுத் தாவரங்களின் பால்; மற்றும் மூங்கில் நச்சுத் தளிர்கள் போன்ற நமைச்சலைக் கொடுக்கும் பொருட்கள் கலந்த கரைசல் நீர், குற்றவாளியின் கன்னம் வரை நிரப்பப்படும். அரசருக்குத் துரோகம் செய்தவர்கள் அவ்வாறு தண்டிக்கப்பட்டார்கள். இந்தக் கிணற்றைப் பார்க்க விரும்புகிறவர்கள் கிணற்றை அருகிலிருந்து பார்க்கலாம். இருப்பினும், தேவையற்ற விபத்துகளைத் தடுக்கவும், சுகாதாரம் மற்றும் உடல்நலப் பாதுகாப்பிற்காகவும் இந்தக் கிணறு தற்போது இரும்புத் தட்டுகளால் மூடப்பட்டுள்ளது.[1][3] காட்சியகம்புக்கிட் மெலாவத்தி காட்சிப் படங்கள்: மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia