திராங்கானு மந்திரி பெசார்
திராங்கானு மந்திரி பெசார் அல்லது திராங்கானு முதல்வர் (ஆங்கிலம்: Menteri Besar of Terengganu அல்லது First Minister of Terengganu; மலாய்: Menteri Besar Terengganu; சீனம்: 登嘉楼州务大臣) என்பவர் மலேசிய மாநிலமான திராங்கானு மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆவார். மலேசியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைப்பது வழக்கம். திராங்கானு மந்திரி பெசார், திராங்கானு மாநில சட்டமன்றத்தின் (Terengganu State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார். தற்போது திராங்கானு மந்திரி பெசார் பதவியில் உள்ளவர் அகமத் சம்சூரி மொக்தார் (Ahmad Samsuri Mokhtar). இவர் 10 மே 2018 முதல் திராங்கானு மாநிலத்தின் மந்திரி பெசார் (முதல்வர்) பதவியை வகித்து வருகிறார். நியமனம்திராங்கானு மாநில அரசமைப்புச் சட்டத்தின்படி, திராங்கானு சுல்தான் முதலில் மந்திரி பெசாரை மாநில நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிப்பார். அந்த வகையில் நியமிக்கப்படும் மந்திரி பெசார் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையையும் மந்திரி பெசார் பெற்று இருக்க வேண்டும். திராங்கானு மந்திரி பெசார் இசுலாம் மதத்தைச் சார்ந்தவராகவும்; மலாய் இனத்தைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். அவரின் குடியுரிமை, பதிவு மூலம் பெற்ற ஒரு மலேசியக் குடிமகனாக இருக்கக்கூடாது. மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து 10 அல்லது நான்கிற்கும் குறையாத உறுப்பினர்களை மாநில செயற்குழுவில் திராங்கானு சுல்தான் நியமிப்பார். மாநில ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் திராங்கானு சுல்தான் முன்னிலையில் பதவி உறுதிமொழி; பற்று உறுதிமொழி மற்றும் இரகசியக் காப்பு உறுதிமொழி எடுக்கவேண்டும். கிளாந்தான் மாநிலச் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்சிக்குழுவினர் கூட்டாகப் பொறுப்பு ஏற்க வேண்டும். அத்துடன் அவர்கள் வருமானம் தரும் எந்த ஒரு பதவியையும் வகிக்கக் கூடாது; அல்லது கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்தும் எந்த ஒரு வணிகம் அல்லது தொழிலிலும் ஈடுபடக்கூடாது. நம்பிக்கையில்லா வாக்கெடுப்புமாநில அரசாங்கம் தனது சட்டங்களைச் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாவிட்டால்; அல்லது மாநிலச் சட்டமன்றம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நிறைவேற்றப் படுமானால்; மந்திரி பெசார் உடனடியாகப் பதவிதுறப்பு செய்ய வேண்டும். மாற்று மந்திரி பெசாரைத் தேர்ந்தெடுப்பது சுல்தானின் பொறுப்பு ஆகும். சுல்தான் அனுமதிக்கும் காலம் வரையில்; மந்திரி பெசார் பதவி வகிக்காத ஒரு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியில் இருப்பார். ஒரு தேர்தலில் தோல்வி அடைந்த மந்திரி பெசார் தன் பதவியைத் துறப்பு செய்ததைத் தொடர்ந்து; அல்லது ஒரு மந்திரி பெசாரின் மரணத்தைத் தொடர்ந்து; ஆளும் கட்சியால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபரை புதிய மந்திரி பெசாராகச் சுல்தான் நியமிப்பார். அதிகாரங்கள்ஒரு மந்திரி பெசாரின் அதிகாரம் பல வரம்புகளுக்கு உட்பட்டது. ஒரு மந்திரி பெசார் அவரின் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அல்லது அவருடைய அரசாங்கம் சட்ட மன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியுற்றால்; புதிய ஒரு மாநிலத் தேர்தலுக்கு மந்திரி பெசார் பரிந்துரை செய்ய வேண்டும்; அல்லது அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது சுல்தானால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். வழங்கல் மசோதா (Supply Bill) அல்லது முக்கியமான கொள்கை தொடர்பான சட்டத்தை ஒரு மந்திரி பெசாரால் நிறைவேற்ற முடியாமல் போனால், அல்லது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எடுக்கப்படுமானால், அரசாங்கப் பதவிகளில் இருந்து அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது அவர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும். தற்காலிக மாநில அரசின் மந்திரி பெசார்மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில் சுல்தானால் கலைக்கப்பட்ட மாநிலச் சட்டமன்றம் அதன் முதல் கூட்டத்தின் தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்படலாம். மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து பொதுத் தேர்தலை 60 நாட்கள் வரை தாமதப்படுத்த மாநில அரசியலமைப்பு அனுமதி வழங்குகிறது. மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 120 நாட்களுக்குள் மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். வழக்கமாக, ஒரு மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுவதற்கும் அடுத்த மாநிலச் சட்டமன்றம் கூட்டப் படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில், மந்திரி பெசார் மற்றும் அவரின் நிர்வாகக் குழுவினரும் தான் காபந்து அரசாங்கப் பதவியில் (Caretaker Government) இருப்பார்கள். 2008-ஆம் ஆண்டு மந்திரி பெசார் நியமன நெருக்கடி2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில்; பாரிசான் நேசனல் (Barisan Nasional) கூட்டணி, திராங்கானு மாநில சட்டமன்றத் தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்றது. அடுத்தக் கட்டமாகத் திராங்கானு மாநிலத்தில், தன் பாரிசான் நேசனல் கூட்டணியின் சார்பில் மந்திரி பெசார் (முதல்வர்) (Menteri Besar) ஒருவரை நியமிக்க முனைப்பு காட்டியது. அதே வேளையில் மலேசியப் பிரதமர் அப்துல்லா அகமது படாவியின் கீழ் இருந்த நடுவண் அரசாங்கம், புதிய திராங்கானு மாநில அரசாங்கத்தை உருவாக்குவதிலும் தீவிரம் காட்டியது. 2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், திராங்கானு மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 பாரிசான் நேசனல் சட்டமன்ற உறுப்பினர்களில் 23 பேரின் முழு ஆதரவைப் பெற்ற இட்ரிசு ஜூசோ (Idris Jusoh) என்பவரை மந்திரி பெசார் பதவிக்குப் பரிந்துரைத்தது.[1] தீர்வுஇருப்பினும், மார்ச் 22 அன்று, திராங்கானு சுல்தானின் அரசியலமைப்பு உரிமையின் கீழ் (Sultan's Constitutional Right), திராங்கானு சுல்தானின் அலுவலகம், இட்ரிசு ஜூசோவுக்குப் பதிலாக, கிஜால் சட்டமன்ற உறுப்பினர் (Kijal Assemblyman) அகமத் சையிது (Ahmad Said) என்பவரை மந்திரி பெசார் பதவிக்கு நியமிப்பதாக அறிவித்தது. அதன் பின்னர், அகமத் சையிது, மந்திரி பெசார் பதவிக்கு நியமிக்கப்பட்டது மலேசிய அரசியலமைப்பிற்கு முரணானது என்று பிரதமர் அப்துல்லா அகமது படாவி அறிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலேசியப் பிரதமர் அலுவலகத்தின் விருப்பத்திற்கு எதிரானது என்றும் பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறினார்.[2] மார்ச் 26 அன்று, பிரதமர் அப்துல்லா அகமது படாவியும் மற்றும் சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் அவர்களும் இசுதானா நெகாராவில் சந்தித்தனர். திராங்கானுவின் மந்திரிபெசாராக சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் நியமித்ததைப் பிரதமர் ஏற்றுக் கொண்டார். சுல்தானிடம் மன்னிப்பும் கேட்டார். திராங்கானு மந்திரி பெசார் பட்டியல்1925-ஆம் ஆண்டு தொடங்கி 2024-ஆம் ஆண்டு வரையிலான திராங்கானு மாநிலத்தின் மந்திரி பெசார்களின் பட்டியல் பின்வருமாறு:[3] அரசியல் கட்சிகள்:
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia