தூத்துக்குடிதூத்துக்குடி (Thoothukudi அல்லது Tuticorin) தென்னிந்திய மாநிலமான, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநகரமும், தூத்துக்குடி மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10-ஆவது மாநகராட்சியாக (தூத்துக்குடி மாநகராட்சி), ஆகஸ்ட் 5, 2008-இல் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[3] இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில், பரதவர் இன மக்கள் மீன் பிடித்தும், அதிகளவில் முத்துகுளித்தும் வந்தனர். இன்றளவும் இம்மக்கள், சங்கு குளிக்கும் தொழில் செய்கின்றனர்.இதை நாம், அகநானூறு 350-வது அதிகாரத்தில் காணலாம். இம்மாவட்டத்திற்கு 'முத்து நகர்' என்ற பெயரும் உண்டு. தூத்துக்குடியில், அனல் மின் நிலையமும், ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன. சங்க காலம்
வரலாற்றுக் குறிப்புகள்தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.
போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக்காரர்களும்பொ.ஊ. 1532-இல் முதன் முதலாக போர்ச்சுக்கீசியர்கள் இம்மாவட்டத்தில் கால் வைத்தனர். 1658-இல் டச்சுக்காரர்கள் வந்ததனால், போர்ச்சுகல் ஆதிக்கம் அகன்றது. பாளையக்காரர்களின் அழைப்பின் பேரிலும், திருவாங்கூர் மன்னரின் படை உதவியுடனும், டச்சுக்காரர்கள் முன்னேறத் தொடங்கினர். முகம்மது யூசுப் படைதிரட்டுவதை கேள்விப்பட்டதும், டச்சுக்காரர்கள் மணப்பாட்டை காலி செய்து விட்டு, தூத்துக்குடி வழியாக தாய்நாடு சென்று விட்டனர். நாயக்கர் ஆட்சி சந்தாசாகிப்பினால் முடிவுற்றது. கருநாடகம் ஆற்காடு நவாப் கையில் விழுந்தது. முகம்மதலி திருநெல்வேலியைக் கைப்பற்ற ஒரு படையை அனுப்பினார். 1755இல் ஹெரான் தலைமையில் ஆங்கிலேயர் படை கிளம்பியது. பாளையக்காரர்கள், கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் இரண்டையும், கிழக்கிந்திய கம்பெனியாரிடம் ஒப்படைத்தனர். இக்காலத்தில், நவாப்பிற்குக் கப்பங்கட்ட மறுத்தவர்களில் தலையானவர் பூலித்தேவர் ஆவார். இப்பகுதியில், ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் தொடர்ந்து கலகம் செய்து வந்தனர். பாளையக்காரர்களுக்கு ஆதரவாக சந்தாசாகிப், பிரெஞ்சுப் படைகள் இருந்தன. 1761-இல் புதுச்சேரியை ஆங்கிலேயர் கைப்பற்றியதால், பிரெஞ்சுக்காரர்கள் பாளையக்காரர்களுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர். 1764 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்தது. களக்காடு, பணகுடி பகுதிகள் நவாப்பிற்கும், செங்கோட்டை திருவாங்கூர் அரசருக்கும் விட்டுக் கொடுக்கப்பட்டன. 1767 மேஜர் பிளிண்ட் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார். 1783 ஆம் வருடம் புல்லர்டன் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி சூறையாடப்பட்டது. அங்கிருந்த 40,000 பொன் நாணயங்களை ஆங்கிலேயர்கள் பங்கு போட்டுகொண்டனர். 1785 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நவாப்பின் அமில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1797 ஆம் ஆண்டு கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் பேட்டி காண்பதற்கு, இராமநாதபுரத்திலுள்ள இராமலிங்க விலாசத்திற்கு சென்ற போது குழப்பம் வரவே, ஆங்கிலத் தளபதி கிளார்க் கொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் சிலகாலம் கழித்து பாஞ்சாலங்குறிச்சி, பானர்மேனால் வெற்றிகொள்ளப்பட்டது. படிப்படியாக எதிர்த்த பாளையக்காரர்கள் அனைவரையும் ஒடுக்கி, நவாப்பையும் செல்லாக்காசாக்கி விட்டு ஆங்கிலேயர் 1801-ஆம் வருடம் திருநெல்வேலியை எடுத்துக் கொண்டனர். 1910 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இராமநாதபுர மாவட்டத்தை உண்டாக்கினர். 1986 ஆம் ஆண்டு நிர்வாக வசதி கருதி, கடற்கரையோரப் பகுதிகளைப் பிரித்து, தூத்துக்குடி மாவட்டம் உண்டாக்கப்பட்டது. தூத்துக்குடி நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. சிறப்புப் பெயர்கள்தூத்துக்குடி நகருக்கு, 'திருமந்திர நகர்'[4] [5] என்றும், 'முத்துநகர்'[6][7] என்றும் வேறு சிறப்புப் பெயர்களும் இருக்கின்றன. திருமந்திர நகர்தூத்துக்குடிக்கு திருமந்திர நகர் என்ற பெயர் வந்ததற்கு ஒரு தனிக்கதை உண்டு. இந்தக் கடற்கரை, மிகப்பெரும் காடாக இருந்ததாம். இராவணன், சீதையைக் கடத்திச் சென்ற பின்பு அவளைத் தேடி வர அனுமனை அனுப்பி விட்டு, ராமன் இந்தப் பகுதியில் மந்திரங்களை உச்சரித்தபடி, தவம் செய்யத் துவங்கினாராம். அவருடைய தவத்திற்குக் கடலலைகளின் பேரிரைச்சல் இடையூறாக இருக்க, ராமன் கடலலைகளைச் சப்தமெழுப்பாமல் இருக்க சபித்து விட்டாராம். அன்றிலிருந்து இப்பகுதியில், கடலலைகள் அடங்கி சப்தமில்லாமல் போய்விட்டது. இன்றும் கடலலைகளோ, சப்தமோ இங்கிருப்பதில்லை. ராமன் திருமந்திரங்களை உச்சரித்த இடம் என்பதால் 'திருமந்திர நகர்' என்று பெயர் வந்துவிட்டது என்று ஒரு சிலர் கருத்து சொல்கின்றனர். முத்துநகர்ஆதிகுடியான பரதவர் இன மக்கள், தூத்துக்குடியில் அதிகளவில் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குலதொழில், 'மீன் பிடித்தல்' மற்றும் கடலுக்கு அடியில் சென்று 'முத்து எடுப்பது' தான். இவர்கள் தொழில் செய்வதை வைத்து முத்துக்கள் அதிகம் கிடைத்த நகரம் என்பதால் முத்து நகர் என்று பெயர் ஏற்பட்டது. பாண்டிய நாட்டின் துறைமுக நகரமாக விளங்கிய நகரம். பரதவர் மக்கள் நேரிடையாக முத்துக்குளித்தலில் ஈடுபட்ட துறைமுக நகரம் ஆதலால், இது 'முத்துக்குளித்துறை' என்று பெயர் பெற்றது. பின்னாட்களில் 'முத்து நகர்' என்று அழைக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் இரயிலுக்கு, முத்து நகர் விரைவு இரயில் என்று பெயர். பெயர்க் காரணம்நீர் நிறைந்த நிலத்தைத் தூத்து, துறைமுகமும், குடியிருப்பும் தோன்றிய ஊர் என்பதால் 'தூத்துக்குடி' என்றாயிற்று. வாகைக்குளம், கங்கைக்கொண்டான் கல்வெட்டுக்களில், இவ்வூர் 'தூற்றிக்குடி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது[8][9]. மக்கள்தொகை பரம்பல்
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகை 237,830 ஆகும். அதில் 118,298 ஆண்களும், 119,532 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.57 % மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.[11] 2011இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 237,830 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 410,760 ஆகவும் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, தூத்துக்குடியில் இந்துக்கள் 64.97%, முஸ்லிம்கள் 4.74%, கிறிஸ்தவர்கள் 30.14%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.03%, சைனர்கள் 0.01% மற்றும் 0.10% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர். துறைமுகம்![]() ![]() ![]() மன்னார் வளைகுடா அருகே அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம், ஒரு 'இயற்கைத் துறைமுகம்'. இப்பகுதி, புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. தூத்துக்குடியைத் தலைமை இடமாகக் கொண்டு ஆண்ட பரதவர்களின் ஜாதி தலைவருக்குச் சொந்தமான பாண்டியன் தீவில், இந்தத் துறைமுகம் அமைந்துள்ளது. இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு, இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறு பக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம், சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரம்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது. 1974 ஆம் ஆண்டு இந்நகரிலுள்ள ஸ்பிக் உரத்தொழிற்சாலையின் அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய, 125 இலட்ச ரூபாய் செலவில் எண்ணெய்த்துறை ஒன்று, தனியாக இங்கே ஏற்படுத்தப்பட்டது. இங்கு 6 கப்பல்கள் தங்குவதற்கான தளங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கென்று தனியாக நிலக்கரி துறையும், மணிக்கு 2000 டன் நிலக்கரி இறக்கும் வசதியுடைய தானியங்கியும் 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மணிக்கு 700 லிட்டர் பெட்ரோலிய எண்ணெய்ப் பொருள்களை இறக்குமதி செய்யத் தேவையான சிறப்புக் கருவிகள் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. வர்த்தகம்
துறைமுக வணிகம்பிப்ரவரி 1996 ஆம் ஆண்டில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஐஎஸ்ஓ 9002 என்னும் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கிழக்குக் கடற்கரையோரத்தில் சென்னைக்கு அடுத்த தூத்துக்குடியில், இங்கு ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் நடைபெறுகிறது. இங்கு முக்கிய அமைப்புகள் பெரும்பங்காற்றி வருகின்றன.
ஆகிய அமைப்புகள் பங்காற்றி வருகின்றனர். போக்குவரத்துதூத்துக்குடி நகரமானது சாலை, இரயில் மற்றும் விமானப் போக்குவரத்து மூலம் மற்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்துதேசிய நெடுஞ்சாலை-138 ஐ இணைக்கும் தமிழ்ச்சாலை, தேசிய நெடுஞ்சாலை-38 ஐ இணைக்கும் தூத்துக்குடி - மதுரை - திருச்சி - விழுப்புரம் - திருவண்ணாமலை - வேலூர் சாலை, மாநில நெடுஞ்சாலை-49 ஐ இணைக்கும் இராமநாதபுரம் சாலை, மாநில நெடுஞ்சாலை-176 ஐ இணைக்கும் திருச்செந்தூர் சாலை, வ.உ. சிதம்பரனார் சாலை மற்றும் விக்டோரியா விரிவாக்க சாலை ஆகியவை இந்நகரத்தில் உள்ள முக்கிய சாலைகள். இந்நகரத்திற்கு வெளியே அமைந்துள்ள நெடுசாலையான வ.உ.சி. சாலையானது துறைமுகம், அனல் மின் நிலையம், ஸ்பிக் தொழிற்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை-38 ஆகியவற்றை இணைக்கிறது. இந்நகரத்தில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன; பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் மீனாட்சிபுரம் பிரதான சாலையிலும், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் எட்டையபுரம் சாலையிலும் அமைந்துள்ளது. இந்த இரண்டு பேருந்து நிலையங்களிலிருந்தும் சுமார் 700 பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், தூத்துக்குடியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு, தினசரி பேருந்து சேவைகளை இயக்குகிறது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், பெங்களூரு, சென்னை, வேலூர், திருப்பதி மற்றும் கன்னியாகுமரி போன்ற முக்கியமான நீண்ட தொலைவிலுள்ள நகரங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது. தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாக இருப்பதால், நிறைய கொள்கலன் லாரிகள், இந்நகரத்திற்கு வந்து, செல்கின்றன. 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, நகரத்திற்குள் நுழையும் கொள்கலன் லாரிகளின் எண்ணிக்கை 1000 ஆகும். தொடருந்து போக்குவரத்துதூத்துக்குடி இரயில் நிலையமானது, இந்தியாவின் பழமையான மற்றும் பிரபலமான இரயில் நிலையங்களில் ஒன்றாகும். தூத்துக்குடியில் இருந்து நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுகிறது. அவ்வாறு இயக்கப்படும் ரயில்களை சுத்தம் செய்வதற்கும், பராமரிப்பு செய்வதற்கு போதிய வசதிகள் இருக்கும், தென்தமிழ்நாட்டில் உள்ள சில இரயில் நிலையங்களில், இதுவும் ஒன்றாகும். மதுரைக்கும் - தூத்துக்குடிக்கும் இடையிலான பாதை 1874இல் திறக்கப்பட்டது. தூத்துக்குடியை இணைக்கும் இரயில் பாதைகள் சமீபத்தில் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடியிலிருந்து சென்னை, மைசூர், திருநெல்வேலி ஆகியவற்றுக்கு, தினசரி இரயில்கள் இயக்கப்படுகின்றன. விவேக் விரைவு இரயிலானது தூத்துக்குடி - ஓகாவை(குசராத்து) இணைக்கின்றது. தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இரயில் நிலையத்துடன் இணைக்கும், முத்து நகர் அதிவிரைவுத் தொடர்வண்டியானது, தெற்கு இரயில்வேயின் முக்கிய ரயில்களில் ஒன்றாகும். வானூர்தி நிலையம்தூத்துக்குடி வானூர்தி நிலையமானது, நகரின் மையப்பகுதியிலிருந்து 14 கி.மீ. (9 மைல்) தொலைவிலுள்ள வாகைக்குளத்தில் உள்ளது. இந்நிலையத்தில் 10/28க்கு நெறிப்படுத்தும் 1351 மீட்டர்கள் நீளமும், 30 மீட்டர்கள் அகலமும் உடைய, தாரிடப்பட்ட ஓர் ஓடுதளம் உள்ளது. 100 மீட்டர்களுக்கு, 60 மீட்டர்கள் அளவுள்ள முகப்புத் தளத்தில் ஒரே நேரத்தில் ஏடிஆர் 72 இரகம் அல்லது அதை ஒத்த இரண்டு வானூர்திகள் நிறுத்த வசதி உள்ளது. இதன் நிலைய வளாகத்தில் உச்சநிலையில் 72 பயணிகளை மேலாளுமாறு வசதிகள் உள்ளன. இங்கிருந்து இன்டிகோ விமானம் சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு, ஸ்பைஸ் ஜெட் விமானம் சென்னைக்கும் இயக்கப்படுகின்றன. துறைமுகம்இங்குள்ள வ. உ. சிதம்பரனார் துறைமுகம், இந்தியாவின் 12 முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றாகும். இத்துறைமுகத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, இலங்கை மற்றும் நடுநிலக் கடல் நாடுகளுக்கு ஏற்றுமதி/இறக்குமதி நடைபெறுகிறது. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
தூத்துக்குடி மாநகராட்சியானது, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மற்றும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். 2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த இந்திய பொதுத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)வைச் சேர்ந்த கனிமொழி கருணாநிதி வென்றார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)வைச் சேர்ந்த பெ. கீதா ஜீவன் வென்றார். சுற்றுலாத் தலங்கள்தூத்துக்குடியில் காயல்பட்டினம், திருச்செந்தூர், மணப்பாடு, கழுகுமலை, ஒட்டப்பிடாரம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறு, நவதிருப்பதி ஆகிய ஊர்கள் சுற்றுலாத் தலங்களாக விளங்குகின்றன. வழிபாட்டுத் தலங்கள்சங்கர ராமேஸ்வரர் கோயில்தூத்துக்குடி நகரில் உள்ள முக்கியமான கோயில்களில் சங்கர ராமேஸ்வரர் கோயிலும் ஒன்று. இந்தக் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஒன்றாகும். தூய பனிமயமாதா பேராலயம்இந்த பேராலயம் ஆனது, ஏழு ஊரில் வாழும் பரதவர் குலமக்களுக்கும் (தூத்துக்குடி, புன்னைக்காயல், வேம்பார், வைப்பாறு, வீரபாண்டியபட்டினம், மணப்பாடு மற்றும் ஆலந்தலை), மற்றும் அனைத்து ஊரில் வாழும் பரதகுல மக்களுக்கும் பாத்தியப்பட்டது. தூத்துக்குடியில் வாழும் பரதர் குல மக்களும், இங்கு வாழும் பிற சமூக மக்களும் பனிமய மாதா ஆலயத்திற்கு வந்து வேண்டிச் செல்கின்றனர். 425 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 'பனிமயமாதா தங்கத் தேர் விழா', மிகச் சிறப்பான ஒரு விழாவாகும்.[12] சிறப்புகள்
பள்ளிகள்![]() இங்கு பல ஆண்டுகள் பழைமை வாய்ந்த பள்ளிக்கூடங்கள் பல இருக்கின்றன.
கல்லூரிகள்
பொழுதுபோக்கு இடங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் தூத்துக்குடி என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
|
Portal di Ensiklopedia Dunia