ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2013-ஆம் ஆண்டில், சுங்கை பட்டாணி நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 10 சூன் 2014-இல் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம், கேடிஎம் இடிஎஸ்; கேடிஎம் கொமுட்டர் நிறுவனங்களின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது. இதற்கு முன்பு பன்னாட்டு விரைவு தொடருந்து சேவை (International Express) பயன்பாட்டில் இருந்தது.
சுங்கை பட்டாணி
சுங்கை பட்டாணி (Sungai Petani) நகரம்; கெடா, கோலா மூடா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கெடா மாநிலத்தில் மிகப் பெரிய நகரமாகக் கருதப்படும் சுங்கை பட்டாணி நகரம், மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் (Alor Setar) மாநகரத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது.
மலேசிய மொழியில் ’சுங்கை’ (Sungai) என்றால் ஆறு; ’பட்டாணி’ (Petani) என்றால் விவசாயி; சுங்கை பட்டாணி என்றால் விவசாயின் ஆறு என்று பொருள் படும். 1912-ஆம் ஆண்டிற்கு முன்னால் சுங்கை பட்டாணி எனும் ஒரு நகரம் இருந்ததாக வரலாற்றில் எந்தத் தடயமும் இல்லை.
கோல மூடா மாவட்டம்
சுங்கை பட்டாணி நகரம் ஒரு சின்னக் குடியேற்றப் பகுதியாய் மட்டுமே இருந்தது. மலாய்க்காரர்கள் ‘பெங்கூலி இம்’ எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். சீனர்கள் பெக்கான் லாமா எனும் பகுதியில் வாழ்ந்து வந்தனர். இந்தியர்கள் சுங்கை பட்டாணியின் சுற்று வட்டாரத் தோட்டங்களில் வாழ்ந்து வந்தனர்.
அப்போது கோத்தா கோல மூடா எனும் நகரமே கோல மூடா மாவட்டத்தின் தலையாய பட்டணமாக இருந்து வந்தது. அந்தக் காலகட்டத்தில் வில்லியம் ஜார்ஜ் மெக்சுவல் என்பவர் கெடா மாநிலத்தின் பிரித்தானிய ஆலோசகராக இருந்தார். [2]
சுங்கை பட்டாணி உருவாக்கம்
அலோர் ஸ்டார் நகரத்திற்கும் கூலிம் நகரத்திற்கும் இடையே ஒரு புதிய நகரம் உருவாக்கப் பட வேண்டும் என்று மெக்சுவல் ஆசைப் பட்டார். அந்தச் சமயத்தில் கோலாலம்பூருக்கும்அலோர் ஸ்டார் நகருக்கும் இடையே புகைவண்டிச் சேவை தொடங்கப் பட்டது. புகைவண்டிகள் சுங்கை பட்டாணியில் நின்று சரக்குகளை ஏற்றிச் சென்றன.