இராஜபாளையம் தொடருந்து நிலையம் (Rajapalayam railway station) தமிழ்நாட்டிலுள்ள, விருதுநகர் மாவட்டத்தில், ராஜபாளையம் நகரத்தில் அமைந்துள்ளது. இது தெற்கு இருப்புப் பாதை மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை இருப்புப்பாதைப் பிரிவின் ஒரு பகுதியாக இராஜபாளையம் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுடனும், நாட்டின் பிற பகுதிகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது.[1]
அமைவிடம்
இத்தொடருந்து நிலையம் இராஜபாளையம் நகரிலுள்ள, இரயில்வே பீட்டர் சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் 500மீ தொலைவிலும் மற்றும் புதிய பேருந்து நிலையம் 2.8கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கிருந்து 76 கிலோமீட்டர் தொலைவில் மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.[1]
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, இராஜபாளையம் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[6][7][8]
வழித்தடங்கள்
இத்தொடருந்து நிலையம் சென்னையை இணைக்கும் வழித்தடத்தின் ஒரு பகுதியாக இருப்பதுடன் மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய இடங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது.[9][10]
விருதுநகர் வழியாக வடக்கு நோக்கி மதுரைச் செல்லும் அகல இருப்புப் பாதை உள்ளது.
தென்காசி வழியாக மேற்கு நோக்கி கொல்லம் செல்லும் அகல இருப்புப் பாதை உள்ளது.