தமிழ்நாட்டில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை 148 நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக, அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். நகர்மன்றத் தலைவர் மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவர் நகர்மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.
இவை சிறப்புநிலை, தேர்வுநிலை, முதல்நிலை, இரண்டாம்நிலை என்கிற நிலைகளில் 142 நகராட்சிகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் தலைமையிலான அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன. தமிழக உள்ளாட்சி அமைப்பான நகராட்சிகள் அரசியலமைப்பு 74 வது திருத்தச் சட்ட செயல் 1992ன்விதி 243 டபுள்யூ நகராட்சிகள் அமைக்க, அதற்கு அதிகாரங்களை வழங்க வழி செய்கின்றது. அதன் படி இது ஒரு மாநில அரசிடமிருந்து அதிகாரப் பகிர்வைப் பெற்றத் தன்னாட்சி அமைப்பாக தமிழகத்தில் செயல்படுகின்றது.நகராட்சி பொதுவாக ஒரு நகரையே குறிக்கும். அது கிராமமுமில்லாத பெருநகராகவும் இல்லாத ஊராகும். மக்கள் தொகை 1,00,000-இற்கு மிகுந்திருக்கும். மக்கள் தொகை 1,00,000-ஐ மிகுந்திருந்தால் அது மாநகராட்சி (கார்பரேஷன்) என அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டு வருமானம் சராசரி ரூ.10 கோடியை தாண்டினால் அவை சிறப்பு நிலை நகராட்சியாகவும், ரூ. 6 கோடிக்கு மேல், ரூ.10 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை தேர்வு நிலை நகராட்சியாகவும், ரூ. 4 கோடிக்கு மேல், ரூ. 6 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை முதல் நிலை நகராட்சியாகவும், ரூ. 4 கோடி வரை, அதை மிகாமல் வருமானம் பெறுபவை 2-ஆம் நிலை நகராட்சியாகவும் அதற்கு கீ்ழ் உள்ளவை மூன்றாம் நிலை நகராட்சியாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.