லகாட் டத்து மாவட்டம்
லகாட் டத்து மாவட்டம்; (மலாய்: Daerah Lahad Datu; ஆங்கிலம்: Lahad Datu District) என்பது மலேசியா, சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இந்த லகாட் டத்து மாவட்டத்தின் தலைநகரம் லகாட் டத்து நகரம் (Lahad Datu Town). மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து சுமார் 1,793 கி.மீ. (1,114 மைல்) தொலைவிலும்; சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 430 கி.மீ. (270 மைல்) தொலைவிலும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு மலேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி லகாட் டத்து மாவட்டத்தில் 229,138 மக்கள் வசிக்கின்றனர். பொது![]() சபா மாநிலத்தின் தாவாவ் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
சொற்பிறப்பியல்லகாட் டத்து என்ற வார்த்தை பஜாவு மொழியில் (Bajau Language) இருந்து வந்தது. லகாட் என்றால் இடம்; டத்து என்றால் பிரபு. பிலிப்பீன்சு தீவுக் கூட்டங்களின் சுல்தானிய காலங்களில் குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்பட்ட விருது. டத்து என்பது பிலிப்பீன்சு தீவுக்கூட்டம் (Philippine Archipelago) முழுவதிலும் உள்ள ஏராளமான பழங்குடியின மக்களின் ஆட்சியாளர்களை குறிக்கும் ஒரு விருது. பழங்குடியின மக்களின் ஆட்சியாளர்கள் என்பது அந்த இனங்களின் தலைவர்கள், அல்லது இறையாண்மை கொண்ட இளவரசர்கள் அல்லது மன்னர்கள் எனப் பலவிதமாகக் குறிப்பிடுகிறது.[1] டத்து விருதுடத்து எனும் விருது; குறிப்பாக மிண்டனாவோ, சூலு தீவுக்கூட்டம் மற்றும் பலவான் ஆகிய இடங்களில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆரம்பகால பிலிப்பீன்சு வரலாற்றில், குறிப்பாக மத்திய மற்றும் தெற்கு லூசான், விசாயாஸ் மற்றும் மிண்டானாவ் பகுதிகளில் இந்த விருது மிகவும் விரிவாகப் பயன்படுத்தப்பட்டது.[2][3][4] இந்த டத்து எனும் சொல்லில் இருந்துதான் டத்தோ எனும் இப்போதைய பயன்பாட்டுச் சொல் உருவானது. புரூணை உள்நாட்டுப் போருக்கு (Brunei Civil War) பிறகு, புரூணை சுல்தானகத்தால் (Sultanate of Brunei) இந்த லகாட் டத்து பகுதி சூலு சுல்தானகத்திடம் (Sultanate of Sulu) ஒப்படைக்கப்பட்டது. அதன் விளைவாக டத்து புட்டி (Datu Puti) என்பவரின் தலைமையில் சுல்தானகத்தில் இருந்து சுல்தானகப் பிரபுக்கள் (Datu-Datu) லகாட் டத்துவிற்கு இடம் பெயர்ந்தார்கள். அதில் இருந்து லகாட் டத்து எனும் சொல் உருவானது. வரலாறுலகாட் டத்து பகுதியை பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (North Borneo Chartered Company) கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, லகாட் டத்து மாவட்டம் நிறுவப்பட்டது. அதன்பிறகு தென்னை கொப்பரை உற்பத்தி; மற்றும் புகையிலை உற்பத்தியில் லகாட் டத்து பகுதி சிறந்து விளங்கியது. 2013 பிப்ரவரி 13-ஆம் தேதி, இந்த லகாட் டத்து பட்டணத்திற்கு அருகில் இருக்கும் தண்டுவோ (Tanduo) எனும் கிராமத்தை, சூலு சுல்தானகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட சிலர் (Royal Security Forces of the Sultanate of Sulu and North Borneo) ஆக்கிரமித்துக் கொண்டனர். இரு வாரங்கள் போராட்டத்திற்குப் பின்னர் மலேசியப் பாதுகாப்பு படையினர் அந்தக் கிராமத்தை மீட்டனர்.[5] சமாலுல் கிராம்அவர்கள் சூலு சுல்தானகத்தின் அரியணைக்கு உரிமை கோரும் சமாலுல் கிராம் III (Jamalul Kiram III) என்பவரால் அனுப்பப் பட்டனர். கிழக்கு சபாவின் மீது பிலிப்பீன்சு நாட்டின் பிராந்திய உரிமையை வலியுறுத்துவதே (Philippine Territorial Claim to Eastern Sabah) சமாலுல் கிராமின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது.[6][7] இந்த ஆக்கிரமிப்பிற்குப் பலடியாக மலேசியப் பாதுகாப்பு படையினர் (Malaysian Security Forces) அந்த தண்டுவோ கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். பிலிப்பீன்சு மற்றும் மலேசியா அரசாங்கங்கள் ஓர் அமைதியான தீர்வைக் காண்பதற்காக அந்தக் குழுவுடன் பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற பிறகு, இந்த மோதல் ஆயுத மோதலாக மாறியது.[8][9] அந்த மோதலில் சூலு சுல்தானகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட 56 பேர் சுட்டுக் கொல்லப் பட்டார்கள்; மற்றும் பலர் மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். [7][8] மோதலின் போது மலேசியத் தரப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்; பொதுமக்களில் 10 பேர் உயிர் இழந்தனர்.[10][11][12] மக்கள் தொகையியல்லகாட் டத்து மாவட்டத்தின் மக்கள் தொகை பெரிய சமூகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, லகாட் டத்து மாவட்டத்தின் மக்கள் தொகை சுமார் 229,138 மக்கள் என மதிப்பிடப்பட்டு உள்ளது. சபாவின் பிற மாவட்டங்களைப் போலவே, அருகிலுள்ள தெற்கு பிலிப்பீன்சு பகுதிகளில் இருந்தும், முக்கியமாக சூலு தீவுக்கூட்டம் மற்றும் மிண்டனாவோவில் இருந்தும் கணிசமான எண்ணிக்கையில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் உள்ளனர். காட்சியகம்
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
மேலும் படிக்க
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia